Sunday, 4 August 2013

தோழிகள்...




பாண்டி விளையாடிய போதும்
பல்லாங்குழி ஆட்டத்தின் போதும்
பிரகாரம் சுற்றும் போதும்
தண்டவாளத்தில் இணையாய் நடக்கும் போதும்
தட்டாமாலை சுற்றி விழுந்த போதும்
பள்ளியின் படிகளில் தடதடத்து ஏறி
மூச்சு வாங்க நின்ற போதும்
கை கோர்த்தத் தோழிகள் வேறு...

சரிந்த தாவணியை இழுத்து விடும் போதும் 
தினமும் மதிய சாப்பாட்டை மாற்றி சாப்பிட்ட போதும்
பேருந்தில் இருவர் இருக்கையில்
மூவராய் அமர்ந்து பட்டாம்பூச்சிகளான போதும்
காசில்லாமல் கான்டீன் வடையைப் பாதியாக்கிய போதும்
செமஸ்டரில் அரியர்ஸ் விழுந்தால்
சினிமா போய் துக்கத்தை சரி செய்த போதும்
கைக் கோர்த்தத் தோழிகள் வேறு...

பிள்ளையை பள்ளியில் விடப்போய்
புத்தகங்கள் பரிமாறி கொண்ட போதும்
விசேஷங்களுக்கு உதவிப் பண்ணிக் கொண்டும்
உடல் நலமில்லாத போது கவனித்துக் கொண்டும்
இரவின் ரகசியங்கள் கூட பகிர்ந்துக் கொண்டும்
கைக் கோர்க்கும் தோழிகள் வேறு...

இத்தனை தோழமைகளிலும்
பள்ளிச்சுவடுகள் தந்த தோழமை மட்டுமே
பால்யமாய் இன்னும்...


16 comments:

  1. //பள்ளிச்சுவடுகள் தந்த தோழமை மட்டுமே பால்யமாய் இன்னும்...//

    அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி சௌந்தர்...

      Delete
  3. தோழிகள் வேறு...

    இத்தனை தோழமைகளிலும்
    பள்ளிச்சுவடுகள் தந்த தோழமை மட்டுமே
    பால்யமாய் இன்னும்...
    மின்னும் தோழமை அருமை..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி ராஜேஸ்வரி....

      Delete
  4. பால்யத்துக்கு அழைத்து சென்றது உங்க கவிதைகள்.

    ReplyDelete
  5. ஆமாம் அகிலா பள்ளித்தோழமை எந்தக் காலத்திலும் மறப்பதில்லை...அது மட்டும் தான் எந்த வித கபடமும் தெரியாத இயல்பான நட்பு...அருமை..உங்களை கணினி குறித்து தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன் கவனித்தீர்களா?..நன்றி

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்....பார்த்தேன் எழில்...தோழி சொல்லி மறுப்பு உண்டா என்ன...எழுதுகிறேன்...

      Delete
  6. நினைவுகளை பின்னோக்கி நகர்த்திய பதிவு... அருமை..

    ReplyDelete
  7. நட்பு தினத்தில் வெளிவந்த தோழி கவிதை நட்பை அழகாக சொல்லிஸ் சென்று இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி நண்பா...

      Delete
  8. எவ்வுளவு தான் வசதி வாய்பாக வாழ்தாலும் தங்கள் வளர்ந்த சூழ்நிலை போலவோ பால்ய காலத்து இடங்கள் போலவோ எதச்சையாக பார்க்கும் போது மனது ஒட்டி கொள்கிறது காரணம் .கொஞ்சம் யோசித்து பார்த்தால் நாம் எங்கேயோ தொலைத்த வாழ்க்கையை எங்கேயோ தேடிக்கொண்டிருக்கிறோம் ஆடி ஓடிய காலங்கள் யாவும் அடங்கி ஒடுங்கி மனதின் அடிஆழதிற்குள் சுருங்கி போயிகின்றன நாகரீகத்தின் பரிணாம கோடுகளால் அவை நிரந்தரமில்லாமல் மாறி கொண்டே இருக்கும் பரிணாம நட்புகள்

    ReplyDelete
    Replies
    1. தொலைந்து போனவைதான்...ஆனாலும் பொக்கிஷமாய் அமைந்தவை...நன்றி ராஜன்..

      Delete
  9. எத்தனை நட்புக்கள் வந்தாலும் சிறுவயது நட்புக்கு என்றும் மதிப்பு ஜாஸ்திதான்...
    அருமை...

    ReplyDelete
    Replies
    1. அதில் பொய் கிடையாது...அன்பும் கோபமும் கலந்தே இருக்கும்...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....