Skip to main content

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம் 

முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து.


இல்லம் பற்றிய கண்ணோட்டம்

எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றிய அவர்களின் கண்ணோட்டம் தான் முக்கியமானது. இல்லத்தின் வாழ்க்கை  அவர்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பதில் இருபாலருமே வேறுபடுகிறார்கள்.

முதியோர் இல்லத்தில் இருக்கும் பெண்கள் ஆண்களை விட அதிகமாக இல்லத்தை விரும்புகிறார்கள். அனுசரித்தும் போகிறார்கள். அங்கிருக்கும் வயதான ஆண்கள் என்னிடம் பேசும் போது கூறுவதுண்டு, ‘நீங்கெல்லாம் இங்கே வரக்கூடாது. யாருமில்லாமல், நாம் கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாமல், எல்லா வசதியும் இருந்தாலும் அனாதை மாதிரி வாழக்கூடாது’ என்பார்கள்.

ஆனால் முதிய பெண்மணிகள் பேசும்போது ‘கடைசியில் என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியும். நாம் எப்போது சாப்பாடு வரும் என்று டைனிங் டேபிளை பார்த்துகொண்டே இருப்பதை விட இது ரொம்ப சந்தோஷம். நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கும். டிவி இருக்கு. பேச கூட நம்மள மாதிரிபட்டவங்க இருக்காங்க. நிம்மதியா இருக்க முடியுது’ என்பார்கள். இருவருக்கும் எண்ணங்களில் தான் எத்தனை வித்தியாசம்.

ஆண்கள் எவ்வளவு கிடைத்தாலும் நிறைவு அடையாதவர்கள். ஆனால் பெண்கள் கொஞ்சம் கிடைத்தாலும் போதும் என்று நினைத்துவிடுவார்கள். அவர்களைத்தான் இந்த உலகம் எதை பார்த்தாலும் வாங்குபவர்கள், அதிகம் செலவு செய்பவர்கள் என்று கூறுகிறது. ஆசைப்படுவார்கள் தான். அதெல்லாம் ஒரு காலகட்டம் வரைதான். அதன் பிறகு பிள்ளைகளுக்காக, பேரன் பேத்திகளுக்காக என்று வாழ்கையை ஓட்ட ஆரம்பித்து விடுவார்கள். வீட்டில் இருந்து இல்லத்தில் கொண்டுவந்து விடப்பட்ட பிறகும் இன்றும் ஒரு பெண்மணி தன் கணவரின் பென்ஷன் பணத்தில் மாதம்தோறும் ஒரு தொகையை பேத்திக்காக சேமித்து கொண்டுதான் இருக்கிறார். 

பெரும்பாலும் அவர்களாக விரும்பித்தான் இல்லத்திற்கு வருகிறார்கள். மாதத்திற்கு பத்தாயிரம் செலவு செய்ய முடிந்தால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கலாம். இல்லத்திற்கு நாலாயிரமோ ஐயாயிரமோ (இது நடுத்தர வர்க்கத்தின் அளவுகோல்),மருந்து மற்றும் போக்குவரத்து செலவுகள் போக கொஞ்சம் சேமிப்பு என்றும் அவர்களுக்குள் ஒரு கணக்கு இருக்கிறது.



பெண்கள் என்றும் பெண்கள்தான்


ஆண்களை விட பெண்கள் வயதாக வயதாக பக்குவப்படுகிறார்கள். தன்னை தானே சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள். வயது என்று ஆகும்போது நம்மால் சமையல் செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, அழைப்பு மணி அழுத்துபவர்களுக்கு எல்லாம் பதில் சொல்வது, தண்ணீர், காய்கறி, மளிகை கரண்ட் பில், போன் பில் இப்படிப்பட்ட கடமைகள் செய்வது எதுவுமே முடியாமல் போகிறது. அதுவும் கணவனை இழந்து தனியாக வாழும் பெண்களுக்கு மகன், மருமகள் ஆகியோரால் ஏற்படும் மனக்கஷ்டம் சொல்ல முடியாது.

ஆனால் என்னிடம் பேசிய யாருமே மருமகள் கொடுமை என்ற சொல்லை உபயோகப்படுத்தவே இல்லை. அதுதான் வயதில் முதிர்ந்த பெண்களின் அழகு. அவளாலும் நம்மை மட்டுமே கவனிக்க முடியாது, நம்மளும் வீட்டு பொறுப்பை முழுவதுமாக பார்த்துக்கொள்ள முடியாது என்றுதான் மருமகளை பற்றி சொன்னார்கள். கடிந்து ஒரு வார்த்தை சொன்னால் கூட விஷம் வைக்கும் சீனை காட்டும் நம் தமிழ் சீரியல்கள் உண்மையிலேயே ஒழியவேண்டும்.


மகன் வெளியூர் போயிருந்த ஒரு நாள் முழுவதும் அறைக்குள்ளேயே அடைத்து வைத்து சாப்பாடு போடாமல் இருந்த மருமகளை பற்றி கூட, மகனிடம் சொல்லாமல் இருந்த தாயை பார்த்தேன். தானே முடிவெடுத்து இங்கு வந்து தங்கிய அவர்களின் தைரியம் பாராட்டு கூறியது.

சில மருமகள்கள் செய்யும் அராஜகம் தாங்கமுடியாது. பெரியவர் வயதானவர், ரொம்ப நேரம் நிற்க முடியாது என்பது தெரிந்தும் கையில் போன் பில்லை கொடுத்து போஸ்ட் ஆபீஸ் போய் கட்டிட்டு வர சொல்றது. அவரால முடியாதுன்னு அவரோட விட்டுகார அம்மாவுக்கும் தெரியும் ஆனாலும் அவர்களாலும்  ஒண்ணும் சொல்ல முடியாது. மனதுக்குள் அழத்தான் முடியும். டிவி பார்த்துகிட்டு இருக்கிற மருமககிட்டே யார் சொல்றது. இந்த நிலைமையில் யாராவது ஒருத்தர் தவறினால் அவ்வளவுதான். உடனேயே முதியோர் இல்லம் தான். அது தவறான இடம் இல்லை. ஆனால் அவர்கள் மனதில் பிள்ளையுடன் தான் இருக்கவேண்டும் என்கிற நினைப்பு இருக்கும் வரை இந்த முதியோர் இல்லம் தவறாகத்தான் தெரியும். அவர்களை தயார்படுத்தாமல் அங்கு அனுப்புவது தவறு.


பெண்கள் மிகுந்த சுயமரியாதை பார்ப்பார்கள். வயதான பிறகு தான் யாரிடம் அவமானப்படகூடாது என்று நினைப்பார்கள், அது மகனாக இருந்தாலும் கூட. ஆண்கள் மகன், மருமகள் என்று யார் பேசினாலும், தன் மகனுடன்தான் இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையில் வைராக்கியத்துடன் மற்றவற்றை எல்லாம் துடைத்துவிடுவார்கள்.


இல்லத்தின் இன்னொரு முகம் 

முதியோர் இல்லத்தில் நடக்கும் ஒரு சங்கடமான விஷயத்திற்கு வருவோம்,. இல்லத்தில் தங்கியிருக்கும் ஒரு எழுபது வயதுடைய மூத்த பெண்மணி கூறிய சில விஷயங்களை இங்கே நான் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அங்கு தங்கியிருக்கும் ஆண்களில் சிலர் உடன் தங்கியிருக்கும் பெண்மணிகளிடம் தவறாக அணுகுவதும், கைப்பிடித்து கொள்வதும், ‘அங்கே போகாதே, இங்கே போகாதே’ என்று தனக்கு உரிமைபட்டவர்களை போல் பேசுவதும், நடந்து கொள்வதும், பார்வைகளில் பேச்சுகளில் விரசங்கள் கலந்து பழகுவதும் அவர்கள் சாகும் வரை ஆண்கள்தான் என்பதையே காட்டுகிறது என்று கூறி வருத்தப்பட்டார்.

அந்த பெண்மணியின் கணவர் வேலை நிமித்தமாக பஞ்சாபில் இருந்தபோது, அங்கு ஒரு பெண்மணியின் இறப்பின் போது செய்த சடங்குகளை பற்றி இன்னொரு பஞ்சாபி தோழி விவரித்ததை கூறினார். இறந்தபிறகு பெண்ணின் உடலில் மஞ்சள் வைத்து அடைத்து விடுவதாகவும் இறந்த பிறகாவது அவர்கள் யாராலும் தொடப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அப்படி செய்வதாகவும் விளக்கினாராம். அதுவரை நாம் இந்த கஷ்டத்தை அனுபவித்துதான் ஆகவேண்டும் போல என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினார்.


அவர் மனதில் கணவரையும் தன் 35 வயது மகனையும் ஒரு விபத்தில் பறிகொடுத்த சோகம். இப்படிபட்ட  நிலைமையில் இந்த மாதிரி ஆண்களின் அணுகுமுறை வருத்தம் அளிப்பதாக கண்ணீருடன் கூறினார். என்ன வாழ்க்கை என்றுதான் தோன்றியது.

அங்கு உள்ள 93 வயதான முதியவரை எனக்கு தெரியும். வாக்கிங் போகும் போது பழக்கம். மெதுவாக பேசிக்கொண்டே நடப்பார். நன்றாக சமையல் செய்வாராம். ‘இன்னைக்கு என்ன சமைச்சே...எரிசேரி இப்படி பண்ணக்கூடாது. நான் சொல்ற மாதிரி செய். ஒரு நாள் நான் சமையல் செய்து போடுகிறேன். நீ சாப்பிட்டு பாரு’ என்றெல்லாம் என்னிடம் ஒரு தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து பேசுவார்.


ஒரு முறை உடம்பு முடியாமல் போகவும் ஒரு நர்ஸ் பெண்ணை அவருக்கு பணி விடை செய்ய அமர்த்தி இருக்கின்றனர். மூன்று நாட்கள் கழித்து அந்த பெண் வேலையிலிருந்து நின்று கொள்வதாக சொன்ன போது காரணம் கேட்டிருக்கின்றனர். அவள் கூறிய விஷயம் மிக அதிர்ச்சியானது. கேவலமானது. என்னால் அதை எழுத முடியாது. இப்போதும் அவர் அங்குதான் இருக்கிறார். மெதுவாக நடப்பார். என்னிடம் கதை பேசத்தான் செய்கிறார்.

அனைவரும் மனிதர்கள்தாம். வயதாகிவிட்டது என்பதால் அவர்களை மனிதர்கள் இல்லை என்று முடிவு செய்ய முடியாது. கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மிருகங்களை மாதிரி முதியவர்களை நாம் நடத்தக்கூடாது.


சமூக சேவை


முதியோர் இல்லங்கள் முளைப்பது தவறில்லை. அவை வெறும் பணம் பிடுங்கும் யுக்தியாக மட்டும் இல்லாமல் வயதானவர்களை பாதுகாக்கும் இன்னொரு வீடாகவும் இருக்க வேண்டும். பெரிய நிறுவனங்கள் charity purpose க்காக  முதியோர் இல்லம், அநாதை ஆசிரமம் எல்லாம் வைத்து நடத்துவது வெளியே பார்ப்பதற்கு அழகா தெரியுது. அவர்களின் முதியோர் இல்லங்களில், அவர்கள் நடத்தும் அனாதை ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் வேலைக்கு தள்ளப்படும் கொடுமை யாருக்காவது தெரியுமா? கூலி இல்லாத வேலைக்காரிகளாக பாவம் அந்த குழந்தைகள்.


முதியோர் இல்லங்களை பணம் வாங்கினாலும் ஒரு சேவையாக செய்யுங்கள். நம் வீட்டில் இல்லாத பெரியவர்களை அங்குதான் நாம் பார்க்கமுடியும். அவர்களின் ஆசிர்வாதங்கள் நமக்கு என்றுமே பக்கபலம்தான்.


முதியோர் இல்லம் என்பது வயதானவர்களுக்கு மிக பாதுகாப்பான ஒன்றுதான். உறவுகளை நினைக்கும் போது மட்டுமே கண்ணீர். இல்லாவிட்டால் தினசரி பிரச்சனைகள் இல்லாமல் சற்று நிம்மதியாக அவர்களால்  வாழமுடிகிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான்.



முதியோரை
முதியோர் இல்லத்திலாவது
வைத்து பாதுகாப்போம்



முதியோர் என்றொரு கவிதை


http://vannathuli.blogspot.in/2011/12/blog-post_26.html#.UBjFZWE7i8A




Comments

  1. மிகவும் வித்தியாசமான பதிவு. இந்த அவசர காலத்தில் பணத்தை நோக்கியே ஓடும் சமூகத்தில் இந்த விஷயத்தை கவனிப்பது அரிதாகிக் கொண்டு வரும் ஒரு உணர்வை பதிவு செய்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி....

      குழந்தைகளை பராமரிப்பது மாதிரி முதியோர்களையும் பாதுகாப்பது நம் கடமை....

      Delete
  2. நம்மோட நாளையை இன்று பார்த்தொரு உணர்வு அகிலா..

    ReplyDelete
    Replies
    1. நானும் இதையேதான் உணர்ந்தேன் அவர்களிடம் பேசும்போது....
      நன்றி கண்ணம்மா....

      Delete
  3. அகிலா .............

    பத்தி கனமானது .....

    வரி வரியாக முதியோரை பற்றி கூறினாலும் ஆண் பெண்ணின் அக எண்ணங்களை அழகாக எடுத்து கூறிய விதம் பாராட்டுக்குரியது ..........

    ஆண் வயது மூத்த பின்னும் தனக்குள் தேங்கி கிடக்கும் கழிவுகளை வேறு ஒருவரிடம் கொட்ட வேண்டும் என்று நினைக்கிறான் ........

    அனால் பெண் அப்படி இல்லை கழிவுகளை தேங்கா வண்ணம் ஆரம்ப முதல் பார்த்துகொல்கிறாள் ........

    இதற்க்கு அவளுக்கு பால்யம் முதல் அவளின் பெற்றோர்கள் பழக்க படுத்துகிறார்கள் அந்த பழக்கத்தை நானும் நம் குழந்தைகளுக்கு ஆண் பெண் வேறுபாடு அற்று சொல்ல வேண்டும் ........

    இல்லையெனின் இந்த வயதான ஆண் போல முகமூடிகளை மாட்டிகொண்டு பேசினாலும் ......பலத்த காற்றில் கிழித்து எறியப்படும் அந்த முகமூடி அப்போது நிச்சயம் சுயரூபம் வெளிப்படும் ........

    ஆகவே இன்றைய குழந்தை நாளைய முதியவன் ..............கவனமாக வளர்ப்போம் ......

    பதிவு பல கோணங்களை அலசுகிறது நன்றி தோழி

    ReplyDelete
    Replies
    1. சரளா....அருமை, நான் தொடாத இன்னொரு கோணத்தையும்...குழந்தை வளர்ப்பை பற்றியும் சொல்லிவிட்டீர்கள்....
      நன்றி தோழி...

      Delete
  4. நல்ல பதிவு சகோதரி.

    ReplyDelete
  5. வேறு கோணத்தில் அலசியுள்ளீர்கள். என்னதான் இருந்தாலும் பெரியவர்களின் மனது தன் பிள்ளை பேரக்குழந்தைகளுடன் வாழத்தான் துடிக்கும். அதனையும் அடக்கிக்கொண்டு அவர்கள் வாழும் வாழ்க்கை சோகம்தான். நாளை நமக்கும் இதே கதிதான் எனக் குழந்தைகள் நினைப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. என்னை பொறுத்தவரை குழந்தைகளிடம் குறை காண்பதை விடுத்து நம் எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ளலாமோ என்று தோன்றுகிறது, விச்சு....

      Delete
  6. மனதை தொட்ட பதிவு. நமது வீட்டு சிறு குழ்ந்தைகள் அதிகம் விரும்புவது பெற்றோர்களை விட தாத்தா பாட்டியைத்தான். அவர்களை நம் கூட வைத்து பார்ப்பதுதான் நாம் நம் குழ்ந்தைகளுக்கு கொடுக்கும் பரிசு அதுமட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கு கொடுக்கும் பரிசும் ஆகும்

    ReplyDelete
    Replies
    1. தனிமையும் வேறு சிந்தனைகளும் அவர்களை அலைகழிக்காமல் இருக்கும்...
      நன்றி.....

      Delete
  7. நன்றி சகோ...

    ReplyDelete
  8. மனம் நெகிழ்த்திய பதிவு. முதுமையில் ஆண் பெண் மன உணர்வுகளை அலசிய விதம் அருமை. மிகத் தெளிவானக் கருத்தும் எழுத்தும். பாராட்டுகள் அகிலா.

    ReplyDelete
    Replies
    1. சிறிய அலசல்தான் கீதமஞ்சரி....
      நன்றி...

      Delete
  9. Vayathu varum kalaththil emathu kadasikkalam muthiyor illathil than enru ninaiththu emmai thayasr padutha vendum. Velinadukalil nadappathu ithuthan . Thankalakave vanthuviduvarkal.

    ReplyDelete
  10. உள்ளத்தை நெகிழ வைத்தது உங்களின் பதிவு - நன்றி சகோ

    ReplyDelete
  11. கலங்க வைக்கிறது. பெண்கள் இதை இயல்பாக ஏற்றுக் கொண்டதும் வியக்க வைக்கிறது. ஆண்கள்... இந்த வயதிலுமா... கொடுமை!!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதில் கொஞ்சம் அதிர்ச்சிதான். இதையெல்லாம் நான் எதிர்கொள்ளதான் வேண்டும்....நன்றி தோழி....

      Delete
  12. சிறப்பான பதிவு.அதிலும் பதி கொய்டு சென்ற விதம் அருமை.பெண்கள் என்றும் தாய்கள் தான்.அத தானட இப்படியாய்.வாழ்த்துக்கள் சொந்தமே!!!


    எனக்கொரு பதில்!!!!!

    ReplyDelete
    Replies
    1. பெண் என்றுமே எல்லோருக்கும் தாய்தான்...அவளின் மனநிலையில் வேறுபாடு இல்லை...
      நன்றி அதிசயா...

      Delete
  13. பாரபட்சம் ஏதுமின்றி
    நல்லது நல்லதல்லாதது என இரு நிலைகளையும்
    பதிவு செய்துள்ளது மனம் கவர்ந்தது
    அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
    தகவலக்ள் அடங்கிய அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. நன்றி ரமணி அவர்களே....

    ReplyDelete
  15. A beautiful post Ahila. Very nicely written, with relevant points. Touching.

    ReplyDelete
    Replies
    1. சேகரித்த விவரங்களில் சிறிது இங்கே....
      நன்றி பட்டு ராஜ்...

      Delete
  16. நல்ல ஆழமான கருத்துக்கள் கொண்ட பதிவு . வாழ்த்துக்கள்.
    நாம், பெரியவர்கள் வாழ்க்கை மற்றும் அவர்களது தேவைகளை பற்றி குழந்தை வரும் போதே அறியபடுத்த வேண்டும். தாத்தாவை தள்ளிவைக்கும் அப்பா(வை)விற்கு தான்(மகன்) தவிக்க விடுவதில் ஆச்சரியம் இல்ல. இந்த தலைமுறை முந்தய தலைமுறையை பேணிப் பாதுகாக்கும் போது நம் தலைமுறையில் முதியோர் இல்லங்களே இருக்காது

    ReplyDelete
  17. நூற்றுக்கு நூறு உண்மைதான் நீங்கள் சொல்வது. நன்றி...

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந