Tuesday, 2 May 2023

பொன்னியின் செல்வன் பாகம் 2

 பொன்னியின் செல்வன் 2 : ஒரு பார்வை




பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளிவந்த மறுநாள் திரைப்படம் பார்க்க, இங்கிலாந்தில் யார்க்‌ஷயரில் உள்ள மிடில்ஸ்பரோவில் சினிவேர்ல்ட் சினிமாஸுக்கு சென்றிருந்தேன். நுழையும்போது இரண்டாம் பாகம் பார்க்கப்போகிறோம் என்ற பெரியதொரு எதிர்பார்ப்பும் (பாகுபலி 2 க்கு ஒரளவுக்கு இருந்தது) என்னிடம் இல்லை எனலாம்.

மாலை ஏழு மணி காட்சி. சரியாக ஏழு மணிக்கு குடும்பமாக நாங்க (நான், கணவர், என் மருமகள், என் அக்காவின் மருமகள்) தியேட்டருக்குள் நுழைந்தோம். ஏழரை மணிக்குள் குடும்பமாக, நண்பர்களாக தமிழில் பேசிக்கொண்டே உள்ளே வந்து சேர்ந்தார்கள் நம் மக்கள். பாதி தியேட்டர் நிறைந்திருந்தது. மிடில்ஸ்பரோவை சுற்றியிருப்பவர்கள் மட்டும் இந்த தியேட்டருக்குத் தமிழ்படம் பார்க்க வந்திருக்கக்கூடும். லண்டன், பெர்மிங்காம் போன்ற நகரங்கள் என்றால் கூட்டம் சற்று அதிகமாக இருந்திருக்கலாம் என்பது இங்கிருப்பவர்களின் கருத்து. நண்பர்களாக வந்திருந்தவர்கள் சிலர் ஆங்கிலத்தில் பொ செ 1 குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர். ஆங்கிலத்தில் subtitles இருப்பதால் இந்தியாவின் பிற மொழி பேசுவோரையும் இங்குள்ள பிரித்தானியர்கள் ஒரிருவரையும் காணமுடிந்தது.


பொன்னியின் செல்வன் 2:

படம் தொடங்கிய நேரத்தில் இருந்து, முதலில் ஆதித்ய கரிகாலன் + நந்தினியின் சிறுவயது காதல் காட்சி, அடுத்ததாய் அருண்மொழிவர்மன் கடல் காட்சிகள், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் (ஆங்கிலத்தில் rebels என்று போடுகிறார்கள். ஆபத்துதவிகள் சொல் புதிதாய் அர்த்தம் கொடுக்கிறது; கவனிக்க வைக்கிறது) என்று கதை பிட் பிட்டாக சென்று கொண்டிருந்தது. ஏதாவது ஓரிடத்தில் திரைக்கதை நிதானிக்குமென பார்த்தால், ம்ஹூம்.. இந்த நிமிடங்களுக்குள் இந்த பிரேமுக்குள் இத்தனை கிளை கதைகள் வந்திருக்க வேண்டுமென chart போட்டு வேலை பார்த்திருப்பார்கள் போலும். ஆம் சரியான சொல்.. வேலை என்பதே.. Perfect ஆக புத்தகத்தின் மீதி பாகத்தை ஒரு வேலையாக செய்திருப்பது போலவே தோன்றியது. கல்கியின் கதை ஆவணப்பட்டிருப்பதாக தோன்றியதென்னவோ உண்மை (விடுபட்டுப்போன மணிமேகலை, மதுராந்தக சோழர் குழந்தையாய் இருந்தபோது இடம் மாறியது போன்றவை தவிர)

சில இடங்களில் ஓரிரு காட்சிகளை நிலைநிறுத்த முற்பட்டிருக்கிறார்கள்... உதாரணத்துக்கு, குந்தவை + வந்தியத்தேவன் காதல் காட்சி, ஆதித்ய கரிகாலன் + நந்தினி சந்திக்கும் கடைசி காட்சி... இரண்டில் பின்னது ஓரளவுக்கு பரவாயில்லாமல் தோன்றியதற்கு காரணம் விக்ரமின் வசனமும் நடிப்புமாக இருக்கலாம். இல்லையென்றால், விக்ரமை ஆதித்ய கரிகாலனாய் நமக்குப் பிடித்துப் போனதாலும் இருக்கலாம். குந்தவை வந்தியத்தேவன் காட்சி மனதுக்குள் பதிவதற்குள் காணாமல் போய்விட்டது. மற்றபடி காட்சிகளை எங்கும் நிலைநிறுத்த முடியாதபடி கடமை உணர்வு மணிரத்னத்தை உந்தியிருக்கலாம்.




பொன்னியின் செல்வன் அருண்மொழிவர்மன் வரும் காட்சிகள் பல சரியாக எடுபடவில்லை. எல்லாமே ஒரே மாதிரியான expressions... தன்னைக் கொல்ல வரும் யானைப்பாகனை கொல்வதாகட்டும், மகுடத்தை விட்டுக்கொடுக்கும் தருணமாகட்டும் blank glassy eyes.. போற்றுதலுக்குரிய பேரரசர், மரியாதைக்குரியவர், சரித்திர நாயகர் எனும்போது இந்த மாதிரியான ஒரு பிம்பம் திரைப்படத்திற்கென கட்டமைக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. அருண்மொழிவர்மனை நோக்கியே கதை நகரவில்லை. அதனால் முக்கியத்துவமும் இல்லை.

திரை வசனம் ஒன்றாம் பாகத்தில் இருந்ததைவிட, இரண்டாம் பாகம் சற்று பரவாயில்லை. இன்னும் செதுக்கியிருக்கலாம் கூர்மையை. ஒரு வரலாற்று கதைக்கான முக்கிய அம்சமான கூர்மை, ஏளனம், வன்மம், கருணை காட்டும் வசனங்கள் பெரிதும் தென்படவில்லை இந்த இரண்டு பாகங்களிலும் என்பது பெரும் மனக்குறையே.

தொடர் ஓட்டமான திரைக்கதைக்கு, பாடல்கள் ஒருவித நிதானத்தை, ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கும். அதுவும் இல்லாமல் இரண்டு நிமிட பாடல்களாக, துண்டு துண்டாக அமைந்திருந்தது அதிருப்தியே. சின்னஞ் சிறு கிளியே.. பாடலை இன்னும் கொஞ்சம் கேட்கலாம் போல் இருந்தபோது அது சின்னதாக, அதற்கு மேல் பாடாமல் நின்றுபோனது..

புத்த விஹாரம், கடம்பூர் அரண்மனை, அதன் சுரங்கம் போன்றவற்றை முயன்றவரை சரியாக காட்ட முயன்றிருக்கிறார்கள். கடைசி போர்க்காட்சி அத்தனை நேர்த்தியாக எடுக்கப்படவில்லை. போருக்குமுன் அரசர்கள் சந்திக்கும் கொள்ளும் காட்சியும் சரிவர வடிவமைக்கப்படவில்லை. இவையும் ஒரு வரலாற்று திரைக்கான வலுவை இழக்கச்செய்யும் காரணிகள்.




கல்கி பொ. செ கதையின் முடிவுரையில்,

"பொன்னியின் செல்வன்" கதையில் சிகரமான சம்பவம் அருள்மொழிவர்மனின் ஒப்பற்ற தியாகமே ஆகும். கதையில் வரும் சகல நிகழ்ச்சிகளும் இந்த மகத்தான சம்பவத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. அதனாலேயே இக்கதையின் ஐந்தாவது பகுதிக்கு "தியாக சிகரம்" என்று பெயர் தரப்பட்டது.

இக்கதையின் சிகரமான நிகழ்ச்சி "பொன்னியின் செல்வன்" செய்த சாம்ராஜ்ய தியாகந்தான் என்பதைக் கதையைப் படித்து வந்த நேயர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். யாராவது அதை அறியவில்லையென்றால், அதற்குக் காரணம் ஆசிரியருடைய ஆற்றல் குறைவு என்றே சொல்ல வேண்டும். அந்தக் குறையைக் கதை ஆசிரியர் தாழ்மையுடன் ஒப்புக் கொண்டு, நேயர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டியதுதான்.

என்று சொல்லியிருப்பார்.. (கல்கியின் உரை முழுவதையும் இந்த பதிவின் பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறேன்)

ஆனால் மொத்தத்தில், திரைப்படத்தில் இரண்டு பாகங்களுமே எடுத்தியம்பிய ஒன்றாய் பார்வையில் படுவது, ஆதித்ய கரிகாலன் + நந்தினியின் காதல், வன்மம் இரண்டு மட்டுமே. அந்த கதாபாத்திரங்களில் வலுவாய் அமர்த்தப்பட்டிருக்கும் நடிகர்களினாலும் இது நேர்ந்திருக்கலாம். நந்தினியைப் பார்க்கும் எந்த ஆணாக இருந்தாலும் (வந்தியத்தேவன், பெரிய பழுவேட்டரையர், பல்லவ மன்னன் பார்த்திபேந்திரன்) திரும்ப திரும்பச் சொல்லும் வசனம், 'நீங்க பேரழகி', 'உங்களைவிட யாரும் அழகியில்லை' என்பதே. ஐஸ்வர்யாராய் ஒரு காலத்தில் பேரழகி பட்டம் வாங்கியவர்தான். இல்லையென்று யார் சொன்னார்கள்? அதை ஏன் நந்தினி என்னும் கதாபாத்திரத்தின் மீது ஏற்றி வைத்திருக்கிறார் இயக்குனர் என்றுதான் புரியவில்லை. அது அந்த கதாபாத்திரத்திற்கு ஒருவகையான ஒழுக்கக்குறை சாயலைப் பூசுவதாக தெரிகிறதே..





இத்திரைக்கதை கல்கி தனது முடிவுரையில் குறிப்பிட்டு இருந்தபடி இராஜராஜ சோழனின் தியாகத்தை நோக்கி நகரவேயில்லை. மாறாக ஆதித்ய கரிகாலனையும் நந்தினியையும் சுற்றியே முதன்மைபடுத்தப்பட்டிருக்கிறதாக தோன்றுகிறது.

ஒரு நாவல், (அதுவும் தொடராக வந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். முழுமையாய் ஒரு நாவலை எழுதுவதற்கும் தொடராய் எழுதுவதற்கும் இருக்கும் வேறுபாடு எழுத்தாளர்களுக்குத் தெரியும்) திரைப்படமாகும் போது, இம்மாதிரியான அழுத்தங்கள், கதையின் போக்கை, அது நகரும் விதத்தை மாற்றிக்காட்டும் சங்கடங்களை உண்டுசெய்யும் என்பதை மறுப்பதற்கில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படமும் அப்படியே.. சில விதங்களில் தடுமாறியிருக்கிறது.

நான் குறிப்பிட்டிருக்கும் இம்மாதிரியான விமர்சனங்கள் இப்படத்தைப் பார்க்கும் தமிழர்கள் பலராலும் முன் வைக்கமுடிகிறது. இருந்தும், இன்றைய காலகட்டத்தில், இத்திரைப்படம் இந்தியாவில் இருக்கும் பல மொழி பேசும் மாநிலத்தவர்களால், பிற மொழி பேசும் வெளிநாட்டு மக்களால் பார்க்கப்படுகிறது எனும்போது, தமிழ் பேரரசர்களின் மீதான வெளிச்சம் பாய்ச்சப்படுவற்கான காயை நகர்த்தியிருக்கிறார் மணிரத்னம் என்பதில் ஆறுதல் கொள்ளலாம் நாம். 

இக்காலத்தில், திரைப்படம் என்பது அழியா சாசனம் போலதான். அதன் தாக்கம் நம் மொழியை, அதனை உலகுக்கு வெளிக்கொணர்ந்த இலக்கியங்களை, அதன் ஆளுமை பரப்பை அதிகப்படுத்திய பெரும் அரசர்களை புதிதாய் உலகத்தாரின் முன் காட்டும் சாத்தியங்களைக் கொண்டது. அதுவும் சரித்திர நாயகர்கள் எனும்போது அதன் ஆர்ப்பரிப்பு, நமது நாகரிகம் தெரியாதவர்களுக்குப் புதிதாகவும் தெரிந்தவர்களுக்கு நினைவுட்டலாகவும் அமையும் என்பதை எவ்வண்ணம் மறுக்க இயலும். இது எமது சரித்திரம் எனப் பறைச்சாற்றுதல் பெருமிதமே. அவ்வகையில் பொன்னியின் செல்வனைத் திரைக்கதையாக்கிய இயக்குனர் மணிரத்னம் ஒரு மாபெரும் கதைசொல்லியே..




நம் சரித்திரத்தைச் சொல்லும் திரைக்கதைகள் வருவது நல்லதே. அதனை விமர்சனப்படுத்தும் நிலையும் நன்றே. அடுத்தமுறை ஒரு வரலாற்று படைப்பை ஆவணப்படுத்தும் போது, இன்னும் கவனம் கொள்வார்கள் திரைப்படத்துறையினர் என்பதில் சந்தேகமில்லை..

~ அகிலா..
எழுத்தாளர்
30.4.2023
ஸ்டாக்டான்-ஆன்-டீஸ், இங்கிலாந்து.. 



Friday, 28 April 2023

தவ்வை நாவல் குறித்து கவிஞர் அன்புதோழி ஜெயஸ்ரீ உரை

தவ்வை புதினம் - உரை
கவிஞர் அன்புதோழி ஜெயஸ்ரீ






நூல்களை வாசித்து எழுதுவதற்கான நேரம் கிடைப்பதேயில்லை என்று பொய்யுரைப்பதைவிட எழுத ஆரம்பித்தபின் வாசிப்பு ஆர்வம் குறைந்து போய்விட்டது என்பதே உண்மை. ஆனால்,அகிலா மேடமின் எழுத்துக்களைவிட அகிலாக்கா எனக்கு நெருக்கமெனக் கொண்டிருப்பதால் 'தவ்வை' இருக்கின்றபடியே வெகு சீக்கிரமாய் எனை ஆட்கொண்டு விட்டாள்.

மேலும்,ஒரே மூச்சில் இந்நாவலை வாசித்து முடித்து தவ்வை குறித்துப் பகிர வேண்டிய உள் உந்துதலுக்குப் பெயர் பெண்மை எனும் சக்தி எனக்குள்ளும் இருப்பதால்தான் என்று எண்ணுகிறேன்.

Non-Linear எனும் கதை சொல்லல் முறையில் மூன்று தலைமுறை கதாபாத்திரங்கள்,நடைமுறை பழக்கங்கள் ,சம்பவங்கள்,சொல்லாடல்கள் என எல்லாவற்றையும் அனாயசமாக சுவாரசியம் குறையாமல் பிணைத்து நம்மை பிரமிக்க வைக்கிறார் நூலாசிரியர் அகிலா அவர்கள்.194 பக்கங்களாக...பின்னொரு காலங்களாய் 7 அத்யாயங்களும் முன்னொரு காலங்களாய் 6 அத்யாயங்களுமாய் மொத்தம் 13 என்று.... மேலைநாட்டு துர் எண்ணிக்கையாகவும், நம் இதிகாசக் கூறல் வகையில் 12 ஆண்டுகள் வனவாசம், ஓராண்டு அஞ்சாத வாசமென காலக்குறியீடுகள் மிகச் சரியாக இம்மண்ணின் எழுதப்படா சட்ட மறைகூறுகளினூடே பொருந்தி பெண்மையின் நீண்ட வலிமிகு சமரச வாழ்வியலை நெல்லைத் தமிழில் கண்முன் காட்டுகின்றன.

தவ்வையின் இளம் பருவத்தில் மட்டுமல்ல Post partum depression எனும் பிரசவத்திற்குப் பிறகான பெண்களின் உளவியல் மாற்றங்கள், மனக்கிலேசங்கள் பலவும் அதிகம் பேசப்படாத வறண்ட சமூகமாகத்தான் இன்றும்கூட இருக்கிறோம் என்று நானும் அறுதியிட்டுச் சொல்வேன். ஒரு மனநல ஆலோசகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறை பொங்கிப் பெருகும் கருணைத் தாயாக ஆசிரியர் ஆங்காங்கே அழகாக எட்டிப்பார்க்கிறார். அந்த இடங்களில் கதைகளத்தைவிட்டு நாம் சற்றே விலகி நம் பூட்டியை, பாட்டியை, ஆச்சியை, அம்மாவை, அத்தையை, சித்தியை... பக்கத்து வீட்டுப் பெண்ணை இல்லை நம்மையே அங்கே தவ்வைக்குள் பொருத்திக் கொள்ள நேர்கிறது.அந்த இடங்களில்தான் பெண்மைத் தெய்வம் எங்கும் நிறைந்ததாகி பரிசுத்தமான வெற்றி எய்துகிறது.

தன் இயலாமையை மறைக்க வன்முறையைக் கைப்பிடித்துக் கொள்ளும் உடற்குறையே மனஊனமுமாகி அந்த கோழைத்தனமெனும் பிறழ்வு நேரடியாக ஒரு நேர்மையான நெஞ்சத்தை எதிர்கொள்ளத் திராணியின்றி பொறியாகிச் சுடுகிறது. அக்கொடும் மனத்தீ பரவிப் பரவி பல நல்ல உள்ளங்களை வாட்டிப் பொசுக்குகிறது.
Domestic violence எனும் குடும்ப வன்முறை என்பது அன்றும் இன்றும் நம் சமூகக் கட்டமைப்பின் பார்வையில் பொருளீட்டாத, வசதிகளற்ற, குடித்துவிட்டு சாலையில் எல்லோரும் பார்க்க மனைவியை அடித்து உதைப்பது மட்டுமே என்றாக்கி இருக்கிறார்கள்.தந்திரமாக கனன்று கொண்டிருக்கும் பெரும்மனக்குரங்கு வாய்பிளந்து அனல் உமிழ்ந்து ஒளிந்து மறைந்து மாடியறை எனும் உச்சாணிக் கிளையில் அமர்ந்து கொண்டு தவ்வையின் பன்னீர்பூக்கனவுகளை சிதைத்து சிதைத்து அவள் வாழ்வையே வாசங்கள் இல்லாத வனமாக்கி விழுங்கிவிடுகிறது. எங்கும் குற்றவாளி ஆக்கப்படவே மாட்டான் அவன் எனும் பாலின சமத்துவப் போலிமையின் வேர்களை தவ்வை ஆழமாய் அசைத்துப் பார்த்துச் சிரிக்கிறாள்.

பூக்களைப் பெண்கள் என்பார்கள் ஆனால் தவ்வை எனக்குச் சொன்னது ஆண்களே பன்னீர் பூக்கள்...அந்த மென் இதழ்கள் ஆணாக வேண்டும் மலர்ந்து தன் மேல் மொத்தமாய்ப் படர்ந்து வீழ்ந்து தன்னை முழுதுமாய் மூடி தன் சுயம் தொலைக்கும் வண்ணம் வேறுநிறமேற்றி விட மாட்டானா.. எனும் சிறு ஏக்கமன்றி அந்த பெண் மண்ணுக்கு வேறென்ன பெரிதாக ஆசை இருக்க முடியும். நிறைந்த பன்னீர் பூக்களின் மண்தரையில் தவ்வையும் ரங்கனும் எனக்குத் தெரிந்தார்கள். அப்பாவுக்குப் பிடித்த சிறுபூக்களை நினைத்து புகுந்தகம் நுழையும் புதுப்பெண் தவ்வையினுள் கதையினுள் பேசப்படாத தமிழ் வாசத் தந்தையின் சாயல் நிறைய இருக்கிறதென உணர்கையில் தவ்வை அர்த்தநாரீஸ்வரர் அவதாரமாய் நம்முள் படர்கிறாள். தெய்வாம்ச சக்தி அல்லது இயற்கையின் சீர்வழி மனிதநேய சக்தி கொண்டு நிறைந்தவர் படுகுழியில் விழுந்தாலும் எழுந்து நிமிர்ந்து நிதானமாக நிற்பார் என்பது தவ்வை சொல்லும் பாடம்.

ஒட்டுமொத்த ஆண் சமூகத்தின் மேல் சாணி எறிந்து உரக்கப் பேசும் பயனில்லா பெண்ணுரிமைக் கொடியை இந்த ஆண்களே இப்படித்தான் என்று நாவலாசிரியர் எங்கும் தூக்கிப் பிடிக்கவில்லை. எல்லா காலத்திலும் ஆபத்பாந்தவனாக அனுசரணையாக ஒரு ஆண்மகன் இருக்கத்தான் செய்வான் என்பதான கருணை பொழியும் நேரியல் கதாபாத்திரம் சங்கரலிங்கம்.

உயிர்கண்ணியின் தொடர்புகள் காலங்கள் சுழன்றாலும் தொடரும். அற்புதமான ஜீவகண்ணிகளுக்கு அழிவை இயற்கை தந்து விடாது என்பதாக, விசாகன் வந்து நிற்கும்போது தவக்காலப் பலன் காட்சியாய் நமக்கும் கண்ணீர் துளிர்க்கிறது.தவ்வை மௌனத்தில் பேசுகிறாள்... அறிவார்ந்த நெடுங்கால தலைமுறைக் காப்பெனும் பெருக்கடமையைத் தோளேற்றி நடக்கும் வலியபெண்மை ஒருபோதும் இன்னொரு பெண்ணுக்கு எதிரியாவதேயில்லை.

அந்தரங்கங்களை அவற்றின் அதே புனிதத்தோடு கட்டிக் காக்கும் அவர்களின் சிறுபுன்னகை, கண்ணசைவு, கைக்கோர்ப்பு எல்லாவற்றிக்கும் பொருள் உணருமளவு ஆண்சமூகம் இன்னும் நுட்பமாக மனித மனங்களை நெருங்கவில்லை என்ற மறுக்கமுடியாத உண்மையின் பெருமிதம் புதினத்தின் நிறைவுப் பகுதியில் கனிந்த தவ்வையாக மூப்பழமாய்ச் சுவைக்கிறது. தூய்மையான கொய்யாமலர் வசீகரமாய் வைசாலியின் தெளிவு மனதைக் குளிர்விக்கிறது.

இதற்குமேல் விரிவாகப் பேசினால் கதைக்கருவின் மையத்தை வெளிச்சமிட்டு காட்டியதாகி விடும். வந்து விழும் இயல்பான தமிழ்ப் பெண் வாழ்வியலை சுவைத்து வாசிக்கும் அனுபவம் உங்களுக்கும் கிடைக்கப் பெற வேண்டும் எனவே அளவாய்ப் பகிர நினைக்கும் என்னை தவ்வை இழுக்கிறாள். "ஏ.. டீ இன்னும் ஒரு வா சோறு.. "என்று ஆதுரமாய் முடிவிலாப் பெண்மையை ஊட்டிக்கொண்டே போகிறாள்.

தவ்வையை வாசித்து முடிக்கும்போது இரண்டு அவிழ்க்கப்படா முடிச்சுகள் மனதை இறுக்கமாகச் சுற்றிக் கொள்கின்றன. ஒன்று- தவ்வை மலர்ந்து கனிந்து வாழ்ந்த வசந்தநொடிகளின் யதார்த்த காட்சிகள் எப்படியிருந்திருக்கும் ? அடுத்தடுத்த தலைமுறைகள் தாண்டியும் நினைவில் போற்றும் உறவுக்கு எத்தனை காலம் உடன் வாழ்ந்தோம் என்பதா முக்கியம் எப்படி என்பதல்லவா முக்கியம் அப்படி என நீங்களே உள்ளே போய் உணர்ந்து கொள்ளுங்கள் என வாசகனுக்கு ஒரு கற்பனாச் சிறகை அங்கே சொல்லாமல் தவ்வை தந்து விடுகிறாள்.

இன்னொன்று அந்த துர்மரணம் குறித்த கேள்வி..எப்படி என்று.இப்படியான மரணங்களுக்கு அங்கேயே இருந்த ஒரு நபரைச் சுட்டுவது அறமல்ல... கற்பு, கணவன், குல கௌரவம் என்று இச்சமூகம் பெண்ணினத்தின் மேல் போர்த்தி விட்டிருக்கும் நயவஞ்சக சாயங்களே காரணம். எனவே அந்த முடிச்சு அப்படியே நம்மிடம் தங்கி பேசாத மௌனங்களைப் புரிந்து கொள்ள வைக்கிறது.

சர்வதேச மகளிர் தினம் நெருங்கி வருகின்றது. நிச்சயம் இன்னும் உலகின் பல மூலைகளிலிருந்து பெரும்போராட்டங்களைக் கடந்து தவ்வை நிறைந்து சிரிக்கிறாள் வாழ்ந்து கொண்டே இருக்கிறாள். அவளை வாழ்த்துவதும் கொண்டாடுவதும் அவசியமாகிறது .

ஒரு வாஞ்சையான கைப்பிடி உரிமைக்கு ஏங்கும் எளிய பெண்மையை ஆணினம் மட்டுமல்ல அரைகுறைப் பெண்களும் புரிந்து கொள்ளும் காலம் வருமென தவ்வை நம்பிக்கை தருகிறாள்.அறிவியல் உடலியல் தெளிவுகளோடு,உளவியல் புரிதல்களையும் மென்மையாக வலியுறுத்துகிறாள்.

தவ்வை - மௌனத்தோடு பிணைந்த நிதானத்தின் அழகுமொழி.கேட்காத அலறல்களின் மங்கல சங்கீதமான எதிரொலி.

அவசியம் வாசியுங்கள்.👍


Wednesday, 4 January 2023

தவ்வை நாவல் குறித்து எழுத்தாளர் எஸ் ரா அவர்களின் பக்கத்தில்..

தவ்வை - புதினம்


எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்
2022யில் தான் வாசித்தவற்றுள் சிறந்த புத்தகங்களைத்
தேர்ந்தெடுத்து அவரது வலைத்தளத்தில்
கொடுத்துள்ளார்.
அவற்றுள் எனது நாவலான தவ்வை
குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்வும் அன்பும் 🙏

லிங்க் 👇













Thursday, 24 November 2022

நாமெல்லாம் வெயிலுக்கு பொறந்தவங்க

 

நாமெல்லாம் வெயிலுக்கு பொறந்தவங்க

(சிறுகதை)



1


புகைந்துக் கொண்டிருக்கும் தாளிப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றினாள். கடுகு, உளுந்து போட்டு தாளித்து கருவேப்பிலையைத் தேடும்போது, அது இல்லாதது நினைவில் வந்தது அமுதவல்லிக்கு. ‘வேதா’ என்றாள் சத்தமாக. பதிலே இல்லை. அடுப்பை அணைத்துவிட்டு, இங்கேதானே படிச்சுகிட்டு இருந்தா என்ற நினைப்புடன் ஹாலுக்கு வந்தபோது, வெளிச்சமற்ற மூலையில் அமர்ந்து,வேதா கணக்குடன் சமாதானம் செய்துக்கொண்டிருந்தாள். 

‘ஏய்ய்.. நான் கூப்பிட்டது காதில் விழலயா என்ன..’ 

‘அட போக்கா.. நான் படிக்கும்போதுதான் உனக்கு ஏதாவது வீட்டில் இல்லைன்னு தோணும்..’ தலை நிமிராமல் பேசினாள். வேதா வளர்ந்து வருவது இவளுக்குள் பயத்தை உண்டுபண்ணியது. எட்டு வயசிலேயே எடுப்பாய் இருப்பதாக பட்டது.

‘சுதர்சன் கடை வரைக்கும் போய், கருவேப்பில வாங்கிட்டு வாடி..’ என்று கெஞ்சலாக சொல்ல வெடுக்கென எழுந்து சென்றாள் வேதா. அடுத்த மாசம் முதல் நாமளும் நம்ம கடையில் காய் எல்லாம் வாங்கிவச்சுட்டா தன்னை பார்த்து பல்லிளிக்கும் ராஜுவின் முன் போய் நிற்க வேண்டியிருக்காது என்று நினைத்துக்கொண்டாள்.

‘காலையில் எழுந்து குடிக்கபோன அந்த ஆளை இன்னும் காணோம். அப்படியே அந்த ஆளு எங்காவது செத்துக்கிடக்குதான்னு பாரு’ என்றவளை திரும்பி பார்த்து வலிச்சம் காட்டிவிட்டு போனாள் வேதா. குடிச்சுட்டு சுயமில்லாம தெருவுல விழுந்துகிடக்கிறவன் செத்தவன் போலதான் அமுதாவுக்கு. அவள் வரும்வரை வாசற்படியில் உட்காரலாம் என்று அமர்ந்தாள். அம்மா இறந்ததில் இருந்தே மாரிமுத்து என்னும் அவளின் தகப்பன் வெறும் ‘ஆளு’தான் அவளுக்கு. அவனை பார்த்தாலே குமட்டலாய் இருக்கும் அமுதாவுக்கு. குடியும் சீட்டாமுமாய் தள்ளாடும் அவனிடம் தான் பட்ட பாடெல்லாம் கண்முன் ஓடும். பதினாறு வயதிலேயே தன்னை, கூட சீட்டாடும் நாற்பத்திரண்டு வயசுக்காரனுக்கு கட்டிக்கொடுத்து, அவனோடு நெகமத்துக்கு வாழப்போனதும், அஞ்சாறு மாசமா அவனின் குடியிலும் அடியிலும் வதைப்பட்டு, உண்டான கருவும் கலைஞ்சதும் அவன் வேண்டாம்னு பஞ்சாயத்து பண்ணி அறுத்துவுட்டுட்டு வந்ததும் மன்னிக்கவே முடியாத விஷயம்தான் அவளுக்கு. 

அதுக்கப்புறம் இந்த கடையே சாசுவதமாய் வந்து தாய் வீட்டோடு உட்கார்ந்ததும், இந்த ஆளு ‘மூதேவி.. மூதேவி.. செலவு வச்சுட்டு இப்போ இங்கே வந்து உட்கார்ந்திருக்கு பாரு.. சனியன்..’ என்று தினம் திட்டுவதும் மனதுக்குள் ஓடியது. பெண்ணுக்கென்று எங்கும் புகலிடம் இல்லை. பெத்த வீட்டை விட்டா, புகுத்த வீடுன்னு ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு என்று ஓடிகிட்டே இருக்கணும். அவளுக்குன்னு தனியா எதுவும் இல்லாததும் யாரையாவது அண்டியே வாழவேண்டியிருப்பதும் புரிந்தபோது இந்த சமூகத்தின் மீது கோபமாக வந்தது அமுதாவுக்கு. ‘சை.. என்ன நெனப்பு இது காலைலே...’ என்று அதை உதறி எழுந்தாள். 

அம்மாவுக்கு பிறகு, வீட்டின் முன்வாசலில் உள்ள தாத்தாவின் இந்த மளிகை கடை மட்டும் இல்லேன்னா சாப்பாடே இல்லங்கிற உண்மதான் அவள எப்போவும் சுடும். அதுக்காகவே தாத்தா படத்தை கடையில் மாட்டிவைத்து அதுக்கு இரண்டு ரூபாய்க்கு ஊதுவத்தி காலைலேயும் சாயங்காலத்திலேயும் கொளுத்தலேன்னா அவளுக்கு அன்னைய பொழுது இம்சைதான்.  

காலையிலே போன ஆளு சரியா பதினொரு மணிக்கு போதை தீர்ந்து, இவகிட்டே இருந்து காசு வாங்கி திருப்பியும் குடிக்கவேண்டி, இவள் வியாபாரம் பார்க்கும்போது பார்த்து, வந்து நின்னு காசு கேட்கும். கொடுக்கலைன்னா, ‘சீலையை நகத்தி கட்டி கடைக்கு வர்றவனுங்க கிட்டே காசு பண்ற சனியனே.. இழுத்து மூடிட்டு காசு குடுடி..’ என்று அங்கேயே அவளை கேவலமாக பேசும். அப்புறம் அவ அம்மாவையும் தாத்தாவையும் இழுத்து வச்சு அசிங்கமா ஆரம்பிக்கும். மரக்கடைக்கு அடுத்தாற்போல், தெருவென்றும் சொல்லமுடியாமல் சந்தென்றும் சொல்லமுடியாத வடிவில் இருக்கும் அந்த நீண்ட வீதியில் எல்லோருக்கும் இது பழக்கமானதுதான். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அந்த ஆளு பேசும்போதெல்லாம் இவ கூசிக்குறுகித்தான் போவாள். 

அசிங்கமான வசவுகளை கேட்டுக்கேட்டு அவளுக்கு புளித்து போய்விட்டது. கொஞ்ச நாளா அந்த ஆளோட கண்ணு தன் மாரு மேலேயே இருக்கிறத கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கா. கடைசி ஒரு மாசமா ராத்திரி நேரத்துல முன்கட்டில் அதுக்கு சாப்பாடும் வைத்து, அதை தாண்டி ஹாலுக்குள் வரும் கதவை தாள் போட்டுவிட்டு இவளும் வேதாவும் ஹாலில் படுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். குடித்துவிட்டு வந்து கதவை தட்டித்தட்டி சலித்து, அசிங்கமாக பேசிவிட்டு தூங்கிப் போவது அதன்பிறகு மாரிமுத்துவின் தினசரி வழக்கமானது.   

இந்த வீடும் கடையும், பக்கத்தில் இன்னும் இரண்டு வீடுகளும், தாத்தாவின் சொத்துகளாய் இருந்தன. அதன் வாடகையில் சற்று சௌரியமாக அம்மாவை வளர்த்தார். களக்காட்டு பக்கம்தான் தாத்தாவின் ஊர். அங்கு விவசாயம் சரிந்தபோது கொஞ்சம் பணத்துடன் கோயம்பத்தூருக்கு வந்து வியாபாரம் செய்ததாக அம்மா சொல்லும். ஊர் பக்கமிருந்த வந்ததாக சொன்னதால் மாரிமுத்துவை அம்மாவுக்கு கட்டிவைத்தாராம். அதன்பிறகு அம்மாவுக்கு அடியும் உதையும் இரண்டு பொம்பள பிள்ளைகளையும் தவிர வேற எதுவும் கிடைக்கவில்லை. 

இவளுக்கு பத்து வயது இருக்கும்போது, வேதா பிறந்தாள். அவள் பிறந்து ஒரு மாத கணக்கில் அம்மா உடல் பலகீனத்துடன் இறந்துபோனாள். பாட்டியால் வளர்க்கமுடியாது என்று சித்திதான் வேதாவை மூன்று வயதுவரை வளர்த்தாள். அம்மா இல்லாத வீட்டில் இவளுக்கு மாரிமுத்துவைப் பார்த்து பயம் இருந்தது. ‘பொட்டையா பெத்து வச்சிருக்கே..’ என்று சொல்லியே அம்மாவை அடிப்பது போல இனி தன்னையும் அடிப்பாரோ என்று. அம்மா இல்லாமல் எப்படி இவரோடு இருக்கமுடியும் என்ற பயத்தை சித்தியிடம் சொன்னபோது, ‘பயப்படாத. நாமெல்லாம் வெயிலுக்கு பொறந்தவங்க. அசராம வாழனும்..’ என்றாள். சித்தி வீட்டிலும் போய் மாரிமுத்து குடித்துவிட்டு அடிக்கடி தகராறு பண்ணியதில், வேதாவை இங்க கொண்டு வந்து விட்டுவிட்டு ‘உங்க சங்காப்தமே வேணாண்டி..’ என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். அதன்பிறகு எப்போதாவதுதான் வருவாள்.

இந்த ஹாலை பார்க்கும் போதெல்லாம் அம்மா நெனப்புக்கு வருவாள். இந்த ஹாலில்தான் அவளை கிடத்தியிருந்தார்கள். அம்மா ஏன் அசைவில்லாமல் படுத்திருக்கிறாள் என அப்போது அமுதாவுக்கு புரிந்திருக்கவில்லை. மல்லிகா சித்தியிடம் கேட்டதுக்கு, அவள்தான், ‘உங்க அம்மா இனி வரமாட்டாடி..’ என்று சொல்லி இவளை இழுத்து வைத்துக்கொண்டு அழுதாள். அவளின் கண்ணீரிலும் மூக்கு சிந்தியும் ஈரமான சேலையில் ஒருவித நாற்றம் அடித்தது. விலகி அமர்ந்தாள். அம்மாவின் மூக்கில் பஞ்சு வைத்து அடைத்திருந்தார்கள். இவளும் கையால் தன் மூக்கை அடைத்து வைத்துப்பார்த்தாள். மூச்சு மூட்டியது. விரலை மூக்கில் இருந்து எடுத்ததும் காற்று திணறிக்கொண்டு வெளியேயும் உள்ளேயும் போய் வந்தது.

 ‘என்னடி ஆச்சு உனக்கு..’ என்று சித்தி பயந்துப்போனாள். அம்மாவுக்கு மூக்கில் அடைச்சு வச்சிருக்காங்களே, அதை நானும் செய்து பாத்தேன் சித்தி..’ என்றவுடன், ‘ஏன் புள்ள இப்படி செய்தே.. ‘ என்று பதறினாள். 

‘அம்மாவுக்கும் எடுத்துவிடுங்க.. மூச்சுவிட கஷ்டமாயிருக்கும்..’ என்று உதடு பிதுக்கி அழத்தொடங்கினாள். ‘சும்மா இருடி’ என்று சத்தம் போட்டது சித்தி. 

அன்று இரவு முழுவதும் வேதா பாப்பா வேறு அழுதுகிட்டிருந்தது. யாரும் பார்க்காத சமயம் பார்த்து அம்மாவின் மூக்கில் உள்ள பஞ்சை எடுத்துவிடலாம். அம்மாவும் எழுந்துவிடுவா என்னும் எண்ணமும் அன்று இரவு முழுவதும் இருந்துக்கிட்டே இருந்தது. ஆனால் சித்தி அங்கேயே இருந்தாள். 

மறுநாள் காலையில் அம்மாவைத் தூக்கிட்டு போகும்வரை அவளால் அந்த பஞ்சை எடுக்கமுடியாமல் போனது, இப்போவரைக்கும் வருத்தமா இருக்கும் அவளுக்கு. பக்கத்தில் யாராவது செத்துபோயிட்டால், படுத்திருப்பவரின் மூக்கில் இருக்கும் பஞ்சை எடுத்துவிட்டு, அவர் மூச்சு விடுவதை அழுபவர்களிடம் காட்டி சிரிக்க வைக்கலாமா என்றும் தோன்றும். அப்படிதான் நாலு வருஷத்துக்கு முன்ன, எதுத்த வீட்டு ஜெகனின் தாத்தா இறந்துப்போனப்ப, துக்கம் தாங்கமுடியாம அழுதுக்கிட்டு இருந்த ஜெகனம்மா கிட்டேபோய் ‘நா ஒன்னு சொல்லட்டுமாக்கா..’ என்றபோது, என்ன என்பதுபோல் கண்ணீரோடு பார்த்தாள் இவளை. 

‘மூக்கில மூச்சுவிட முடியாம அடச்சு வச்சிருக்கிற பஞ்சை கொஞ்சம் எடுத்துப் பாக்கலாம்கா. அவரு முழிச்சாலும் முழிச்சுக்குவாரு.. ‘ என்று இழுத்துக்கொண்டே சொல்ல, ‘ஒன்ன என்னமோன்னு நெனச்சேன். நீயானா சின்ன புள்ளயாட்டம் இல்ல பேசுற. நல்லாதான இருக்கே..’ என்று கோபமாய் பேச அந்த இடம் விட்டு நகர்ந்து உட்கார்ந்து ஏதும் செய்யமுடியாமல் அழுததை நினைத்தால் இப்போவும் அழுகை வரும் அமுதாவுக்கு. 


2


சமையலறையின் ஜன்னல் வழியாக தெரிந்த துண்டு வானத்தில், ஏரோபிளேன் ஓன்று மௌனமாய் நகர்ந்துக்கொண்டிருந்தது. மனிதர்களை விட்டு தொலைவில் போவதால் சத்தம் தேவையில்லை என்று நினைத்துவிட்டது போலும். அதற்குள் இருக்கும் மனிதர்கள் பேசிக்கொண்டு தானே இருப்பார்களென அமுதாவுக்கு பட்டது. ஒருகாலத்தில் வேதாவும் நன்கு படித்து அதில் போகலாம். ஏன் நானும் கூட போகலாமோ என்ற நினைப்பு அவளுக்குள் வந்ததும் பக்கத்து தெரு ராஜேஸ்வரி சொன்னது நினைவுக்கு வந்து சிரித்துக்கொண்டாள். 

விசேஷ நாட்களில் அருகிலிருக்கும் விசாலாட்சி கோயிலுக்கு சம்பங்கியும் வில்வ இலைகளும் வெள்ளை தாமரை மொட்டுகளும் வாங்கிவருவதும் தொடுத்து கொடுப்பதும் இவளின் வேலை. பூவெடுக்க பூமார்க்கெட்டுக்கு ராஜேஸ்வரியுடன்தான் போவது வழக்கம். அப்படி ஒருநாள் போகும்போது ராஜேஸ்வரி கேட்டாள், 

‘நீ வெளிநாடு போறியா? டெய்லர் வேலைக்கு ஆள் கேட்கிறாங்களாம். நீ தையல் படிச்சிருக்கேதானே. என் விட்டுக்காரரோட பெரியண்ணன் ஏஜென்ட்டா இருக்காங்க. நேத்து பேசிகிட்டு இருந்தாங்க. அங்க போயி நல்ல சம்பாதிச்சா வேதாவை பெரிய படிப்புக்கு அனுப்பலாம்தானே..’ 

‘நல்ல ரோசனைதான். காசு அதிகமாகும்தானே. அத கூட கடைய வச்சு வாங்கிக்கலாம். எங்கப்பன் கிட்டே இவள தனியா விட்டுட்டு போகத்தான் பயமாயிருக்கு. நா இல்லாம போனா எனக்கு செஞ்சத போல இவளையும் எவனுக்காவது கட்டி வச்சுரும். அதுக்குதான் யோசிக்கிறேன்..’ என்றாள் இவள். 

‘ஹாஸ்டல்ல விடலாம் அவள. நம்ம பிரான்சிஸ் பள்ளிக்கூடத்து பாதர் எங்களுக்கு வேண்டியவங்கதான். ஏற்பாடு செய்யலாம் அமுதா.. உனக்கும் கைல கொஞ்சம் காசு புழங்கும். நாளபின்ன இன்னொரு கல்யாணம் கட்டிக்கலாம். இப்பிடியேவா காலம் பூரா இருக்கமுடியும்?’ என்றாள் ராஜேஸ்வரி. 

இன்னொரு கல்யாணம் என்றதும் அவளுக்குள் ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. இவ தன்னை வேவு பாக்கக்கேட்கிறாளா இல்ல நோண்டி பாத்து நாலு விஷயத்தை நம்ம வாயிலிருந்தே வாங்கி பத்து வீட்டுல நியாயம் பேசவேண்டி கேட்கிறாளா என்ற யோசிப்பில், ‘சரி. யோசிக்கிறேன்..’ என்று அன்னைக்கு முடித்துக்கொண்டாள்.

சமையல் முடித்து எல்லாம் மூடி வைத்துவிட்டு, குளிக்கக் கிளம்பினாள். இப்போவே எட்டு ஆச்சு. சீக்கிரம் கடையில் போய் உக்காரணும், தெருவில இருக்கிறவங்க பற்று செலவு கணக்கும் எழுதும் அக்கவுன்ட் நோட்டு வேற காலியாயிடுச்சு. அதையும் ஒன்னும் வாங்கப்போகனும் என்று யோசித்துக்கொண்டே அடுக்களையை விட்டு வெளியேவர, ‘அமுதா... ஏய் அமுதா.. இங்க வந்து பாரு. உனக்கா இப்படி சோதன வரணும்..’ என்று ஜெகனம்மாவின் அலறல் கேட்க, வழக்கமா குடிச்சுட்டு வேட்டிய ரோடுபூரா இழுத்துட்டு வரும் அப்பன பாத்துதானே சத்தமா நாலு திட்டு திட்டும் இந்த ஜெகனம்மா, இன்னைக்கு என்ன நம்மள கூப்பிடுது என்று உள்ளே பதைப்பு உண்டாச்சு அமுதாவுக்கு. 


3


ஹாலில் பாய் விரித்து, மாரிமுத்துவைப் படுக்க வைத்திருந்தார்கள். அவனின் தலைமாட்டில் நெளிந்துப்போன ஒரு காமாட்சி விளக்கு மினுக்மினுக்குன்னு உயிர விட்டுவிட்டு தொட்டுக் கொண்டிருந்தது. அந்த சின்ன வீட்டின் முன்பகுதியில் சாத்தியிருந்த கடையை ஒட்டி சிலர் வேடிக்கை பார்த்தபடி சென்றுக்கொண்டிருந்தனர். அக்கம்பக்கம் இருப்பவர்கள், மளிகை வாங்க பக்கத்து தெருவில் இருந்து வருபவர்களின் முகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்திருந்தன. 


இரண்டு வீடு தள்ளியிருக்கும் கனகாவின் பாட்டி இவளருகில் வந்து, ‘ஏண்டி, காசு கீசு வச்சிருக்கியா எரிக்க?.. எம்பையன் கேட்க சொன்னான். செலவு செஞ்சுட்டு வாங்கிக்கவா..’ என்று கேட்க,

‘இல்ல பாட்டி, இவளுக்கு பீசுக்கு உள்ள காசு அஞ்சாயிரம் இருக்கு. அத வச்சு எரிச்சுவிடுங்க..’ என்று எழுந்துபோய் எடுத்துக்கொடுத்தாள். 

‘யாருக்காவது சொந்தக்காரங்களுக்கு சொல்லனும்னா சொல்லிருடி..’ என்றபடி பாட்டி எழுந்துவிட்டு, ‘கொஞ்சம் அழுடி. எல்லோரும் தப்பா நெனப்பாங்க..’ என்று சொல்லி நகர்ந்ததும், வேதா அழுதுகொண்டே சுவரோரமாய் நிற்பதை கவனித்தாள். அவளருகில் போய் அவளையும் உக்காத்தி, தானும் சுவரில சாய்ந்து உக்காந்துக்கொண்டாள். 

பொள்ளாச்சி பக்கமிருந்து ஒரே சொந்தமான மல்லிகா சித்தியும் அவங்க வீட்டு ஆளுங்களும் வந்ததும் அந்த வீடு மயான அமைதியை சற்று தளர்த்தது. வந்தவ சத்தம் போட்டு பொலம்பிக்கிட்டு இருந்தாள். ‘குடியோ கிடியோ, ஆம்பளங்க பேருக்கு இவரு கிடந்தாரு. இப்போ அதுவும் இல்லாம போயாச்சே..’ சத்தமிட்டவளை தொடையின் பக்கவாட்டில் கிள்ளினாள் அமுதா. 

‘வாய மூடிகிட்டு அழு. இல்ல எந்திச்சு போ.. எல்லோருக்கும் சொல்லி கொடுத்திராத.. ‘ என்று காதில் ஓதினாள். சித்தி அவளை மலங்க பார்த்தாள். 

‘என்னடி, உனக்கு துக்கமா இல்லயா.. உங்கம்மா செத்தப்போ என்னவெல்லாம் கேட்டே..எப்படி பயந்த. இப்போ என்னடி இப்படி ஆயிட்டே.. தைரியம் வந்திருச்சுடி உனக்கு.‘ என்று உதட்டோரமாய் சின்ன சிரிப்புடன் சொன்னாள்.

பதில் பேசாமல் சுவரில் சாய்ந்துக்கொண்டாள் அமுதா. சித்திக்கு இங்கு நடப்பது என்ன தெரியும். அந்த ஆளு ஒரு ஆம்பள என்பதை சித்தி என்னைக்காவது நினைச்சு பாத்திருக்காளா. கதவ தாளிட்டு தான் ஹாலுக்குள் படுக்கும் அவலம் அவளுக்குத் தெரியுமா. ஒரு நா ராத்திரி குடிச்சுட்டு வந்து இவள திட்டிக்கிட்டே, இவ மாரின் மீது கைவைத்ததும், பக்கத்தில் இருந்த காமாட்சி விளக்கை எடுத்து அந்த ஆளு கையில குத்தியதும் இந்த விளக்கு நெளிந்து போய் இப்போவும் சிரித்துக்கொண்து அவன் தலைமாட்டிலே இருப்பதும் இவளுக்கு மட்டும்தானே தெரியும். மொகத்தை சேல தலப்பு வச்சு அழுந்த துடைத்துக்கொண்டாள். ஜெகனம்மா எல்லோருக்கும் காப்பி வாங்கி வந்தாள். காப்பி சூடாய் உள்ளே இறங்கியது. 

‘ஆம்பளங்க யாராவது வந்து காலு விரல இழுத்து கட்டுங்கப்பா..’ என்று யாரோ சொல்ல, டெய்லர் சதாசிவம் தன் கையில் வைத்திருந்த ஒட்டுதுணியை வைத்து விரல்களை கட்டிக்கொண்டிருந்தார்.

‘அப்படியே மூக்கில பஞ்ச வச்சிருங்கண்ணே..‘ என்றாள் அமுதா சத்தமாக. மல்லிகாவும் ஜெகனம்மாவும் ஒருசேர அவளைத் திரும்பிப்பார்த்தார்கள். வெயில் சூடேற தொடங்கியிருந்தது.     






பெரிய மீசை

 பெரிய மீசை 

(சிறுகதை)



1

கடந்துப்போன பல வருடங்களாக லட்சுமியை நான் மறந்திருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். நானும் கூட மறந்திருப்பதாக எண்ணிக்கொண்டேன் அந்த கடிதம் வரும்வரை. பள்ளியில்லாத ஒரு சனிக்கிழமை. மதியம் கடந்த நேரம். கதவிடுக்கின் சிறுவெயில் கீற்றை கிழித்து சர்ரென்று வந்து விழுந்தது அந்த கடிதம். 

தபால்காரர் சண்முகம் எப்போதும்  இப்படிதான். முன்கேட்டின் உள்தாழ்பாளை தனது மெலிந்த கை நுழைத்து திறந்து, நீண்ட நடைபாதையைக் கடந்து, இருபுறமும் திண்ணை பிரித்து கிடக்கும் பரந்த படிகளில் ஏறிவந்து, கதவின் கீழிடுக்கு வழியாய் தள்ளிவிட்டுப்போவார். பெரிய தபாலாக இருந்தால், கதவின் பிடிதேய்ந்த, உருண்டையான வெளிவளைவை தட்டுவார். 

ஹாலில் தூக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்த நான் எழுந்துபோய் எடுத்துவந்தேன். இருள் அறை முழுவதும் அப்பிக் கிடந்தது. அம்மாவைத் தேடினேன். ஹால் கடந்து, திறந்திருந்த தாழ்வாரம் ஒட்டியிருந்த, சந்திரன் அண்ணாவின் அறைவாசல் படியில் தலைவைத்துப் படுத்திருந்தாள். அண்ணா அமெரிக்காவிருந்து வரும்போது மட்டுமே அந்த அறை பயன்பாட்டில் இருக்கும். இந்த முறை வந்திருந்தபோது அவனின் பெண்ணுக்கு என் பையன் சங்கரனைக் கட்டிவைக்கலாம் என்று அபிப்பிராயப்பட்டான். நான் பதிலேதும் சொல்லவில்லை. லட்சுமிக்கான பதில் அவனிடம் அன்று இல்லாததும் என் மௌனத்தில் ஒளிந்திருக்கலாம்.

இந்த பெரிய பண்ணைக்கார வீட்டின் அத்தனை ஜென்மங்களின் சாபங்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டு லட்சுமி, கல்கத்தா போனபிறகு,இரண்டு வருடங்கள் கழித்து என் பெயருக்கு கடிதம் எழுதியிருந்தாள். அப்பாவும் பெரியப்பாவும் பாட்டியும் சேர்ந்து அதை படிக்கும் முன்பே கிழித்து வீசினார்கள். மதியம் அம்மா என் கையில் அந்த கிழிந்த துண்டுகளை அடுக்கி, பசை கொண்டு ஒட்டி, யாருக்கும் தெரியாமல் என் கையில் திணித்தாள்.
‘ஓன் பள்ளி அட்ரேசுக்கு அவள இனி கடிதம் எழுதச்சொல்லு..’ என்று சொல்லி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சென்றாள். 


2

அடுத்த தெருவில் இருக்கும் பள்ளிக்கும் சண்முகம்தான் தபால்காரர். பள்ளியில் அவரின் மகள் வயிற்றுப் பேரன் நான்காவது படிக்கிறான். அதனால் அங்கு என்னை வந்து பார்த்து விசாரித்து கடிதம் கொடுத்துச் செல்வது வழக்கம். ஒரு முறை,
‘நம்ம லட்சுமியா.. பின்னாடி முகவரியில் இருக்கே.. நல்லாயிருக்காளா..’ என்று விசாரித்தார். 
‘ம்ம்..’ என்று சற்று தயங்கிச் சொன்னதும் புரிந்துக்கொண்டார். இதுவரை அவர், என் வீட்டில் உள்ள யாரிடமும் சொன்னதில்லை. 

அவளின் கடிதங்கள் ‘அடியே தேவகி..’ என்ற விளிப்புடன் தொடங்கி, எங்களுக்கிடையே ஆன தோழமையின் நிமித்தமாய் அனேக குறும்புகளும் சந்தோஷங்களும் சுமந்து இருந்தன. என் பெரியப்பாவின் பெண் அவள். பெரியம்மா இவளைப் பெற்றெடுக்கும் போதே இறந்துவிட்டார். பெரியப்பாவிற்கு தன் மகனின் மீது மட்டும் அளவு கடந்த பாசமுண்டு. லட்சுமியை ‘துக்கிரி.. துக்கிரி’ என்பார் சிரித்துக்கொண்டே. அவளும் அவரை ‘பெரிய மீசை..’ என்பாள். காரணமும் அடுக்குவாள். ‘அந்த மீசை முடியெல்லாம் உதிர்ந்து காணாமல் போகும் போதுதான் அவர் கெத்து அடங்கும்..’ என்று சொல்லி சிரிப்பாள். 

அம்மாதான் லட்சுமிக்கு அளவுக்கு அதிகமாய் சுதந்திரம் கொடுத்தாள். ‘அம்மா இல்லாத பெண்..’ என்பாள் அடிக்கடி. லட்சுமி ரொம்ப துடுக்கு. ஒரு இடத்தில் அவளை நிறுத்த முடியாது. அய்யர் வீட்டு பெண்கள் மட்டுமே அப்போது பாட்டு கற்றுக்கொண்டிருந்தார்கள். இவளும் பிடிவாதம் பிடித்து கற்றுக்கொண்டாள். பரதநாட்டியம் அவள் சேரும்போது என்னையும் சேர்த்துவிட்டாள் அம்மா. நான் மாநிறம்தான். அவள் நல்ல கலர். ‘பெரியம்மா மாதிரி.. எல்லாவிதத்திலும்..’ என்று அழுத்தம் கொடுத்து சொல்லுவாள் பாட்டி.

நானும் அவளுமாய் இரட்டை சகோதரிகளாய் வலம் வந்தோம். ஒரு கட்டத்திற்கு மேல் பெரியப்பா நிப்பாட்டச் சொல்லி சத்தமிட்டார். 
‘இந்த பால்சாமி கோனார் வீட்டு வயது வந்த பெண்கள் மேடையில் ஆடுது என்று ஊரில் பேசினால், எவன் வந்து கட்டுவான் இந்த குழந்தைகளை..’ என்று குதித்தார். பாட்டியும் அவருடன் சேர்ந்துக்கொண்டாள். 

அம்மாவால் ஒன்றும் சொல்ல முடியாமல் போயிற்று. லட்சுமியின் படிப்பையும் பெரியப்பாவே இறுதி செய்தார். பள்ளிபடிப்பு முடிந்ததும் திருமணம் செய்துவைத்தார். கல்யாணம் பண்ணமாட்டேனென்று அழுதவளை கட்டிவைத்தார். அவளால் கட்டியவனோடு பொருந்த முடியவில்லை. 

‘அவன் ஊர பிடிக்கல. பஸ் பிடிக்க ஒரு கிலோமீட்டர் மண்ரோடு தாண்டனும். அவன் வீட்டயையும் பிடிக்கல. அவனயையும் பிடிக்கல....’ என்று சொன்னாள் என்னிடம். கல்யாணம் ஆகணும்னா, இதையெல்லாம் பிடித்திருக்கவேண்டும் என்பதை அப்போது நான் குறித்து வைத்திருந்தேன்.

மீண்டும் வீட்டோடு வந்தாள். வீட்டில் அவள் இருந்த எல்லா பொழுதையும் அவளுக்கு நரகமாக்கினாள் பாட்டி. இருந்தும் அம்மாவின் அழுத்தத்தால், என்னோடு கல்லூரி சேர்ந்தாள். 

ஒரு வருடத்தில் காதல் வலையில் விழுந்தாள். எனக்கும் தெரிந்திருந்தது. 
‘இது சரிப்படாது. பெரியப்பா ஒத்துக்கமாட்டார் லட்சுமி.’ என்றபோது, 
‘அப்பாவைப் பார்த்து என்னைவிட நீதான் ரொம்ப பயப்படுறடி. பார்த்துக்கலாம்..’ என்று தைரியமாய் சொன்னாள்.

 அரசல்புரசலாய் அந்த விஷயம் வீட்டுக்குள் நுழைந்ததும், பெரியப்பா அவள் கணவன் வீட்டில் கடைசி முறையாக சமரசம் பேசிமுடித்தார். அப்பாவிடம் அம்மா அவளை அங்கு அனுப்பவேண்டாமென சொல்லிப்பார்த்தாள். 

‘உன்னால்தானே கல்லூரி அனுப்பி, தனக்கு கல்யாணம் ஆனதை கூட மறந்துட்டு காதல் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறா.. இனி அண்ணன்தான் முடிவு செய்வார்.. ‘ என்று முகம் காட்டிவிட்டார் அப்பா. சந்திரன் அண்ணனிடம் லட்சுமி குறித்து, நான் பேசப் போனபோது, ஒன்றும் சொல்லாமல் நகர்ந்துவிட்டான். அதை லட்சுமியிடம் சொன்னபோது சிரித்தாள். 
‘இந்த வீட்டு ஆண்களைப் பற்றி உனக்குத் தெரியாது. கோழைகள்’ என்றாள்.

மறுநாள் லட்சுமியை வீட்டில் காணவில்லை. அவளை காதலித்தவனையும் காணவில்லை. அவன் பெயர் முருகன் என்பதை அன்றுதான் அனைவரும் அறிந்தனர். அன்றோடு அவளை இந்த வீட்டில் அனைவரும் தலைமுழுகினார்கள், என்னையும் அம்மாவையும் தவிர.

இரண்டு வருடம் கழித்து வந்த கிழித்து ஒட்டப்பட்ட கடிதத்தின் வழிதான் அறிந்தோம் அவளுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை. நானும் இங்கிருந்து அவளின் கணவனுக்கு இரண்டாம் திருமணம் முடிந்ததை எழுதினேன். நான்கைந்து வருடங்களில் அதுவும் நின்றுபோனது. காலம் ஓடிக்கொண்டேயிருந்தது. 

சரவணனுடனான என் திருமணம், அண்ணன் அமெரிக்கா போனது, அங்கேயே ஒரு பெண்ணை மணந்தது, அது தாளாமல் பெரியப்பா மனம் உடைந்து அதிகார தோரணை இழந்து ஒடுங்கியது, சரவணனுக்கு மாற்றல் வந்தபோது, என்னை அனுப்ப மறுத்து பெரியப்பா அவரிடம் கெஞ்சியது, சரவணனும் அங்கும் இங்குமாக அலைந்துவிட்டு இப்போதுதான் இங்கு மாற்றலாகி வந்திருப்பது, இப்படி எத்தனையோ நடந்தேறிவிட்டது இத்தனை வருடங்களில்.  


3

லட்சுமியிடம் இருந்து கடிதங்கள் நின்றுபோன பிறகு சில காலம் பள்ளிக்கு என் பெயரில் வரும் கடிதங்களில் எல்லாம் அவளின் கையெழுத்தைத் தேடுவது என் வழக்கமாக இருந்தது. அம்மாவும் அவ்வப்போது அழுவாள். இப்போது ஒரு கடிதம், என் பெயருக்கு, அனுப்புநர் முகவரி இல்லாமல் வந்திருக்கிறது. லட்சுமியின் நினைவு வந்தது. இது லட்சுமியின் கையெழுத்து இல்லை என்று மனதில் பட்டதும், முகம் கழுவிவிட்டு வந்து படிக்கலாமென சாப்பாட்டு மேசையின் மீது வைத்துவிட்டு நகர்ந்தேன். அப்படியே அதை மறந்தும் போனேன். 

பெரியப்பாவின் அறையைக் கடக்கும்போது பார்த்தேன். படுத்திருக்கிறார் அவர். இப்போதெல்லாம் அறையை விட்டு அதிகமாய் அவர் வெளியே வருவதில்லை. வயதின் தளர்ச்சி. அவரின் அந்த பெரிய மீசை வெள்ளையாகி, நன்றாக மெலிந்திருந்தது. முழுதாய் உதிர்ந்தால்தானே கெத்து அடங்கும் என்னும் நினைப்புடன் லட்சுமி மீண்டும் வந்து மனதில் ஒட்டிக்கொண்டாள். 

அப்பாவும் பெரியப்பாவும் சில நாட்களில் சாயங்கால வேளையில், நான் பள்ளி விட்டு வீடு திரும்பும் சமயம், வீட்டு முன்திண்ணையில் அமர்ந்திருப்பார்கள். ஒன்றும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வெறுமனே தூரத்தில் தெரியும் சாலையையும் பள்ளிக் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

சரவணன் வந்தால் மட்டும் இருவரும் ஹாலில் அமர்ந்து அவருடன் உலக நடப்புகளை பற்றி சில பல குறைகளுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். தன்னிடமும் அம்மாவிடமும் அவர்கள் இந்த அளவுக்கு பேசியிருப்பார்களா என்பது நினைவில் இல்லை. லட்சுமி இந்த வீட்டு ஆண்களைப் பற்றி சொன்னதைப் புரிந்துக்கொள்ள தனக்கு இத்தனை காலம் ஆகியிருப்பதை நினைத்து சிரிப்பு வந்தது.

அம்மா மட்டும் இன்னும் அடுக்களையில் எல்லோருக்குமாய் உழைத்துக்கொண்டே இருக்கிறாள். இப்போதும் என்னுடைய மகன் சங்கரனுக்காய் ஏதோ செய்து அது சாப்பாட்டு மேசைக்கும் வந்துவிட்டது. மேசையில் அந்த கடிதம் காத்திருந்ததை அப்போதுதான் கவனித்தேன். 



4

மாடி சுவரின் மீதான என் பிடிப்பு இறுகி இருந்தது. காற்று என் சேலை தலைப்பை பறக்கவிட்டு வேடிக்கை பார்த்தது. என் கண்ணீர் துளிகளையும் சேர்த்துதான். அம்மா முடியாமல் இரண்டு கால் முட்டுகளையும் கைகளால் பிடித்துக்கொண்டே மாடிப்படி ஏறிவந்தாள். ‘உன்னை கீழே காணுமேன்னு தேடினேன்’ என்றாள். 

ஒன்றும் பேசாமல், கடிதத்தை நீட்டினேன். ‘என்ன இது’ என்று கேட்டுக்கொண்டே திறந்தாள் கடிதத்தை. இலேசான சத்தத்துடன் படிக்கத்தொடங்கினாள். 

“அன்புள்ள தேவகி சித்திக்கு,  

ராகுல் எழுதுவது. என் அறிமுகம் முக்கியமானதாய் நான் நினைக்கவில்லை. இருந்தும், இவ்வாறு உங்களை சித்தி என்றழைக்க உரிமை பட்டிருக்கிறேன். என் அம்மா லட்சுமி சொல்லித்தான் இதை எழுதுகிறேன். 

அப்பா தவறி இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. நான் பொறியியல் படிப்பை முடித்து, அப்பா வேலை பார்த்த ரயில்வே துறையில வேலை பார்க்கிறேன். அவரின் பென்ஷன் அம்மாவிற்கு கிடைக்கிறது. இங்கு வீடும் இருக்கிறது. அதனால், அங்கு, ஊருக்கு வந்து சேரும் எண்ணம் அம்மாவிடம் இதுவரை இருந்ததில்லை. நான் கவனித்திருக்கவில்லை என்பதாகவும் இருக்கலாம். 

ஆனால், கடந்த ஆறேழு மாதங்களாக சற்று வித்தியாசமாக நடந்துக்கொள்கிறார். இரவில், ‘அம்மா உன்ன பார்க்கணும் போல இருக்கு’ என்று புலம்புகிறார். அடுக்களையில் சமையல் செய்யும்போது, இல்ல, ஏதாவது வேலை செய்யும் போதும் தன்னையறியாமல் உங்க பெயரைச் சொல்லியழைத்து பேசுகிறார். வேறு யார் பெயரை எல்லாமோ சொல்கிறார். அங்கிருப்பவர்களின் பெயர்கள் எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாததால் எனக்கு அது பயத்தைக் கொடுத்திருக்கிறது. அவரிடம் கேட்டால், கண்களில் எட்டிப்பார்க்கும் கண்ணீருடன், நான் ஏதும் சொல்லவில்லையே என்கிறார். 

நேற்று அம்மாவிடம் இதுகுறித்து பேசினேன். அப்போதுதான் ஊருக்கு வருவது குறித்த அவரின் ஆசை புரிந்தது. ஒரு முறை மட்டும் அங்கு அழைத்து வரலாம் என்றிருக்கிறேன். ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் இருந்துவிட்டு நானே அழைத்தும் வந்துவிடுகிறேன். 

அதற்கு தாத்தாவின் அனுமதி வேண்டும் என்றார் அம்மா. அதற்குதான் இந்த கடிதம். 

தாத்தா உயிருடன் இருப்பாரா என்று கேட்டேன் அம்மாவிடம். 
‘நிச்சயம் இருப்பார். என்னை பார்க்காமல் அவர் உயிர் போகாது. நான் அவருக்கு நல்ல மகளாக நடந்துக்கொள்ளவில்லையோ என்ற குற்ற உணர்வு எனக்குள் உண்டு. அவர் காலின் கீழ் ஒரு நாள் பொழுதே இருக்க விரும்புகிறேன் ..’ என்று அழுகையினூடே சொன்னபோது மனம் கனத்துப்போனேன் நான். தாத்தா இதற்கு சம்மதிப்பாரா என்பதை நீங்கதான் கேட்டு சொல்லணும். 

சின்ன பாட்டியையும் தாத்தாவையும் கேட்டதாகச் சொல்லவும். உங்களுக்கு அதிகம் தொந்தரவு கொடுக்கிறேனோ என்றும் தோன்றுகிறது. ஆனால், நீங்கதான் பொறுமையாக இந்த குடும்பத்தை பிணக்கங்களின்றி பெரியவர்களை மனவருத்தப்படுத்தாமல் கொண்டு செல்கிறீர்கள் என்று அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். என் கைப்பேசி எண்ணை கொடுத்திருக்கிறேன். தொடர்பு கொள்ளவும். 

உங்களின் பதிலுக்காகக் காத்திருக்கும் மகன்..”

கடிதத்தைப் படித்துவிட்டு அம்மா உடைந்து போய் அழுதாள். 
‘உங்க பெரியப்பா கிட்டே நீயே கொண்டு கொடு. இனி அவர் சொல்றதுக்கு என்ன இருக்கு? வரச்சொல்லி பேசு. எனக்கு லட்சுமியைப் பார்க்கணும். அவ இனி எங்கும் போகமாட்டா..’ அம்மா உணர்வு வயப்பட்டு அடுக்கிக்கொண்டே போனாள். 


5

பெரியப்பாவின் அறையில் மாலை நேரத்து மங்கலான வெளிச்சம் மட்டுமே இருந்தது. விளக்கை போட்டுவிட்டு, கடிதத்தை கையில் கொடுத்தேன். என்னவென்பதாய் புருவம் உயர்த்தினார். படித்து முடிக்கும்வரை காத்திருந்தேன். அவரின் பெரிய மீசை சிறு வயதில் பார்த்தது போலவே நீளம் இருந்தது. ஓரங்களில் ஒடிந்து போய், சற்று மெலிந்து, நரைத்து, காதுகளில் இருந்து வழிந்த கிருதாவைத் தொட முயற்சித்து கொண்டிருந்தது. வீட்டின் மூத்தவர் என்னும் கம்பீரம் அந்த மீசையின் மீதே ஒட்டியிருப்பதாக எனக்கு தோன்றியது.

கடிதம் வாசிக்க வாசிக்க அவரின் கண்கள் நடுங்குவதும் அது அந்த பெரிய மீசையின் மீதும் படிவதாக இருந்தது. முழுதாய் படித்து முடித்ததும், நான் கவனிக்கிறேன் என்பதை உணர்ந்து தன்னை நிதானப்படுத்திக்கொள்ள கடிதத்தை நிதானமாய், இருந்தமாதிரியே மடித்தார். கண்களின் ஓரமாய் விழவிருந்த கண்ணீருடன் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தார். என்ன சொல்லுவார் எனப் பார்த்திருந்தேன்.
‘அப்பாவை வரச்சொல்லு, தேவகி..’ என்றார். 
‘நம்ம கிட்டே சொல்லமாட்டாரோ? பெரிய்ய மீசை.. அதுவும் நரைச்ச மீசை..’ அவருக்கு கேட்காத வகையில் மெதுவாய் சிரித்துக்கொண்டேன்.