Skip to main content

Posts

Showing posts from January 20, 2013

காது குத்தல்....

சிவப்பும் மஞ்சளும் பச்சையுமான பட்டில் தலை நிறைய பூவோடு பெரிய குங்கும பொட்டோடு பெண்களும்..... வெள்ளை பூ வேட்டியுமாக சின்ன கீற்றாய் விபூதியுமாக ஆண்களும்..... பெரிய கண்களோடு குலசாமியும் மீசை முறுக்கோடு பூசாரியும் எலுமிச்சை தலையோடு அரிவாளும் எல்லாமே பக்தி முத்திப் போய் இருக்க ஆடு மட்டும் மணமேடையில் அமர்ந்திருக்கும் பெண்ணைப்போல தலை குனிந்து கண் நிறைய பயத்தோடு.... வாயில்லா ஜீவனை வெட்டி சாமிக்கு படையலிட்டு அவரின் பெயரால் இவர்கள் சாப்பிட்டு கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று ஜீவகாருண்யத்துடன் வள்ளலாரையும் சேர்த்து புதைத்து சந்தோஷமாய் காது குத்தி திரும்புவார்கள் இந்த புண்ணியவான்கள்......

புத்தனின் வழி....

அனுபவங்கள் ஆச்சிரியப்படுத்தும் தவறுகள் திருந்தச்சொல்லும் செயலில் தன்மையாய் சுடுசொற்கள் தவிர்த்து சந்தேகம் களைந்து சுற்றத்தை காயப்படுத்தாமல்  அகந்தை அழித்து அறிவையும் விடுத்து வலிகளை பொதுவில் வைத்து மனிதத்தை மதித்து சாதாரணமாய் வாழும் அனுபவமே புத்தம்... அந்த அனுபவத்தையே செயலாக்கி நினைப்பில் முரண்படாமல் நின்று புத்தனின் வழி கால்பதித்து நடை பயில விழைகிறேன்....

சோர்வாய்....

வழக்கம் போல் சிக்னலில்  வீடு திரும்பும் கூட்டம்...  ஹெல்மெட்டுக்குள்ளே மூச்சுவிட்டு கொண்டு காருக்குள் கன்னத்தில் கைமுட்டு கொடுத்து  பேருந்தில் சன்னலோர கம்பியில் சாய்ந்து      துப்பட்டாவுக்குள் மேக்கப் கலைந்து  சைக்கிளில் காலூன்றி தளர்ந்து   முழுநாளின் முழுமையை சுமந்து  முகங்கள்...முகங்கள்...

36 வது புத்தக கண்காட்சி....

சென்னையில்... ஒய் எம் சி ஏ மைதானம் ஜனவரி 11 - 23, 2013 36வது சென்னை புத்தக கண்காட்சிக்கு இந்த முறை மூன்று முறை போய் வந்தேன் (என் புத்தகம் ஒன்றும் அங்கு வைக்கபட்டிருந்ததால்...)....நிறைய புத்தகம் வாங்கினேன். அதைவிட நிறைய பராக்கு பார்த்தேன்னு உண்மையை சொல்லணும். அங்கு கவனித்த நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும்.   பார்வைகள்... o    புத்தக கண்காட்சி என்பது மக்களால் ஒரு பெரிய பொருட்காட்சியாய் பார்க்கப்படுகிறது. குடும்பம் குட்டியுடன் வந்து சலிக்காமல் புத்தகங்களை சலித்து எடுத்து அதன் பிறகு சாப்பாட்டு கடையில் சாப்பிட்டு வீக்எண்டை கொண்டாடி செல்கிறார்கள். o    புத்தக பிரியர்கள் மற்ற நாட்களில் சமாதானமாய் வந்து மெதுவாய் புத்தகங்களை அனுபவித்து செல்கிறார்கள். o    பதிப்பகங்கள் , வெளியீட்டாளர்கள் , எழுத்தாளர்கள் , கவிஞர்கள் இவர்களின் பார்வையே வேறு. வியாபார நோக்கில் மட்டுமில்லாமல் படிக்கும் மக்களின் நாடியை பிடித்து பார்க்கவும் இந்த திருவிழாவை பயன்படுத்துகிறார்கள்.   காரணங்கள்.... o    நிறைய விதம் விதமான புத்தகங்கள் ஒருசேர ஒரே இடத்தில் கிடைப்பதால்.... o    அ

மழைதுளியாய்....

ஒரு முத்தம்.... கர்ப்பக்குளத்தில் எதிர்நீச்சலாய் முதல் முத்தம் பதினாறு வயதில் பருவத்தின் யுத்தமாய் ஒரு முத்தம் இருபதுகளில் மழலையின் பிஞ்சு முத்தம் நாற்பதுகளில் வளர்ந்த பிள்ளைகளின் அவசர முத்தம் ஐம்பதுகளில் மாமியாரின் அன்பு முத்தம் என்றென தெரியாத மண்ணின் கடைசி முத்தம்   சுவாசமாய் தொடங்கும் பயணத்தில் சுவாரசியமாய் சிலிர்ப்பாய் அன்பாய் அனாயாசமாய் அர்த்தமாய் ஆசையாய்   என்று எத்தனையோ முத்தங்கள்..... எத்தனை எத்தனை முத்தங்கள் உன்னை முத்தமிட்டாலும்   உன்னை உயிராக்கிய உன் தாயின் முதலும் முடிவுமான முத்தத்திற்கு சிலிர்ப்பாய் உன் முகம் தொடும்   வானின் நீர்த்துளி கூட ஈடாகாதே...