Skip to main content

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

 சீமாட்டி | அகிலா 



புத்தகம் வாங்க

புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்) 
ஆசிரியர் : அகிலா 
உரை : பொள்ளாச்சி அபி 


என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி' கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி 

சீமாட்டி | உரை 

ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள்.

இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது.

இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மிளகாய்மெட்டி, மண்சட்டி ஆகிய சிறுகதை தொகுப்புகளைத் தொடர்ந்து சீமாட்டி எனும் சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது. முன்னர் வெளிவந்த தொகுப்புளைப் போலவே இந்த “சீமாட்டியும்” மானுடநேயத்தையும், பெண்களின் மீதான அக்கறையையும், பெண் விடுதலையையும் முன்னிறுத்தியுள்ளது.

இத்தொகுப்பிலுள்ள பனிரெண்டு கதைகளும் பல்வேறு பட்ட சூழ்நிலைகளில் அது குடும்பம், சமூகம், அரசியல் என செயல்படும் பெண்களின் உணர்ச்சிகளையும், சிந்தனைப் போக்குகளையும், செயலாற்றல்களையும் விவரித்துச் செல்கிறது.

“சீமாட்டி” எனும் தலைப்பிட்ட கதையில் வரும் கோதை எனும் இயற்பெயருள்ள சீமாட்டி, தன்மீது சந்தேகப்படும் கணவனோடு வாழ்ந்த வாழ்க்கை கசப்பூட்டினாலும், உடல்நலமற்ற நிலையில் படுத்த படுக்கையாகக் கிடந்தபோதும், தனது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதில் எவ்வளவு பிடிவாதமாய் இருக்கிறாள் என்பது கொஞ்சம் வியப்புதான். தனது தாய், ஆதரவற்றுப் போய்விடக் கூடாது என்பதற்காக தனது உயிரைக் காப்hற்றிக் கொள்வதில் அவள் முனைப்பு காட்டுவதும் அழகு.

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் மனதைக் கவர்ந்தது “மாகாளி” எனும் கதைதான்.இத்தொகுப்பின் தலைப்பாக இருக்கவும் தகுதி வாய்ந்தது என்று கூட சொல்லுவேன். சமீப காலங்களில் பாலியல் அத்துமீறலுக்கும், வன்புணர்வுக்கும் ஆட்படுத்தப்பட்ட பெண்கள் சிறுமிகளைக் குறித்துப்பேசுகிறது இக்கதை.

டெல்லியில் ஓடும் பேருந்தில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு சின்னாபின்னமாக சிதைக்கப்பட்ட “இந்தியாவின் மகள்” எனக் குறிப்பிடப்பட்ட பெண்ணுக்கான நீதிவேண்டி நடைபெறும் போராட்டத்தை மையமாக வைத்து நகரும் இக்கதையில்,போராட்டங்கள், வழக்குகள், நீதிமன்றத் தீர்ப்புகள், அவைகளுக்கு பின்னுள்ள அரசியல், தண்டனைகள் மீதான விமர்சனங்கள், ஊடகங்களின் வெளிப்பாடு,மக்களின் மனநிலை.. என ஏராளமான அம்சங்களை விவரித்தும், விவாதித்தும் செல்வது மிகச் சிறப்பு.

சம்பல் டவுனில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கெரோசின் ஊற்றி எரிக்கப்பட்ட 16 வயது இளம்பெண், ஆந்திராவில் 16 வயது பெண், மத்தியப்பிரதேசத்தில் 12 வயதுப் பெண், பீகாரில் 19 வயதுப் பெண், அலிகாரில் 4 வயதுக் குழந்தை. உனாவில் 11 வயது குழந்தை, ஷாஜகான்பூரில் 13 வயதுப் பெண், பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தி அதனை இணையத்தில் உலவவிட்டு வியாபாரம் பார்த்த பொள்ளாச்சி இளைஞர்களின் குரூரம்... என்று சமீபகாலங்களில் நாட்டையே உலுக்கிய சம்பவங்களைக் குறித்தும் இக்கதையினூடே நினைவூட்டிச் செல்வது,நம்மை கலங்கச் செய்கிறது. மேலும், இக்கதையில் நகரத்தில் வசிக்கும் அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்க்கை,அங்கு பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள்,பாலியல் சிக்கல்கள், பெண்கள் மீதான வன்மங்கள், அதற்கெதிராக அப்பெண்கள் துணிச்சலாக மேற்கொள்ளும் தீர்வுகள்.. அடேங்கப்பா..ஒரே கதையில் இவ்வளவு விசயங்களைப் பேசமுடிகிறதே.. என்று ஆச்சரியமாகக் கூட இருக்கிறது.

இந்தியாவின் மகள் குறித்த வழக்கில் தண்டணை பெற்ற குற்றவாளிகளில் ஒருவன் இறந்துபோகிறான். ஏன் அவன் இறந்தான்.? என்ற கேள்விக்கு நமக்கு கிடைக்கும் பதில், “ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்” கதைக்குரிய அம்சம். இவ்வழக்கின் ஒவ்வொரு குற்றவாளியும் இதேநிலைக்கு ஆளாகவேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை எனக்கு.கூடவே பில்கிஸ்பானு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளும் கூடத்தான். மக்கள் நினைத்தால் மாபெரும் தலைவர்களே மண்ணைக் கவ்வும்போது, மாபாதகர்கள் மட்டும் தப்பிப் பிழைத்துவிட முடியுமா என்ன.? என்ற நம்பிக்கையையும் விதைக்கிறது “மாகாளி”கதை.

“சாம்பல் வரிகள்” கதை ஒரு அமானுஷ்யத்துடன் தொடங்கி நகர்ந்து, இயல்பான சமூக நடப்பை, மனித இயல்புகளைக் காட்டி யதார்த்தத்தைச் சுட்டினாலும் கதையின் முடிவு நமக்குத்தான் திடுக்கிடலை ஏற்படுத்துகிறது.

“தாழம்பூவும் கலையரசியும்” கதை, பெண்ணுக்குள்ள இயல்பான ஆசைகளை வெளிப்படுத்தினாலும், அதை நிறைவேற்றிக் கொள்வதில் எவ்வளவு இடர்பாடுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு சினிமா பார்க்கும் ஆசையைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத குடும்பச் சூழல், கணவனின் புரிதலற்ற தன்மை என்பவற்றையெல்லாம் கடந்து வெளியேறினாலும், இச்சமூகத்தின் கொடூரத்தை, பாலியல் வக்கிரத்தை எதிர் கொள்ளமுடியாமல் படும் வேதனை, அதற்கு மாற்றாக ஒன்றுமே செய்ய முடியாத பெண்ணின் கையறு நிலை.. என வாசகர்களை நிறைய யோசிக்க வைக்கிறது. இதுபோலவேதான் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.

தொகுப்பிலுள்ள பனிரெண்டு கதைகளிலும் கதாநாயகர்களே இல்லை. அதாவது ஒரு கதை எனில், பெண் எனும் கதாபாத்திரத்தைச் சுற்றி அமைவது இயல்பு. ஒரு தொகுப்பு முழுவதுமே அப்படித்தான் என்றால்..,

“போங்கடா..டேய்..பெண்களாகிய எங்கள் உலகத்தைப் பற்றிப் பேசுவதற்கே இன்னும் எத்தனை லட்சம் கதைகள் உண்டு..அவற்றை முதலில் பேசுவோம்..” என்றுதான் இத் தொகுப்பின் மூலம், எழுத்தாளர் அகிலா நமக்குச் சொல்லும் மறைமுகச் செய்தி. அவ்வாறே தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம்.

வாழ்த்துகள் தோழர் அகிலா..!



புத்தகங்களை வாங்க 

Books Available at

Amazon

Ahila / Ahila Dorairaj

 

At Store / Website

Discovery Book Palace (+91 99404 46650)

Emerald Publishers (+91 98406 96574)

Vijaya Pathippagam (+91 90470 87058)

Panuval Bookstore

Commonfolks

DialforBooks

Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந