Skip to main content

காலை விடியலாய்...



கௌதம் என்கிறதான குரல் 
பின்புற வீட்டின் காலை விடியலாய்... 

ஆரம்பித்துவிடும் தாய்க்கும் மகனுக்குமான எசலிப்புகள்
வீம்பாய் சண்டையிட்டுக் கொள்வார்கள் இருவரும்
பள்ளிச் செல்லும் முன்னும் வந்த பின்னும்
அலுத்துக் கொண்டோ புலம்பிக் கொண்டோ 
சில சமயங்களில் அழுதுக் கொண்டும் கூட
கௌதம் பள்ளி வண்டிப் பிடிக்கச் செல்வான்...

எப்போது இருவரும் சமாதானம் கொள்வார்கள்
என்பது மட்டுமே புரியாத புதிர் எனக்கு...

அவன் ஐந்தாம் வகுப்போ அல்லது ஆறோ படிப்பான்...
இன்றைக்கும் அப்படிதான் ஆயிற்று...
என் வீட்டின் அடுக்களையின் பின் கதவு தாண்டி 
பெரிய மனிதனின் தோரணையுடன்
புலம்பியபடிச் சென்றான்...
இன்றும் விடிந்ததா இவனுக்கு என்றே தோன்றியது
சமாதானத்தைச் சாத்தியப்படுத்தாத
அவனின் தாயின் மேல் சற்று கோபம் கூட துளிர்த்தது...

முன் வாசல் போய்ப் பார்த்த போது
பள்ளி வண்டியின் முகம் இல்லை...
அங்கே அவன்,    
தோள் உரசி நின்று
சிறுவனாய்ச் சிரித்துக் கொண்டிருந்தான்
தன் நண்பனுடன்...
  

Comments

  1. இகவிதையை வடித்த கவிஞர் வேடிக்கை பார்க்கும் இந்த காட்சி அவருடைய சிறியவயதில் அரங்கேறிய நாடகங்களாய் இருந்திருக்கும் அதன் வெளிபாடு பழைய நினைவுகளை உந்தி தள்ளி கவிதையாக.... பாத்திரங்கள் மாறலாம் ஆனால் நிகழ்வுகள் ஒன்றே..

    ReplyDelete
  2. பால்யம் தாண்டி பதின்மம் தொட்டுவிட்ட என் மகனை நினைத்துக்கொள்கிறேன். இப்படித்தான் ஒவ்வொருநாளும் முறுக்கிக்கொள்ள ஏதோ ஒரு காரணம் இருக்கும். பள்ளிவிட்டுத் திரும்பிய போதில் முறுக்கமிருந்த முகத்தில் முளைவிடும் முறுவல், தாய்மனத்தின் இறுக்கம் தளர்த்தி இளக்கிவிடும். அழகான காட்சிக்கவிதை. பாராட்டுகள் அகிலா.

    ReplyDelete
    Replies
    1. உண்மையே...அம்மா மகனின் இந்த பாசப்பிணைப்பு அன்பானதுதான்...நன்றி கீதா...

      Delete
  3. முன் வாசல் போய்ப் பார்த்த போது
    பள்ளி வண்டியின் முகம் இல்லை...
    அங்கே அவன்,
    தோள் உரசி நின்று
    சிறுவனாய்ச் சிரித்துக் கொண்டிருந்தான்
    தன் நண்பனுடன்...

    ---
    அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றி குமார்...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

பெண்ணென - பெண் படைப்புகளின் நிலை

பெண் படைப்பாளர்கள் தமிழ் இலக்கிய படைப்புலகம் கடல் போன்றது. நூற்றுக்கணக்கில் கவிஞர்கள் பாலின, வயது பேதமில்லாமல் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். காதல், சமூகம், அதன் பிரதிபலிப்புகள், இயல்புகள், பிரச்சனைகள் என்று அனைத்தையும் இன்றைய கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஒருவரின் முதல் தொகுப்பாக வெளிவரும் புத்தகத்தில் இருக்கும் கவிதைகள் கூட தேர்ந்தேடுக்கப்பட்டவைகளாக வாசிக்க தகுந்தவைகலாக இருக்கின்றன. அதற்கு மூத்த கவிஞர்கள் சில பல விதிமுறைகளுடன் உதவி வருவதையும் காணமுடிகிறது இங்கு. ஒருகாலத்தில் சிற்றிதழ்கள், ஜனரஞ்சக பத்திரிகைகள் போன்றவற்றில் எழுதி அனுப்பிக் கொண்டே இருந்து சலித்துப்போன கவிஞர்கள், காலமாற்றம் காரணமாக இன்றைய கவிஞர்கள் (வயது வித்தியாசம் இல்லை) இணையத்தின் வழி செய்வதை கண்டு வியப்பதில் ஆச்சரியமில்லை. முகநூலில், இணையங்களில் விருப்ப குறியீடுகளின் மதிப்பீட்டில் வாழும் பெரும்பாலான கவிஞர்கள் அதிலிருக்கும் விமர்சனங்களையும் ஏற்கிறார்கள். அங்கு எழும் 'ஆஹா, ஓஹோ' வுக்கும் ஏமாறுகிறார்கள். தனிதனி குழுக்கள் அமைத்து எல்லோருடைய கவித்திறமைகளையும் வளர்க்கிறார்கள். அவற்றில் நடத்தப்படும் போட்டி