Skip to main content

நாம் நடக்கும் பாதையில்...




தினமும் நாம் கடந்து செல்லும் பாதைகளில், பேருந்து நிறுத்தங்களில், ரயில் நிலையங்களில், கோவிலின் முகப்பில், குப்பை தொட்டிகளில் எல்லாம் வயதானவர்கள், நோயில் அவதிப்பட்டு சுருண்டு கிடப்பவர்கள்,அரை நிர்வாணமாய் அல்லது முழு நிர்வாணமாய் கிடக்கும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் என்று ஆதரவற்றோரின் பல முகங்களை நாம் பார்க்கிறோம்


பார்த்தவாறே ஒரு பரிதாபப் பார்வையுடன் தாண்டிச் செல்கிறோம். எத்தனை மாதங்களாய் அவர்கள் அங்கு அந்த நிலையிலேயே இருக்கிறார்கள் என்று நாம் யோசித்து கூட பார்ப்பதில்லை.  கடந்து விடுகிறோம்.



கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம் :


கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்திற்கு கோவை வலைப் பதிவர்களின் தோப்பு அமைப்பு சார்பாக நானும் சக வலைப் பதிவர்கள் கோவை சரளா மற்றும் இனியவை கூறல் கலாகுமரன் சென்றிருந்தோம். 

அந்த இல்லத்தில் சுமார் நூறு ஆதரவு இழந்தவர்கள் தங்கியிருக்கிறார்கள். இனத்தாலும் மொழியாலும் அந்தஸ்தாலும் அறிவினாலும் வேறுபட்ட மனிதர்கள்.  அவர்களை பார்த்த போதுதான் தெரிந்தது நாம் கண்டும் காணாமல் கடந்து சென்றவர்கள் இவர்களை போன்றவர்கள்தான் என்பது.






ஏன் இந்த அவலம்?


நோய் முற்றி கவனிக்க முடியாத நிலைக்கு போய்விட்டாலோ வயதாகி தன் சுயம் இழந்துவிட்டாலோ பெற்றவர்களை இழந்த புத்தி சுவாதீனம் இல்லாதவர்களோ அது தாயோ தகப்பனோ உடன் பிறந்தவர்களோ யாராய் இருப்பினும் மனிதத்தை புதைத்துவிட்டு அவர்களை தெருவில் சமுதாயத்தின் கவனிப்புக்கு விட்டுவிடுகிறார்கள்.

இரு பக்கமும் குறைகள், சங்கடங்கள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் இருக்கும்தான். யாரும் நூறு சதவீதம் நல்லவர்களாக இருக்க முடியாது. தெருவில் அவர்களை தொலைக்கும் முன் நாளை நம் நிலை என்ன என்பதையும் ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும். உங்களால் கவனிக்க முடியவில்லை என்றால் அதற்குரிய இல்லங்களில் சேர்த்துவிடலாம். அதைவிட்டு அவர்களை ஏன் அனாதைகளாக சாக விடவேண்டும்?



உதவிகள் 

தெருவில், ரயில் நிலையங்களில், பேருந்து நிலையங்களில்  கண்டெடுக்கப்பட்ட ஆதரவற்றவர்கள் இங்கு அடைக்கலமாகிறார்கள். அவர்களின் குடும்பங்களுடன் சேர்த்து வைக்கும் முயற்சிகளும்  மற்ற ஆதரவற்றோர் தங்கியிருக்கும் இல்லங்களில் தங்கியிருப்போர்க்கும் உதவிகளையும் ஈரநெஞ்சம் அமைப்பினரால் செய்யப்பட்டு வருகிறது. 


ஈரநெஞ்சம் அமைப்பின் சார்பிலும் வலைப்பதிவர்கள் சார்பிலும் நேற்று  அவர்களை சுத்தப்படுத்தி உணவும் வழங்கப்பட்டது.






இந்த தன்னலமில்லா சேவையை மகேந்திரன் அவர்கள் வருடங்களாக செய்து வருகிறார். 
அவருடைய அமைப்பில் நல்ல உள்ளங்கள் சிலரும் அவருடன் இணைந்து செயல்படுகிறார்கள். 











அவரின் வலைத்தளம் :
http://eerammagi.blogspot.in/



சமூகத்தில் நம் பணி :
குடும்பத்தாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்டு
அரவணைக்க ஆளில்லாத ஆதரவற்றோர் தான் இவர்கள். ஆனாலும் அவர்கள் நம் நேசக் கரங்களை இழந்தவர்கள் அல்ல...


எங்கு யாரை ஆதரவில்லாத நிலையில் பார்த்தாலும் உடனே அவர்களை ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்ப்போம். அந்த சிறு உதவியையாவது நாம் சமுதாயத்திற்கு செய்வோம். 



நாமும் நம் வீடுகளில் இந்த மாதிரி யாராவது இருந்தால் கவனம் எடுத்து அவர்களை கவனிப்போம். எத்தனை ஆதரவற்றோர் இல்லங்கள் வேண்டுமானாலும் உருவாகலாம். நம் வீட்டில் இருந்து ஒரு ஜீவன் கூட அங்கில்லாமல் பார்த்துக் கொள்வோம். 



மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆங்கில ஆசிரியை, ஒரு காலத்தில் உலகெங்கும் சுற்றி குடும்பத்துக்கே உழைத்து போட்ட தற்சமயம் உடல் நலம் குன்றிய மனிதர், தாய் தந்தையை விபத்தில் பறிகொடுத்த பிறகு உறவினர்களால் தெருவில் விடப்பட்ட இரு குழந்தைகள்...என்று எத்தனை எத்தனை சோக முகங்கள் அங்கு. 



அங்கே அவர்களை கவனித்து கொள்ளும் அன்பு உள்ளங்களுக்கு தெரியும் அவர்களின் அழுகையின் அர்த்தங்கள், பிடிவாதங்களின் பின்புலங்கள், கடிந்துக் கொள்ளும் காரணங்கள்...நம் நன்றி அந்த அன்பு உள்ளங்களுக்கு தான்....  




நிரந்தரத்தை நிஜத்தில் தவறவிட்டவர்கள் அவர்கள். 
நாமோ இன்னும் நிரந்தரத்தை நிஜமாய் நம்பிக் கொண்டிருப்பவர்கள்.
நம்முடன் இருப்பவர்களையாவது அன்பு காட்டி நிஜ உலகில் வாழவைப்போம்....



Comments


  1. வணக்கம்

    காட்சியும் கட்டுரையும் கண்டேன்! அரும்பணி
    மாட்சியும் கண்டேன் மனத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி கவிஞரே...

      Delete
  2. கவனிக்கத் தவறியவர்கள் எத்தனைபேர்! இனியாகிலும் கவனிக்க முயல்வோம்! நல்ல செயல் செய்திருக்கிறீர்கள்! இங்கே நல்ல விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்! உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

    ReplyDelete
  3. ஈரநெஞ்சம் அமைப்பின் சேவைகளுக்கு வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...

      Delete
  4. மகத்தான சேவையில் ஈடுபட்டிருக்கும் ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு
    என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
    எங்களுக்கு அதை தெரியப்படுத்தியமைக்கும்
    உங்கள் பங்குகளுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் சகோதரி....

    ReplyDelete
  5. கருத்துக்கள் இடுவதைவிட அவர்களுக்கு என்னால் செய்ய முடிந்த உதவிகளை செய்வது நன்றாயிருக்கும் என்று தோன்றுகிறது ..நல்ல விஷயம் அனைவருக்கும் போய் சேரட்டும் உங்கள் பங்கீடும் வாழ்துதலுககுரியது

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி