Wednesday, 19 September 2012

பிள்ளையாரின் பிறந்தநாள்.....




தெருக்கோடியில்
என் நண்பன்
தொந்தியும் தொப்பையுமாக
சாப்பிட்டது போதாதென்று
எப்போதும் கையில் ஒரு கொழுக்கட்டையுடன்
உட்கார்ந்திருப்பான்...

நான் கும்பிடுகிற ஜாதியில்லை
என்று அவனுக்கு தெரியும்

ஆனாலும் அவனை தாண்டும்போது
தும்பிக்கையை ஆட்டி
தொந்தி குலுங்க சிரிப்பான்
நானும் அவனருகில் சென்று
எனக்கும் அவனுக்குமான
சங்கேத பாஷையில்
பேசிவிட்டு நகருவேன்...

இன்று அவனின் பிறந்தநாள்
இன்று அவனின் சிரிப்பும் சற்று அதிகம்தான்
அவனை கடக்கும் போது
எட்டிப் பார்த்தேன்
கூட்டம் அதிகம்....
வாழ்த்து சொல்ல வந்தவர்கள்...

என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி
மற்றவர்களின் உபசரிப்பில் லயித்திருந்தான்
மாலையும் மோதகமும்
கொழுக்கட்டையுமாக
நிறைய தின்று
தொப்பை பெருத்து
சந்தோஷமாக இருந்தான்

‘என்ன அதிகமான சிரிப்பு...
பலகாரங்கள் நிறையவோ’ என்றேன்

‘இல்லை...இல்லை...
தினமும் என்னை தெருவில்
மழையிலும், வெயிலிலும்
காய வைத்துவிட்டு
எல்லோரும் வீட்டுக்குள்ளே
போய் பூட்டிக்குவாங்க...
இன்று மட்டும்தான்
எனக்கு குடை எல்லாம் கொடுத்து
வெயில்படாம வச்சிருக்காங்க...
அந்த மகிழ்ச்சிதான்‘ என்றான்....

ம்ம்ம்....
குடைக்குள் என் நண்பன்....
சந்தோஷமாய்....
நானும் அவனை
வாழ்த்தி சந்தோஷமாய்.....

8 comments:

  1. இதயம் நிறைந்த இனிய விநாயகர் சதூர்த்தி தின வாழ்துக்கள் சகோ!

    ReplyDelete
  2. ஆண்டவன் விஷயத்தில் இருவரின் கருத்தும் ஒத்த
    கருத்தாய் இருப்பது ஆச்சரியமளிக்கிறது
    (பழனி முருகனும் நானும் பிப்ரவரி 2011 )
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. 'We'நாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

    //'இன்று மட்டும்தான்
    எனக்கு குடை எல்லாம் கொடுத்து
    வெயில்படாம வச்சிருக்காங்க...
    அந்த மகிழ்ச்சிதான்‘//

    புதிதான சிந்தனை!

    வாழ்த்துக்கள் அகிலா!

    ReplyDelete
  5. சதுர்த்தி வாழ்த்துக்கள் அனைவருக்கும்....

    ReplyDelete
  6. ரமணி அவர்களே....நீங்கள் பதித்த பழனிமுருகனை பற்றிய பதிவு படித்தேன்...அழகான நிஜம்.
    வேண்டுதல்களை குறைத்தால் கடவுளின் தினசரி பாரம் குறையும்.

    ReplyDelete
  7. ஆஹா! அருமை அருமை

    ReplyDelete
  8. ஆகாஷ்...பிள்ளையாரை யாருக்குத்தான் பிடிக்காது...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....