Skip to main content

இங்கிலாந்தில் நான்: பார்வை 3

 ஆடை தேர்வுகள்



குளிர் பிரதேசங்களில், வீடுகளுக்குள் ரேடியேட்டரின் புண்ணியத்தில் மிதமான வெப்பத்தில் இருக்கலாம்; முன் அல்லது பின் கதவைத் திறந்தால், சில நேரங்களில் வெளியே அடிக்கும் வெயில் இதமாய் இருக்கலாம்; சரி, நடக்கப்போவோம் என்று ஏமாந்தும் கூட மேலே Jacket இல்லாமல் போய்விட முடியாது. அடிக்கும் குளிர்ந்த காற்றின் வேகம் நம்மை உண்டு இல்லையென்று ஆக்கிவிடக்கூடும். பிரித்தானியா மாதிரியான தொடுவானம் அருகில் இருக்கும் தீவுகளில், அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து வீசும் காற்றின் வேகத்தை, அந்த நிலப்பரப்பில் இருக்கும் குன்றுகள், சிறு மலைகள், கடல் முகத்துவாரங்கள், வளைந்தோடும் ஆறுகளில் இருந்து பிரியும் வாய்க்கால்கள் போன்றவை அதிகப்படுத்தி சமவெளிகளில் வீசும். அடுத்த காரணமாக, அதன் மேலிருக்கும் ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் இருந்து வீசும் தூந்த்ரா அதிவேக குளிர் காற்றலைகள் (Polar Jet Streams), இந்த காற்றை அதிகமான குளிருக்குள் கொண்டு செல்கிறது. பிரித்தானியா தீவின் வடபகுதியில் இருக்கும் ஸ்காட்லாந்தில், காற்று அறுவடை பண்ணைகள் (Windfarms) அதிகம். அதுவே, அங்கு மின்சாரம் கொடுக்கும் மிக முக்கியமான அமைப்பாகும்.

அதனால் இம்மாதிரியான ஸ்பிரிங் (Spring) சமயங்களில் வெயிலுக்கும் காற்றுக்கும் ஏற்றாற்போல் நாம் ஆடைகள் அமையவேண்டிய கட்டாயம் உள்ளது. Winter சமயத்தில் போட கனமான ஜாக்கெட்கள் என்னிடம் உண்டு. இரண்டு முறைகள் குளிர்காலத்தில் இங்கிலாந்து போய் சிக்கி சிரமப்பட்ட அனுபவம் உண்டு என்னிடம். அதன்பிறகு போன இரண்டு முறைகளும் இதே போன்றதொரு வசந்தக்காலத்திலும் கோடை காலத்திலும் போய் வந்த அனுபவத்தால், இந்த மாதிரி spring/summer யில் போடவென மெலிதான ஜாக்கெட்கள், அதற்கான வாக்கிங் ஷூ என்று ஒரு மாதிரி இங்கிருக்கும் வாழ்க்கைக்கு ஏற்றவாறு என் துணியடுக்கு (wardrobe) மாறிக்கொண்டே இருக்கிறது. ஊரிலிருந்து கிளம்பும்போதே lightweight jackets or windcheaters என்று கோவை, RS Puram, Gandhipuram, Malls என்று எல்லா கடைகளிலும் தேடினேன். அவர்களின் பதில், இப்போது Winter clothes இல்லைங்க என்பதுதான். இது குளிர்கால உடையல்ல என்பதை நான், ஒரு கஷ்டமாராக புரிந்து கொள்ளாதது சரி, வணிகம் செய்பவர்கள் தெரிந்திருக்க வேண்டுமல்லவா.. ஏனென்றால், இப்போதெல்லாம் நம்ம கோயம்புத்தூரில், சர்வசாதாரணமாக மேற்படிப்புக்காக பிள்ளைகளும், வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளைப் பார்த்துவரவென்று பெற்றோர்களும் வெளிநாடுகளுக்குக் கிளம்புவதைப் பார்க்கிறோம். இதன் தேவையை வணிகம் செய்பவர்கள் புரிந்திருக்கவேண்டும் என்பதே எனது முன்வைப்பு. சரி, அடுத்தமுறை நாம் தெரிந்து கொண்டதை அவர்களுக்குச் சொல்லுவோம் என்றுதான் இப்போதைக்கு எண்ணிக்கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை, வருடத்திற்கு பாதி நாட்கள் UKயிலும், மீதி மாதங்கள் கோவை என்றும் வாழ்வு அமையும்பட்சத்தில், இங்கு பிரித்தானியாவிலும் மகன் வீட்டில் எனக்கான அலமாரியை நேர்த்திப்படுத்திக் கொள்ள நினைக்கிறேன். முன்பெல்லாம் எனக்கு வேண்டிய துணிகளை அனைத்தையும் யோசித்து யோசித்து ஊரிலிருந்து எடுத்துவருவேன். இப்போது இங்கு வந்தும் துணிமணிகள் வாங்குவதும் சேர்ப்பதுமாக இருக்கிறேன்.
நான் kurtis விருப்பப்பட்டு போடுவது உண்டு, Tops, short kurthas போடுவதில்லை. ஆனால் இங்கு எல்லோரின் ஆடைகளின் வடிவமுறைகளைப் பார்க்கும்போது, என் உடை தேர்வுகளைச் சற்று மாற்றலாமா என்றும் எண்ணுகிறேன். ஆனால் நான் இந்த ஆடைத்தேர்வை முழு மனதோடு செய்வேனா என்பதும், அங்கு வந்தும் தொடர்வேனா என்பதிலும், எல்லா பெண்களையும் போல, எனக்குள் சில ஐயப்பாடுகள் உள்ளன. இந்த ஐயப்பாடு, மற்றவர்கள் என்னைக் குறித்து என்ன நினைப்பார்கள் என்ற கருத்தில் உண்டானதல்ல. மத்திம வயது, முதிய வயது பெண் சமூகம் சேலையையும், வடிவமைப்பற்ற சுடிதார் வகைமைகளையும் போட்டுக்கொண்டு திரிவதை காணும்போது, நான் என்னை வேறுபடுத்தி எதைக் காணப்போகிறேன் என்ற பொருளிலும் இல்லை. நம் இளைய சமூகத்தினர் ஏற்கனவே கலாச்சாரக் கோட்டை கடந்து வந்து கொண்டுதான் இருக்கின்றனர். நாமும் நம் இளையவயதில் அப்படியாகதான் இருந்தோம். தாவணி போட்ட காலங்களில் சல்வாருக்கு தாவினோம்.
இப்படியான கட்டத்தில்தான், என் மனதுக்குள் இந்த உடையில் நான் என்பது எந்த வகையில் compatability யை உண்டாக்க மறுக்கிறது? இது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தோன்றுவதுதான். எல்லோரும் ஒரே வகையிலான ஆடைகளை உடுத்தும்போது, நான் அணிந்திருக்கும் குர்தி, சுடிதார் போன்றவை என்னை நீ இந்த பிரதேசத்தை சேர்ந்தவள் என்று எடுத்துக்காட்டுமோ என்ற உளைச்சலில், அவர்களின் ஆடைகளோடு நான் இயைந்து போவதால், நான் வேறுபட்டு நிற்கமாட்டேன் என்று நம்பலாம். அதிலும் வேறொரு கேள்வி தொக்கி நிற்கிறது. என் நெற்றி பொட்டு, என் தோலின் நிறம் போன்றவை சொல்லாததையா என் ஆடை அதிகமாக சுட்டப்போகிறது? ஏனோ காந்தி நினைவில் வருகிறார்.
இங்கு, நானிருக்கும் பகுதியில் ஒரு பெண்மணி சேலையில் நடப்பதைக் காணமுடிகிறது. அவருக்குள்ளும் இந்த சலனம் இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அப்படி எந்த சலனமற்றும் தான் இருக்கிறார் என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் நான் நம்புகிறேன். எப்படி நான், என் நெற்றி பொட்டு குறித்து கவலையேதும் கொள்ளாமல் இருக்கிறேனோ அதுபோலவே. வாழ்க்கை முழுமையும் பாவாடை தாவணியிலிருந்து, சல்வார், அதன்பிறகு சுடிதார், சேலை, குர்தி, straight pants, jeans என்று நான் என் ஆடைகளின் வடிவமைப்பை மாற்றிக்கொண்டு இருந்தபோதிலும், என் பொட்டின் வடிவமான கோபி வடிவத்தை சிறுவயதிலிருந்து மாற்றாமல் வந்திருக்கிறேன். அதுபோல அவருக்கு இந்த சேலை என்ற ஆடைதான் சரியென அவர் கொண்டிருக்கலாம். அதனால்தான் இங்கு வந்தபிறகும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசிக்காமல், தனக்கு தன் உடலுக்கு, மனதுக்குப் பழக்கப்பட்டதை அவர் அணிந்து வருகிறார் என்று நம்புகிறேன்.
உடலுக்கு பிடித்தமான அல்லது சரிபடும் என தோன்றும் ஆடைகள், நம்முள் சிரமம் ஏற்படுத்தாத ஆடைகள் எதுவாகினும் சரியே என்று தோன்றுகிறது. ஆடை, அணிகலன்கள் என்று எதுவாகினும் அவரவர் தேர்வே. சமூகம், அதன் பார்வை, அதனுடைய சட்டத்திட்டங்கள் போன்றவைகளை மதிப்பது ஒருபுறம் இருந்தாலும், அதற்காக தன் விருப்பக்கருத்தைப் புறந்தள்ளுதல் சரியல்ல என்றும் நம்புகிறேன்.

Comments

  1. ஆடைகள் குறித்து நீங்கள் சொல்லியிருப்பது சரிதான் அகிலா. காலத்துக்கும் வாழும் தேசத்துக்கும் ஏற்றாற்போல நம் ஆடைகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால் நெற்றிப்பொட்டும் நிறமும் காட்டிக்கொடுத்துவிடும். அதைத் தவிர்க்க இயலாது. சிட்னியில் இந்தியர்கள் அதிகம் என்பதால் பிரச்சனை இல்லை. பதினாறு வருடங்களுக்கு முன்பு பிரிஸ்பேனில் இருந்தோம். என் பிள்ளைகளை பள்ளியில் விடவும் அழைத்துவரவும் சுடிதார் அணிந்து போவேன். பள்ளிப் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு வித்தியாசமாக வியந்து பார்ப்பார்கள். கூச்சமாக இருக்கும். சில குழந்தைகள் நேரடியாக என்னிடம் 'உன் நெற்றியில் இருக்கும் சிவப்புப்புள்ளி எதற்கு?' என்று கேட்பார்கள். எங்கள் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் என்று விளக்கம் சொல்வேன். இப்போது ஜீன்ஸ், குர்தா, ஷார்ட் குர்தி என்று என் உடைத்தேர்வு மாறிவிட்டது. ஆனால் நான் ஆளே மாறிவிட்டேன் என்கிறார்கள் சிலர். என்ன செய்ய முடியும் சொல்லுங்க. லட்சியம் செய்யாமல் கடந்துவிடக் கற்றுக்கொண்டேன். :)

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி