Skip to main content

யுவன் சந்திரசேகரின் படைப்புலகம் | மாற்று மெய்மை

 மாற்று மெய்மை


எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புலகம் 


 மதுரை வட்டார வழக்கில், புதுமையாய், யதார்த்தவியலில் ‘மாற்று மெய்மை’ என்னும் கோட்பாடுகளை முன்னிறுத்தி, தன் புதினங்களாலும் சிறுகதைகளாலும் தனித்துயர்ந்து நிற்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்கள். அவரின் படைப்புகள் குறித்தும் அதில் புழங்கும் கதை உத்திகள் குறித்துமான ஆய்வுகள் சமகால இலக்கிய உலகில் மிகவும் அவசியமான ஒன்றே     

யுவன் சந்திரசேகரின் படைப்புலகம் 

நாட்டார் வழக்கியலில் கதைசொல்லிகள் சொல்லும் கதைகள் தலைமுறைகள் கடந்தும் நம்முள் காலூன்றி நிற்கின்றன. ஓரிரு கதாபாத்திரங்களுடன் தொடங்கி, பல தலைமுறைகளை, கதைகளன்களை, பலவித தளங்களை, காலகட்டங்களைக் கடந்து புதிதாய் இணைப்பு கதைகளை வடிவமைத்து, முடிவுறாத கதைதன்மையுடன், நம் முன்னோர்கள் இட்டுக்கட்டிய கதைகள் சுவாரசியம் மிக்கவை.  

அதன்பிறகான இலக்கிய உலகில், அவ்வழக்கியலில் இருந்து கதை இலக்கியம் சற்று மாறி, உருமாறி, மையக்கருவாய் ஒன்றை நிலைப்படுத்தி, முடிவு நோக்கி நகரும் தன்மையுடையதாயும், வணிக நோக்கின் சாயம் பூசிக்கொண்டும் பயணிக்கத் தொடங்கியது. சில அழகியலை மட்டும் பிரமாதப்படுத்தியும் வெளிவந்துள்ளன.  

இம்மாதிரியான கதையமைப்புகளில் இருந்து வேறுபட்டு, மனித அனுபவங்களினூடே கதைகள் பின்னும் உத்தியை, சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்பு’களில் காணலாம். யுவன் சந்திரசேகர் அவர்களின் எழுத்துகளிலும் அந்த மாயம் வேறுவிதமாய் வெளிப்படுகிறது.

வெளிப்படையாய் சொல்லப்படாத ஒரு மையத்தை நோக்கி உதிரிகதைகளாய் கோர்த்து ஒற்றை கதையாய் தருவதே அவரின் படைப்பின் சிறப்பு. ஒவ்வொரு கதையும், வாசிப்பனுபவத்தை சாதாரண கணிப்பிலிருந்து மேம்படுத்தி, நுட்பமான அடுக்குக்கு நகர்த்துகிறது. 

யுவன் சந்திரசேகரின் இயற்பெயர் எம்.சந்திரசேகரன். 1961 யில் மதுரை சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியில் பிறந்தவர். தகப்பனார் இவரின் இளம்பிராயத்திலேயே இறந்துவிட்டார். மூத்த அண்ணனின் வளர்ப்பில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வணிகவியல் பட்டம் முடித்து, வங்கி ஊழியராக பணியில் சேர்ந்தார். 

கவிதைகளில் தொடங்கிய இவரின் இலக்கிய வாழ்வு, சிறுகதைகள், புதினங்கள் என்று வளர்ச்சியுற்றது. அவரின் புதினங்கள் கனவுலகமும் நனவுலகமும் கைகோர்த்து கொண்டு பயணிப்பதைப் போன்ற வாசிப்பின்பம் தருபவை. மந்திரவாதிகள், சித்தர்கள், ஞானிகள் போன்றோரின் இயல்புக்குள் நம்மை கணிக்கும், நம்மால் அறியமுடியாத யதார்த்தம் அடங்கியிருப்பதாகச் சொல்கிறார் கதைகளில். அவரின் இசை ஆர்வமும் துறவிகளின் மீதான பெரும் பற்றும் வெளிப்படுகின்றன.



‘வேறொரு காலம்’, ‘புகைச்சுவருக்கு அப்பால்’, ‘ஒற்றை உலகம்’, ‘தோற்றப்பிழை’, ‘கை மறதியாய் வைத்த நாள்’ என்பதான கவிதை நூல்களும் ‘குள்ளச்சித்தன் சரித்திரம்’, ‘பகடையாட்டம்’, ‘கானல் நதி’, ‘மணல்கேணி’, ‘வெளியேற்றம்’, ‘நினைவுதிர் காலம்’, ‘பயணக்கதை’ போன்ற புதினங்களும், ‘நீர்ப்பறவைகளின் தியானம்’, ‘ஒளிவிலகல்’, ‘ஏற்கனவே’, ‘கடல் கொண்ட நிலம்’, ‘ஏமாறும் கலை’ என்பதான சிறுகதை தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. 


படைப்பில் இயங்கும் உத்திகள் 

புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதைகள் பற்றிச் சொல்லும்போது, 

“..கதையை வாசிப்பது, நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடிவடையும்போது அதைப்பற்றிய சிந்தனை முடிவடைந்துவிடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றன என்று சொன்னால் விசித்திரவாதமாகத் தோன்றும். ஆனால், அதுதான் உண்மை..” 

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் இவ்வகையைச் சார்ந்தவையே. கதைகள் முடிந்தபிறகே அவை குறித்த எண்ணவோட்டங்கள், விவாதப்பொருட்கள், படிமக்குறிப்புகள் நம் மனதில் தோன்றத் தொடங்குகின்றன. அவரின் கதைகள் மற்றும் புதினங்களின் சிறப்பம்சமே கதைக்குள் விரவிக் கிடக்கும் உதிரிகதைகளின் வடிவமைப்பும் அதற்குள் நிகழும், ‘மாற்று மெய்மை’ எனப்படும் தற்செயலான இயல்பு நகர்வுமாகும். ஒரு செயலின் பொருட்டு மற்றொன்று நிகழ்கிறதென்ற கூறுமுறையை, புதிதாய் கண்டுக்கொள்ளும் ஆச்சரியத்துடன், வாசகனின் வாசிப்புக்கே விட்டுவிடும் தன்மையும் கொண்ட எழுத்துலகம் யுவன் அவர்களுடையது. 

ஒவ்வொரு கதைக்குள்ளும் இருக்கும் தனித்தனி கதைகளும் பல ஊடுஇழைகளை தன்னகத்தேக் கொண்டு, அந்த கதையின் கட்டுமானத்தைப் பலப்படுத்துகிறது. அதில் அவர் கையாண்டிருக்கும் மொழிநடை, வட்டார வழக்கு, எண்ணக் குறியீடுகள் முதலியன சிறப்பான ஒரு வாசிப்பின்பத்தை வாசகனுக்குக் கொடுக்கின்றன. 

வாழ்க்கை சார்ந்த விவரணைகள், குறியீடுகள், அவதானிப்புகள் போன்றவை அவரின் அனைத்துக் கதைகளிலும் இருக்கின்றன. எழுதுபவனின் அனுபவங்களாய் இவற்றை நாம் கொண்டாலும் மொழிநடையும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் நடைமுறை யதார்த்தங்களும் தனித்துவம் வாய்ந்தவை. படிக்கும் வாசகனுக்கு பரந்த அனுபவவெளியைத் திறந்துவிடுகின்றன அல்லது அவனின் நினைவலைகளைக் கலைத்துச் செல்கின்றன.. 

ஒவ்வொரு கதையையும் ஒரு தொகுப்பு கதையெனச் சொல்லலாம். ஒன்றுக்குள் இருக்கும் நான்கைந்து உதிரிக்கதைகளையும் பின்னி பல இழைகள் கொண்ட ஒரு மையக்கரு நோக்கி பயணப்படவைக்கிறார். உதிரிக்கதைகளில் சில தொடர்பற்றவையாகப் பாவனை செய்கின்றன. ஆனால் சிரத்தையுடன் அவற்றையும் மையக்கருவின் வேறொரு இழையுடன் கோர்த்துவிடுகிறார். முதல் முறையில் பிடிபடாத தொடர்பு மறுவாசிப்பில் பிடிபடுகிறது. 



கதைக்குள் கதைகள்


“நூற்றிச் சொச்சம் நண்பர்கள்” என்னும் சிறுகதையில், அதை பெருங்கதை என்று டால்ஸ்டாயின் மொழியில் சொல்லலாம், கிட்டத்தட்ட பதினைந்து உதிரிக்கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. 

கதையின் முதல் பாகமாய், முகவரி தேடி இலங்கையிலிருந்து வந்திருக்கும் மனிதருக்கு, உதவும் நோக்கில், கதாசிரியர், அந்த வீடுவரை கொண்டு விட்டுவிட்டு, உடனே திரும்பாமல் நின்று வேடிக்கை பார்ப்பதும், அவருக்கு அங்கே சரியான பதில் கிடைக்காமல் திரும்பும்போது, ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று, அவருக்கு உதவாமல் கால் எட்டி நடையிட்டு வீடடைவதும் மனித இயல்பாய்க் சுட்டப்படுகிறது. 

நண்பனை நம்பி ஊர் வரும் ஒருவரின் முகம் எதிரேயே, அவரின் நண்பர் வாசல் கதவை அடைத்து செல்வதாய் அதில் வருகிறது. அடுத்த பாகத்தில் இன்னொரு சம்பவமாய் எழுத்தாளர், தன் நண்பனை ஒரு ரயில்பயணத்தில் டிக்கெட் பரிசோதகராகச்சந்திக்கிறார். அடையாளம் கண்டு விசாரிக்கும்போது, அவர், இவரை வேறொரு பெயரிட்டு அழைக்க, இவர் மறுக்க, அடையாளம் காணமுடியாமல் நகர்கிறார் அந்த மனிதர். 

 அடுத்ததாய் நாடக ஒத்திகை என்றலையும் நண்பன் மதுரதாசின் நட்பும் அவனின் தற்கொலையும். அடுத்த பாகமாய் உள்ள உதிரிக்கதையில், குள்ளமான உயரதிகாரியும், அவரின் விருப்பமாய் இருக்கும் போன்சாய் மரங்களும், அவரின் உருவம் வளராத மங்கொலாய்டு குழந்தையும் வருகிறார்கள். 

அடுத்த உதிரிக்கதையாய், சற்று தலைகனம் ஏறிய எழுத்தாளனும் அதன்பிறகு வரும் ஒன்றில், கதாசிரியரின் அப்பா இறந்தது குறித்தும் அவரின் நினைவாய் அதற்குள் தொடரும் நினைவலைகளும் அவர் சொல்லிய, அலிகள் குறித்த விவரணைகளும், அடுத்ததாய், கல்லூரி காலத்து நினைவலைகளாய், இலக்கியக்கூடம், இமயவரம்பன் என்னும் நண்பனும் இலக்கியவாதியும் பின்னர் திருடனுமானவன் பற்றியும் வருகின்றன. 

அடுத்ததில் காதலாய் கிருஷ்ணவேணி, அடுத்ததில் மனைவி பத்மினி மற்றும் அச்சமயத்து நண்பர்கள், அவர்களின் உரையாடல்கள். அடுத்ததாய் ஒரு ரயில் பயணம் அதில் சந்திக்கும் வட இந்தியன், அவனின் தற்கொலை, அதன்பிறகு வரும் இன்னொன்றில் சந்தானகோபாலன் என்னும் உடன் வேலை செய்யும் நண்பன், அவனுடனான உறவு, அவன் வீட்டில் ஓர் இரவில் நேரும் சந்திப்பு, அவனின் அறிவுவெளி, அதிலிருந்து டான் ஜுவான், அதில் கேஸ்டனடா, அந்த கதையில் வரும் காரை கடக்கும் நாயொன்று, அது ஒருவேளை சூனியக்காரனாய் இருக்கும் சாத்தியம் குறித்த அலசல், மறுபடியும் சந்தானகோபாலன், அவர் வீட்டின் புல்வெளியில் இரண்டு நாய்கள், அவற்றின் ஒட்டுதல், அதன் வழியே நண்பர்களுக்கு இடையேயான இடைவெளி முடிவுக்கு வந்து ஒன்றாகி பிரிதல் என்று ஒரு கதைக்குள் இத்தனையையும் அடுக்கி, சொற்கள் கொண்டு சமைத்து, ஒன்றன் மேல் ஒன்றாய் உறவு அமைத்துக்கொண்டேச் செல்கிறார். 

சொற்கள்தான் எவ்வளவு வசியமானவை. அதன் வடிவத்தை அமைப்பை மனிதன்தான் உண்டாக்குகிறான். அவற்றினுள்ளும் தன் உணர்வுகளை இருத்தி, அவனும் இருக்கிறான். யுவனின் சொற்களும் அவ்வகையானவையே. நம்மை மயக்கி உள்ளிருத்துபவை. மனம் மருகாமல், கலங்காமல், தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் எவராலும் இக்கதைகளிலிருந்து வெளிவர இயலாது என்பதே நிஜம். அத்தனை வல்லமை அவரின் மொழிநடைக்கு இருக்கின்றது.. 

மேலே குறிப்பிட்ட இந்த கதையில் மெல்லிய சரடு ஓன்று எல்லா கதைகளையும் என்று சொல்ல முடியாவிட்டாலும், பெரும்பான்மையானவற்றை இணைக்கிறது. அந்த சரடையும் இடையில் வரும் ஒரு பாகத்தில், எங்கோ கேள்விப்பட்டதாக அவர் எழுதியிருக்கும் ஒரு கதையில் புகுத்தியிருக்கிறார். ஒரு ராணுவ வீரன் குண்டடிபட்டு இறக்கவிருக்கிறான். அவனின் நண்பன் இன்னொரு முகாமில் இருக்கிறான். அங்கு போகவும் அவனை காப்பாற்றவும் விழைகிறான். அவனின் அதிகாரி போகவிடவில்லை. இருந்தும் செல்கிறான். அவனின் நண்பன் இறக்கும்போது இவனிடம் முணுமுணுத்துவிட்டு இறக்கிறான். அதிகாரி என்ன சொன்னான் என்று கேட்கிறார். ‘நீ வரவேண்டும் என்று நினைத்தேன். வந்துவிட்டாய்’ என்று சொன்னதாய் சொல்கிறான். ‘நூற்றி சொச்சம் நண்பர்கள்’ என்னும் இந்த கதைக்குள் அமைந்த பதினைந்து உதிரிகதைகளுக்கும் மையக்கருவாய் இது அமைந்துவிடுகிறது. 

இவ்வாறே அவரின் அனுபவங்கள் உதிரிக்கதைகளாய் எழுதப்பட்டு, ஒற்றை சிறுகதையாகிறது.  



மாற்று மெய்மை அல்லது மாற்று யதார்த்தம்

பெரும்பாலும் கதைகள் புதினங்கள் வாழ்வின் பொதுத்தன்மையை பிரதிபலிப்பது வழக்கம். நனவுகள், நினைவுகள், கனவுகள் என்று நீண்டுக்கொண்டே செல்லும் அதைக் கொண்டே, இயல்பாய் கதைகள் நகர்தல் உண்டு. இவ்வாறன்றி, பொதுத்தன்மையிலிருந்து விலகி, ‘மாற்று மெய்மை’ என்று தனக்கே உரித்தாக ஒரு பாணியை உருவாக்கி அதில் பயணித்திருக்கிறார் ஆசிரியர். 

ஒரு கதைக்குள் இணைந்திருக்கும் உதிரியான பல கதைகளும் அவற்றை இணைக்கும் சரடாய், மையக்கருவும்.சேர்ந்த யதார்த்தவியல் எழுத்துலகம் யுவன் அவர்களுடையது. தற்செயலாய் நடக்கும் செயல்கள் யாவும் நாம் அறிந்த தற்செயல்கள் அல்ல, உண்மைகள் அல்ல, மாற்று உண்மைகள் என்கிற கோட்பாட்டை வைக்கிறார். அதை மாற்று மெய்மை என்றும் அழைக்கிறார். 

கதைகள் என்பவை, பிரபஞ்சம் அறிந்த ஏதோ ஓர் உண்மையை இயம்புபவை..அதற்கும் மேலே, மாற்று உண்மைகள், பிரபஞ்சத்தின் நிஜங்களோடு பொருந்தி அந்த தற்செயலாய் நடக்கும் செயல்களின் காரண காரியங்களை ஆய்ந்தறிய முற்படுகின்றன. நிஜத்தையும் மாற்று மாயத்தன்மையையும் தன் கதைகளில் இணைக்கிறார்.


வட்டார வழக்கியல் 

கதை எதுவாகினும் வாசிப்பனுபவத்தைப் பூர்த்தி செய்வது, அந்தந்த வட்டார மொழிவழக்கே. கி ராஜநாராயணன் கதைகளில், அவரின் மொழிநடையில், கரிசல்காட்டு மண்ணின் மணம் வீசாமல் இருந்ததில்லை. யுவன் சந்திரசேகரின் எழுத்துநடையும் அவ்வாறே. மதுரையில் வாழும் பிராமணர், கோனார், நாடார், இஸ்லாமியர் போன்ற பலதரப்பட்ட சமூகத்தினரின் வழக்கு மொழியில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராய் விளங்குகிறார் யுவன் அவர்கள். 

“சிவராமன் போனாலும் போனான், உங்கப்பன் உயிரைப் பாதி கொண்டுபோயிட்டன். பாதிச்சவமான்னா திரிஞ்சன்...” என்று பிராமணர் மொழியும்,

“ பீப்பிக்காரவுகளுக்கும் அவ மேல ஓர் பார்வெ இருந்துருக்குண்றது இவ அத்துட்டு கைப்பிள்ளெயோடே வந்து நிக்கிறப்பத்தானே தெரியிது..” என்று மதுரை மண்ணின் வட்டாரவழக்கும்,

“குந்தி துரியோதனனை திருமணம் செய்துக்கொண்டதில் மதுரதாஸ் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டானாம்” என்று நாடக கதாபாத்திரங்களைக் கொண்டு விவரிக்கும் நகைச்சுவை பாங்கும், 

“அணு, கடவுள், சுயம் இவையெல்லாம் ஒரே தளத்தின் வெவ்வேறு சாயல் கொண்ட அடிப்படைத் தொன்மங்கள். இவற்றில் எதையேனும் ஒன்றை நம்பாமல் மனித சிந்தனை நகர்வதில்லை” என்று துறவியின் வரிகளும்,    

“அப்பண்டா ஒங்களுக்கு இந்த எலே பத்தாது. பெருசு கொண்டாறேன்.... நெய்யாத்திங்கர வெத்தில இது. அய்யா நெறயப் பாக்கனூங்குறாஹல்லே..” என்ற இஸ்லாமியர் வாய்மொழியும்,

“மாமா நீங்க அசப்புலே மானேக்ஷா மாதிரியே இருக்கேள்..” 

“அவன் எனக்கு ஜுனியர்டா அவந்தான் என்னை மாதிரி இருக்கான்..” என்ற நகைசுவையான உரைநடையும் யுவன் அவர்களுக்கே உரியது.   

ஒரு கதையில், அவரின் அப்பாவின் இறப்பு குறித்து, 

“அப்பா சாகவில்லை. அப்பா செத்ததும், சொந்தக்காரர்கள் வந்து பிலாக்கணம் கூட்டி மூக்கைச் சிந்திப் போட்டு சுடுக்காட்டுக்கு தூக்கிக்கொண்டு போனதுவும் ..... எல்லாமே சொப்பனம்தான்..

இன்று சொப்பனம் என்ற வார்த்தையை உபயோகிக்க மாட்டேன். கனவு என்றோ டிரீம் என்றோதான் சொல்வேன்.சொப்பனம் என்பது அப்பாவின் வார்த்தை..அன்று என்னிடம் இருந்த வார்த்தைகள் அப்பாவின் வார்த்தைகள்.

...அதோ வரும் பேருந்தில் அப்பா வந்து கொண்டிருக்கிறார். வேஷ்டியின் சொருகுநுனிக்குப் பக்கத்தில் உண்டாக்கிய ஏந்தலில் பப்பரூமுட்டும் நாணாவையர் ஓட்டல் பூரிசெட் ஒன்றும் வைத்துக் கட்டிக்கொண்டிருக்கிறார். 

பேருந்து ஜெயராஜ் கடையைத் தாண்டும்போது ஜன்னலோர இருக்கையில் இருந்து பொடிபோட்ட வலது கையை உதறிக்கொண்டே இருக்கையை விட்டு எழுவதைப் பார்த்தேன். பேருந்து அண்ணா மன்றத்துக்கு எதிர்ல் நிற்கிறது. 

முதலில் ஒரு கிழவி, பிறகு சுந்தரக் கோனார், பின்னால் அவர் சம்சாரம், நாட்டு வைத்தியர் சம்முகம்பிள்ளை. விசில் சத்தம். பேருந்து உறுமுகிறது. மெல்ல நகர்கிறது. நான் குமுற ஆரம்பித்தேன்..” 

மொழி ஆளுமையும், நுணுக்கமும், அதை கவனமாக கையாள்கிற விதமும் யுவன் அவர்களின் படைப்புகளில் புலனாகிறது. வாசிப்பவர்களுக்கு கதைத்தளத்திலேயே தாமும் இருப்பதுப்போன்ற பிரமையை ஏற்படுத்திவிடுகின்றது. 



உளவியல் பார்வை 

மனம் என்பது எண்ணங்களின் அழுத்தமான குறியீடாக உரைக்கப்படுகிறது. எப்பொருளை நோக்கும் பொழுதும், அதன் இணையாய் தோன்றும் நினைவலைகள் நம்மை பின்னோக்கி, கடந்துவந்த காலத்திற்குள் அங்கு நிகழ்ந்தவைகளுக்குள் இட்டுச்செல்லாமல் இருப்பதில்லை. அதை நாம் வெறும் நிகழ்வாய் காண்கிறோமா அல்லது நம் கால இட மாற்றத்தின் முக்கிய குறியீடாகக் கொள்கிறோமா என்பது நம் சிந்தனையின் வசமே. 

பேருந்து நிறுத்தம் சென்று நிற்கும் சமயம், அங்கு நம்மை கடக்கும் பேருந்தின் உள்ளிருந்து வீசப்படும் ஒரு மனிதனின் பார்வை எங்கோ பார்த்த சலனத்தை உண்டு பண்ணாமல் இருப்பதில்லை. அது இரு ஜோடி கண்களின் தற்செயலான ஒரு சந்திப்புதான். ஆனால் அது தற்செயல் அல்ல என்னும் வாதத்தையும் நம்மால் வைக்கமுடியும். இத்தனை பரிச்சயமாய் ஒரு பார்வை, ஆழமாய் ஏதோ சொல்வதுபோல, முடிந்தால் ஒரு புன்னகையை அள்ளித் தாயேன் என்னும் கெஞ்சலை கொடுத்துவிட்டு நகர்வதை மறுப்பதற்கில்லை. அவ்வாறான ஓன்று அன்றைய முழுநாளையும் நம்மை தொந்தரவு செய்யாமல் விடுவதில்லை, அல்லது ஒய்வு நேரத்திலாவது வந்து போகும் கனவுகளில் ஒன்றாய் அமையாமல் போவதில்லை. 

 இப்படியான ஒரு வாதத்தையும் ‘தற்செயலாய் எதுவும் நடப்பதில்லை’ என்பதையும் ஆசிரியர் எல்லா கதைகளிலும் முன்வைக்கிறார். இதிலிருந்தே மாற்று மெய்மையையும் உருவாக்குகிறார். அதையே அவர் தன் கதைகளின் கோட்பாடாக்குகிறார்.    

 ஆசிரியர் பெரும்பாலான கதைகளில் தன்னை முன்னிலைப்படுத்தியே கதை படைத்திருக்கிறார். அதில் இயங்கும் கதாபாத்திரங்களில் முக்கிய கதாபாத்திரம் (Protagonist) எனப்படுவது எழுத்தாளரின் பார்வையிலும் கணிப்பிலுமாக நகர்கிறது. மற்ற பிற கதாபாத்திரங்கள் மைய கதாபாத்திரத்தின் துணைநிலை குணங்களைச் சுமந்து நடமாடுகின்றன. எல்லா கதைகளிலும் வரும் கதைசொல்லியாக வரும் கிருஷ்ணன், அவனின் நண்பர்களாகக் காட்டப்படும் இஸ்மாயில், எம் யுவன், சிவா போன்ற கதாபாத்திரங்கள் ஆசிரியரின் உணர்வுகளை ஒத்தியங்கும் பண்புகளைக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறே படைக்கப்பட்டிருக்கின்றன. வித்தியாசம் உணர்த்தும், எதிர்நிலை கருத்து புனையும் கதாபத்திரங்களாக (Antagonist) சிலவற்றையும் முன்வைக்கிறார்.  

ஆசிரியர் முக்கிய பாத்திரமாக உருவகப்படுத்தும் தன்னிலிருந்து, தன் உணர்வுகளை உடைத்து, பிரித்தெடுத்து, இணையாகவும் எதிராகவும் சமதளத்தில் மற்ற கதாபாத்திரங்களைப் பயணிக்கச் செய்கிறார். இது ஒரு வகையில் விவாதங்களுக்கான சுவாரசியத்தை உண்டுபண்ணுகிறது எனலாம். சில தர்க்கங்களை எண்களிட்டும் சொல்கிறார். யுவனின் இம்முறை, அனுபவங்களை மாற்று மெய்மையாய் கதை படைக்கும் உத்தி, தமிழ் இலக்கியத்திற்கு புதிது எனலாம்.  

எல்லா குணநலன்களையும் ஒரே கதாபாத்திரத்தின் மீதே அடுக்குவதற்கு பதிலாய், அவற்றை உடைத்து, பற்பல பாத்திரங்களை படைக்கும் உத்தியை சக எழுத்தாளனுக்கும் அறிமுகப்படுத்துகிறார் யுவன் அவர்கள். 

தன்னை மட்டுமே பிரமாதமாய் கொண்டாடும் அல்லது தாழ்வாய் இறக்கிக்கொள்ளும் மனநிலை, தன்னை அடுத்தவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள், தான் பேசுவதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறார்கள் போன்றதான மனசிக்கல்களைத் (PersonalityPersonality Disorderdisorder) தவிர்க்க ‘நான் என்னும் நிலை’யிலிருந்து விலகுதல் உளவியல் ரீதியாக ஒரு தீர்வாகக் காட்டப்படுகிறது. அவரின் ‘கருநிற மை’ சிறுகதை ஓர் எடுத்துக்காட்டு. இன்னும் பல கதைகளிலும் இம்மாதிரியான உளவியல் சிக்கல், அதை விடுவிக்கும் நோக்கு அனைத்தும் விரவிக்கிடக்கின்றன.    

கதைசொல்லியாக வரும் கிருஷ்ணன், அவரின் மனைவி பத்மினி, பணியாற்றிய வங்கி சூழல் போன்றவை ஆசிரியரின் நிஜவாழ்வு தன்மையை சுட்டும் விதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

“எப்போதும் உன்னைப் பற்றியே நினைக்கிறாய்..” என்று இன்னொரு கதைசொல்லியாக வரும் இஸ்மாயில் சொல்கிறார். 

அதிகபட்சமான நினைவுகள் நம்மை சார்ந்தே இருக்குமானால் மன அழுத்தத்தின் பிடியில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆசிரியரும் அவ்வட்டத்துக்குள்ளே இயங்குவதாகக் கணிக்க இயலுகிறது.

கதைசொல்லியாக இருக்கும் ஆசிரியரின் இம்மாதிரியான உடைத்தெழுதும் பாணி, அவரின் படைப்புகள் அனைத்தையும் உள்வாங்கும் ஒரு வாசகனுக்கு, தன் மனசிக்கலை விடுவிக்கும் வியூகமாகவே, ஆசிரியர் இவ்வாறு எழுதிவருவதாகக்கூட படலாம். உதாரணமாய், ‘இடம் பெயர்தல்’ என்னும் கதையைச் சொல்லலாம். தன் வாழ்வில் காணாமல் போனதாகக் கூறப்படும் வருடங்கள் குறித்து எழுதியிருக்கிறார். அதை கதையாய் ஏற்றுக்கொள்வதை விட அனுபவ குறியீடாய் வாசிப்பது சுலபமாகவும் நேர்மையாகவும் உள்ளது. 

பெரும்பாலான கதைகளில், ‘நான்’ என்னும் தன்மை இடத்திலிருந்து எழுதப்பட்டிருப்பது குறித்து, ஆசிரியரும் விளக்குகிறார், அது அவருக்கு எளிதாய் இருப்பதாக. கிருஷ்ணன், அவரின் மனைவி பத்மினி, இரு குழந்தைகள் என்ற குடும்ப நிலை, அவரின் வங்கி உத்தியோகம், வேலை மாற்றம், உயரதிகாரிகள், பணி சூழல, பிறந்து வளர்ந்த கிராமம், பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை, நட்பு வட்டம் போன்றவை அவரின் அனைத்து படைப்புகளிலும் காணக்கிடைக்கின்றன. 

இம்மாதிரியான அனுபவ எழுத்துகள் சமயங்களில் வாசிப்பு அனுபவத்தைப் பிரமாதப்படுத்துகிறது. நமக்கென இருக்கும் அனுபவங்களை அதனுடன் இணைத்துப்பார்த்து ரசிக்கவும் வருத்தப்படவும் மகிழவும் வைக்கின்றன. ஆனால் சலிப்பையும் சில பொழுதுகளில் மறுக்காமல் தருகின்றன. படித்ததையே மீண்டும் மீண்டுமாய் வாசிக்கும் ஓர் உணர்வுக்குள் வாசகனைப் புகுத்திப்பார்க்கின்றன. ஒரு மனசோர்வு ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. 

கிருஷ்ணன், சிவா போன்று கதைசொல்லிகளாக வருகிறவர்கள் கதைகள் முழுமையும் தங்கள் அனுபவங்களைச் சொல்லிக்கொண்டேச் செல்கிறார்கள். கதைகளின் ஓட்டம், மொழிவளம் சுவாரசியம் கூட்டுகின்றன. வாசிப்பின்பமும் அதிகரிக்கிறது, ஆனால் முழுமையடைவதில்லை. கதையின் படிமம் என்று ஏதும் குறிப்பிட்டு சொல்லமுடியாத நிலையில், இவ்வாறான நவீனத்துவம் வாய்ந்த படைப்புகள் இலக்கியத்தில் ஏற்கப்படவேண்டிய முகமே.   



எழுத்து மெய்மை   

கவிதையானாலும் கதைகளானாலும் எப்படைப்பானாலும் யதார்த்தத்தைப் பறைசாற்றும் வண்ணம் அமைபவை விருப்ப வாசிப்புக்குள் அடங்குகின்றன. நினைவுகளின் இயல்பு நகர்வை நனவுகளில் உணர்வது, ஞாபக அடுக்குகளைக் கலைத்து கலைத்து அடுக்குவது, கனவுகளுக்கு உருவமும் உயிரும் கொடுப்பது, தன்னை விட்டு தான் வெளியே நிற்பது போன்றவை, மனித மனதின் மிகவும் நுட்பமான நிகழ்வுகளுள் ஓன்று. அதை தன் கதைகளின் வெவ்வேறு பரிமாணங்களின் மூலம், யுவன் சந்திரசேகர் அவர்கள் தானும் உணர்ந்து, நம்மையும் உணரவைக்கிறார். அனுபவங்களின் வழியாக இலக்கியத்தின் புதிய மெய்மையாய், மாற்று மெய்மையை படைத்திருக்கிறார் ஆசிரியர். தமிழ் இலக்கிய படைப்புலகின் ஆளுமைகளில் ஒருவராக, உளவியல் வழி, யதார்த்தத்தை மிகச் சிறப்பாய் கட்டமைத்திருக்கிறார் என்பதில் நமக்கு பெருமிதமே.



****************** 


கட்டுரை | எழுத்தாளர் அகிலா  

(கருத்தரங்க கட்டுரை) 
(உலகத் தமிழ் பண்பாட்டு மையம், பன்னாட்டு கருத்தரங்கு 

டாக்டர் என் ஜி பி கலை அறிவியல் கல்லூரி, கோவை, 

தலைப்பு : வைகை தமிழ் : எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்

இடம் : தியாகராசர் கல்லூரி, மதுரை)

(8.12.2017)




 


Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந