Skip to main content

அறவி நாவல் : ஓர் அறிமுகம்

 அறவி நாவல் 

(உரை: கவிஞர் நித்யா)



அறவி புத்தகம் வாங்க,

கவிஞர் நித்யாவின் அறவி புதினம் குறித்த உரைக்குள் 'பெண்ணின் சுயம்' குறித்த ஒரு நீண்டதொரு அலசல் நிகழ்கிறது. இத்தனை அதிகமான கதாபாத்திரங்கள், பெண்ணின் உடலரசியல், குடும்ப அமைப்பு, ஆண் தோழமை என்ற பலவித அடுக்குகளுக்குள் இருக்கும் என்னுடைய 'அறவி' புனைவுக்குள் அநாயாசமாக சுயத்தைத் தேடியிருக்கிறார் உரையாசிரியர். அகம் சார்ந்து இயங்கும் பெண்களை அடையாளப்படுத்துகிறார். புனிதம் குறித்த அர்த்தப்படுத்துதல் சிறப்பு. 'வசந்த காலத்திற்குத் தயாராகும் இலையுதிர்க்காலம் போல' என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நிகழ வேண்டிய உணர்வு இதுதான் என்பதை புதினம் சுட்டியிருக்கிறது என்று நான் நம்புகிறேன். நன்றிங்க நித்யா. 


"விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்

சிட்டுக் குருவியைப் போலே" 

எனும் பாரதியின் குரலை, அறவியின் ஒற்றை குரலாய், நான் பதித்திருப்பதையே, 'விடுதலையாகி நிற்பாய்' என இவ்வுரைக்குத் தலைப்பாக்கி இருக்கிறார் நித்யா அவர்கள். 

அறவி புதினம் குறித்த ஒவ்வொருவர் உரையிலும் ஒவ்வொரு பார்வையை நான் உள்வாங்குகிறேன். நன்றியுடன் நான்.. 


****************************


விடுதலையாகி நிற்பாய் - நித்யா 

..............................................................

"விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்

சிட்டுக் குருவியைப் போலே"

-பாரதியார்

                           

                                  விடுதலை என்பது என்ன? சுதந்திரம் என்பது என்ன? எதிலிருந்து விடுதலை? எதற்காக? யாரிடமிருந்து? அதிலும் ஒரு பெண்ணுக்கான சுதந்திரம் எதுவாக இருக்கும்? ஒரு பெண்ணுக்கு சுதந்திரம் யாரிடமிருந்து பெறப்படுகிறது? பெரும்பாலான நேரங்களில் சுதந்திரம் என்பது தனக்குத்தானே வழங்கிக் கொள்வதாக அமைகிறது. குடும்ப அமைப்போ, சமூக அமைப்போ தரக்கூடியதைக் காட்டிலும், நமக்குள்  நிகழ்ந்து கொண்டிருக்கும் அகப் போராட்டத்தில் வென்றோ, தன்னுள் ஒளிந்து கொண்டிருக்கும் தனது வலியை சத்தமிட்டு அழுது தேற்றவோ சுதந்திரம் தேவைப்படுகிறது.

                                 எத்தனை குடும்பங்களில் பெண்கள் தனக்காகவும் வாழ்கிறார்கள் என்று கணக்கிட்டால் பெரும்பாலும் விழுக்காடு குறைவாகவே இருக்கும். பெண் என்பவள் ஒரு சுயம். அவள் அம்மாவோ, மனைவியோ, மகளோ, மருமகளோ மற்றும் பெயர்களும் அவற்றிற்கான பொறுப்புகளோ அல்ல. ஆனால் பெண் என்பவள் பெரும்பாலும் மேற்சொன்ன பிம்பங்களுக்குள்ளே தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றாள். அவளுக்கான படிப்பினை அவளை அப்படித்தான் வார்த்தெடுக்கிறது.

                                இந்நாவல் மூன்று தலைமுறைப் பெண்களையும் அவர்களுக்கிடையேயான உறவுமுறை, பிணக்குகள், படிப்பினைகள் பற்றியும், பெண்களுக்குக் கிடைக்கும் கல்வி எப்படி தன் பார்வையை மட்டுமல்லாது, தனது முந்தைய தலைமுறையையும் அவர்களின் பார்வையையும் மீட்டெடுக்கிறது, குடும்ப வாழ்க்கை பெண் சார்ந்தும், பெண்ணைச் சிதைத்தும் தன்னை எப்படி வடிவமைக்கிறது என்பது பற்றியும் பேசுகிறது. செல்லம்மா என்னும் ஆச்சி, அவளது பேத்தி தேவகி, தேவகியின் தோழி வசு, அவர்களுக்கிடையே நிகழும் கடிதப் பகிர்வு, கடிதத்தின் மூலம் தேவகியும் வசுவும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது, தேவகி மற்றும் வசுவின் குடும்பங்கள், தேவகியின் மகளான யமுனா தனது தாயின் குழந்தைப்பருவ வலியைக் களைவது, யமுனாவின் திருமண உறவு முறிவு மற்றும் திருமண உறவு குறித்த புரிதல், வசுவின் இளைய மகன் சரவணனுடன் யமுனாவின் புதிய பயணம் என்று பயணப்படுகிறது. மேலும் அறவி நம்மை திருச்செந்தூரிற்கும், இங்கிலாந்துக்கும் அழைத்துச்செல்கிறாள். வீடு என்பது செங்கற்களால் மட்டுமானதல்ல, வீட்டில் பெண் தனது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் நிரப்பிவைக்கிறாள். வீடென்பது அவளது ஆளுமை என்றும் அவ்வீடுடனான அவர்களது பிணைப்பு பற்றியும் பேசுகிறது இந்நாவல்.

 

பெண்ணுடல்:                                

                         சிறுவயதில் உடல் உறுப்புகள் பற்றிய எந்தவொரு அறிவும் இல்லாத எப்படி மற்றவர்கள் தன்னை தொட அனுமதிக்க வேண்டும், ஓர் ஆண் தன்னைத் தொட்டால் அது தவறு என்ற புரிதல் இல்லாத சிறுமி. தனது பெற்றோரை இழந்து தனது ஆச்சி செல்லம்மா வீட்டில் வசிக்கும் சிறுமி தேவகி காய்ச்சலுற்ற பலவீனமான நிலையில் உறங்கிக்கொண்டிருக்கும்போது கொடிய மிருகத்தால் காயப்படுத்தப்படுகிறாள். ஆனால் காயப்பட்டது என்னவோ அவள் மனம்; அவளது குழந்தைப் பருவம்.

                         தன் அனுமதியின்றி தன்னுடைய உடலில் நிகழ்த்தப்படுபவை அனைத்துமே மனதை பாதிப்பவை, உடலோடு சேர்ந்து மனதையும் சிதைப்பவை.

                        தன்னைத் தொடுவது தன்னுடைய பெரிய மாமன் என்று அறிந்தும், எதற்காகத் தன்னை இப்படித் தொடுகிறான் என்று தெரியாமலேயே அன்று அந்த நிகழ்வு அவளுக்கு நடந்தேறுகிறது. ஒரு நாள் மட்டுமா? தொடரும் அந்த மோசமான நிகழ்வால் தேவகி எத்துணை பயந்து போகிறாள்… அவள் கண்களில் தெரியும் அந்த மிரட்சி எத்தனை கேள்விகளை முன்வைக்கிறது. சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றால் வேதனை? எதனால் இப்படி ஆனது என்ற புரியாமை. இன்னும் தேவகிகள் இதே கேள்விகளோடு தான் நம்மை மிரள மிரளப் பார்க்கிறார்கள்.

                        தனக்கு நடந்தது தவறு என்று தெரியாமலும், தன்னை மாமா இப்படி அணுகிவிட்டாரே என்ற குழப்பத்திலும் தவிக்கிறாள். அதைத் தனது ஆச்சியிடம் சொன்னால் மாமா உறவு இல்லாமல் போய்விடும் என்ற பயத்தில் உண்மையைச் சொல்லாமல் தேவகி தவிர்க்கிறாள்,- மனதளவில் பாதிக்கப்படுகிறாள்.

                      சிறுவயதிலேயே பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளைக் கையாளும் குழந்தைகள் மனரீதியாக அதிகம் பாதிப்படைகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான அழுத்தத்தோடு பாதுகாப்பற்ற மனநிலையிலேயே வாழ்கிறார்கள்.

அதனால் ஒவ்வொரு இரவிலும் கனவுகள் வருகின்றன. அவள் உடல் காயப்படுத்தப்படுகிறது. அவளது பயந்து மிரள்கிறாள்.

“என்னைய.... என்னைய.... யாராவது காப்பாத்துங்க” என்று தேவகி மட்டுமா குரல் எழுப்புகிறார். அது ஒரு தேவகியா எத்தனை தேவகிகள், வாசுகிகள், வசுமதிகள் என்று எத்தனை எத்தனை பெண்கள்.

                      பெரும்பாலும் அனைத்து வகையான குற்றங்களும் உடலின் பேரிலும், காதலின் பேரிலும் நிகழ்த்தப்படுகின்றன. நான் உன்னை நேசிக்கிறேன் என்பதில் தொடங்கும் அன்பு உடலைக் கைப்பற்றுவதற்கான ஏற்பாடாகத் தான் இருக்கிறது. பெண் ஒருபோதும் தானாக வாழ அனுமதிக்கப்படுவதேயில்லை. சுயம் தொலைத்த சூழ்நிலைக் கைதியாகவே அவள் வெவ்வேறு உறவின் பெயர்களில் வலம் வருகிறாள். அப்பெயர்கள் தருகின்ற பொறுப்பு, அங்கீகாரம் என்று அதற்குள்ளாகவே தன்னை நிறுத்தி வைக்கிறாள். அதிலேயே நிறைந்து கரைந்து போகிறாள், பிறகு நான் தனி மனுஷி தனக்கென்று தனி விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன என்பதை மறந்து சுயம் தொலைத்தவளாகவே வாழ்ந்து மாண்டும் போகிறாள்.

                     வசுவும் அப்படித்தான்… தன்னுடைய நெருங்கிய தோழி தேவா மன வளர்ச்சி குன்றிய ஓர் ஆணைத் திருமணம் செய்யப்போகிறாள் என்பதைத் தடுத்து நிறுத்த முற்பட்ட வசு, திருமண உறவில் உடல் இணைவு எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்த, தன் தோழிக்கு அநியாயம் நடக்கக்கூடாது என்பதை உணர்ந்த வசு தான் பின்பு தனக்கு அநியாயம் நடக்கிறது. அதை நாமே அனுமதிக்கிறோம் என்பதை மறந்தவளாகிறாள்.

                      மறுத்தல், வேண்டாம், பிடிக்கவில்லை என்று சொல்வதெல்லாம் தவறானதே என்ற கருத்து பிம்பம் நம்மிடையே நிலவிவருகிறது. பிடிக்காத உடையை, பிடிக்காத உணவை, பிடிக்காத படிப்பை, பிடிக்காத வேலை, பிடிக்காத உறவு என்று பிடிக்காததைச் செய்து கொள்கின்ற, ஏற்றுக்கொள்கின்ற மனோபாவம் நாளடைவில் மன அழுத்தத்தையும், சுயத்தை இழப்பதற்கான அச்சாணியாகவும் மாறக்கூடும்.

                    தனக்கு ஒன்று வேண்டாம் என்று மறுப்பது சுயத்திற்கான ஆரோக்கியமான விடயம்… அதே போல தனக்கு ஒன்று வேண்டும் என்று கேட்பதும், தனக்கு என்ன வேண்டும் என்கின்ற தெளிவும் தான் சுயத்தை மேம்படுத்துகிறது. சுயத்தை இழந்து செய்யப்படுபவை அனைத்தும் சலிப்பையே தரும்.


நவீன பெண்கள்                    

                            21 ஆம் நூற்றாண்டுப் பெண்களுக்கு தனக்கு என்ன வேண்டும் என்கின்ற தெளிவு இருக்கிறது. உறவுகள் குறித்தும், திருமணம் குறித்தும் அவர்களிடையே புரிதல் இருக்கிறது. திருமணம் என்பது ஒரு சாதனை அல்ல. அனுசரித்துக் கொண்டேயிருப்பது ஒன்றும் புனிதம் அல்ல என்ற நோக்கை கல்வி அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட பெண் தான் யமுனா… அவளது தாய் தன்னுடைய திருமண முறிவு குறித்துக் கவலையுற்று, “யம்மு நான் வாழ்ந்த இந்த அறவி வாழ்வை நீயும் முன்னெடுத்து விடாதே. அது ஒரு கொடுங்காலம் பெண்ணுக்கு” என்ற போது, “அம்மா இப்போது பெண்களின் உலகம் மாறிவிட்டது. ஒவ்வொருவரும் எங்கள் தனிப்பட்ட உரிமைகள், விருப்பங்கள் பொறுப்புகள் தாண்டி தனிமனிதர்களாக வாழக் கற்றுவருகிறோம் என்று கூறுகிறாள்”. உண்மை தானே! 

                            தனிமனிதராக நாம் நம்மை உணர வேண்டியது அவசியமும் கூட. ஆனால் யமுனாவைப் போல் வசுவாலும், தேவகியாலும் யோசிக்க முடியமா? அல்லது செல்லம்மாவால் தான் முடியுமா? அவர்களுக்கு இப்படி யோசிக்கவேண்டும் என்று கூடத் தெரியாமல், தன்னை ஒரு குடும்ப அமைப்புக்குள் இருத்தி, ஏதும் அற்றவர்களாக ஆனவர்கள். இது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் உணர்வுச் சங்கிலி. இதிலிருந்து அறுபட்டு புதிதாகத் தன்னை மீட்டெடுக்கக் கல்வி என்னும் ஆயுதம் தான் உதவும்..உதவியது.. உதவுகிறது. 

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு மட்டுமல்ல… 

கற்பவரால், கற்றலால் தான் தன்னைப் பற்றிய சிறப்பை உணரவும் முடியும்.  

                       அதற்கு நாம் சற்று நமது வட்டத்திலிருந்து வெளிவந்து சிந்திக்கவேண்டும். ஏன், எதற்கு, எதனால் என்று கேள்விகள் கேட்கவேண்டும். கேள்விகள் தான் மாற்றத்தை அசைத்துப்பார்ப்பவை. கேட்கப்படும் கேள்விகள் பெறுவது விடைகளை மட்டும் அல்ல, புதிய பார்வையை, புதிய அணுகுமுறையை, புதிய தலைமுறையை…

                       அப்படித்தான் ஈரோட்டுக்கிழவன் கேட்டான், “பெண் ஏன் அடிமையானாள்” என்று… விடைகள் கிடைத்தன, கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இன்னும் கிடைக்கும் இப்போது கேள்விகள் ஒன்றானாலும், கேட்கப்படுகின்ற குரல்கள் நிறைய. அந்தக் குரல்களில் ஒரு குரலாகத்தான் யமுனாவும், அதற்கான விடையாகத்தான், தன்னுடைய தாயை மீட்டெடுக்கிறாள்.

                         தன்னைப் பற்றியும், தன் சுயத்தைப் பற்றியும், தனது வலியையும், கடந்தகாலத்தையும் ஏற்றுக்கொள்ள மெல்லப் பழகும் தேவகி, தன்னுடைய தோழியான வசுவிற்கு ஒரு புதிய பார்வையை, குடும்பத்திற்காக வாழ்ந்தது போதும் உனக்காகவும் வாழக் கற்றுக்கொள் என்கிறாள். 



பெண்ணின் குடும்ப அமைப்பு 

                        தன்னுடைய கணவன், மகள், மருமகள் பேரக்குழந்தைகள் அனைவரையும், காலை உணவு, மதிய உணவெல்லாம் அளித்து அவர்களைத் தயார்படுத்தி அனுப்பும் வசு தன்னையும் தயார்படுத்த மறந்தேபோகிறாள். தனக்கும் வயிறு இருக்கிறது அதற்கும் உணவளிக்கவேண்டும் என்பதை மறந்தவளாக தன்னை விட வீட்டுவேலைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவளாக சுயம் தொலைத்தவளாக மாறியிருக்கிறாள் தன்னை உணராமலே.

                      இந்தச் சமூகம், குடும்ப அமைப்பு பெண்ணை எப்படி வைத்திருக்கிறது? உணர்வுச் சுரண்டல், உழைப்புச் சுரண்டல் என பெண்ணை அவளது பலம் கொண்டும் அவளது பலவீனம் கொண்டும் கட்டமைத்திருக்கிறது. இது தகவமைத்துக்கொள்ளவேண்டிய, கொண்டிருக்கின்ற காலம்.

                       உடலுறவில் ஈடுபட்டால் ஏற்படும் பிரச்சனைகளை அறிந்தும் அதனால்  உடலும் மனமும் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்தும் வசு தனது கணவனுக்கு இணங்குகிறாள். பிறகு தொடர் இரத்தப்போக்கு மாத்திரைகள் என்று அவதியுறுகிறாள். பிறகு தேவகியுடனான கடிதப் பரிமாற்றம், தன் உடலுக்கு செவி சாய்க்கும் விழிப்பைத் தருகிறது. 

                       கணவனாக இருந்தாலும் அனுமதி பெற்றே அணுகவேண்டும் என்ற சட்டமும் புரிதலும் இல்லாத காலம். பெண் உடல் ஆணின் தேவைக்காக என்பதை மறுக்காத பெண் சமூகம். நாள் முழுக்க வீட்டு வேலைகள் செய்து, அனைவரது தேவைகளையும் பூர்த்திசெய்து களைத்து சலித்த பெண்ணுக்கு இரவும் அவளது உடலும் அவளுடையது இல்லை என்பது எத்தகைய வேதனையைத் தரும். கணவன் தான் என்றாலும் உடலுறவால் தன் உடல் பாதிக்கப்படுகிறது என்பதை அறிந்தும் மறுப்பு சொல்லாதது வசுவின் குற்றமென்றாலும், அப்படியான ஒரு படிப்பினையைத் தானே அவளது முந்தைய தலைமுறைப் பெண்கள் கற்றுத்தந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது வசுவும், அம்மாக்களும் அதிலிருந்து மீளவும், மாறவும் முயல்வதே சற்று ஆறுதலளிக்கிறது.

                       வசு அறுவைசிகிச்சை செய்து கொள்கிறாள். அதனால் தன்னுடைய கணவன் வேறொரு பெண்ணோடு தினமும் இருந்துவருகிறான் என்று அறிந்து அதை அறிவோடு அணுகி  முற்றுப்புள்ளி வைக்கிறாள். அதன் பிறகான நாட்களில் வசுவின் கணவர் இறந்துவிடுகிறார். இழப்பு என்பது வெறுமையை நிறைத்துச்செல்கிறது ஏன் எப்படி இனி என்ன செய்வது என்று கலங்கவைக்கிறது. வசுவும் தனித்துக் கலங்கிக்கொண்டிருக்கும் போது பெங்களூரில் தனியாக வசிக்கும் வசுவின் இளைய மகன் தன்னோடு வந்துவிடும்படி அழைக்கிறான். வசு தன்னை மாற்றிக் கொள்ள அவளது இளைய மகனான சரவணன் உதவுகிறான். ஆனால் முதலில் மாறியது அவன் தான். தன்னுடைய கூண்டை விட்டு வெளிவந்ததும், தனது காதலால் அவன் கற்றுக் கொண்ட விடயங்களுமே அவனுக்கு வாழ்வைப் பற்றிய தரிசனத்தைத் தந்தன. தன் அம்மா  இன்னும் காணாத உலகை அறிமுகப்படுத்துகிறான். 

                        மேலும் கூண்டுக்குள் இருப்பதைப்போலவே அதிலிருந்து வெளிவந்து வாழ முற்படுவதும் சற்றுக் கடினம் தான். தனக்குச் சிறகிருப்பதை மறந்ததும், அந்த செளகர்ய வாழ்விற்குப் பழகியதும்தான் அதற்குக் காரணம். அதன் பிறகு பறப்பதும், புதிய வெளியைக் கையாள்வதும் முயற்சியினாலும் விருப்பத்தினாலும் நிகழ்வது.

                      அது தான் வசுவுக்கும் நேர்கிறது. தனது இளைய மகனோடு பெங்களூர் வந்த பிறகு அனைத்துமே புதிதாகத் தெரிகிறது. புதிய உலகம் அவளை இரு கைக்கூப்பி வரவேற்கும் போது சற்று மிரள்கிறாள். பிறகு ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டாலும், பெங்களூர் வந்த பிறகு, தனது ஆளுமை பொருந்திய தான் கட்டமைத்து உருவாக்கிய வீடு தன் கையைவிட்டுத் தனது மருமகள் ஆளுமைக்குச் செல்வதைத் தாங்கமுடியாது தவிக்கிறாள். அம்மாக்கள் இப்படித்தான்… தான் இல்லையென்றால் வீட்டில் ஒன்றும் சரியாக நடக்காது என்பதை நம்புபவர்கள். நம்பப் பழக்கப்படுத்தப்பட்டவர்கள். வீட்டில் உள்ள அனைவரது தேவைகளையும் தன்னைத் தவிர யாராலும் சரியாக கவனிக்க இயலாது என்று எண்ணிக்கொள்பவர்கள். உங்க அம்மா இல்லைனா வீடு  நல்லாவே இல்லடா என்று கணவனும், பிள்ளைகளும் சொல்வதில் அவளுக்கு அத்தனை பெருமிதம் வாய்க்கிறது. “ஒரு வேலைக்காரி போலத்தான் நா இந்த வீட்ல இருக்க”னு சொல்லும் அம்மாக்கள் மறைமுகமாக, தான் இல்லாமல் அனைவரும் சற்றுத் தவிக்கும்படி செய்துவிடுகிறார். வசு சரவணனோடு வந்தபிறகு, அவள் செய்த வேலைகளைச் செய்ய நான்கு வேலையாட்கள் வைத்திருந்தார் வசுவின் மருமகள். அவளது ரசனைக்கு ஏற்ப வீட்டைச் சிறிது மாற்றியிருந்தாள். 

                           வசுவும் தேவாவும், சரவணனுக்கும் யமுனாவிற்கும் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள். வசு பெங்களூர் வந்த பிறகு, யமுனாவிற்குத் தனது கணவனுடனான விவாகரத்திற்குப் பிறகு , சூழ்நிலை ஏதுவாக அமைகிறது. கடிதத்தில் தொடர்ந்துகொண்டிருந்த தோழிகளின் உணர்வுப் பரிமாற்றம்  சரவணனோடு வந்த பிறகு இணையத்தின் வழியாகத் தொடர்ந்து, அது சரவணனும் யமுனாவும் இணைய உதவுகிறது.

                          வசுவும் சரவணனும் இங்கிலாந்து செல்வது என்றும், அங்கேயே  தங்கி சரவணன் தன்னுடைய  பணியைத் தொடர்வது என்றும் முடிவெடுக்கிறார்கள். ஆனால் ஏனோ வசுவிற்குத் தன்னுடைய வீட்டிற்கே சென்று விடவேண்டுமென்றும் தன் மிச்ச நாட்களை அங்கேயே கழித்துவிடவேண்டும் என்று நினைக்கிறாள்.

                         ஆனால்   நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. வீட்டில் இருப்பவர்கள் இனி வசு வரமாட்டாள் என்று வீட்டை அவர்களுக்கேற்றபடி மாற்றியிருக்கிறார்கள். தங்கள் வாழ்வில் வசுவின் இல்லாமயை எளிதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை நாளாய் வசு வலம் வந்த வீடு வசுவின் மருமகள்  அதிகாரத்திற்குள் வந்தது. இதை வசு தன்னுடைய வீட்டிற்குச் சென்றதும் உணர்கிறாள். தான் ஒரு விருந்தாளி என்ற உணர்வு மேலெழும்புகிறது. தான் இனி யாருக்கும் தேவையில்லை என்று உணர்கிறாள் .

                           அம்மாக்கள் தங்களது உலகத்தை வீட்டிற்குள் உருவாக்குபவர்கள். வீட்டினுள் இருக்கும் ஒவ்வொரு பொருளும் சுவர்களும் அவர்களோடு உரையாடுபவை. ஒவ்வொரு வீடும் வீட்டின் அறைகளும் பெண்ணின் கனவுகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும் வலிகளையும் ஏமாற்றங்களையும் நிறைத்துக்கொண்டிருப்பவை. வீடு அவளது ராஜ்ஜியம். அது பறிபோன பின்னான இழப்பு, தனது குழந்தைகளுக்கென்று ஒரு துணை வாய்த்துவிட்டது. இனி என் துணையோ இருத்தலோ, தேவையில்லை என்ற நினைப்பு, தான் ஒரு ராணியாக வலம் வந்த வீட்டில் ஏதோ ஒரு விருந்தாளி போல இருக்க விரும்பாததோ. ஏதோ ஒன்று அவளை இவ்வுலக வாழ்விலிருந்து அழைத்துச்சென்றுவிட்டது. தேவா தனது நெருங்கிய தோழியை இழந்துவிட்டாள்….

                        வசுவின் இழப்பு தேவாவை பாதிக்கிறது. ஆனால் வாழ்வின் மீதான புதிய பார்வை, பக்குவம் அவளை அந்த இழப்பை ஏற்றுக்கொள்ளப் பழக்குகிறது. 


வாழ்தல் இனிதே

                       தேவாவிற்கும் ராய்ஸிற்கும் இடையிலான உறவு கவிதை போன்று இருக்கிறது. இளங்கவிஞனின் முதல் கவிதை போன்று. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு உடல் சார்ந்தோ பெயர் சார்ந்தோ இருக்கவேண்டிய அவசியமில்லை.

                        மனதின் இளைப்பாறலுக்காக, பகிர்தலுக்காக, சக மனித வாஞ்சையுடனான தேநீர் கணங்களாக, ஞாபகங்களை மீட்டெடுக்கும் நடை  பயண உறவாக, கடந்த கால ஆழங்களில் இருந்து மீட்டெடுக்கும் காப்பானாக இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

                         ராய்ஸிற்கும் தனது கடந்த கால வலியை தேவகியோடு பகிர்ந்ததன் மூலம் சரிசெய்துகொண்டார். ராய்ஸின் போர்க்கால நிகழ்வுகள், உடல்கள் கதறல்கள், உடல்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்த சிறுமிகள் என அனைத்திலிருந்தும் வெளிவர தேவகியுடனான பகிர்வு உதவி செய்தது. ராய்ஸின் கடந்தகாலம் தேவகியைத் தனது கடந்த காலத்திலிருந்தும் வெளிவர உதவி செய்தது. தேவகி தனக்கு நேர்ந்ததை ஏற்றுக்கொள்ளவும், தனக்குள் காயப்பட்டு மருகிக்கொண்டிருந்த சிறுவயது தேவகியைத் தேற்றவும் கற்றுக்கொண்டாள். 

                          வாழ்க்கை  இப்படித்தான். கடந்த காலத்தோடு முடிந்துவிடுவதில்லை. அது நீண்டு கிடக்கிறது. வசந்தகாலத்திற்குத் தயாராகும் இலையுதிர்காலம் போல…. அப்படி ஒரு புரிதல் தரிசனம் தான் இங்கிலாந்து சென்றதும் தேவகிக்கு வாய்த்தது.

வாழ்தல் இனிதே….

                         

அறவியுடன் ஒரு பயணம் 

                      இறுதியாக, ஒவ்வொருவரும் தனக்காக நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாளும் தனக்குப்பிடித்த விடயங்களையும் செய்யவேண்டும். பேணுதல் சுயத்திலிருந்து தான் மலர வேண்டும்.

                        தனக்குப் பிடிக்காததை மறுக்க வேண்டும். சமையலறை வீடு தாண்டி ஓர் உலகம் இருக்கிறதை உணர வேண்டும். அதற்குக் குடும்பம் ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில் இவ்வாழ்க்கை சார்ந்ததும் இணைந்ததுமானது. காலம் காலமாக நிலவிவரும் பெண்கள் குறித்தான, பெண்களுக்கான கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பெண்கள் தங்கள் தலைமுறைக்கேற்றபடி அமைத்துக்கொள்ளவேண்டும். 

                        பெண்ணுக்கான பற்றுதல் என்ன? அவள் தன் வாழ்க்கையை எதனோடு பிணைந்து வைக்கிறாள்? தன்னை எதைக் கொண்டு கட்டமைக்கிறாள் அவளது தேடல் என்ன? எதை அவள் இழக்கிறாள் என்ற கேள்விகளும் அதற்கான விடைகளுமாக அறவி நம்மை ஒவ்வொரு பக்கமாக அழைத்துச் செல்கிறது.

                       அறவியுடனான இந்தப் பயணத்தில் நாம் அறிந்து கொண்டதும் புரிந்து கொண்டதும் ஏராளம். தம்மைப் பற்றியும் அம்மாவின் சுதந்திரத்தில் எத்தனை எத்தனை சிக்கல்கள் பின்னப்பட்டிருக்கின்றன என்பதும் பெண் எப்படி எல்லாம் தன்னையும் தன்னைக் கொண்டு பிறரையும் மீட்டெடுக்கிறாள் என்பதுமாகும்.

அறவியை நாவலாகத் தந்த அகிலா அம்மாவிற்கும்,

சிறந்ததொரு படைப்பைத் தந்த

காலச்சுவடுக்கும் நன்றி.. 

 *************************

Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி