Monday, 3 July 2023

வரலாற்றின் மிச்சங்கள் - ரபி அரண்மனை

 இங்கிலாந்து - ரபி அரண்மனை 

(Rabi Castle, Durham County, England)



          வரலாறு என்னை எப்போதும் ஈர்க்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. அரண்மனைகள், கோட்டைகள், போர்கள் போன்றவை வியக்க வைத்திருக்கின்றன. அதன் பெருமைகள், சோகங்கள் என்னை ஆக்கிரமித்திருக்கின்றன. நானும் அந்த விழுமியங்களின் எச்சம்தான் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. நாகரிகங்களின் வரலாற்றின் வாசகனாக எனக்குள் ஒரு விழைவு எப்போதும் எரிந்து கொண்டேயிருக்கிறது. 

            இந்த முறை லண்டன் புத்தகத் திருவிழாவின் சந்திப்பில் புலம் பெயர்ந்த எழுத்துகள் குறித்து பேசிய எழுத்தாளர் சாம்ராஜ் அவர்களிடம் நான் வைத்த கேள்வி இதுதான்: ஏன் இங்கிலாந்திற்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள் இங்கிருக்கும் வாழ்வுமுறை உணர்த்தும் படைப்புகளைத் தருவதில்லை? என்பதுதான். அங்கு வந்திருந்த எழுதும் விருப்பமுள்ள இளம் தலைமுறையினர் இருவர் எழுத முற்படுவதாகத் தெரிவித்தனர். வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. படைப்புகளின் மூலம் ஒரு நாட்டின் நுணுக்கமான விவரங்களை அறியும் வாய்ப்பு வாசிப்பாளர்களுக்குக் கிட்டும். 

      வரலாற்றின் மீது இருக்கும் ஆர்வத்தினால்தான், என் பயண நூலான 'இங்கிலாந்தில் 100 நாட்கள்'  புத்தகத்தில் இங்கிருக்கும் கோட்டைகள் குறித்து ஓர் ஆய்வே செய்து எழுதியிருப்பேன்.

   'தவ்வை' நாவலுக்குப் பின்பு, ஜூலை மாதத்தில் கோவை புத்தகத் திருவிழாவில் வெளியாகவிருக்கும் எனது இரண்டாவது நாவலான 'அறவி' புதினத்திலும் சிறு வரலாறு ஒன்றை இணைத்திருக்கிறேன். 

   என் அடுத்த நாவல், வரலாற்றை, அதுவும் இங்கிலாந்தின் வரலாற்றை, மையப்படுத்தியே இருக்குமென நம்புகிறேன் (எழுதும் பொறி உள்ளே கனன்று கொண்டிருப்பதால், எழுதுவேனென நம்புகிறேன்.. நம்புவதுதானே நடக்கும்..)


ரபி அரண்மனை 

      நேற்று இங்கிலாந்தில் டர்கம் கவுண்டியில் (Durham County) இருக்கும் ரபி கேஸிலுக்கு (Rabi Castle) சென்றிருந்தபோது, இரண்டு வாரங்களுக்கு முன் சென்று வந்த அய்னிக் கேஸிலைப் (Ainwick Castle) போலவே இதுவும் ஒரு வாழும் அரண்மனை. Living Castle என்பார்கள். இன்னும் அரச குடும்பத்து வம்சாவழியினர் வசித்து வருகிறார்கள் என்பதே. சில பகுதிகளை அவர்கள் வைத்துக்கொண்டு மற்றவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு விட்டுவைத்திருப்பார்கள். 

     இந்த ரபி அரண்மனையின் வரலாறும் மிக பெரியது. வீரம், அரச பதவி, அரசியல், பழிவாங்கல், பெண்களின் கதைகள் என்று பலவற்றைச் சுமந்திருப்பது. நிச்சயம் அடுத்த பயண நூலில் இவை இடம் பெறும். 

     அதன் பெரிய கூடங்கள், Barons hall, விரிந்து பரந்திருக்கும் தோட்டம், மான்களின் கூட்டம் இவையெல்லாம் ஏற்படுத்திய பாதிப்பைவிட அந்த கோட்டையின் தினசரி உள்ளியக்கம் (சமையல், பணியாளர்கள் முதல் ராணிகளின் ராஜ்ஜியம்) சார்ந்த விவரங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. எல்லாமே திட்டமிட்டப்படி அட்டவணை போடப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பது புரிகிறது. இதுபோலவே ஸ்டெர்லிங் (Sterling) அரண்மனையிலும் சில விஷயங்கள் ( இது குறித்து 'இங்கிலாந்தில் 100 நாட்கள்' புத்தகத்தில் இருக்கும்) என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன. 


புகைப்படங்கள்: 



















 எழுத்தாளர் அகிலா


No comments:

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....