Skip to main content

தவ்வை நாவல் குறித்து திரு ரஞ்சித் குமார் உரை

 தவ்வை புதினம் - மதிப்புரை 



தவ்வை - அகிலா

மதிப்புரை : T N ரஞ்சித் குமார்  

"பெண்கள்தான் எத்தனை எத்தனை விதமாய்..! அவர்களுக்குள் எத்தனை ஆயிரம் ரகசியங்கள்..!  ஊரின் பெயர், நாட்டின் பெயர், இனத்தின் பெயர், சாதியின் பெயர், மதத்தின் பெயர் எல்லாம் மாறியிருக்கலாம். ஆனால், பெண்கள் ஒன்றுதான்! " (பக்கம் 206)


வாசகனுக்கு புனைவு அளிக்கும் தனிச்சலுகை, எத்தனை காலம் ஆனாலும் கதாபாத்திரங்களால் ஒருபோதும் பரஸ்பரம் அறிந்து கொள்ளும் வாய்ப்புகளற்ற ரகசியங்களை மனதோடு வைத்துப் பேணச் சொல்லி நம் மீது படைப்பு வைக்கும் நம்பிக்கை. இப்படியான சுதந்திரம் சமயங்களில் எந்த அளவுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறதோ சில சமயங்களில் அதுவே ஒருபோதும் நம்மால் இறக்கி வைக்கவோ ஆற்றுப்படுத்தவோ முடியாத பெரும் சுமை ஒன்றை சுமக்க வேண்டிய கட்டாயத்தை விதித்து விடுகிறது. நீர்வழிப் படூஉம் நாவலின் இறுதி வரி தரும் அதிர்ச்சி ஒரு உதாரணம்.


அதேபோல கதாபாத்திரங்களால் மட்டுமே புரிந்து கொள்ளும் படியான உளவியல் சூட்சுமங்கள் கதைகளில் தென்படும் போது வாசகனின் சிந்தனையில் உருவாகும் கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் கிடைக்காமல் போவதும் உண்டு. சமீபத்தில் படித்த எஸ்.ரா வின் பதினாறு டயரிகள் சிறுகதையில் இதற்கான உதாரணம் அடங்கியிருக்கிறது. 


இந்த இரண்டு நிலைகளிலும் வாசகன் அடையும் பலன் என்னவாக இருக்கும் என்று பார்க்கும் போது மிக முக்கியமாகப் படுவது அக்கதாபாத்திரங்களோடு மானசீகமாக உரையாட இவை உருவாக்கும் இணைப்புகள் நீடித்த கருத்து மற்றும் உணர்வுரீதியான பரிவர்த்தனைகளுக்கு வழிகோலுகின்றன. முரண்களையே அனுபவிக்காமல் தொடரும் வாசிப்பு இப்படியான மானசீக உரையாடல்கள் உருவாகவோ அதன் மூலம் தன்னையே சுயபரிசோதனை செய்து கொள்ளவோ அடித்தளம் அமைத்துத்தருவதில்லை. 


தவ்வை நாவல் இந்த இரண்டு அம்சங்களையும் சரிவிகித அளவில் கலந்து படைக்கப்பட்டுள்ளது. மையக்கதாபாத்திரமான தவ்வை க்கு நாவலின் இறுதியில் அவளது பேரனின் மனைவியான வைசாலி வந்து சேரும் வரை அவளைப் புரிந்து கொள்ள இயல்வது கதையைப் பின்தொடரும் வாசகர்களாகிய நம்மால் மட்டுமே. இத்தனைக்கும் தவ்வை யின் அம்மா பார்வதியம்மாள், அத்தை சுமங்கலியம்மாள், மருமகள் ருக்மணி மற்றும் வீட்டில் வேலைக்கு இருக்கும் பெண்கள் என பெண்களால் சூழப்பட்டே இருப்பினும் தவ்வை யின் அயராத மனத்தவிப்பு அவர்கள் யாராலும் புரிந்து கொள்ளப்படாமலேயே போகிறது. மாமா சங்கரலிங்கம் மட்டுமே தகப்பனைப் போல அக்கறையுடன் நடந்து கொள்கிறார். ஆனால் அவரால் கூட தவ்வையின் மனப்பிறழ்வுக்கு என்ன காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியுமாலே போகிறது. 


இவான் துர்கனேவின் முமூ சிறுகதையில் வரும் ஊமையனின் குணாம்சங்களோடு- யாரோடும் சிநேகம் கொள்ளாத ஒடுங்கிய குணம், பண்ணை முதலாளிக்கு மிகுந்த விசுவாசமாக இருத்தல், கட்டுமஸ்தான உடற்கட்டு, பெண்களின் அணுக்கம் எப்படிப்பட்டதென்றே அறியாதத் தன்மை, குழந்தை மனம்-இந்நாவலில் வரும் ரங்கன் இருக்கிறான். 


தவ்வை மற்றும் ராமநாதன் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போக சமூகத்தின் வழக்கமான ஏச்சு பேச்சுக்கள் முதலில் தவ்வை மீது விழுந்தாலும் ஒரு கட்டத்தில் ராமநாதனின் உண்மையான பலவீனம் நோக்கி சந்தேகப்பார்வை திரும்புகிறது. தன் மீது விழ இருந்த வீண் குற்றச்சாட்டு தவறி விட்டாலும் அதன்பிறகு தவ்வை மீட்க முடியாத மனப்பிறழ்வுக்குள் சிக்கி அலைக்கழிய நேர்கிறது. 


அம்மாவே ஆனாலும் திருமணத்திற்குப் பிறகு ஆறுதலை நாடுவது தான் இழிவாகப் பார்க்கப்படுவதற்குக் காரணமாக அமைந்து விடுமோ என்ற நடுக்கத்தை தளர்விக்கும் ஒரே ஆறுதலாக தவ்வைக்கு, காவல் தெய்வமான செல்லியம்மன் மட்டுமே இருக்கிறாள். 


முன்னொரு காலம், பின்னொரு காலம் என்று தவ்வை யின் திருமணமான காலமும், அறுபது வயதிற்கு மேல் ஆகி தன்னந்தனியாக வசித்து வரும் முதிய வயதுக் காலமும் சீராக அத்யாயங்கள் பிரித்து அடுக்கப்பட்டிருக்கின்றன. திருநெல்வேலி வட்டார வழக்கை அச்சு பிசகாமல் மொழியில் கொண்டு வந்துள்ளதோடு அத்யாயங்களின் வரிசை வடிவமைப்பும் நாவலின் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய பலமாகப் படுகிறது. கதையில் தனிப்பட்ட முறையில் எனக்குக் குறையாகப் பட்டது ராமநாதனால் தவ்வை அனுபவிக்க நேரும் வன்கொடுமைகளுக்குத் தக்க தீர்வு அவனுக்கு கிடைக்காமல் விரைவிலேயே தடம் தெரியாமல் அழிந்து போகிறான். தவ்வை யின் பரிதாபமான நிலைக்குக் காரணமான அவனது நடவடிக்கைகள் மீதான ஆற்றாமைகள் கூட அவனது விரைவான மறைதலோடு சேர்ந்து மங்கிப் போவது போல் பிரமை ஏற்படுகிறது. 


கதை முழுவதும் தவ்வை ஐ மையமாகக் கொண்டே நகர்கிறது. பண்ணை வீட்டின் நான்கு தலைமுறைகளை கதையில் கொண்டு வந்திருப்பதால் கதாமாந்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது. அதேசமயம் ஒவ்வொரு கதாபாத்திர வார்ப்பும் துல்லியமாக ஒருவரை இன்னொருவரிடமிருந்து பிரித்து அறியும்படி ஒவ்வொருவரையும் அவர்களது வாழ்க்கைச்சூழலை பிரதிபலிக்கும் குணங்களோடு மிக நுட்பமாகவும் தேர்ச்சியுடனும் படைத்துள்ளார் அகிலா. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் ரங்கன் கதாபாத்திரம் கதையில் வாய்விட்டுப் பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் ஒன்றிரண்டு மட்டுமே. ஆனால் தவ்வை யின் பதட்டம் நிரம்பிய கணங்கள் முழுவதிலும் ரங்கனின் உயிர்த்துடிப்பு வேகமாக அடித்துக் கொள்வதை அவனது இன்மைத் தருணங்களிலும் நம்மால் உணர முடிகிறது. 


காலத்தில் முன்னும் பின்னும் நினைவலைகளாகச் சீராகச் செல்லும் நாவல் தவ்வை யின் பேரனான விசாகனின் மனைவி வைசாலி வந்ததும் வேறோரு உச்சமான தளத்தை எட்டுகிறது. தவ்வை ஐ மானசீகமாகப் பின்தொடரும் நம்மின் பாரத்தை ஓரளவுக்கேனும் இறுதியில் இறக்கி வைப்பது வைசாலி தான். கதையின் இறுதிப் பகுதியில் தவ்வை க்கும் வைசாலிக்கும் இடையே நடைபெறும் மறைமுகமும் வெளிப்படையானதுமான உரையாடல்கள் அதிலிருந்து இருவருக்குமிடையே மலரத் துவங்கும் உணர்வுப்பூர்வமான ரகசியமான அந்நியோன்யம் மிகச் சிறப்பாக அகிலா அவர்களால் கைகூடி வந்திருக்கிறது.


இவ்வருடம் வாசித்த புனைவுகளில் தவ்வை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இமையம் அவர்களின் எங் கதெ வாசித்து முடித்து இரண்டு நாட்களாக நாவலின் நினைவுகளிலிருந்து மீள முடியாமல் இருந்தேன். தவ்வை நாவலும் அதே பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. அகிலா அவர்களின் பிற படைப்புகளையும் தேட துவங்கி விட்டேன்.


Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந