Skip to main content

பெண்குயின் - ஒரு பார்வை

'பெண்குயின்'




பெண்கள் சம்பந்தப்பட்ட  திரைக்கதைகளைத் தொடர்ந்து திரையில் பார்த்து வருகிறோம். பெண்கல்வி, பெண் குழந்தைகள், பாலியல் வன்முறை, பெண் முன்னேற்றம் என்று எத்தனையோ பார்த்துவிட்டோம். அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் பெண் சார்ந்த நிலைபாடுகள் திரைக்கதைகளிலும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. 

தன்னை பாலியல் வன்முறை செய்த ஆணையே தேடிப்பிடித்து திருமணம் செய்வதாக, அதுவே, பெண்ணுக்கான நியதி, அவளின் கற்பின் உண்மை என்றெல்லாம் திரைக்கதைகள், உண்மைவிளம்பிகளாக தங்களை பாவித்துக்கொண்டு படங்கள் வெளியிட்டன. அடுத்தடுத்த காலங்களில் தன்னைக் கெடுத்தவனை பெண் பழிவாங்குவதாக கதைகள் வெளிவந்தன. இவை சமூகத்தில் வாழும் பெண்களைப் பிரதிபலித்ததாகச் சொல்லப்பட்டது. இருக்கலாம். அல்லது திரைக்கதைகள் பெண் சமூகத்தைக் கட்டமைக்க முயற்சித்திருக்கலாம். 

பெண் குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்முறை, தகப்பனாகப்பட்டவன் கடத்தப்பட்ட பெண் குழந்தைகளைத் தேடிச்சென்று கண்டுபிடித்தல் என்று ஏகப்பட்ட கதைகள் வெளிவந்தன கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில். அதே வரிசையில் வந்த கதைதான் இதுவும் என்று கடந்துப் போய்விட முடியவில்லை. 

இக்கதையில் கடத்தப்படுவது ஆண் குழந்தை, தகப்பன் தேடிக் கண்டுபிடிக்காமல் தாயே தேடிக்கண்டுபிடிக்கிறாள் என்றெல்லாம் ஆறு வித்தியாசங்களாக அடுக்கிக் கொண்டே போகலாம்தான். ஆனால், அதுவல்ல இக்கதையின் மையம். இதன் கருப்பொருள் படமெங்கும் தேடினாலும் அத்தனை எளிதில் கிடைக்காததாய் அதை இயக்கிய இயக்குனரே தேடிக்கொண்டிருப்பதாக நம்மை நம்பவைக்கப்படுகிறது. 






ஆறு வருடங்களுக்கு முன் காணாமல் போன ஆண்குழந்தையை அந்த தாய் தேடிக்கொண்டேயிருக்கிறாள். இதற்கிடையில் அவளின் முதல் கணவன் பிரிந்து, இரண்டாவது கணவனின் குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கிறாள். எட்டு மாதம்.. அந்த சமயத்தில் பையன் கிடைக்கப் பெறுகிறான். பேசாமல் இருக்கிறான். அவனுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டரானவர், உடலுறுப்புகளை விற்பனை செய்ய குழந்தைகளைக் கொலை செய்பவர். அதையும் அவளே ஹிட்ச்காக் வழியில் சென்று கண்டுபிடிக்கிறாள்.

இந்த பையனும் அவரிடம்தான் இருந்தான் என்று செல்லும் கதையில் டாக்டர் கைது செய்யப்பட்டு, அவர் ஒரு Game என்று அந்த பெண்ணுடன் பேச ஆரம்பிக்க... இப்படி சொதப்பலாய் நீளும் கதையில், அவளின் தோழியே தான் கடத்தலுக்குக் காரணம் என்று தெரிய வர, எட்டு மாத கர்ப்பணி பெண்ணுக்கு ஏற்படாத ஆயாசம் பார்க்கும் நமக்கு ஏற்படுகிறது. 







இப்படம் ஒரு விஷயத்தை சரியாய் கையாண்டிருக்கிறது என்றால், அது இன்றைய பெண் சமூக சூழல்தான். பெண் சுதந்திரம், மண விலகல், இரண்டாம் திருமணம் என்று சிலவற்றை இலகுவாகத் தொட்டுச் சென்றிருக்கிறது. இதெல்லாம் இன்றைய சமூகத்தில் சகஜம் என்பது போன்ற கட்டமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 


கதை மலைப்பிரதேசம் ஒன்றில் எடுக்கப்பட்டிருக்கிறது. அழகான மலைகள், பள்ளத்தாக்குகள், திகில் படுத்தும் காட்சிகள் என்று கேமரா சொல்லும் கதையை நாம் ரசிக்கலாம். 

ஏகப்பட்ட குறைகள், திரைக்கதையில் கிழிசல்கள் என்று இருப்பதை நாம் கடந்து வேறு முக்கிய பார்வைகளுக்குள் செல்வோம். 







முக்கிய பார்வைகள் இரண்டு : 


எட்டு மாத கர்ப்பிணிப்பெண், இத்தனை தூரம் ஒரு கொலைகாரனைத் தேடி இருட்டில், மலையில், காட்டில் அலைவது சற்று ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருக்கிறது. அதை அந்த கொலைகார டாக்டர் அவளிடம் கேட்கும்போது, 'நான் கர்ப்பிணிதான், மூளை செத்தவள் அல்ல..' என்று அவள் சொல்லும் வசனம் பெண்ணாய் கேட்பதற்கு, ஆஹா என்று இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை, மனநிலை இரண்டும் அதையெல்லாம் தாங்கும் வலு பெற்றதாய் இருக்காது. வயிற்றில் இருக்கும் குழந்தையைவிடவும் ஆறு வருடங்களுக்கு முன் காணாமல் போன குழந்தை முக்கியமாகிப் போகும் சந்தர்ப்பங்கள் அவளை ஒரு நல்ல தாயாய் உயர்த்தினாலும், அதை ஏற்றுக்கொள்ள படம் பார்க்கும் ஒருவனின்/ ஒருத்தியின் மனதை, அவளின் மேடிட்ட வயிறு சலனப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதைதான் ஒரு இயக்குனராய் ஈஸ்வர் கார்த்திக் விரும்பினார் என்றால், அதில் அவர் வெற்றி கண்டிருக்கிறார் எனலாம். 


மனிதனின் மனம் என்பது ஒரு குற்ற உணர்ச்சியுடனே ஒரு நாளின் சிலநேரங்களையாவது கழிக்கும் தன்மை உடையது. பழைய நினைவுகளினாலோ, ஆபத்தின் நேரடி அனுபவத்தினாலோ இம்மாதிரியான சஞ்சலங்கள் இருந்துக்கொண்டே இருக்கும். அதை இயக்குனர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். மனிதன் அசூயைப்படும், அவஸ்தையாய் சிந்திக்கும் விஷயங்களை பார்க்க வைத்து, அவனின் உளவியலை உற்று நோக்குதல், மனித சமூகத்தில் அந்த வலியின் போக்கைக் கண்டறிதல் என்பது ஒருவித குரூரமான விளையாட்டாய் எடுத்துக்கொள்ளலாம். அதை இப்படத்தில் நிகழ்த்தியிருக்கிறார் என்றும் கொள்ளலாம். 


அல்லது, கர்ப்பிணியாய் இருக்கும் பெண்ணின் தீவிர உளவியல் பிரச்சனையாக, இயக்குனர் இதை கொண்டு சென்றிருக்கலாம். 

'அந்த ஏரியின் பக்கம் போகாதே' என்னும் டாக்டரின் எச்சரிக்கை, அவளை அங்கே போகச் சொல்கிறது என்பது கர்ப்பமாய் இருக்கும் பெண்ணின் மனநிலையின் படிமங்களைக் குறித்து, நம்மை யோசிக்கச்சொல்கிறது. தன் மகனை இத்தனை வருடங்களாக மறைத்து வைத்திருந்தவனிடமிருந்து காரணங்களை அறிய விழைகிறாள். அந்த எண்ணத்தைத் தீவிரபடுத்துகிறாள். இது வயிற்றில் வளரும் மற்றொரு சிசுவுக்கான ஆபத்து என்பதைப் புரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு என்ன பெண் இவள் என்ற சாதாரண கேள்வியுடன் கடந்துச் செல்லமுடியாது. இது அந்த நேரத்து கர்ப்பமாய் இருக்கும் அப்பெண்ணின் தீவிரதன்மை, அதீத அன்பு எதன் மீது சார்ந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். 

இக்கதை அமைப்பை, இப்படி ஒரு பொம்பளை இருப்பாளா, இவள் மட்டும்தான் கண்டுபிடிக்க அலையனுமா, போலிஸ் இல்லையா, வீட்டுக்காரன் இல்லையா போன்ற சாதாரண காரணங்களுக்காக, இப்படம் எடுக்கப்படவில்லை என்பதை மேற்சொன்ன காரணங்களைக் கொண்டு யோசித்து பார்த்தால் புரியக்கூடும். 
கார்த்திக் சுப்புராஜ் படம் என்பது ஒரு கூடுதல் பார்வையாக இருக்கக்கூடும். 

ஆண்-பெண் சமன்பாடு :


இக்கதையில், பெண்ணைத் தூக்கிப்பிடித்திருப்பதாக சொல்ல ஏதுமில்லை. ஒவ்வொரு முறை அவள் பரிதவித்து விடையறியாமல் நிற்கும்போது, அவளுக்கு யோசனை சொல்வதாகவும் கதையை முன்னெடுத்து செல்ல உதவுவதாகவும் இருப்பதாய் காட்சி படுத்தப்பட்டிருப்பது ஆணை கொண்டுதான் என்பதை நாம் கவனிக்கலாம். 


அவளின் பையன் கிடைத்ததும், அவனின் செய்கைகளுக்கு, அவளின் முதல் கணவன்தான் யுக்தியை வெளிபடுத்துகிறான். 'ஒருவேளை இவனைக் கடத்தியவன் இவனை என்ன சொல்லி அனுப்பி வைத்திருப்பானோ..', மகன் மிரட்டலுக்கு அடிபணிவதாக சொல்வது.. இப்படி.. 


அடுத்ததாய், கடத்தியது ஒரு பெண் என்பதை அவளின் இரண்டாவது கணவன்தான் சரியாய் வழிகாட்டுகிறான். கொலைகார டாக்டர் கூட, அவளின் Critical sense யைப் பயன்படுத்தச் சொல்லி Game விளையாடுகிறார்.

கடைசியில் அவளின் தோழி, தான் கடத்தியதைச் சொல்லும்போது, 'ஓவர்கோட், குடை, கொலை, கடத்தல் என்றால் ஆண் என்றுதான் நினைப்பதா..' என்பது பெண்ணின் ஆளுமை இம்மாதிரியான செயல்களிலும் இருக்கக்கூடும் என்ற தாழ்மையை தான் உண்டுபண்ணுகிறது.  

இறுதியில் அம்மா என்னும் சொல்லை உணர்ச்சிகளுக்கு உரியதாய் சமர்ப்பித்திருப்பது இயக்குனர் கதை முழுவதும் கருப்பொருளைத் தேடி கடைசியில் கண்டெடுத்திருப்பதாய் சொன்னது, இதைதான். இது பெண்மை, தாய்மை, தாய்மையின் தீவிரம் என்னும் பெண்ணின் குணாதிசியங்களுடன் விளையாடும் உத்தியாகவும் எடுத்துக்கொள்ளலாம். 


இதில் ஆண் கதாபாத்திரங்கள் எல்லாமே பெரும் அறிவோடும், பெண்ணின் கதாபாத்திரம் என்பது உணர்வு சார்ந்தும் அதுவும் கர்ப்பம் என்ற கூடுதல் உணர்வுடனும் படைக்கப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகிறது. இக்கதை, பெண்ணுக்கானது என்று மேம்போக்காய் சொல்லப்படுவதை, இக்காரணங்களால் நாம் ஒதுக்கிவிடமுடியும். இருந்தும் இக்கதையின் ஏதோ ஓன்று ஈர்ப்பைக் கொடுப்பதை மறுப்பதற்கில்லை. 

'பென்குயின்'  

~ அகிலா..
எழுத்தாளர்..




    























    

Comments

  1. வணக்கம்
    மிகவும் அறிவுபூர்வமான புத்திசாலியான பறவை பற்றி அறியாத விடயங்களை சொல்லியமைக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந