Friday, 6 February 2015

பிள்ளைகளை வாழவைப்போம்..




இன்று ஒரு குடும்பத்தைச் சந்தித்தேன். அந்த பெரியவருக்கு 70 வயது இருக்கும். அவர் பிரபல கல்லூரியில் பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் மனைவியும் அவ்வாறே. அவர் மகனைப் பற்றி விசாரித்தேன். அவர் ஒரு freelancer என்று சொன்னார். திருமணமாகி பள்ளி செல்லும் வயதில் பேத்தி.

வேறு பெரிய நகரத்தில் போய் வேலை செய்ய அவர் மகனை அனுப்ப அவர் விருப்படவில்லை. ரெண்டு பென்ஷன், அப்புறம் சேமிப்பு, அவ்வப்போது மகனுக்கு கிடைக்கும் வருமானம் போதும் என்றார். தாய் தகப்பன்கிட்டே இருந்தால் போதும். பெரிதாக சம்பாதிக்க எந்த ஊருக்கும் போகத் தேவையில்லை என்றார். மெச்சுகிறேன் அவரின் சுய திருப்தியை, ஆனால் ஒரு சிறு வருத்தத்துடன்.


அவர் பேசும் போது அவர் மகனின் முகமும் மருமகளின் முகமும் இறுக்கமாய் இருந்தது. அவர் அவருடைய வாழ்க்கையை மிக அற்புதமாக பெரிய படிப்பு படித்து, டெல்லி எல்லாம் சென்று பெரிய உத்தியோகம் பார்த்து நிறைவடைந்து அமைதி நாடி அமர்ந்துவிட்டார். ஆனால், அவரின் மகனுக்கு எந்த முன்னேற்றமும் எந்த கிரியேடிவிட்டியும் இல்லாத ஒரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார். இந்த முப்பது வயதில் அவனும் சாதிக்க ஆசைப்படுவான் என்பது ஏன் இவர்களுக்கு புரியவில்லை. பணம் சம்பாதிக்க தேவையில்லாவிடினும் தனது மனதுக்கு பிடித்த வேலையை, புதிய முயற்சிகளைச் செய்யவிடாமல் அவனை முடக்குவது எந்த வகையில் நியாயம்?.

அருகில் இருந்தால் மட்டுமே பாசம் என்றும், தள்ளிப் போனால் மறந்துப்போயவிடுவான் என நினைப்பதும், அதற்காக அவர்களை தன் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பதும் நிறைய குடும்பங்களில் நடக்கிறது. இந்த வகையில் முதியோர் இல்லங்களை தவிர்க்கலாம் என வயதில் மூத்தவர்கள் நினைக்கிறார்கள்.

நாம் நடமாடும் வரை இது எல்லாம் ஓகே. நாம் முடியாமல் படுக்கையில் விழுந்தால், இத்தனை வருடங்களாய் சேர்ந்திருக்கும் அவர்களின் கோபங்கள் அப்போதுதான் வெளிப்படும். அவரின் இந்த தத்துவத்தில் அந்த அம்மாவிற்கு உடன்பாடில்லை என்பது அவர்களின் பேச்சில் இருந்து புரிந்தது. ஆணின் சில வறட்டு சித்தாந்தங்களால், அவரை எதிர்த்து பேசமுடியாத அவரின் மனைவியும் வெறுப்புக்கு உள்ளாகிறார் என்பதுதான் உண்மை.

கொஞ்சம் நம் குழந்தைகளையும் வாழ வைத்துப் பார்ப்போமே. அதில் கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் இல்லை என உணருவோம். அப்போதுதான் அவர்களும் நம்மை அன்போடு பிற்காலத்தில் அணுகுவார்கள்.

கட்டாயத்தால் அன்பு வளராது. அன்பால் மட்டுமே அன்பு வளரும். புரிந்து நடப்போம்.




12 comments:

  1. நிதர்சன உண்மை . பிள்ளைகளின் ஆர்வத்தையும் அறிந்து நடக்கவேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமை ...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்..அவர்களின் சந்தோஷத்தை நாம் பறிக்கக்கூடாது

      Delete
  2. உண்மை தான் .ஆனால் அந்த பெரியவர் செய்தது தவறு என்று சொல்வதற்கில்லை

    ReplyDelete
    Replies
    1. சூழ்நிலை கருதி அவர் எடுக்கும் முடிவு அவருக்கு சரியாக இருக்கும், ஆனால் அவரின் மகனுக்கு ?

      Delete
  3. உண்மைதான்! பிள்ளைகள் மனதையும் பெற்றோர்கள் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமே!

    ReplyDelete
  4. சரியாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete
  5. ''ஆணின் சில வறட்டு சித்தாந்தங்களால், அவரை எதிர்த்து பேசமுடியாத அவரின் மனைவி'' இதுதானே தமிழ் ஊடகங்களின் மையப் புள்ளி? இதை மாற்ற வேண்டும். எழுத்தாளர்கள் மட்டும் நினைத்தால் முடியாது என்பதே உண்மை. நல்ல பதிவு நன்றி தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சென்டிமெண்ட் என்கிற பெயரில் ஆண்களால் செய்ய முடியாததை பெண்கள் பெயரில் நிறைவேற்றிக் கொள்கிறது இந்த சமூகம். நன்றி உங்களுக்கு

      Delete
  6. இரு தரப்பிலுமே புரிதல்கள், அனுசரித்தல்கள் தேவை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு தரப்பின் கைதான் ஓங்கி இருக்கிறது நம் நாட்டில்.

    ReplyDelete
    Replies
    1. நிஜமே...மகனோ தந்தையோ ஒருவரையொருவர் புரிந்து நடந்தால் எல்லாமே சரியாகிவிடும்.

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....