Skip to main content

காத்து

சூரியக்கதிர் இதழில் வெளிவந்த என் சிறுகதை 





புதன் கிழமை வந்துவிட்டாலே அப்புவுக்கு ஞாயிற்றுகிழமையின் வாசம் மனதுக்குள் எட்டிப் பார்த்துவிடும். நாலு நாளாய் எண்ணிகிட்டு இருந்தான். அன்று விடிந்ததும் அம்மாவின் கல்லு இட்லியை சமத்தாக சாப்பிட்டான். சட்டையை மாட்டினான். அம்மா இவனை ஒரப்பார்வையில் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

‘என்ன துரை எங்கே கிளம்பிடீங்க...’ என்றாள்.
மலங்க விழித்தான் அப்பு. புரிந்து போனது அவளுக்கு.

‘போ....அந்த கிழவிகிட்டே வாரம் ஒருநா திட்டு வாங்காட்டி உனக்கு இன்னைக்கு பொழுது கழியாது. கண்ணு தெரியாதவ. யாருமில்லாதவ. துணைக்கு நாமதானே பக்கத்துல இருக்கோம். நல்லது கெட்டதுக்கு நான்தானே ஓடணும். அதுவும் கொள்ளுபேரன்னு நீ ஒருத்தந்தானே இருக்கே...அந்த நெனப்பு கிழவிக்கு இருந்தாதானே...போன மாசம்தானே உன்னை முருங்கை குச்சியை வச்சி அடிச்சா. வலி விட்டுபோனா இப்படிதான் போவே...போ..’ என்று ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சின்ன பாட்டிதான் அந்த கிழவி. ஆனாலும் பாசமற்றவள் என்பது இவளின் நெனப்பு.

அப்பு ரோட்டைத் தொட்டான். படகுகார் ஒன்று சர்ரென்று அவனைத் தாண்டியது. புழுதி முகத்தில் அறைந்தபோது லேசாக சிரித்தான். ஒருநா அந்த வண்டிக்குள்ளே உட்கார்ந்து சீனி நெல்லிக்கா சாப்பிட்டுகிட்டே போணும்னு நினைத்தான்.

தெரு திரும்பும் முனையில் கொஞ்சம் பெரிதாய் அந்த காரை வீடு உட்கார்ந்திருந்தது. வேலியிட்டு படலிடப்பட்டு இருந்தது. அதை பிடித்துக் கொண்டு நின்றான். உள்ளே ஐந்து நெல்லிக்காய் மரங்கள் நிமிர்ந்து நின்றன. ஒன்று மட்டுமே அர நெல்லிக்காய். மற்றதெல்லாம் சீனி நெல்லிக்காய்.

அப்புவுக்கு அர நெல்லிக்காய் பிடிப்பதில்லை. சாப்பிடும் போது புளிக்கும். தண்ணிக் குடிச்சா இனிக்கும். அவனுக்கு சாப்பிடும்போதே இனிக்கும் சீனி நெல்லிக்காய்தான் பிடிக்கும். குட்டி பூசணி மாதிரி பாகம் பிரித்து இளம் பச்சை நிறத்தில் இருக்கும். நினைத்தவுடன் தின்னும் ஆசை வந்தது.


மெதுவாய் படலைத் திறந்தான். வராந்தாவில் ஆச்சி உட்கார்ந்திருந்தாள் தலைவிரித்து போட்டு சினுக்கோலி கொண்டு சிக்கெடுத்துக் கொண்டிருந்தாள். வெள்ளை நிற சேலையில் இன்னும் வெள்ளையாய் இருந்தாள். அப்புவுக்கு அவளை ரொம்ப பிடிக்கும். அடித்தாலும் சில நேரங்களில் உடம்பு முழுவதும் தன் கைக்கொண்டு தடவிப்பார்த்து, ‘கணேசன் மவன் இம்புட்டு வளந்துட்டியா...’என்பாள்..

சத்தமில்லாமல் திறந்தும், படலின் சிறு அசைவு அவள் காதுக்கு கேட்டுவிட்டது.
‘லலிதா...’ என்றாள்.
‘என்ன ஆச்சி....’ என்றபடி பின்வாசல் பக்கமிருந்து ஈரமான கைகளைத் துடைத்தபடி ஓடிவந்தாள் வேலைக்கு இருக்கும் லலிதாக்கா. இவனைக் கண்டதும் கண் விரிய சிரித்தாள்.
‘யாரோ படல திறந்தாங்க...பாரு..’ என்றாள். லலிதா அதற்கு, ‘யாருமில்ல ஆச்சி...காத்து...’ என்று சொல்லிவிட்டு இவனை இழுத்துக்கொண்டு போய் துணி துவைக்கும் கல்லில் தூக்கி உட்கார்த்தினாள்.

‘பரீட்சை முடிஞ்சிதா..’
‘ஆமாக்கா..’

நீண்ட சடையின் முடிவில் அழகாய் ரோஸ் கலர் ரிப்பன் கட்டியிருந்தாள்.
‘அக்கா...எனக்கு இது வேணும்...’ என்றான்.
‘ரிப்பனா...பொம்பள பிள்ளையாடா நீ...’ என்று சிரித்தாள்.
சிரிக்கும் போது அவளின் பெரிய பல்லெல்லாம் வரிசையாய் சிரித்தது. உடனே ரிப்பன் அவிழ்த்துக் கொடுத்தாள் அவனிடம். வாங்கித் தடவிப் பார்த்தான். வழுவழுப்பாய் இருந்தது. அம்மா தலையில் ரிப்பன் பார்த்ததில்லை. போனவுடன் அவளுக்கு கட்டிவிடவேண்டும் என்ற நெனப்பு வந்தது.

‘நெல்லிக்காவுக்கு தானே வந்தே..பறிச்சுத் தரேன்...’ என்றவள், சுவரில் சாற்றியிருந்த தொரட்டி கம்பை எடுத்து, சிறு கொப்பு ஒன்றை உலுக்கினாள். நெல்லிக்காய் கொட்டியது. அப்பு ஒன்றிரெண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். பிறகு, எல்லாவற்றையும் வேகம் வேகமாய் எடுத்து டிரவுசர் பாக்கெட்டுக்குள் போட்டான். ‘கூடை கூடையா மார்க்கெட்டுக்கு போகுது. ஆனா உனக்கு கொடுக்க உங்க ஆச்சிக்கு மனசில்ல..’ என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.


‘நான் வரேன்க்கா...’ கிளம்பினான் அப்பு.
‘இரு அப்பு...நா வாரேன், படலைத் திறக்க...இல்லேன்னா ஆச்சி கண்டுபிடிச்சிரும்.’

கிழவி இன்னமும் வராந்தாவிலேயே அமர்ந்திருந்தாள். படலின் அருகே வரும்போது, டிரவுசரின் ஒருபக்கப் பை கிழிந்து நெல்லிக்காய்கள் சிமெண்ட் தரை எங்கும் தடதடத்து சிதறின. இருவரும் மூச்சு விட மறந்தார்கள். ஆச்சி இருமினாள். அப்புவுக்கு அன்று மாதிரி அடித்துவிடுவாளோ என்று பயமாக இருந்தது.

கிழவி மேல் ஒரு கண்ணும் நெல்லிக்காய்களின் மேல் ஒரு கண்ணுமாக அவசரமாக விழுந்தவைகளைப் பொறுக்கி எடுத்தான். லலிதா படல் திறக்க, பறந்து ஓடிப்போனான். இவள் படபடக்கும் நெஞ்சுடன் மெதுவாக படலைச் சாத்தினாள்.

‘என்ன சத்தம் கேட்டது?..மறுபடியும் காத்தா?...அதுவும் டிரவுசர் போட்ட காத்தா....’ எனச் சொல்லி சத்தம் போட்டு சிரித்தாள் கிழவி. லலிதாவுக்கு பதில் வரவில்லை. 
        


Comments

  1. வாழ்த்துக்கள்
    முழுவதும் படிக்கவேண்டுமெறால் என்ன செய்வது :)

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கையில் வந்ததை படமாய் (image) கொடுத்திருக்கிறேன். அதை டவுன்லோட் செய்து அதில் இருப்பதிலும் படிக்கலாம்.

      மூன்று படத்தின் கீழேயும் கதையை முழுதாய்க் கொடுத்திருக்கிறேன். அங்கும் படிக்கலாம்.

      Delete
  2. தந்தையின் கோபம் போல் சில வகை பாசம் புரியப்படாமலே வாழ்க்கை கழிந்து விடுகிறது!

    ReplyDelete
    Replies
    1. புரிப்படாத பாசம் பெரியவர்களுக்கு இடையில்தான் அதிகமாய் இருக்கிறது. காரணம் ஈகோவும் மௌனமும்

      Delete
  3. நல்ல நேசம்....

    ReplyDelete
  4. ஆணவம் உட்பட அனைத்தும் ஒரு நாள் அடங்கும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. வணக்கம்
    இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந