Skip to main content

நாமக்கல் கோட்டை - ஒரு சுற்றுப் பார்வை...



கடந்த வாரத்தில் ஒரு நாள் நண்பரின் இல்லத் திருமணத்திற்காக நாமக்கல் செல்லவேண்டியதாயிற்று. ஊருக்குள் நுழையும் போதே அந்த மலையும் அதன் மேல் கம்பீரமாய் இருந்த கோட்டையும் கண்ணில்பட்டது. எப்படியும் அதை பார்த்து வருவதென முடிவு செய்தேன். 

அந்த கோட்டைக்கு செல்லும் வழியை விசாரிக்கப் போனால், 'அங்கே ஒண்ணும் இல்லைங்க. சும்மா ஒரு இடிந்த சுவருதான் இருக்கு. ஆஞ்சநேயர் கோவில் பக்கத்தில்தான். அதுக்கு போங்க...' என்று பொதுவாய் அநேகம் பேர் கூறினார்கள். நமக்குதான் அந்த வாசமே இல்லையே. வரலாற்றின் மீது மட்டும் எப்போதும் எனக்கு ஒரு பிரியமும் அதன் வழிதானே நாமும் வந்தோம் என்கிற நினைவும் உண்டு.




அந்த மலை கோட்டைக்கு செல்ல படிகளும் அதையொட்டி பிடிப்புக் கம்பியும் போடப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்த வசதியும் உள்ளது. 

வரலாறு :

அனுமான் இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது கமலாலயம் குளத்தினருகில் இறக்கிவைத்த விஷ்ணுவின் உருவமிட்ட சாலிகிராமம் என்னும் கல், அனுமான் ஸ்தானம் முடித்து வரும்போது நாமகிரி மலையாய் உருவெடுத்ததாக வரலாறு.

அதன் பிறகு இரணிய வதம் முடித்த நரசிம்மசுவாமியின் உக்கிரத்தை தணிக்க இங்கு தவம் மேற்கொண்டிருந்த மகாலக்ஷ்மியிடம் அனுமான் அவரை கொண்டுவிட்டதாக வரலாறு. அதனால் இங்கு நரசிம்மமூர்த்தியின் ஆலயம் உள்ளது. மலையின் அடிவாரத்தில் அவரை நோக்கியபடி இருக்கும் அனுமாரின் சிலையும் உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில்தான் கமலாலயம் தீர்த்தம் உள்ளது. நாமக்கல்லில் இருக்கும் எட்டு புனித தீர்த்தங்களில் இதுதான் பெரியதும் மகத்துவமானதும் ஆகும்.



17 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் பாளையக்காரர் ராமச்சந்திர நாயக்கர் இந்த மலையின் மீது கோட்டை ஒன்றை கட்டினார். இதன் உள்தான் நரசிம்மமூர்த்தி கோவில் உள்ளது. இந்தக் கோட்டையை 1768 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள். அதன் பின் அதை ஹைதர் அலி கைப்பற்றி அந்த கோவிலை உடைத்ததாகவும் உள்ளே ஒரு மசூதி கட்டியதாகவும் கூறப்படுகிறது. 

அமைப்பு :

246 அடி உயரத்தில் உள்ளது நாமக்கல்லின் மலை கோட்டை. இதன் சுற்றளவு ஒன்றரை ஏக்கர். இடிபாடுகளை சுமந்து நிற்கிறது கோட்டை. இதுவே கட்டப்பட்ட காலத்திலிருந்து அதை கைப்பற்ற நடந்த போர்களையும் போராட்டங்களையும் காட்டுகிறது. 

வாயிற்கதவை ஒட்டி ஒரு யாழியின் உருவம் வெளிசுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது.






பெரிய கோட்டை கொத்தளமும் அதன் உள் சுற்று பிரகாரமும் இருக்கிறது. 



உள்ளே ஒரு பாசி படிந்த குளம் உள்ளது. சிறுவர்கள் அதற்குள் குதித்து முத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். 



 சிறு தலைதட்டும் வாயில் கொண்ட பெரிய கற்சுவற்றையுடைய ஆயுத கிடங்கும் இருக்கிறது.




உணவு தயாரிக்கவும் அதை ஒட்டி புழங்கும் இடமும் தனியே கட்டப்பட்டுள்ளதாக உள்ளுர்வாசி ஒருவர் சொன்னார். 



கர்ப்பகிரகத்தில் சிலையற்று ஒரு கோவிலும் உள்ளே இருக்கிறது.



நாமக்கல் ஊர் முழுவதையும் மலை உச்சி பிரகடனப்படுத்துகிறது. ஊரும் வண்ண வண்ண வீடுகளைச் சுமந்து அழகாய் காட்சியளிக்கிறது. 







படிகளை ஏறுவதற்கு சிறு பெண்கள் கூட சற்று சிரமப்படுகிறார்கள். இறங்குவது இன்னும் சிரமம். படிகளுக்கு இடையே உயரம் குறைந்து தட்டையாகவும் வழுக்கலாகவும் இருக்கிறது. பக்கவாட்டில் இருக்கும் கம்பி பிடித்தே ஏற முடிகிறது. 








கோட்டையின் இன்றைய நிலை :

இங்கே நான் எழுதுவதை குறையென யாரும் கொள்ளவேண்டாம். வெளிநாடுகளை ஆஹா ஓஹோ எனப் புகழ்பவர்கள் சற்று நம் நாட்டில் உள்ள அடித்தட்ட மனநிலை கொண்ட மனிதர்களை மாற்ற முயற்சிக்கலாம்.

இந்த கோட்டை ஒரே பாறையின் வடிவம். அந்த கற்சுவற்றில் கூட தன் இனிஷியல்களை எதைக் கொண்டு பொரித்தார்கள் என்பது நம் மக்களுக்கே வெளிச்சம். எல்லோருமே சிற்பிகளின் வம்சத்தில் உதித்தவர்களாக இருப்பார்கள் போலும். காதலின் வரைபடங்களும் சில நாட்கள் வந்து போகும் காதலின் சுவடுகளையும் பதித்திருக்கிறார்கள். 

அடுத்ததாக கீழே கோட்டைக்கு வழிக் கேட்டபோது அங்கே ஒண்ணும் இல்லை என்று ஏன் சொன்னார்கள் என்பது புரியவில்லை. வரலாற்றை தவிர அங்கே நிறைய இருக்கிறது பார்க்க. கோட்டையைப் பூங்காவாக்கி ஜோடி ஜோடியாக சம்சாரம் இலவசமாக நடத்திக் கொண்டிருந்தார்கள். கோட்டையை கட்டிய நாயக்கர் பார்த்திருந்தால் அங்கிருக்கும் ஆயுதங்களை எடுத்தே இவர்களை ஒழித்திருப்பார். 







அங்கிருக்கும் குளம் முழுவதும் சுத்தமற்று பாசி பிடித்துப் போயிருந்தது.





சிகரெட் துண்டுகளும் பான் பராக் பாக்கெட்களும் கோட்டையெங்கும் இறைந்துக் கிடக்கின்றன.

இதில் நான் குறிப்பிட்டிருக்கும் வரலாறு எல்லாம் இணையதளத்தில் இருந்து எடுத்ததுதான். அந்த ஊர்வாசிகளுக்கும் சரிவர தெரியவில்லை. எங்கும் அந்த கோட்டையைப் பற்றி ஒரு சிறு குறிப்புக் கூட இல்லை. படி ஏறும் இடத்தில் இந்த இடம் இந்திய தொன்பொருள் ஆராய்ச்சி துறைக்கு சொந்தமானது என்பது மட்டுமே இருக்கிறது. இங்கு காதலிப்பவர்கள், பொழுதுபோகாதவர்கள் மட்டும் வரவும் என ஒரு போர்டு வேண்டுமானால் வைக்கலாம். நம் வரலாறை நாம்தான் கொடி உயர்த்தி சொல்லவேண்டும்.

இனி நாமக்கல் செல்பவர்கள் கண்டிப்பாக இந்த கோட்டையை காண தவறமாட்டீர்கள் என நம்புகிறேன். வரலாறும் வேண்டியதுதான். 

ராஜபாட்டைகள் தேவைப்படுகிறது, குதிரைகள் இவ்வழியாகதான் சென்றன என்று கைக்காட்ட...

Comments

  1. நாங்களும் சென்று பார்த்தோம் ..

    வழி விசாரித்தால் அது சாளக்கிராம் மலை ..அதன் மீது நம் பாதங்கள் படக்கூடாது என்று தடுத்தார்கள்..

    திப்பு சுல்தான் கோட்டை மேல் இருந்த கோவிலில் இருந்த சிலைகளிச்சிதைத்து அதிலிருந்த நகைகளையும் அரிய பொக்கிஷங்களையும் கொள்ளையைடித்துச்சென்றானாம் ,..!

    தலை வெட்டப்பட்ட அனுமன் சிலை ஒன்றும் உண்டு ..!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராஜேஸ்வரி...சிலைகளின் சில உடைந்து போனவை அங்கு இன்னமும் கிடக்கிறது.
      நன்றி...

      Delete
  2. அழகான படங்கள் மூலம் எங்களையும் சுற்றிப் பார்க்க வைத்து விட்டீர்கள்... திண்டுக்கல் கோட்டை காண எப்போது வருவீர்கள்...?

    ReplyDelete
    Replies
    1. தனபாலன், விரைவில் அங்கு வருவேன்....நன்றி..

      Delete
    2. எங்கள் ஊர் கோட்டை பற்றிய புகைப்படங்களும் வரலாற்றுத்(?) தகவல்களும் பால்யகாலத்து நினைவுகளைக் கிளறச் செய்தன. மலை ஏறும் சாய்வு படிகளுக்கான கம்பி – பைப் – கைப்பிடி சுவர் சமீபத்தில்தான் நிறுவப்பெற்றது. பல வருடங்களாக சாய்வு சிறு படிகளில்தான் குரங்குத் தாவலில் சென்று பார்ப்போம். ஒருமுறை சென்றால் மறுமுறை செல்லத் தோணாது ஏனெனில் பார்க்க ஒன்றுமே இல்லை என்பதால். ஆனால் உறவுக்காரப் பையன்கள் வந்தால் கூட்டிச் சென்று காண்பிப்பதில் பெருமை உண்டு. கற்பனை வளம் இருந்தால் கற்பனைக்குதிரைகளைத் தட்டிவிட்டு ராஜபாட்டை வழியாக காற்றைக் கிழித்து பயணித்த உத்வேகம் பிறக்கும். இல்லாவிட்டால் வேற்று மண் சுவர்களையும் பாறைகளையும் மட்டும் தரிசித்த வெறுமை உணர்வு மட்டுமே மிஞ்சும். இருந்தும் வளைவு மதில் சுவர்களில் ஓட்டைகள் வழியாக துப்பாக்கிக் குழல்களை செலுத்தி படை எடுத்து வரும் எதிரிகளை சுட்டு வீழ்த்தும் காட்சி மட்டும் நிச்சயம் மிஞ்சும். வரலாற்றை பகிர்ந்ததுக்கு நன்றி.
      லட்சுமணன் மாரிமுத்து


      Delete
    3. உண்மையே...கைப்பிடி இல்லாமல் ஏறியது மிக பெரிய விஷயம்தான். கற்பனை கலக்காவிட்டாலும் வரலாறு என்றும் சுகமே...
      நன்றி பகிர்தலுக்கு...

      Delete
  3. இங்கே நான் எழுதுவதை குறையென யாரும் கொள்ளவேண்டாம்.... குறைதான். வரலாற்றுப் பாரம்பர்யங்களை பற்றிய அடிப்படை கற்று தருதல் அவசியம். வாத்தியார்களுக்கே சொல்லி தரும் நிலமை இன்றைக்கு.

    ReplyDelete
    Replies
    1. கலாகுமரன், எத்தனை வருடங்களாக பாடப்புத்தகத்தில் இருந்தாலும் அதை மனதில் லயிக்கும்படி சொல்லித் தருவது அந்த வரலாற்று ஆசிரியரின் கையில்தான் உள்ளது. கல்லூரி என்று வந்தவுடன் வரலாறை தூக்கி ஓரமாய் வைத்துவிடுகிறார்கள் மாணவர்கள்...அவை அரியவை என்னும் விழிப்புணர்வு இல்லை...

      Delete
  4. நாமக்கல் கோட்டை - ஒரு சுற்றுப் பார்வை...

    அருமையான பதிவு, அற்புதமான படங்களுடன். நமது முகநூல் நண்பர் திருமதி Ahila Puhal எழுதிய பதிவு.
    நமது நண்பர்கள் Ram Kumar, Malini Shravan படிக்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகள் திருமதி Ahila Puhal

    ReplyDelete
    Replies
    1. பகிர்தலுக்கு நன்றி ரத்னவேல் அய்யா....

      Delete
  5. வரலாறுகள் அழிந்து விடாமல் பாதுகாப்பதில் நம் பொறுப்பும் உண்டு..புதிய கோயில்களை உருவாக்குவதை விடவும் இவை போன்ற பழங்கால வரலாற்று இடங்களை பாதுகாக்க அரசோடு மக்களும் உதவலாம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் எழில்.

      Delete
  6. Great Informations ! Thanks for sharing.

    ReplyDelete
  7. I had made my comment yesterday. It is not seen. How to retrieve it?

    ReplyDelete
  8. எங்கள் ஊர் கோட்டை பற்றிய புகைப்படங்களும் வரலாற்றுத்(?) தகவல்களும் பால்யகாலத்து நினைவுகளைக் கிளறச் செய்தன. மலை ஏறும் சாய்வு படிகளுக்கான கம்பி – பைப் – கைப்பிடி சுவர் சமீபத்தில்தான் நிறுவப்பெற்றது. பல வருடங்களாக சாய்வு சிறு படிகளில்தான் குரங்குத் தாவலில் சென்று பார்ப்போம். ஒருமுறை சென்றால் மறுமுறை செல்லத் தோணாது ஏனெனில் பார்க்க ஒன்றுமே இல்லை என்பதால். ஆனால் உறவுக்காரப் பையன்கள் வந்தால் கூட்டிச் சென்று காண்பிப்பதில் பெருமை உண்டு. கற்பனை வளம் இருந்தால் கற்பனைக்குதிரைகளைத் தட்டிவிட்டு ராஜபாட்டை வழியாக காற்றைக் கிழித்து பயணித்த உத்வேகம் பிறக்கும். இல்லாவிட்டால் வேற்று மண் சுவர்களையும் பாறைகளையும் மட்டும் தரிசித்த வெறுமை உணர்வு மட்டுமே மிஞ்சும். இருந்தும் வளைவு மதில் சுவர்களில் ஓட்டைகள் வழியாக துப்பாக்கிக் குழல்களை செலுத்தி படை எடுத்து வரும் எதிரிகளை சுட்டு வீழ்த்தும் காட்சி மட்டும் நிச்சயம் மிஞ்சும். வரலாற்றை பகிர்ந்ததுக்கு நன்றி.
    லட்சுமணன் மாரிமுத்து

    ReplyDelete
    Replies
    1. உண்மையே...கைப்பிடி இல்லாமல் ஏறியது மிக பெரிய விஷயம்தான். கற்பனை கலக்காவிட்டாலும் வரலாறு என்றும் சுகமே...
      நன்றி பகிர்தலுக்கு...

      Delete
  9. I always like to read such historical informations apart from textual history. while it is amazing to read about the fort, it is sorrowful that such places are misused by miscreants. youngsters should be awakened to cherish such historical places and try to prevent from further damage. Govt also should take necessary steps. The photos were also good. thanks.

    ReplyDelete
    Replies
    1. Thanq sir....
      And you are right sir.
      பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வரலாற்று சின்னங்களை பாதுகாக்க சொல்லிக் கொடுக்கவேண்டும். இதில் அரசின் கவனம் தேவை.

      Delete
  10. மேலே சென்று காண ஆர்வமிருந்தும் , வாய்ப்பு இல்லாமல் போனதில் இருந்த வருத்தம், தங்கள் பதிவால் , இப்போது வடிந்து போனது, நன்றி !

    ReplyDelete
  11. நல்ல தொடக்கம் இதுபோல் நிறைய கோட்டைகள் தமிழ்னாட்டினுள்ளும் வெளியேயும் உள்ளன அவற்றையும் தொகுத்து அளித்தால் நாங்கள் பயன் பெறுவோம் படங்கள் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. நான் சென்று வந்தபிறகு எழுதுகிறேன். நன்றி ராஜன்.

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந