Monday, 28 January 2013

மனம் போன போக்கிலே....




கால் போன பாதையில்
மனதின் சுமைகள் குறைய   
எதிலும் லயிக்காமல்
மாலை நேரத்து நடை....
சுண்டக்காமுத்தூர் வளைவு நெருங்கும் போதுதான்
நடையின் தூரம் உறுத்தியது....

திரும்பி நடக்கும் போது
கண்ணாடி சட்டம் போடும் கடை
கண்ணில் பட்டது.....

கண்ணாடி ஓவியம் கொடுத்து நாளாகிறது
கேட்டால் தேடிக் கொண்டேயிருக்கிறான்
மறந்து வைத்த இடத்தை....

அரை மணி நேரம் கழித்து
எடுத்து வந்தான் என் ஏசுநாதரை
நான் எடுத்து செல்கிறேன் என்ற போது
சட்டம் போட்டு காலையில் தருகிறேன்
என்று வைத்து கொண்டான்...

கண்ணாடியில் ஏசுநாதர் சிலுவையில் தலை குனிந்து
முற்கள் குத்திய இடங்களில் இருந்து குருதி
நமக்காக பாவசுமையை தாங்கியதாய் வரலாறு...

வரும்வழி முழுவதும்
நாம் என்ன பாவம் செய்தோம்
என்கிற மனக்கணக்கு....     
இப்போது அவர் இல்லை
நம் பாவம் சுமக்க
நம் பாவம் நமக்குதான்
என்ற கவலை...

இருட்டி வீடு வந்தால்
வீட்டு வாசலில் தோழியர் இருவர்
சம்பிரதாயத்திற்கு சிரிக்க ஆரம்பித்து
சந்தோஷமாய் முடித்து
அவர்கள் விடைபெற்ற போது
மனம் லேசாகி இருந்தது.....

மனம் என்று ஓன்று குரங்காய்    
இரண்டு பக்கமும் உஞ்சலாடிக் கொண்டு
நம்மையும் உஞ்சலாட்டிக் கொண்டு...

காயப்படுத்தி கட்டும் போட்டுவிடும்
அதன் போக்கிலேயே நானும்....

9 comments:

  1. மனம் என்று ஓன்று குரங்காய்
    இரண்டு பக்கமும் உஞ்சலாடிக் கொண்டு
    நம்மையும் உஞ்சலாட்டிக் கொண்டு...
    மனதின் இயல்பு அதுதானே?

    ReplyDelete
  2. உங்கள் வாழ்வில் நிற்பது நடப்பது சிந்திப்பது உணர்வது எல்லாம் கவிதையாகி வந்து கொட்டிக் கொண்டே இருக்கிறது அதுவே காவியம் ஆகினாலும் ஆச்சிரியப்படுவதில்லை

    ReplyDelete
    Replies
    1. நம் அனுபவங்கள் அனைத்துமே அடுத்தவர்களுக்கும் சில நேரங்களில் பயன்படுமே...

      Delete
  3. எப்படி தோழி மூச்சு விடும் இடைவெளியை கூட எழுத்தில் வெளியிட முடிகிறது ...........அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....சரளா உங்களால் முடியாததா, தெரியாததா....

      Delete
  4. மனக்குரங்கு செய்யும் பிடிவாதம் கவிதையாயிருக்கிறது ..அருமை ..!

    ReplyDelete
  5. ஒரு கதை சொல்வர் ,ஒரு அறையில் குரங்கு நுழைந்து இருக்கிற சாதனங்களை குழப்பும் போது அதை விரட்ட நினைத்து துரத்தும் போது அது மேலும் சில பாதிப்புகளை உண்டு பண்ணிவிடும் ஆனால் அமைதியாக இருந்தால் அது அங்கேயும் இங்கேயும் ஆட்டம் போட்டாலும் கடைசியில் தனக்கு தேவையானதை எடுத்து விட்டு அமைதியாக போய்விடும் என்று ...
    அதை மனத்தினோடு ஒப்பிடும் போது மனது கலவர படும் போது அதையும் இதையும் நினைக்க நினைக்க மேலும் கவலைகள் தான் உருவாகும் ..அமைதியாக இருக்கும் போது அது என்ன செய்யும் ஒன்று துக்கத்தையோ இல்லை அதன் முடிவில் சந்தோசதையோ கொடுத்து விட்டு அமைதியாக இருக்கும் என்பர்

    அதுபோல் இந்த கவிதை பல நினைவுகள் வருத்தினாலும் ,துக்கத்தை சுமக்க அந்த சிலுவை நாயகன் கூட இல்லை என்று ஆதங்க பட்டாலும் முடிவில் அந்த மனம் துக்கத்தை மனதில் இருந்தது எடுத்து விட்டு செல்லும் போது சந்தோசங்கள் மிச்சமாய் வாழ்கையின் பரந்து விரிந்த பாதையில் நடை போட செய்கிறது ..

    இந்த கவிதை முடிவில் ஒரு moral Story போல இருந்ததால் நானும் ஒரு சிறிய கதை சொல்லிவிட்டேன் .

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....