Wednesday, 4 January 2023

தவ்வை நாவல் குறித்து எழுத்தாளர் எஸ் ரா அவர்களின் பக்கத்தில்..

தவ்வை - புதினம்


எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்
2022யில் தான் வாசித்தவற்றுள் சிறந்த புத்தகங்களைத்
தேர்ந்தெடுத்து அவரது வலைத்தளத்தில்
கொடுத்துள்ளார்.
அவற்றுள் எனது நாவலான தவ்வை
குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்வும் அன்பும் 🙏

லிங்க் 👇













Thursday, 24 November 2022

நாமெல்லாம் வெயிலுக்கு பொறந்தவங்க

 

நாமெல்லாம் வெயிலுக்கு பொறந்தவங்க

(சிறுகதை)



1


புகைந்துக் கொண்டிருக்கும் தாளிப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றினாள். கடுகு, உளுந்து போட்டு தாளித்து கருவேப்பிலையைத் தேடும்போது, அது இல்லாதது நினைவில் வந்தது அமுதவல்லிக்கு. ‘வேதா’ என்றாள் சத்தமாக. பதிலே இல்லை. அடுப்பை அணைத்துவிட்டு, இங்கேதானே படிச்சுகிட்டு இருந்தா என்ற நினைப்புடன் ஹாலுக்கு வந்தபோது, வெளிச்சமற்ற மூலையில் அமர்ந்து,வேதா கணக்குடன் சமாதானம் செய்துக்கொண்டிருந்தாள். 

‘ஏய்ய்.. நான் கூப்பிட்டது காதில் விழலயா என்ன..’ 

‘அட போக்கா.. நான் படிக்கும்போதுதான் உனக்கு ஏதாவது வீட்டில் இல்லைன்னு தோணும்..’ தலை நிமிராமல் பேசினாள். வேதா வளர்ந்து வருவது இவளுக்குள் பயத்தை உண்டுபண்ணியது. எட்டு வயசிலேயே எடுப்பாய் இருப்பதாக பட்டது.

‘சுதர்சன் கடை வரைக்கும் போய், கருவேப்பில வாங்கிட்டு வாடி..’ என்று கெஞ்சலாக சொல்ல வெடுக்கென எழுந்து சென்றாள் வேதா. அடுத்த மாசம் முதல் நாமளும் நம்ம கடையில் காய் எல்லாம் வாங்கிவச்சுட்டா தன்னை பார்த்து பல்லிளிக்கும் ராஜுவின் முன் போய் நிற்க வேண்டியிருக்காது என்று நினைத்துக்கொண்டாள்.

‘காலையில் எழுந்து குடிக்கபோன அந்த ஆளை இன்னும் காணோம். அப்படியே அந்த ஆளு எங்காவது செத்துக்கிடக்குதான்னு பாரு’ என்றவளை திரும்பி பார்த்து வலிச்சம் காட்டிவிட்டு போனாள் வேதா. குடிச்சுட்டு சுயமில்லாம தெருவுல விழுந்துகிடக்கிறவன் செத்தவன் போலதான் அமுதாவுக்கு. அவள் வரும்வரை வாசற்படியில் உட்காரலாம் என்று அமர்ந்தாள். அம்மா இறந்ததில் இருந்தே மாரிமுத்து என்னும் அவளின் தகப்பன் வெறும் ‘ஆளு’தான் அவளுக்கு. அவனை பார்த்தாலே குமட்டலாய் இருக்கும் அமுதாவுக்கு. குடியும் சீட்டாமுமாய் தள்ளாடும் அவனிடம் தான் பட்ட பாடெல்லாம் கண்முன் ஓடும். பதினாறு வயதிலேயே தன்னை, கூட சீட்டாடும் நாற்பத்திரண்டு வயசுக்காரனுக்கு கட்டிக்கொடுத்து, அவனோடு நெகமத்துக்கு வாழப்போனதும், அஞ்சாறு மாசமா அவனின் குடியிலும் அடியிலும் வதைப்பட்டு, உண்டான கருவும் கலைஞ்சதும் அவன் வேண்டாம்னு பஞ்சாயத்து பண்ணி அறுத்துவுட்டுட்டு வந்ததும் மன்னிக்கவே முடியாத விஷயம்தான் அவளுக்கு. 

அதுக்கப்புறம் இந்த கடையே சாசுவதமாய் வந்து தாய் வீட்டோடு உட்கார்ந்ததும், இந்த ஆளு ‘மூதேவி.. மூதேவி.. செலவு வச்சுட்டு இப்போ இங்கே வந்து உட்கார்ந்திருக்கு பாரு.. சனியன்..’ என்று தினம் திட்டுவதும் மனதுக்குள் ஓடியது. பெண்ணுக்கென்று எங்கும் புகலிடம் இல்லை. பெத்த வீட்டை விட்டா, புகுத்த வீடுன்னு ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு என்று ஓடிகிட்டே இருக்கணும். அவளுக்குன்னு தனியா எதுவும் இல்லாததும் யாரையாவது அண்டியே வாழவேண்டியிருப்பதும் புரிந்தபோது இந்த சமூகத்தின் மீது கோபமாக வந்தது அமுதாவுக்கு. ‘சை.. என்ன நெனப்பு இது காலைலே...’ என்று அதை உதறி எழுந்தாள். 

அம்மாவுக்கு பிறகு, வீட்டின் முன்வாசலில் உள்ள தாத்தாவின் இந்த மளிகை கடை மட்டும் இல்லேன்னா சாப்பாடே இல்லங்கிற உண்மதான் அவள எப்போவும் சுடும். அதுக்காகவே தாத்தா படத்தை கடையில் மாட்டிவைத்து அதுக்கு இரண்டு ரூபாய்க்கு ஊதுவத்தி காலைலேயும் சாயங்காலத்திலேயும் கொளுத்தலேன்னா அவளுக்கு அன்னைய பொழுது இம்சைதான்.  

காலையிலே போன ஆளு சரியா பதினொரு மணிக்கு போதை தீர்ந்து, இவகிட்டே இருந்து காசு வாங்கி திருப்பியும் குடிக்கவேண்டி, இவள் வியாபாரம் பார்க்கும்போது பார்த்து, வந்து நின்னு காசு கேட்கும். கொடுக்கலைன்னா, ‘சீலையை நகத்தி கட்டி கடைக்கு வர்றவனுங்க கிட்டே காசு பண்ற சனியனே.. இழுத்து மூடிட்டு காசு குடுடி..’ என்று அங்கேயே அவளை கேவலமாக பேசும். அப்புறம் அவ அம்மாவையும் தாத்தாவையும் இழுத்து வச்சு அசிங்கமா ஆரம்பிக்கும். மரக்கடைக்கு அடுத்தாற்போல், தெருவென்றும் சொல்லமுடியாமல் சந்தென்றும் சொல்லமுடியாத வடிவில் இருக்கும் அந்த நீண்ட வீதியில் எல்லோருக்கும் இது பழக்கமானதுதான். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அந்த ஆளு பேசும்போதெல்லாம் இவ கூசிக்குறுகித்தான் போவாள். 

அசிங்கமான வசவுகளை கேட்டுக்கேட்டு அவளுக்கு புளித்து போய்விட்டது. கொஞ்ச நாளா அந்த ஆளோட கண்ணு தன் மாரு மேலேயே இருக்கிறத கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கா. கடைசி ஒரு மாசமா ராத்திரி நேரத்துல முன்கட்டில் அதுக்கு சாப்பாடும் வைத்து, அதை தாண்டி ஹாலுக்குள் வரும் கதவை தாள் போட்டுவிட்டு இவளும் வேதாவும் ஹாலில் படுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். குடித்துவிட்டு வந்து கதவை தட்டித்தட்டி சலித்து, அசிங்கமாக பேசிவிட்டு தூங்கிப் போவது அதன்பிறகு மாரிமுத்துவின் தினசரி வழக்கமானது.   

இந்த வீடும் கடையும், பக்கத்தில் இன்னும் இரண்டு வீடுகளும், தாத்தாவின் சொத்துகளாய் இருந்தன. அதன் வாடகையில் சற்று சௌரியமாக அம்மாவை வளர்த்தார். களக்காட்டு பக்கம்தான் தாத்தாவின் ஊர். அங்கு விவசாயம் சரிந்தபோது கொஞ்சம் பணத்துடன் கோயம்பத்தூருக்கு வந்து வியாபாரம் செய்ததாக அம்மா சொல்லும். ஊர் பக்கமிருந்த வந்ததாக சொன்னதால் மாரிமுத்துவை அம்மாவுக்கு கட்டிவைத்தாராம். அதன்பிறகு அம்மாவுக்கு அடியும் உதையும் இரண்டு பொம்பள பிள்ளைகளையும் தவிர வேற எதுவும் கிடைக்கவில்லை. 

இவளுக்கு பத்து வயது இருக்கும்போது, வேதா பிறந்தாள். அவள் பிறந்து ஒரு மாத கணக்கில் அம்மா உடல் பலகீனத்துடன் இறந்துபோனாள். பாட்டியால் வளர்க்கமுடியாது என்று சித்திதான் வேதாவை மூன்று வயதுவரை வளர்த்தாள். அம்மா இல்லாத வீட்டில் இவளுக்கு மாரிமுத்துவைப் பார்த்து பயம் இருந்தது. ‘பொட்டையா பெத்து வச்சிருக்கே..’ என்று சொல்லியே அம்மாவை அடிப்பது போல இனி தன்னையும் அடிப்பாரோ என்று. அம்மா இல்லாமல் எப்படி இவரோடு இருக்கமுடியும் என்ற பயத்தை சித்தியிடம் சொன்னபோது, ‘பயப்படாத. நாமெல்லாம் வெயிலுக்கு பொறந்தவங்க. அசராம வாழனும்..’ என்றாள். சித்தி வீட்டிலும் போய் மாரிமுத்து குடித்துவிட்டு அடிக்கடி தகராறு பண்ணியதில், வேதாவை இங்க கொண்டு வந்து விட்டுவிட்டு ‘உங்க சங்காப்தமே வேணாண்டி..’ என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். அதன்பிறகு எப்போதாவதுதான் வருவாள்.

இந்த ஹாலை பார்க்கும் போதெல்லாம் அம்மா நெனப்புக்கு வருவாள். இந்த ஹாலில்தான் அவளை கிடத்தியிருந்தார்கள். அம்மா ஏன் அசைவில்லாமல் படுத்திருக்கிறாள் என அப்போது அமுதாவுக்கு புரிந்திருக்கவில்லை. மல்லிகா சித்தியிடம் கேட்டதுக்கு, அவள்தான், ‘உங்க அம்மா இனி வரமாட்டாடி..’ என்று சொல்லி இவளை இழுத்து வைத்துக்கொண்டு அழுதாள். அவளின் கண்ணீரிலும் மூக்கு சிந்தியும் ஈரமான சேலையில் ஒருவித நாற்றம் அடித்தது. விலகி அமர்ந்தாள். அம்மாவின் மூக்கில் பஞ்சு வைத்து அடைத்திருந்தார்கள். இவளும் கையால் தன் மூக்கை அடைத்து வைத்துப்பார்த்தாள். மூச்சு மூட்டியது. விரலை மூக்கில் இருந்து எடுத்ததும் காற்று திணறிக்கொண்டு வெளியேயும் உள்ளேயும் போய் வந்தது.

 ‘என்னடி ஆச்சு உனக்கு..’ என்று சித்தி பயந்துப்போனாள். அம்மாவுக்கு மூக்கில் அடைச்சு வச்சிருக்காங்களே, அதை நானும் செய்து பாத்தேன் சித்தி..’ என்றவுடன், ‘ஏன் புள்ள இப்படி செய்தே.. ‘ என்று பதறினாள். 

‘அம்மாவுக்கும் எடுத்துவிடுங்க.. மூச்சுவிட கஷ்டமாயிருக்கும்..’ என்று உதடு பிதுக்கி அழத்தொடங்கினாள். ‘சும்மா இருடி’ என்று சத்தம் போட்டது சித்தி. 

அன்று இரவு முழுவதும் வேதா பாப்பா வேறு அழுதுகிட்டிருந்தது. யாரும் பார்க்காத சமயம் பார்த்து அம்மாவின் மூக்கில் உள்ள பஞ்சை எடுத்துவிடலாம். அம்மாவும் எழுந்துவிடுவா என்னும் எண்ணமும் அன்று இரவு முழுவதும் இருந்துக்கிட்டே இருந்தது. ஆனால் சித்தி அங்கேயே இருந்தாள். 

மறுநாள் காலையில் அம்மாவைத் தூக்கிட்டு போகும்வரை அவளால் அந்த பஞ்சை எடுக்கமுடியாமல் போனது, இப்போவரைக்கும் வருத்தமா இருக்கும் அவளுக்கு. பக்கத்தில் யாராவது செத்துபோயிட்டால், படுத்திருப்பவரின் மூக்கில் இருக்கும் பஞ்சை எடுத்துவிட்டு, அவர் மூச்சு விடுவதை அழுபவர்களிடம் காட்டி சிரிக்க வைக்கலாமா என்றும் தோன்றும். அப்படிதான் நாலு வருஷத்துக்கு முன்ன, எதுத்த வீட்டு ஜெகனின் தாத்தா இறந்துப்போனப்ப, துக்கம் தாங்கமுடியாம அழுதுக்கிட்டு இருந்த ஜெகனம்மா கிட்டேபோய் ‘நா ஒன்னு சொல்லட்டுமாக்கா..’ என்றபோது, என்ன என்பதுபோல் கண்ணீரோடு பார்த்தாள் இவளை. 

‘மூக்கில மூச்சுவிட முடியாம அடச்சு வச்சிருக்கிற பஞ்சை கொஞ்சம் எடுத்துப் பாக்கலாம்கா. அவரு முழிச்சாலும் முழிச்சுக்குவாரு.. ‘ என்று இழுத்துக்கொண்டே சொல்ல, ‘ஒன்ன என்னமோன்னு நெனச்சேன். நீயானா சின்ன புள்ளயாட்டம் இல்ல பேசுற. நல்லாதான இருக்கே..’ என்று கோபமாய் பேச அந்த இடம் விட்டு நகர்ந்து உட்கார்ந்து ஏதும் செய்யமுடியாமல் அழுததை நினைத்தால் இப்போவும் அழுகை வரும் அமுதாவுக்கு. 


2


சமையலறையின் ஜன்னல் வழியாக தெரிந்த துண்டு வானத்தில், ஏரோபிளேன் ஓன்று மௌனமாய் நகர்ந்துக்கொண்டிருந்தது. மனிதர்களை விட்டு தொலைவில் போவதால் சத்தம் தேவையில்லை என்று நினைத்துவிட்டது போலும். அதற்குள் இருக்கும் மனிதர்கள் பேசிக்கொண்டு தானே இருப்பார்களென அமுதாவுக்கு பட்டது. ஒருகாலத்தில் வேதாவும் நன்கு படித்து அதில் போகலாம். ஏன் நானும் கூட போகலாமோ என்ற நினைப்பு அவளுக்குள் வந்ததும் பக்கத்து தெரு ராஜேஸ்வரி சொன்னது நினைவுக்கு வந்து சிரித்துக்கொண்டாள். 

விசேஷ நாட்களில் அருகிலிருக்கும் விசாலாட்சி கோயிலுக்கு சம்பங்கியும் வில்வ இலைகளும் வெள்ளை தாமரை மொட்டுகளும் வாங்கிவருவதும் தொடுத்து கொடுப்பதும் இவளின் வேலை. பூவெடுக்க பூமார்க்கெட்டுக்கு ராஜேஸ்வரியுடன்தான் போவது வழக்கம். அப்படி ஒருநாள் போகும்போது ராஜேஸ்வரி கேட்டாள், 

‘நீ வெளிநாடு போறியா? டெய்லர் வேலைக்கு ஆள் கேட்கிறாங்களாம். நீ தையல் படிச்சிருக்கேதானே. என் விட்டுக்காரரோட பெரியண்ணன் ஏஜென்ட்டா இருக்காங்க. நேத்து பேசிகிட்டு இருந்தாங்க. அங்க போயி நல்ல சம்பாதிச்சா வேதாவை பெரிய படிப்புக்கு அனுப்பலாம்தானே..’ 

‘நல்ல ரோசனைதான். காசு அதிகமாகும்தானே. அத கூட கடைய வச்சு வாங்கிக்கலாம். எங்கப்பன் கிட்டே இவள தனியா விட்டுட்டு போகத்தான் பயமாயிருக்கு. நா இல்லாம போனா எனக்கு செஞ்சத போல இவளையும் எவனுக்காவது கட்டி வச்சுரும். அதுக்குதான் யோசிக்கிறேன்..’ என்றாள் இவள். 

‘ஹாஸ்டல்ல விடலாம் அவள. நம்ம பிரான்சிஸ் பள்ளிக்கூடத்து பாதர் எங்களுக்கு வேண்டியவங்கதான். ஏற்பாடு செய்யலாம் அமுதா.. உனக்கும் கைல கொஞ்சம் காசு புழங்கும். நாளபின்ன இன்னொரு கல்யாணம் கட்டிக்கலாம். இப்பிடியேவா காலம் பூரா இருக்கமுடியும்?’ என்றாள் ராஜேஸ்வரி. 

இன்னொரு கல்யாணம் என்றதும் அவளுக்குள் ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. இவ தன்னை வேவு பாக்கக்கேட்கிறாளா இல்ல நோண்டி பாத்து நாலு விஷயத்தை நம்ம வாயிலிருந்தே வாங்கி பத்து வீட்டுல நியாயம் பேசவேண்டி கேட்கிறாளா என்ற யோசிப்பில், ‘சரி. யோசிக்கிறேன்..’ என்று அன்னைக்கு முடித்துக்கொண்டாள்.

சமையல் முடித்து எல்லாம் மூடி வைத்துவிட்டு, குளிக்கக் கிளம்பினாள். இப்போவே எட்டு ஆச்சு. சீக்கிரம் கடையில் போய் உக்காரணும், தெருவில இருக்கிறவங்க பற்று செலவு கணக்கும் எழுதும் அக்கவுன்ட் நோட்டு வேற காலியாயிடுச்சு. அதையும் ஒன்னும் வாங்கப்போகனும் என்று யோசித்துக்கொண்டே அடுக்களையை விட்டு வெளியேவர, ‘அமுதா... ஏய் அமுதா.. இங்க வந்து பாரு. உனக்கா இப்படி சோதன வரணும்..’ என்று ஜெகனம்மாவின் அலறல் கேட்க, வழக்கமா குடிச்சுட்டு வேட்டிய ரோடுபூரா இழுத்துட்டு வரும் அப்பன பாத்துதானே சத்தமா நாலு திட்டு திட்டும் இந்த ஜெகனம்மா, இன்னைக்கு என்ன நம்மள கூப்பிடுது என்று உள்ளே பதைப்பு உண்டாச்சு அமுதாவுக்கு. 


3


ஹாலில் பாய் விரித்து, மாரிமுத்துவைப் படுக்க வைத்திருந்தார்கள். அவனின் தலைமாட்டில் நெளிந்துப்போன ஒரு காமாட்சி விளக்கு மினுக்மினுக்குன்னு உயிர விட்டுவிட்டு தொட்டுக் கொண்டிருந்தது. அந்த சின்ன வீட்டின் முன்பகுதியில் சாத்தியிருந்த கடையை ஒட்டி சிலர் வேடிக்கை பார்த்தபடி சென்றுக்கொண்டிருந்தனர். அக்கம்பக்கம் இருப்பவர்கள், மளிகை வாங்க பக்கத்து தெருவில் இருந்து வருபவர்களின் முகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்திருந்தன. 


இரண்டு வீடு தள்ளியிருக்கும் கனகாவின் பாட்டி இவளருகில் வந்து, ‘ஏண்டி, காசு கீசு வச்சிருக்கியா எரிக்க?.. எம்பையன் கேட்க சொன்னான். செலவு செஞ்சுட்டு வாங்கிக்கவா..’ என்று கேட்க,

‘இல்ல பாட்டி, இவளுக்கு பீசுக்கு உள்ள காசு அஞ்சாயிரம் இருக்கு. அத வச்சு எரிச்சுவிடுங்க..’ என்று எழுந்துபோய் எடுத்துக்கொடுத்தாள். 

‘யாருக்காவது சொந்தக்காரங்களுக்கு சொல்லனும்னா சொல்லிருடி..’ என்றபடி பாட்டி எழுந்துவிட்டு, ‘கொஞ்சம் அழுடி. எல்லோரும் தப்பா நெனப்பாங்க..’ என்று சொல்லி நகர்ந்ததும், வேதா அழுதுகொண்டே சுவரோரமாய் நிற்பதை கவனித்தாள். அவளருகில் போய் அவளையும் உக்காத்தி, தானும் சுவரில சாய்ந்து உக்காந்துக்கொண்டாள். 

பொள்ளாச்சி பக்கமிருந்து ஒரே சொந்தமான மல்லிகா சித்தியும் அவங்க வீட்டு ஆளுங்களும் வந்ததும் அந்த வீடு மயான அமைதியை சற்று தளர்த்தது. வந்தவ சத்தம் போட்டு பொலம்பிக்கிட்டு இருந்தாள். ‘குடியோ கிடியோ, ஆம்பளங்க பேருக்கு இவரு கிடந்தாரு. இப்போ அதுவும் இல்லாம போயாச்சே..’ சத்தமிட்டவளை தொடையின் பக்கவாட்டில் கிள்ளினாள் அமுதா. 

‘வாய மூடிகிட்டு அழு. இல்ல எந்திச்சு போ.. எல்லோருக்கும் சொல்லி கொடுத்திராத.. ‘ என்று காதில் ஓதினாள். சித்தி அவளை மலங்க பார்த்தாள். 

‘என்னடி, உனக்கு துக்கமா இல்லயா.. உங்கம்மா செத்தப்போ என்னவெல்லாம் கேட்டே..எப்படி பயந்த. இப்போ என்னடி இப்படி ஆயிட்டே.. தைரியம் வந்திருச்சுடி உனக்கு.‘ என்று உதட்டோரமாய் சின்ன சிரிப்புடன் சொன்னாள்.

பதில் பேசாமல் சுவரில் சாய்ந்துக்கொண்டாள் அமுதா. சித்திக்கு இங்கு நடப்பது என்ன தெரியும். அந்த ஆளு ஒரு ஆம்பள என்பதை சித்தி என்னைக்காவது நினைச்சு பாத்திருக்காளா. கதவ தாளிட்டு தான் ஹாலுக்குள் படுக்கும் அவலம் அவளுக்குத் தெரியுமா. ஒரு நா ராத்திரி குடிச்சுட்டு வந்து இவள திட்டிக்கிட்டே, இவ மாரின் மீது கைவைத்ததும், பக்கத்தில் இருந்த காமாட்சி விளக்கை எடுத்து அந்த ஆளு கையில குத்தியதும் இந்த விளக்கு நெளிந்து போய் இப்போவும் சிரித்துக்கொண்து அவன் தலைமாட்டிலே இருப்பதும் இவளுக்கு மட்டும்தானே தெரியும். மொகத்தை சேல தலப்பு வச்சு அழுந்த துடைத்துக்கொண்டாள். ஜெகனம்மா எல்லோருக்கும் காப்பி வாங்கி வந்தாள். காப்பி சூடாய் உள்ளே இறங்கியது. 

‘ஆம்பளங்க யாராவது வந்து காலு விரல இழுத்து கட்டுங்கப்பா..’ என்று யாரோ சொல்ல, டெய்லர் சதாசிவம் தன் கையில் வைத்திருந்த ஒட்டுதுணியை வைத்து விரல்களை கட்டிக்கொண்டிருந்தார்.

‘அப்படியே மூக்கில பஞ்ச வச்சிருங்கண்ணே..‘ என்றாள் அமுதா சத்தமாக. மல்லிகாவும் ஜெகனம்மாவும் ஒருசேர அவளைத் திரும்பிப்பார்த்தார்கள். வெயில் சூடேற தொடங்கியிருந்தது.     






பெரிய மீசை

 பெரிய மீசை 

(சிறுகதை)



1

கடந்துப்போன பல வருடங்களாக லட்சுமியை நான் மறந்திருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். நானும் கூட மறந்திருப்பதாக எண்ணிக்கொண்டேன் அந்த கடிதம் வரும்வரை. பள்ளியில்லாத ஒரு சனிக்கிழமை. மதியம் கடந்த நேரம். கதவிடுக்கின் சிறுவெயில் கீற்றை கிழித்து சர்ரென்று வந்து விழுந்தது அந்த கடிதம். 

தபால்காரர் சண்முகம் எப்போதும்  இப்படிதான். முன்கேட்டின் உள்தாழ்பாளை தனது மெலிந்த கை நுழைத்து திறந்து, நீண்ட நடைபாதையைக் கடந்து, இருபுறமும் திண்ணை பிரித்து கிடக்கும் பரந்த படிகளில் ஏறிவந்து, கதவின் கீழிடுக்கு வழியாய் தள்ளிவிட்டுப்போவார். பெரிய தபாலாக இருந்தால், கதவின் பிடிதேய்ந்த, உருண்டையான வெளிவளைவை தட்டுவார். 

ஹாலில் தூக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்த நான் எழுந்துபோய் எடுத்துவந்தேன். இருள் அறை முழுவதும் அப்பிக் கிடந்தது. அம்மாவைத் தேடினேன். ஹால் கடந்து, திறந்திருந்த தாழ்வாரம் ஒட்டியிருந்த, சந்திரன் அண்ணாவின் அறைவாசல் படியில் தலைவைத்துப் படுத்திருந்தாள். அண்ணா அமெரிக்காவிருந்து வரும்போது மட்டுமே அந்த அறை பயன்பாட்டில் இருக்கும். இந்த முறை வந்திருந்தபோது அவனின் பெண்ணுக்கு என் பையன் சங்கரனைக் கட்டிவைக்கலாம் என்று அபிப்பிராயப்பட்டான். நான் பதிலேதும் சொல்லவில்லை. லட்சுமிக்கான பதில் அவனிடம் அன்று இல்லாததும் என் மௌனத்தில் ஒளிந்திருக்கலாம்.

இந்த பெரிய பண்ணைக்கார வீட்டின் அத்தனை ஜென்மங்களின் சாபங்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டு லட்சுமி, கல்கத்தா போனபிறகு,இரண்டு வருடங்கள் கழித்து என் பெயருக்கு கடிதம் எழுதியிருந்தாள். அப்பாவும் பெரியப்பாவும் பாட்டியும் சேர்ந்து அதை படிக்கும் முன்பே கிழித்து வீசினார்கள். மதியம் அம்மா என் கையில் அந்த கிழிந்த துண்டுகளை அடுக்கி, பசை கொண்டு ஒட்டி, யாருக்கும் தெரியாமல் என் கையில் திணித்தாள்.
‘ஓன் பள்ளி அட்ரேசுக்கு அவள இனி கடிதம் எழுதச்சொல்லு..’ என்று சொல்லி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சென்றாள். 


2

அடுத்த தெருவில் இருக்கும் பள்ளிக்கும் சண்முகம்தான் தபால்காரர். பள்ளியில் அவரின் மகள் வயிற்றுப் பேரன் நான்காவது படிக்கிறான். அதனால் அங்கு என்னை வந்து பார்த்து விசாரித்து கடிதம் கொடுத்துச் செல்வது வழக்கம். ஒரு முறை,
‘நம்ம லட்சுமியா.. பின்னாடி முகவரியில் இருக்கே.. நல்லாயிருக்காளா..’ என்று விசாரித்தார். 
‘ம்ம்..’ என்று சற்று தயங்கிச் சொன்னதும் புரிந்துக்கொண்டார். இதுவரை அவர், என் வீட்டில் உள்ள யாரிடமும் சொன்னதில்லை. 

அவளின் கடிதங்கள் ‘அடியே தேவகி..’ என்ற விளிப்புடன் தொடங்கி, எங்களுக்கிடையே ஆன தோழமையின் நிமித்தமாய் அனேக குறும்புகளும் சந்தோஷங்களும் சுமந்து இருந்தன. என் பெரியப்பாவின் பெண் அவள். பெரியம்மா இவளைப் பெற்றெடுக்கும் போதே இறந்துவிட்டார். பெரியப்பாவிற்கு தன் மகனின் மீது மட்டும் அளவு கடந்த பாசமுண்டு. லட்சுமியை ‘துக்கிரி.. துக்கிரி’ என்பார் சிரித்துக்கொண்டே. அவளும் அவரை ‘பெரிய மீசை..’ என்பாள். காரணமும் அடுக்குவாள். ‘அந்த மீசை முடியெல்லாம் உதிர்ந்து காணாமல் போகும் போதுதான் அவர் கெத்து அடங்கும்..’ என்று சொல்லி சிரிப்பாள். 

அம்மாதான் லட்சுமிக்கு அளவுக்கு அதிகமாய் சுதந்திரம் கொடுத்தாள். ‘அம்மா இல்லாத பெண்..’ என்பாள் அடிக்கடி. லட்சுமி ரொம்ப துடுக்கு. ஒரு இடத்தில் அவளை நிறுத்த முடியாது. அய்யர் வீட்டு பெண்கள் மட்டுமே அப்போது பாட்டு கற்றுக்கொண்டிருந்தார்கள். இவளும் பிடிவாதம் பிடித்து கற்றுக்கொண்டாள். பரதநாட்டியம் அவள் சேரும்போது என்னையும் சேர்த்துவிட்டாள் அம்மா. நான் மாநிறம்தான். அவள் நல்ல கலர். ‘பெரியம்மா மாதிரி.. எல்லாவிதத்திலும்..’ என்று அழுத்தம் கொடுத்து சொல்லுவாள் பாட்டி.

நானும் அவளுமாய் இரட்டை சகோதரிகளாய் வலம் வந்தோம். ஒரு கட்டத்திற்கு மேல் பெரியப்பா நிப்பாட்டச் சொல்லி சத்தமிட்டார். 
‘இந்த பால்சாமி கோனார் வீட்டு வயது வந்த பெண்கள் மேடையில் ஆடுது என்று ஊரில் பேசினால், எவன் வந்து கட்டுவான் இந்த குழந்தைகளை..’ என்று குதித்தார். பாட்டியும் அவருடன் சேர்ந்துக்கொண்டாள். 

அம்மாவால் ஒன்றும் சொல்ல முடியாமல் போயிற்று. லட்சுமியின் படிப்பையும் பெரியப்பாவே இறுதி செய்தார். பள்ளிபடிப்பு முடிந்ததும் திருமணம் செய்துவைத்தார். கல்யாணம் பண்ணமாட்டேனென்று அழுதவளை கட்டிவைத்தார். அவளால் கட்டியவனோடு பொருந்த முடியவில்லை. 

‘அவன் ஊர பிடிக்கல. பஸ் பிடிக்க ஒரு கிலோமீட்டர் மண்ரோடு தாண்டனும். அவன் வீட்டயையும் பிடிக்கல. அவனயையும் பிடிக்கல....’ என்று சொன்னாள் என்னிடம். கல்யாணம் ஆகணும்னா, இதையெல்லாம் பிடித்திருக்கவேண்டும் என்பதை அப்போது நான் குறித்து வைத்திருந்தேன்.

மீண்டும் வீட்டோடு வந்தாள். வீட்டில் அவள் இருந்த எல்லா பொழுதையும் அவளுக்கு நரகமாக்கினாள் பாட்டி. இருந்தும் அம்மாவின் அழுத்தத்தால், என்னோடு கல்லூரி சேர்ந்தாள். 

ஒரு வருடத்தில் காதல் வலையில் விழுந்தாள். எனக்கும் தெரிந்திருந்தது. 
‘இது சரிப்படாது. பெரியப்பா ஒத்துக்கமாட்டார் லட்சுமி.’ என்றபோது, 
‘அப்பாவைப் பார்த்து என்னைவிட நீதான் ரொம்ப பயப்படுறடி. பார்த்துக்கலாம்..’ என்று தைரியமாய் சொன்னாள்.

 அரசல்புரசலாய் அந்த விஷயம் வீட்டுக்குள் நுழைந்ததும், பெரியப்பா அவள் கணவன் வீட்டில் கடைசி முறையாக சமரசம் பேசிமுடித்தார். அப்பாவிடம் அம்மா அவளை அங்கு அனுப்பவேண்டாமென சொல்லிப்பார்த்தாள். 

‘உன்னால்தானே கல்லூரி அனுப்பி, தனக்கு கல்யாணம் ஆனதை கூட மறந்துட்டு காதல் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறா.. இனி அண்ணன்தான் முடிவு செய்வார்.. ‘ என்று முகம் காட்டிவிட்டார் அப்பா. சந்திரன் அண்ணனிடம் லட்சுமி குறித்து, நான் பேசப் போனபோது, ஒன்றும் சொல்லாமல் நகர்ந்துவிட்டான். அதை லட்சுமியிடம் சொன்னபோது சிரித்தாள். 
‘இந்த வீட்டு ஆண்களைப் பற்றி உனக்குத் தெரியாது. கோழைகள்’ என்றாள்.

மறுநாள் லட்சுமியை வீட்டில் காணவில்லை. அவளை காதலித்தவனையும் காணவில்லை. அவன் பெயர் முருகன் என்பதை அன்றுதான் அனைவரும் அறிந்தனர். அன்றோடு அவளை இந்த வீட்டில் அனைவரும் தலைமுழுகினார்கள், என்னையும் அம்மாவையும் தவிர.

இரண்டு வருடம் கழித்து வந்த கிழித்து ஒட்டப்பட்ட கடிதத்தின் வழிதான் அறிந்தோம் அவளுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை. நானும் இங்கிருந்து அவளின் கணவனுக்கு இரண்டாம் திருமணம் முடிந்ததை எழுதினேன். நான்கைந்து வருடங்களில் அதுவும் நின்றுபோனது. காலம் ஓடிக்கொண்டேயிருந்தது. 

சரவணனுடனான என் திருமணம், அண்ணன் அமெரிக்கா போனது, அங்கேயே ஒரு பெண்ணை மணந்தது, அது தாளாமல் பெரியப்பா மனம் உடைந்து அதிகார தோரணை இழந்து ஒடுங்கியது, சரவணனுக்கு மாற்றல் வந்தபோது, என்னை அனுப்ப மறுத்து பெரியப்பா அவரிடம் கெஞ்சியது, சரவணனும் அங்கும் இங்குமாக அலைந்துவிட்டு இப்போதுதான் இங்கு மாற்றலாகி வந்திருப்பது, இப்படி எத்தனையோ நடந்தேறிவிட்டது இத்தனை வருடங்களில்.  


3

லட்சுமியிடம் இருந்து கடிதங்கள் நின்றுபோன பிறகு சில காலம் பள்ளிக்கு என் பெயரில் வரும் கடிதங்களில் எல்லாம் அவளின் கையெழுத்தைத் தேடுவது என் வழக்கமாக இருந்தது. அம்மாவும் அவ்வப்போது அழுவாள். இப்போது ஒரு கடிதம், என் பெயருக்கு, அனுப்புநர் முகவரி இல்லாமல் வந்திருக்கிறது. லட்சுமியின் நினைவு வந்தது. இது லட்சுமியின் கையெழுத்து இல்லை என்று மனதில் பட்டதும், முகம் கழுவிவிட்டு வந்து படிக்கலாமென சாப்பாட்டு மேசையின் மீது வைத்துவிட்டு நகர்ந்தேன். அப்படியே அதை மறந்தும் போனேன். 

பெரியப்பாவின் அறையைக் கடக்கும்போது பார்த்தேன். படுத்திருக்கிறார் அவர். இப்போதெல்லாம் அறையை விட்டு அதிகமாய் அவர் வெளியே வருவதில்லை. வயதின் தளர்ச்சி. அவரின் அந்த பெரிய மீசை வெள்ளையாகி, நன்றாக மெலிந்திருந்தது. முழுதாய் உதிர்ந்தால்தானே கெத்து அடங்கும் என்னும் நினைப்புடன் லட்சுமி மீண்டும் வந்து மனதில் ஒட்டிக்கொண்டாள். 

அப்பாவும் பெரியப்பாவும் சில நாட்களில் சாயங்கால வேளையில், நான் பள்ளி விட்டு வீடு திரும்பும் சமயம், வீட்டு முன்திண்ணையில் அமர்ந்திருப்பார்கள். ஒன்றும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வெறுமனே தூரத்தில் தெரியும் சாலையையும் பள்ளிக் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

சரவணன் வந்தால் மட்டும் இருவரும் ஹாலில் அமர்ந்து அவருடன் உலக நடப்புகளை பற்றி சில பல குறைகளுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். தன்னிடமும் அம்மாவிடமும் அவர்கள் இந்த அளவுக்கு பேசியிருப்பார்களா என்பது நினைவில் இல்லை. லட்சுமி இந்த வீட்டு ஆண்களைப் பற்றி சொன்னதைப் புரிந்துக்கொள்ள தனக்கு இத்தனை காலம் ஆகியிருப்பதை நினைத்து சிரிப்பு வந்தது.

அம்மா மட்டும் இன்னும் அடுக்களையில் எல்லோருக்குமாய் உழைத்துக்கொண்டே இருக்கிறாள். இப்போதும் என்னுடைய மகன் சங்கரனுக்காய் ஏதோ செய்து அது சாப்பாட்டு மேசைக்கும் வந்துவிட்டது. மேசையில் அந்த கடிதம் காத்திருந்ததை அப்போதுதான் கவனித்தேன். 



4

மாடி சுவரின் மீதான என் பிடிப்பு இறுகி இருந்தது. காற்று என் சேலை தலைப்பை பறக்கவிட்டு வேடிக்கை பார்த்தது. என் கண்ணீர் துளிகளையும் சேர்த்துதான். அம்மா முடியாமல் இரண்டு கால் முட்டுகளையும் கைகளால் பிடித்துக்கொண்டே மாடிப்படி ஏறிவந்தாள். ‘உன்னை கீழே காணுமேன்னு தேடினேன்’ என்றாள். 

ஒன்றும் பேசாமல், கடிதத்தை நீட்டினேன். ‘என்ன இது’ என்று கேட்டுக்கொண்டே திறந்தாள் கடிதத்தை. இலேசான சத்தத்துடன் படிக்கத்தொடங்கினாள். 

“அன்புள்ள தேவகி சித்திக்கு,  

ராகுல் எழுதுவது. என் அறிமுகம் முக்கியமானதாய் நான் நினைக்கவில்லை. இருந்தும், இவ்வாறு உங்களை சித்தி என்றழைக்க உரிமை பட்டிருக்கிறேன். என் அம்மா லட்சுமி சொல்லித்தான் இதை எழுதுகிறேன். 

அப்பா தவறி இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. நான் பொறியியல் படிப்பை முடித்து, அப்பா வேலை பார்த்த ரயில்வே துறையில வேலை பார்க்கிறேன். அவரின் பென்ஷன் அம்மாவிற்கு கிடைக்கிறது. இங்கு வீடும் இருக்கிறது. அதனால், அங்கு, ஊருக்கு வந்து சேரும் எண்ணம் அம்மாவிடம் இதுவரை இருந்ததில்லை. நான் கவனித்திருக்கவில்லை என்பதாகவும் இருக்கலாம். 

ஆனால், கடந்த ஆறேழு மாதங்களாக சற்று வித்தியாசமாக நடந்துக்கொள்கிறார். இரவில், ‘அம்மா உன்ன பார்க்கணும் போல இருக்கு’ என்று புலம்புகிறார். அடுக்களையில் சமையல் செய்யும்போது, இல்ல, ஏதாவது வேலை செய்யும் போதும் தன்னையறியாமல் உங்க பெயரைச் சொல்லியழைத்து பேசுகிறார். வேறு யார் பெயரை எல்லாமோ சொல்கிறார். அங்கிருப்பவர்களின் பெயர்கள் எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாததால் எனக்கு அது பயத்தைக் கொடுத்திருக்கிறது. அவரிடம் கேட்டால், கண்களில் எட்டிப்பார்க்கும் கண்ணீருடன், நான் ஏதும் சொல்லவில்லையே என்கிறார். 

நேற்று அம்மாவிடம் இதுகுறித்து பேசினேன். அப்போதுதான் ஊருக்கு வருவது குறித்த அவரின் ஆசை புரிந்தது. ஒரு முறை மட்டும் அங்கு அழைத்து வரலாம் என்றிருக்கிறேன். ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் இருந்துவிட்டு நானே அழைத்தும் வந்துவிடுகிறேன். 

அதற்கு தாத்தாவின் அனுமதி வேண்டும் என்றார் அம்மா. அதற்குதான் இந்த கடிதம். 

தாத்தா உயிருடன் இருப்பாரா என்று கேட்டேன் அம்மாவிடம். 
‘நிச்சயம் இருப்பார். என்னை பார்க்காமல் அவர் உயிர் போகாது. நான் அவருக்கு நல்ல மகளாக நடந்துக்கொள்ளவில்லையோ என்ற குற்ற உணர்வு எனக்குள் உண்டு. அவர் காலின் கீழ் ஒரு நாள் பொழுதே இருக்க விரும்புகிறேன் ..’ என்று அழுகையினூடே சொன்னபோது மனம் கனத்துப்போனேன் நான். தாத்தா இதற்கு சம்மதிப்பாரா என்பதை நீங்கதான் கேட்டு சொல்லணும். 

சின்ன பாட்டியையும் தாத்தாவையும் கேட்டதாகச் சொல்லவும். உங்களுக்கு அதிகம் தொந்தரவு கொடுக்கிறேனோ என்றும் தோன்றுகிறது. ஆனால், நீங்கதான் பொறுமையாக இந்த குடும்பத்தை பிணக்கங்களின்றி பெரியவர்களை மனவருத்தப்படுத்தாமல் கொண்டு செல்கிறீர்கள் என்று அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். என் கைப்பேசி எண்ணை கொடுத்திருக்கிறேன். தொடர்பு கொள்ளவும். 

உங்களின் பதிலுக்காகக் காத்திருக்கும் மகன்..”

கடிதத்தைப் படித்துவிட்டு அம்மா உடைந்து போய் அழுதாள். 
‘உங்க பெரியப்பா கிட்டே நீயே கொண்டு கொடு. இனி அவர் சொல்றதுக்கு என்ன இருக்கு? வரச்சொல்லி பேசு. எனக்கு லட்சுமியைப் பார்க்கணும். அவ இனி எங்கும் போகமாட்டா..’ அம்மா உணர்வு வயப்பட்டு அடுக்கிக்கொண்டே போனாள். 


5

பெரியப்பாவின் அறையில் மாலை நேரத்து மங்கலான வெளிச்சம் மட்டுமே இருந்தது. விளக்கை போட்டுவிட்டு, கடிதத்தை கையில் கொடுத்தேன். என்னவென்பதாய் புருவம் உயர்த்தினார். படித்து முடிக்கும்வரை காத்திருந்தேன். அவரின் பெரிய மீசை சிறு வயதில் பார்த்தது போலவே நீளம் இருந்தது. ஓரங்களில் ஒடிந்து போய், சற்று மெலிந்து, நரைத்து, காதுகளில் இருந்து வழிந்த கிருதாவைத் தொட முயற்சித்து கொண்டிருந்தது. வீட்டின் மூத்தவர் என்னும் கம்பீரம் அந்த மீசையின் மீதே ஒட்டியிருப்பதாக எனக்கு தோன்றியது.

கடிதம் வாசிக்க வாசிக்க அவரின் கண்கள் நடுங்குவதும் அது அந்த பெரிய மீசையின் மீதும் படிவதாக இருந்தது. முழுதாய் படித்து முடித்ததும், நான் கவனிக்கிறேன் என்பதை உணர்ந்து தன்னை நிதானப்படுத்திக்கொள்ள கடிதத்தை நிதானமாய், இருந்தமாதிரியே மடித்தார். கண்களின் ஓரமாய் விழவிருந்த கண்ணீருடன் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தார். என்ன சொல்லுவார் எனப் பார்த்திருந்தேன்.
‘அப்பாவை வரச்சொல்லு, தேவகி..’ என்றார். 
‘நம்ம கிட்டே சொல்லமாட்டாரோ? பெரிய்ய மீசை.. அதுவும் நரைச்ச மீசை..’ அவருக்கு கேட்காத வகையில் மெதுவாய் சிரித்துக்கொண்டேன்.











தார்மீகம்

 தார்மீகம் 

(சிறுகதை )



அந்த ரயில் நிலையத்தின் நடைபாதை காலியாகவே இருந்தது. இரவின் வெளிச்சங்கள் விளக்குகளாய் தூங்கிக்கொண்டிருந்தன. வழக்கமான இணைப்பு நாற்காலிகளுடன் அவற்றின் அடியில் உறங்கும் நாய்களுடனும் அமைதியாகவே இருந்தது அந்த நகரத்து ரயில் சந்திப்பு. இன்னும் கோயம்புத்தூருக்கான ரயில் வர ஒரு மணி நேரம் இருக்கிறது. டிராலியை கீழே வைத்துவிட்டு, தோளில் தொங்கிய கைப்பையை கைக்கு மாற்றிக்கொண்டு நின்றேன். நடைபாதை நீண்டு, நடக்கலாமே என்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்கள் காத்திருக்க, டிராலியின் அருகில் நிற்கும் அவசியம் இல்லாததாய் மனதுக்கு பட்டது.

பழைய ரயில் நிலையங்களைப் பார்க்கும் போதெல்லாம் இது போன்றதொரு ஆசுவாசம் ஏற்படுவதுண்டு. எதுவும் வேகமாக நடக்காது என்பது போலவும், பழகிய தோற்றம் கொண்டதாகவும், பால்யத்தில் பார்த்த ஊரிலிருக்கும் ரயில் நிலையம் போன்றே மனதுக்கு நெருக்கமாக இருப்பது போலும் ஒரு தோற்றம் கொடுக்கும்.

சுற்றும்முற்றும் பார்த்தபோது, அந்த ரயில்நிலையம் மற்ற நிலையங்களை விட ஏதோ ஒரு வகையில் வித்தியாசபட்டு நிற்பதாய் தோன்றியது. நீண்ட நடைபாதை முழுமையும் இரும்புக் கம்பிகள் நேர்குத்தாய் நிற்க, சரிவாய் ஓடுகள் வேயப்பட்டு தாழ்ந்திருந்தது. ஊரின் பழமையை பறைசாற்றவே ஓடுகளை மாற்றாமல் வைத்திருப்பார்களோ என்று நினைக்கத்தோன்றியது.  

சட்டென வெளிச்சத்துடன் ஒரு கதவு காலுக்கடியில் திறந்தது போல் இருந்தது. அப்போதுதான் கவனிக்க முடிந்தது, ரயில் நிலையத்தின் அறைகள் எதுவும் நடைபாதையில் இல்லாதது. சுவரை ஒட்டி ஆங்காங்கே படிகள் கொண்டு உள்ளிறங்கி அறைகள் இருந்தன. அங்கேயிருந்து தான் வெளிச்சம் வந்தது. அந்த அடித்தள அறையிலிருந்து ஒருவன் சக்கர நாற்காலியொன்றை தூக்கியபடி வெளியே வந்தான். நடைபாதையில் வைத்துவிட்டு கதவை சாத்திவிட்டு வந்தான். வெளிச்சம் அவன் பின்னால் ஒளிந்துக்கொண்டது. அவன் அதை இழுத்தபோது உண்டான கிரீச் சத்தத்திற்கு சுருண்டிருந்த நாயொன்று தலை தூக்கியது. எழுந்து முன்னங்கால்களை இழுத்துவிட்டு சோம்பல் முறித்துக்கொண்டு அவன் பின்னே ஓடியது. 

ஐந்து பேர் கொண்ட குடும்பமொன்று ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளுடன் நடைபாதைக்கு வந்து சேர்ந்தது. நகைகளுடனும் பட்டு சேலைகளுடனும் வசதியாய்த் தெரிந்தார்கள் அந்த மனிதர்கள். சொல்லி வைத்தாற்போல் ஆண்கள் மூவரும் நாற்காலிகளிலும் பெண்கள் மூவர் அதன்முன் இருந்த கல் பெஞ்சிலும் ஆண்களைப் பார்த்தவாறு அமர்ந்துக்கொண்டார்கள்.  அந்த கூட்டத்திற்கு சம்பந்தமே இல்லாதது போல் வலது காலை விந்திக்கொண்டு ஒருவன் அவர்கள் பின் இரண்டு பெரிய பைகளைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தான். அவர்களுக்கும் இவனுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்க இளம் பச்சை நிறத்தில் சட்டை வேறு அணிந்திருந்தான். 

‘பி1 பெட்டி இங்கேதானே வரும்?’ என்றார் நன்றாய் வளர்ந்திருந்தவர். 

‘ஆமாம், அதைதானே போட்டிருக்கு டிஸ்ப்ளேயில்.’ என்று சொல்லிவிட்டு, ‘வா, உட்காரு சாமி.’ என்று நின்றிருந்தவனின் பக்கம் திரும்பிச் சொன்னார்.

‘இருக்கட்டும், நான் நிக்கிறேன் அண்ணா.’  என்றான் சாமி எனப்பட்டவன்.

‘உன் ஓட்டை காலை வச்சுண்டு எவ்வளவு நேரம் நிப்ப?.. இங்கே உட்காரு சாமி..’ என்று பெண்கள் அமர்ந்திருந்த கல் பெஞ்சில் இடம் செய்து கொடுத்தாள் மூவரில் உயரமான பெண்மணி. அவர் நகரும் போது, அவரின் வைரபேசரி ரயில்வே நடைபாதையின் விளக்கில் பட்டு மின்னியதை கவனிக்கக் கண்கள் தவறவில்லை. அந்த சாமி இன்னும் நின்றுக்கொண்டிருந்தான். அவர்களின் மீதான மரியாதையாகவும் இருக்கலாம். அந்த ஆண்மக்கள் பேசுவதற்கெல்லாம் அவன் சிரித்துக்கொண்டிருந்ததும் அதையே ஊர்ஜிதப்படுத்தியது. 

நாய் ஓன்று வெகு வேகமாய் ஊளையிட்டுக் கொண்டே நடைபாதையில் ஓடிவந்தது. நின்றிருந்த சிலர், அதற்காக வழிவிட்டனர். படுத்திருந்த மற்ற நாய்கள் எழுந்து பார்த்துவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டன. அதன் பின் சிறு கல் சுமந்து அடிப்பதுபோல் ஓடிவந்து நின்றுவிட்ட ரயில்வே ஊழியனொருவன், அது உயிருக்காய் ஓடுவதைக் கண்டு சிரித்தான். அந்த சாமி என்பவன் அவனை நெருங்கி, ‘பாவம் அது..’ என்றான். 

‘அட, சும்மாயிரு. காண்டீன் மூடிகிட்டு இருந்தோம். அப்போ நான் சாப்பிட எடுத்து வைத்த ஒரு சிக்கன் பிரியாணி பொதியைத் தூக்கிட்டு ஓடிட்டு. அதை பிடுங்கிட்டு தானே விரட்டிவிட்டேன்..’ என்று சொல்லி சிரித்துக்கொண்டே திரும்பிப் போனான். 

‘உனக்கு ஏன் அவனோட பேச்சு..’ என்றார் அவன் உறவுக்காரர். 

‘இல்லைண்ணா, அது பாவமில்லையோ. அது கிட்டே இருந்து பிடுங்கி இவன் சாப்பிட்டா இவனுக்கு சீரணிக்குமா என்ன..’ என்ற கேள்விக்கு உன் பதிலை நான் எதிர்ப்பார்க்கவில்லை என்பதாய், அவரிடமிருந்து ஒரு மூக்குச் சிதறல் சத்தம் மட்டும் வந்தது. மாமிகள் மூவரும் கொண்டு வந்த லட்டை உடைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். 

மௌனம் அதிகமாய் பரந்திருந்தது அந்த இரவு நேரத்தில். சக்கர நாற்காலியை இழுத்துச் சென்றவன் அதனுடனே நடந்து வருவது தெரிந்தது. அவன் பின்னே அந்த நாயும். 

அவன் வந்த அறையை விடுத்து என்னைக் கடந்து சென்று சுவரை ஒட்டியிருந்த இன்னொரு படிக்கட்டில் இறங்கி அறையைத் திறந்து அதனுள்ளே போனான். அறையின் வெளிச்சம் நடைபாதையை டார்ச்சடித்து கோலம் போட்டது. திறந்திருந்த கதவின் வழியே தெரிந்த ஓர்  ஏணி, ஒரு மேசை, நாற்காலி, தண்ணி கூஜா என்று அந்த அறை புழக்கத்தில் இருப்பதை பறைசாற்றியது. அவன் பின்னால் வந்த நாயும் அவனுடனே படிகள் இறங்கி, உள்ளே சென்றுவிட்டது. அதற்கும் அந்த நிலையத்தின் அத்தனை அறைகளும் படிகளும் வேலைகளும் அத்துப்படியாய் தெரிந்திருக்கும் போல. மீண்டும் சாத்திவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள். 

அந்த நாயைப் போலவே எதற்காக படிகளில் இறங்கினோம் எதற்காக ஏறினோம் என்பதறியா ஒரு வலி மனதுக்குள் உண்டாகி, காலை சம்பவங்களை அசைத்துப்பார்த்தது. கருத்துகளை உரத்துக் கூறமுடியாதபடி மேடையில் இருந்து இறங்கிய நிமிடத்தை நினைக்கும்போதே எரிச்சலூட்டியது. எப்போதும் பொதுவாத கருத்துகளுக்கு உடன்படாத சபைகளுக்குள் பேச நுழைவதில்லை நான். தன்னை அறிவாளியாய் பிரகடனப்படுத்திக் கொள்ளும் நண்பரின் வேண்டுகோளுக்கு அன்று இசைந்து நடக்க வேண்டியதாயிற்று. 

மேம்போக்காய் சமூகத்தை குத்தகை எடுத்த கூட்டம் அது. தேர்தல் நேரத்தில் தினசரிகளில் காட்டும் குப்பத்தைப் பெருக்கும் அரசியல்வாதிகளின் புகைப்படங்களைப் போன்றவர்கள் அவர்கள். பணத்தை வாரியிறைத்து கட்டப்பட்ட மேடையும் ஆரஞ்சு வண்ண குளிர்பானமும் அதை எடுத்துக்காட்டின. ஊரில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைத்துவிட்டதாக ஒருவனை தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். நான் பேச எழுந்தபோது, நண்பர் சொன்னார், ‘கொஞ்சமாக பேசு..’ என்று. சபை வணக்கம் போட்ட மூன்று நிமிடங்களில் துண்டு சீட்டு வந்தது ’சாப்பிட நேரமாகிவிட்டது, பேச்சை முடித்துக் கொள்ளவும்..’ என்று. அசைவ மணத்துடன் சாப்பாடு களைகட்டியது. பெரிய மனிதரின் ஏற்பாடுதான் என்று நண்பர் முகம் கொள்ளா சிரிப்புடன் சொன்னார். 

அங்கிருந்து கழண்டு ஓடவேண்டுமென்று மனசு சத்தமிட்டது. இந்த நாயைப் போல எதற்கு ஏறுகிறோம், எதற்கு இறங்குகிறோம், அவன் பின்னால் ஏன் ஓடுகிறோம் என்பதை அறியமுடியாத சுயமூளை அற்றவர்களுக்கானது இம்மாதிரியான கூட்டங்கள். வலியை யோசிக்க யோசிக்க நிதானம் பிடிபடத்தொடங்குகிறது. வெற்றிகளை விட தோல்விகள் அதிகமான அனுபவங்களை கொடுத்துவிடுவதை என்றும் மறுப்பதற்கில்லை.    

‘ரயில் வர எவ்வளவு நேரமாகும்னு கேட்டுட்டியா என்ன..’

‘ஆமா அண்ணா.. இன்னும் அரை மணி நேரம் மேலாகுமாம்..’ என்றான் சாமி. 

‘இன்னைக்கு கல்யாணத்துல நடந்த கூத்தில் உனக்கு ஏதும் சம்பந்தமிருக்கோ?’ என்றபடி சாமியை நோக்கினாள் மூவரில் வயதானவள். 

‘ஹிஹி.. எனக்கு பொண்ணு வீட்டுக்காரங்கள மட்டும்தான் தெரியும் மன்னி. நான்தான் இந்த மாப்பிள்ளை நல்லவன், வல்லவன்னு சொல்லி ஏற்பாடு பண்ணினன். பெண்ணை சம்மதிக்க வைக்க அவா கொஞ்ச நாள் எடுத்தா. அதற்கப்புறம் அவாளா பேசினுட்டா. எனக்கு அதுக்கு மேலே தெரியாது.’ என்றான் வேறு எங்கோ பார்த்தபடி. 

‘பொய் சொல்லாதே. இன்னைக்கு மட்டும் காயத்திரி ஓடியிருந்தான்னா, உன் இன்னொரு காலையும் எடுத்திருப்பா. நல்லவேளை பொண்ணை அமுக்கி பிடுச்சு கல்யாணத்தை முடிச்சுட்டா. தாலி வாங்கிட்டப்ப அவ முகத்தைப் பார்த்தேனே, அரை ஆழாக்கு அருள் இல்லை அதில்.’ என்று பொரிந்தாள் மத்திம வயதிலிருந்தவள். 

சாமி அதற்கும் சிரித்துக்கொண்டிருந்தான். ‘என்ன ஜென்மமடா நீ. உன்னை திட்டிண்டு இருக்கன். அதற்கும் சிரிக்கிறே. இவனை மாப்பிள்ளையா வச்சிண்டு நம்ம விஜயா எப்படி சமாளிக்கிறாளோ தெரியல. அந்த காலத்துல அவ வீட்டு திண்ணை காணாம நெல் மூட்டை பழவராயர் வீட்டிலிருந்து வந்து கிடக்குமாம். எங்கம்மா சொல்லுவா. அத்தனை செல்வாக்கோடு இருந்தவ. இப்பத்திய நிலைமை அவ பொண்ணை ஒத்தாசையா வந்து சேர்ந்த இவன் தலையில கட்டவேண்டியதாச்சு.’ என்றாள் மேலும் முகம் சுளித்துக்கொண்டு. 

‘ராஜி, இப்போ எதுக்கு விஜயாவெல்லாம் இழுத்துண்டு? விடு பேச்சை.’ என்றார் கண்ணாடி அணிந்திருந்த மனிதர். 

‘ஏனாக்கும்.. உங்களுக்கு தானே விஜயாவை கேட்டுண்டு இருந்தா. சீர் பணம் பத்தான்னு தானே உங்கம்மா வேண்டானுட்டா. அந்த கோபமோ என்னமோ என் வாயை அடைக்கிரேள்.’ என்று சொல்லிக்கொண்டே தண்ணீர் ஜக்கை எடுத்தாள் கட்டை பையிலிருந்து. மற்ற இரண்டு பெண்களும் நமட்டு சிரிப்பை சற்று சத்தமாகவே சிரித்தார்கள். 

‘வண்டி வருதான்னு பாரு போ..’ என்று சாமியைத் துரத்தினார் கண்ணாடி அணிந்தவர். சாமியும் சிரித்துக்கொண்டே நடைபாதையின் ஓரமாய் தண்டவாளத்தில் விழுந்துவிடுவது போல் நின்று எட்டிப்பார்த்தான். 

அந்த ரயில்வண்டியில் ஒரு பெட்டி மட்டுமே குளிர்சாதனம் பொருத்தப்பட்ட பெட்டி. அதில் வெகு சிலரே ஏறக்காத்திருந்தனர். தஞ்சாவூரில் இருந்து கோயம்புத்தூருக்கு என்றில்லாமல் மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூருக்கு என்றிருந்தது வண்டி. வேறு ஏதும் வண்டிகள் அந்த நேரத்தில் இல்லாமல் அந்த நிலையம் இருட்டை அப்பிக்கொண்டு ஆங்கில மர்மப் படங்களில் வரும் முதல் காட்சியைப் போலிருந்தது. ஒலிப்பெருக்கி உயிர்பெறும் சத்தம் கேட்டது. வண்டி வருவதற்கான அறிவிப்பு ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று மாற்றிமாற்றி ஒலிபரப்பாகியது. 

அங்கங்கே முடங்கியிருந்த மக்கள் சுருட்டிக்கொண்டு எழுந்து சுறுசுறுப்பானார்கள். ரிசர்வ் செய்யப்படாத பொது பெட்டியின் அருகே கூட்டம் மூட்டைகளையும் சிறு பைகளையும் தூக்கிக்கொண்டு நின்றது. தூரத்து சிவப்பு விளக்கின் மீதே அனைவரின் கண்ணும் பதிந்திருந்தன. அதை மறைத்து சட்டென கரிய ஒற்றை யானையாய் அந்த எஞ்சின் அருகில் வரத் தொடங்கியது. 

அதன் நீண்ட சிவப்பு மூக்கு நெருங்கி வந்தபோதும் கருப்பாகவே இருந்தது. ரயிலின் முகப்பு நம்மை கடக்கும்போது எழும் சத்தம் காதை பதம் பார்க்கும் என்பதால் அதை பார்த்தவாறு இருந்த வலதுகாதை மூடிக்கொண்டேன். மங்கலாய் ஒரு விளக்கு வெளிச்சம் அதனுள்ளே இருப்பவர்களை வெளிகாட்டியது.  அதன் தடதடக்கும் சத்தம் இதயத்தின் அருகாமையில் ஒலித்து உடல் முழுவதையும் அசைத்து பார்த்தது. முகப்பு கடந்து, பெட்டிகள் முன்னோக்கி நகரத்தொடங்க சத்தமும் சற்றே விலகியது அல்லது பழகிப்போனது. காதிலிருந்து கைகளை நீக்கி டிராலியுடன் பெட்டி நிற்க காத்திருக்க, அந்த பெரிய குடும்பம் எனக்குமுன் பெட்டியின் வாசல் தேடிக்கொண்டு அசைந்துக்கொண்டு நின்றது. வண்டி ஓரிடத்தில் அமைதியானது.  

சாமியானவன் தூக்கமுடியா சுமையுடன் பெட்டிக்குள் முதலில் ஏறினான். வாசல் அருகிலேயே பெட்டிகளை வைத்துவிட்டு மற்ற பைகளை இவர்களிடம் இருந்து வாங்கி உள் வைத்துக்கொண்டிருந்தான். வண்டி இரண்டு நிமிடம்தான் நிற்கும் என்பதால் எல்லோரும் பரபரப்பாய் இருந்தார்கள். அவர்களும் ஏறினார்கள். நான் ஏற முனைய, சாமி இறங்கத் தொடங்க, நான் நகர,’தேங்கஸ்ங்க’ என்று சொல்லிகொண்டே வேகமாய் நகர்ந்தான். பெட்டியில் ஏறிவிட்டு, அவன் எங்கே விரைகிறான் என எட்டிப்பார்க்க அவன் அதற்குள் நான்கைந்து பெட்டிகள் கடந்து காலை விந்தி இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான். 

உள்ளே இடம் பார்த்து அமர்ந்தபோது, அடுத்த பகுதியில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள், அதெல்லாம் சரியா ஏறிவிடுவானென்று.





 

 

 


Friday, 14 October 2022

பொன்னியின் செல்வன் 1

  பொன்னியின் செல்வன் 1 : ஒரு பார்வை  




இங்கிலாந்து போயிருந்த போது தியேட்டர் சென்று பிகில் படம் பார்த்தது, அப்புறம் கொரோனா, அதன் பிறகு மீண்டும் இங்கிலாந்து போனபோது அண்ணாத்தே படத்துக்குப் பிறகு இப்போதுதான் தியேட்டர் போய் படம் பார்க்கிறேன்.




PS 1 படத்தை ஒரு திரைப்படமாக மட்டுமே பார்க்கவேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்தேன். பள்ளிக்காலங்களில் அம்மா பைண்ட் செய்து வைத்த பொ செ புத்தகத்தைப் படித்த பிறகு, கல்லூரி காலம் முடிந்து ஒரு முறை படித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 25 வருஷங்களாக அதை மீண்டும் தொடவே இல்லை. இந்த முறை படம் வெளிவருவதற்கு முன் படிக்கலாம் என்ற ஒரு டெம்ப்டெஷன் இருந்தது. கோவை புத்தகத் திருவிழாவில் புத்தகத்தை வாங்கியும் விட்டேன். ஆனால் நான்கைந்து பக்கங்கள் வாசித்ததும் பழைய வாசித்த நினைவுகள் வரவும் நிறுத்திக் கொண்டேன். வாசிக்கும் ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொண்டேன். அத்தனை நேரமும் என்னிடம் இல்லாதிருந்ததும் உண்மை. எந்தவிதமான முன்முடிவுகளும் இல்லாமல் படத்தை நேரடியாகச் சென்று பார்ப்பது என்று முடிவு பண்ணினேன்.



எல்லோரும் படம் பார்த்துவிட்டு வந்து இங்கு மற்றும் வாட்ஸ்அப்பில் நடத்திய crash course எல்லாம் படித்தும் கதை சரியாக நினைவுக்கு வராததால் அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை. ஒருவழியாக படத்தைப் பார்த்தாகிவிட்டது.

1. படத்தை திரையில் பார்த்தபோது, பாகுபலி அளவுக்கு பிரமாண்டம் இல்லையென்றாலும் நன்றாகவே இருந்தது. போர்க்காட்சிகள், கடைசி கடல் காட்சிகள் தவிர அதிக இரைச்சல் இல்லை.

2. திரைக்கதையில் ஒரு சில பொத்தல்கள், இடைவெளிகள் இருந்தபோதும், படம் புரிந்தது. நான் திரைக்கதையை மட்டும் தான் குறிப்பிடுகிறேன்.

3. சோழா சோழா பாட்டுக்கு நண்பர் இளங்கோ கிருஷ்ணனுக்கு சபாஷ். படத்துடன் இணைந்து பார்க்கும்போது தான், திரைகாட்சிக்கு, சொற்கள் ஓர் அழுத்தத்தைக் கொடுத்திருப்பது தெரிகிறது.

4. ஒரு இடத்திலும் திரை வசனம் ஷார்ப்பா இல்லை. 'நீயும் ஒரு தாயா?' என்று மொக்கையாக ரகுமான் பேசும் ஒரு வசனம். நிறைய இடங்களில் இப்படிதான் இருக்கிறது. பல இடங்களில் abrupt ஆக வசனம் நிற்பது போல இருக்கிறது.

5. ரஹ்மான் இசை நன்றாகவே ஒட்டியிருக்கிறது திரைப்படத்துடன். Historical, Non-Historical என்றெல்லாம் பேச தேவையும் இல்லை.

6. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது போன்ற பதட்டம் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லாத கதைக்களம் இது. அதனால், அடுத்து பாகம் என்ன என்று கிளப்பிவிடாமல், கதையின் தொடர்ச்சியை இரண்டாம் பாகமாகப் பார்க்க வேண்டும் என்று தோன்ற வைப்பதால், இந்த படம் ஓகேதான். இங்குதான் ஒரு நாவல் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தன்னுள் இருக்கும் கதை சொல்லும் பாங்கை ஒவ்வொன்றாய் எடுத்து வைக்கிறது. அந்த வகையில் திரைக்கதையாக முடிந்த அளவுக்கு நியாயம் செய்யப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

7. மூலக்கதை அமரர் கல்கி என்று போட்டிருக்கிறார்கள். இதிலெங்கே கல்கியின் மரியாதை குறைந்தது என்று தெரியவில்லை. புத்தகத்தைப் புத்தகமாகப் பாருங்க; சினிமாவை சினிமாவாகப் பாருங்க. ஓப்பீட்டில் வைக்க ஒன்றுக்கொன்று ஏதுவான தளம் அல்ல. இது புரியாததால் தான் கல்கிக்கு நியாயம் கற்பிக்கவில்லை என்கிறார்கள்.

8. நடிகர்கள்? அவரவர் இடத்தை அவரவர் நிரப்பியிருக்கிறார்கள். அவ்வளவே..



அடுத்து தியேட்டரில் நடக்கும் அட்ராசிட்டிஸ் :

1. திரையில் படம் ஓடிக்கிட்டு இருக்கும் போது நிறைய பேர் மொபைல் பார்த்துக் கொண்டு இருந்தனர். கண் முன்னாடி இத்தனை பெரிய ஸ்கிரீனில் படம் சத்தமாக ஓடும்போதும் மொபைல் பார்க்க தோன்றுகிறது என்றால், mobile addiction அதிகமாகி இருக்கிறது என்று தான் தோன்றுகிறது. சும்மாவே மொபைலைத் திறப்பதும் ஒன்றுமில்லாத மெசேஜுகளைப் படிப்பதும் மூடுவதுமாக இருக்கிறார்கள். ஆடின காலும் பாடின வாயும் நிக்காது என்பது போலதான் இது இருக்கிறது.

2. 40, 50 வயதில் இருப்பவர்களின் இறப்புகளைக் கேள்விப்படும் போதெல்லாம் இங்கு எல்லோரும் கவலை கொள்வதைப் பார்க்கிறோம். தியேட்டரில் முக்கால்வாசி பெண்களும் ஆண்களும் பாப்கார்னும் பஃப்ஸும், கோக்கும், ப்ரெஞ்சு பிரைஸுமாக தட்டு தட்டாக டப்பா டப்பாவாக நொறுக்கிக் கொண்டே இருக்கிறார்கள். திரையரங்குகளில் நடக்கும் இந்த உணவு வணிகம் நம் உயிரை குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

3. திரையில் புதிதாக வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் 'இது யாரு, இது யாரு' என்று 'கண்டுபிடியுங்கள் பார்ப்போம்' என்று competition வேறு பக்கத்தில் இருப்பவர்களிடம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு குடும்பம் ஓட்டு மொத்தமாகவே இந்த டிஸ்கஷனில் இருந்தார்கள். அதற்காக கூகிளைத் துணைக்கு வைத்துக் கொண்டார்கள் என்பது பெரும்சிறப்பு 😀.. இந்த படம் குறித்த over hype தான் இதற்கு காரணம்.



அவ்வளவுதான்..
எனக்குப் பொன்னியின் செல்வன் படம் பிடித்திருக்கிறது.
டாட்.