Skip to main content

வலசை

 

வலசை

(சிறுகதை )

(அமரர் கல்கி நினைவு விருது பெற்ற சிறுகதை - 2017)





 I

 

கால்வாயின் ஓரமாய் அந்த பெரிய வீடு அந்தகார இருளுக்குள் தனித்து அமிழ்ந்து போயிருந்தது. வெளீர் மஞ்சள் வண்ண வாயிற்கதவுகளுடனும் வெள்ளை சுற்றுச்சுவருடனும் சிறு பிறையொளியில் மங்கலாய் காட்சி தந்தது. 

 

அந்த வீட்டின்முன், எங்கு செல்வதென அறியாமல் பருத்தும் நெடிந்தும் நின்ற கரிய நிற யானைக்கு சோர்வு அதிகமிருந்தது. கூட்டம் விட்டு பிரிந்தும் மலையின்று இறங்கியும் இரண்டு நாட்களாகிறது. தான் முன்னின்று நடத்திய தன் பிளிறுகளையும் குட்டிகளையும் காப்பாற்றமுடியாமல் குண்டடிப்பட்டு கூட்டத்திலிருந்து விலக்கப்பட்டு தனித்து நிற்பது அவமானமாய் தோன்ற ஒரு கோபம் கொப்பளித்தது. எல்லாம் இந்த மனிதர்களால் ! 

 

உணவும் தண்ணீரும் எங்கிருக்கும் என்று தேடி இத்தனை தொலைவு வந்தாயிற்று. இங்கிருந்துதான் அதன் நாசி தொட்டது, மாவின் வாசனை. கரும்பின் வாசம் போலவே மாவின் வாசத்திற்கும் இக்களிறு அடிமை. மகிழ்வாய் தலையாட்டிக் கொண்டது. வாயிற்கதவு வழி நுழையாமல் கிழக்கு பக்கமாய் அந்த வீட்டைச் சுற்றியது. முன்பக்கம் தவிர மற்ற பக்கங்களில் முள்வேலி இட்டிருந்தார்கள்.

 

வேலி பிணைந்திருந்த இடைகற்களின் இடைவெளி அதிகப்பட்ட இடத்தில் தடித்த பாதம் தூக்கி அதை அமிழ்த்தி உள்நுழைந்தது. உள்ளே இருள் இருளை பூசியிருந்தது. கட்டிடத்தைச் சுற்றிலும் மாவும் தென்னையும் நிறைந்து மூடியிருந்தன. தண்ணீர் குழாய்கள் தரையில் சொட்டிட்டு ஈரம் உணர்த்தின. தாழ்ந்திருந்த கிளையின் மீது துதிக்கையிட்டு ஒடிக்கத் தொடங்கியது. வள்ளென்ற சத்தத்துடன் சிறிதாய் நாயொன்று ஓடி வந்தது. பெரிய உருவம் கண்டதும் சட்டென பயந்து பின்வாங்கி நின்றது. மீண்டும் குரைக்கத் தொடங்கியது.

 

 

II

ஸ்வேதாவின் கையை மெதுவாய் நீக்கிவிட்டு, ‘விக்கி ஏன் இவ்வளவு சத்தம் போடுறான்’ என்று தலைமுடியைக் கொண்டையிட்டுக்கொண்டே படுக்கையிலிருந்து எழமுயன்றாள் கனகு. சரவணின் வலதுகால் தன்மேல் கிடப்பதை உணர்ந்து அவனை நேர்படுத்தினாள். மணி பார்த்தாள். பன்னிரெண்டரை.

 

இரண்டு நாட்களில் பள்ளி திறக்கவிருக்கிறது. வேலைக்காகக் கோவை வந்து பத்து வருடங்களாகிறது அவர்களுக்கு. இங்கே பெரிய தோட்டத்துடன் வீடும் கட்டி செட்டிலாகிவிட்டார்கள். கணவன் ராம் திருநெல்வேலிக்கு டிரான்ஸ்பரில் போய் ஒரு வருடம் கிட்ட ஆகிறது. இதுதான் முதல்முறையாக அவனை விட்டு இவர்கள் பிரிந்திருப்பது. தினம் இரவு தூங்கி விடியலில் எழுவது வரை பயம்தான் கனகுவுக்கு.

 

இன்னும் குலைத்துக் கொண்டிருந்தது விக்கி. ஜன்னலைத் திறந்துப் பார்க்கலாமா இல்லை விளக்கைப் போடலாமா என்று குழப்பமாக இருந்தது அவளுக்கு. இரவு விளக்கின் வெளிச்சத்திலேயே படுக்கையறை கடந்து சாப்பாட்டு அறைக்குள் நுழைந்தாள். ஜன்னல் கண்ணாடிகளில் தோட்டத்து மாவு பெரிதாய் அசைவதாகத் தோன்றியது. மேஜை தாண்டி மெதுவாய் எட்டிப் பார்த்தாள். கிளைகளை இழுத்து ஒடித்துக்கொண்டிருந்த அந்த பெரிய உருவத்தைப் பார்த்ததும் வாயை மூடி, ‘அம்மா...ஆனை..’ என்றாள்.

 

ஓட்டமாய் மீண்டும் படுக்கையறைக்குள் வந்து கதவைத் தாளிட்டாள். இருதயம் காதுக்குள் இடித்தது. போனை எடுத்து ராமின் பெயர் அழுத்தினாள். தூக்கக்கலக்கத்துடன் அந்தப்பக்கமிருந்து,’ஹலோ..’ என்றான் ராம். கண்களில் கண்ணீர் பொலபொலவென்றுக் கொட்டியது கனகுவுக்கு. ‘கிளம்பி வாங்கோன்னா..’ என்றாள் குசுகுசுப்பாய். ராம் பதட்டத்தை சுதாகரித்தான். ‘என்ன ஆச்சுடா..’ என்றான்.

 

விசும்பலுடன் விஷயத்தைச் சொன்னாள். ‘இங்கே எங்களைத் தனியா விட்டுட்டுப் போகாதீங்கன்னு சொன்னேனே, இப்போ பாருங்கோ.. ஆனை வந்துடுச்சு. இந்த சின்ன பிள்ளைகளை வச்சுகிட்டு நான் என்ன செய்வேன் ராம். தெரசுக்கு கூட போகமுடியாது. பெரிய தோட்டம்தான் முக்கியம், மாடியை மெதுவாப் போட்டுக்கலாம்ன்னு சொல்லிட்டிங்க. வெளியே போனாத்தான் தெரசுக்கு படியேறமுடியும். நான் என்ன செய்றது ராம் இப்போ.. ‘ என்று மேலும் அழத் தொடங்கினாள்.

 

ராம் அங்கிருந்து கனகுவை நிதானப்படுத்தப் பார்த்தான். அவனாலும் அழுகையை அடக்கமுடியவில்லை. இதுவரை ஆனை இந்த பக்கம் வந்ததில்லையே என்று குழம்பிப்போனான். கனகுவிடம் பக்கத்து வளைவிலிருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கு பேசச்சொல்லிவிட்டு, போலீசுக்கும் சொல்லச் சொன்னான். தானும் நூறுக்கு அடிப்பதாகச் சொன்னான்.

 

 

 III

 ந்த இடம்தானே’ என்று உதவி ஆய்வாளர் ராஜசுந்தரம் வினவ, ‘ஆமா சார்’ என்றார் வனசரகர். ‘வீடே தெரியாத அளவுக்கு ஏன்யா மரம் வளர்க்கிறாங்க.. சரி, இங்கே எங்க இந்த ஒத்தை யானை வந்தது?..’ என்று கேட்க, ‘இரண்டு நாளைக்கு முன்னாடி ஆனைமலையிலிருந்து இறங்கிய யானை கூட்டம் ஊருக்குள் வந்துட்டுச்சுன்னு பாரஸ்ட் ஆளுங்க வழிமறிச்சு சுட்டாங்க சார். அந்த கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்திருக்கும் இந்த யானை. ஆனைமலை தொடங்கி நீலகிரி மலை, அப்படியே கேரளா போய் திரும்புறது அதுங்களோட வலசை பாதை சார். அதையெல்லாம் நாம் வீடு கட்டி அடிச்சுட்டோம். குடியிருப்புக்குள்ளே வந்ததும் சத்தம் போடுறோம், கலைச்சுவிடுறோம். அதுங்களுக்கு கோபம் ஆகுது..’ என்று சொல்லிக் கொண்டே போக, ம்ம் கொட்டிக்கொண்டே ‘இப்போ என்ன செய்யலாம்..’ என்று கேட்டார்.

 

‘எல்லா வண்டி லைட்டையும் போடச் சொல்லுங்க சார், நாங்க பட்டாசு, ராக்கெட் எல்லாம் கொண்டு வந்திருக்கோம். வெடிக்கலாம் சார். பயந்து வெளியே வந்துரும்.அப்படியே மலைக்கு பத்திருவோம்’ என்றார்.

 

கனகுவின் நம்பருக்கு அழைத்தார் சுந்தரம். ‘அம்மா பயப்படாதீங்க. போலீசு, பாரஸ்ட் எல்லாம் வந்துட்டோம். நாலு வண்டி வந்திருக்கு. பட்டாசு வச்சு கலைக்கிறோம். வீட்டுல நீங்க எத்தனை பேரு..எத்தனை ரூம்.’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க, வனத்துறையின் வாட்சர் நகர்ந்து அவரின் ஜீப்பின் பின்பக்கம் போய் வெடிகளை ரெடி செய்யத் தொடங்கினார்.




‘போலீசு எல்லாம் வந்து நிக்கறதா சொல்றா. எனக்கு இங்கிருந்து ஒன்னும் தெரியல. நீங்க பேசுங்க அவாகிட்டே. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு..’ என்று மீண்டும் அழுகையை ஆரம்பித்தாள் கனகு. இப்போது போனில் குழந்தைகளின் குரலும் கேட்டது. ‘முதல்ல தைரியமாக இரு கனகு. ஆனை ஒன்னும் வீட்டுக்குள்ளே வராது. அதுவுமில்லாமல் இத்தனை பேர் வெளியே நிக்கிறா. பார்த்துப்பா..’ என்ற ராமின் பேச்சுக்கு, கனகுவின் பதில் ஒன்றாய் தான் இருந்தது, நீங்க கிளம்பி வாங்கோ என்பதே அது.

 

அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஸ்ரேயா, வேலை மாற்றமாகி செல்லும் இடங்களுக்கு தன் பிள்ளைகளையும் தனியாகவே இழுத்துச்சென்று சமாளிக்கிறாள். ஆனைக்கு முன்னாடி மனித தைரியம் ஒன்றுக்கும் ஆகாதென்றாலும் அழாமல் இருந்து, பிள்ளைகளுக்கு தைரியம் கொடுக்கலாம் இவள் என்று கவலைப்படத் தொடங்கினான். நாளை முதல் லீவ் போட்டுவிட்டு, ஊருக்கு பஸ்ஸை பிடிக்கவேண்டும் என்று யோசித்து வைத்தான்.

 


 IV

 கால் மாற்றி கால் வைத்து, களிறு பொறுமையாய் மாவின் கிளைகளை ஒடித்து இலைகளையும் மாங்காய்களையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. நாய் அருகில் நின்று பின்னங்கால்களை ஒடுக்கிக்கொண்டு குரைத்துக் கொண்டிருந்தது. அடுத்து பப்பாளியின் வாசத்திற்கு நகர்ந்து அதை ஓடித்தபோது நாயின் விசுவாச குரைப்பு அதிகமாகியது. அதை நோக்கி அடியெடுத்து வைத்தவுடன் நாய் ஓட்டம் பிடிக்கவும் அதை இது துரத்தவும் செய்தது.

 

தோட்டத்தின் முன்பக்கமிருந்து பின்பக்கம் நோக்கி யானை ஓடுவது நிழலாய் தூரத்தில் நின்றிருந்த காவலர்கள் கண்ணில் படவும், ‘ஏ..ஏ..’ என்று சத்தமிட்டுக்கொண்டு வெடிகளை அதை நோக்கி வீசினர். சில அதன் மீதும் சில தள்ளியும் விழுந்து வெடித்தன. இது பழக்கமாகிப் போனது போல் யானை நாயைத் துரத்துவதில் கவனமிட்டது. போர்டிக்கோவில் நிறுத்தியிருந்த காரின் அடிவழியே நாய் ஓடிமறைய யானை வாகனத்தை கால் கொண்டு தள்ளியது. அது நகர்ந்து போய் தள்ளியிருந்த ஒரு மரத்தின் மீது மோதி கண்ணாடிகள் உடைந்து நின்றது.

 

உள்ளே கனகுவின் காதுகளில் சிலீரென்று கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. அதுவரை கேட்டுக் கொண்டிருந்த விக்கியின் குரைப்பு சத்தமும் நின்று போக, அவளுக்குள் பயம் எடுத்தது. விக்கிக்கு என்னவாயிற்று.. இறந்துவிட்டதா என்ன.. பிள்ளைகளை இறுக அணைத்து படுக்கையறை சுவரில் சாய்ந்தாள்.

 

யானை போர்டிக்கோவில் இருந்து முன்முற்றம் பார்த்து ஏறியது. அங்கேயிருந்த நாற்காலிகளைத் தள்ளிவிட்டது. அடுக்கிவைத்திருந்த அலங்கார மண்குடுவைகளைத் தட்டிவிட்டது.

 

முற்றத்தின் விளக்கு வெளிச்சத்தில் செர்ச் லைட் அடித்த வனசரகர் பார்வையில் யானை சிக்கியது. ‘சார், அது வீட்டுக்குள்ளே ஏறிடுச்சு..’ என்று சத்தமிட்டார். எல்லோருக்குள்ளும் ஒரு படபடப்பு ஓடத்தொடங்கியது. வெடியை நிறுத்தச் சொல்லி சைகை காட்டினார் சற்றுமுன் அங்கு வந்த ரேஞ்சர்.

 

கனகுவின் கைப்பேசி அதிர்ந்தது. ‘சார் சொல்லுங்க’ என்றாள் நடுக்கமாய்.

‘நான் சொல்றதை கவனமாக கேளுங்க. யானை இப்போ உங்க வீட்டு சிட்அவுட்டில் நிற்கிறது. வீட்டைச் சுற்றி இருக்கும் லைட் எல்லாம் போட்டுவிடுங்க. அது முற்றத்தில் இருந்து வெளிச்சம் பார்த்து இருட்டுத் தேடி ஓடுவிடும்’  என்றார். 

 

பயம் கொன்றது அவளை. இருந்தாலும் அவளுக்குள் ஒரு வைராக்கியம் தோன்றியது. எத்தனை நேரம் பயந்து அழுவது. துணிவதென முடிவு செய்தாள். குழந்தைகளை கட்டிலின் மேல் இருக்கச் சொன்னாள். சின்னவள் கேட்டாள், ‘ஆனை வீட்டுக்குள்ளே வந்தால் என்ன செய்யம்மா..’

 

‘வராது ஸ்வேதா. அம்மா பார்த்துப்பா..’ என்ற சரவணின் பதிலில் கொஞ்சம் தைரியமுற்றாள். படுக்கையறையிலிருந்து வெளிப்பட்டு சுவரோரமாய் நடந்து, ஒவ்வொரு வெளிவிளக்காய் போட்டாள். ஹாலுக்குள் வந்தபோது, முற்றத்திற்கும் ஹாலுக்கும் இடையில் இருந்த வீட்டுகதவை ஒட்டியிருந்த கம்பிகளிட்ட அலங்கார கண்ணாடி உடையும் சத்தம் அவளை உறைய வைத்தது.

 

யானையின் தும்பிக்கை உடைந்த கண்ணாடிகளின் இடையே கம்பிகளை அசைத்து பாம்பாய் ஆடிக் கொண்டிருந்தது. தூரத்திலிருந்து அவர்கள் அடித்த செர்ச் லைட்டின் ஒளியில் கண்கள் வெண்பளிங்காய் மின்னி சில்லிட வைத்தது அவளை. கையை சுவரில் நகர்த்தி முன்பக்கமிருந்த போகஸ்விளக்கை எரியவிட்டாள். சட்டென யானையின் கவனம் தனக்கு பக்கவாட்டில் அடித்த வெளிச்சம் கண்டு திரும்பியது. கம்பியை விட்டுவிட்டு மெதுவாய் முற்றத்தின் கிரில்லை வளைத்துகொண்டு போர்டிக்கோவில் இறங்கியது.

 

அதை கவனித்தவர்கள் மறுபடியும் வெடிகளையும் ராக்கெட்டுகளையும் போட, அவற்றில் ஓன்று அதன் காலிலும், மற்றொன்று அதன் வயிற்றுப் பகுதியிலும் சிராய்த்துக்கொண்டு செல்ல, வேகமாய் வீட்டின் பின்பக்கம் ஓடியது. பார்த்துக்கொண்டிருந்த கனகுவுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களே என்பது நினைவுக்கு வர, படுக்கையறைக்கு ஓடினாள்.

 

 

 V

மணி சரியாய் மூன்று ஆகியிருந்தது. எப்போது யானை கிளம்பும் என்று தெரியவில்லை. முந்தைய இரண்டு நாட்களுக்கு முன்புதான் மதுக்கரையில் இறங்கிய ஆண் யானையொன்று கோவைப்புதூரில் ஒருவரை தூக்கிப்போட்டுவிட்டு, பொள்ளாச்சி ரோடு வழி சுந்தராபுரம், போத்தனூர் என்று சுற்றி அங்கு தெருவில் படுத்திருந்த நால்வரைக் கொன்றுவிட்டது. அதனால் யானை இறங்கிவிட்டது என்றாலே வனத்துறையினரின் கண்காணிப்பு கடினமாகிவிடுகிறது. 

 

‘யானை சத்தத்தையேக் காணோமே..’ என்று ரேஞ்சர் கேட்டு முடிப்பதற்குள், உள்ளிருந்து யானையின் அசைவு விளக்குகளின் வெளிச்சத்தில் வெளீர் சாம்பலாய் தென்பட்டது. தண்ணீர் பீறிட்டு அடிக்கும் சத்தமும் கேட்டது. ‘தண்ணி குழாய் எதையோ உடைச்சிருச்சுங்க. சீக்கிரம் துரத்தனும் சார்..’ என்றார் வனசரகர்.

 

கனகுக்கு போன் செய்து,‘வெடி மறுபடியும் போடப்போறோம்மா. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க. அதை தெற்கு நோக்கி விரட்டலாம்ன்னு பார்க்கிறோம்.’ என்றார் வனசரகர்.

 

‘வேண்டாம் சார். அங்கே மலையடிவாரத்துல கொஞ்சம் தேன் பிரிக்கிற குறவர்கள் குடிசை போட்டு இருக்காங்க. மேற்கு பக்கம்தான் வீடுகளில்லாமல் மலைக்கு நேரே போறது’ என்று கனகு தெளிவாய் சொல்ல, ஆமோதித்தார் அவர்.

 


 VI

தொடர் வெடிகளின் சத்தத்திற்கும் வண்டிகளின் சைரன் சத்தத்திற்கும் யானை வெளியே வந்தது. வீட்டின் முன்பக்கம் நோக்கி யானை நகரவும், சத்தத்திற்கு சிறிது ஒய்வு கொடுத்தனர். வெளியே வந்தால் அது எங்கு நோக்கி நகரும் என்பது தெரியாததால், எல்லோரும் அவரவர் வண்டிகளின் பக்கம் ஒதுங்கிக்கொண்டனர், வேகமாய் நடந்து, முள்வேலியை எங்கு சரித்திருந்ததோ அதன் வழியே வெளியேறியது. வீட்டை விட்டு கால்வாய் பாதைக்குள் இறங்கி ஏறியதும், வனத்துறையினர் அதன் பின் ஒரு தூரம்விட்டு துரத்தத் தொடர்ந்தனர்.

 

உதவி ஆய்வாளர் கனகுவைக் கதவு திறந்து வெளியே வரச்சொன்னார். குழந்தைகளுடன் கனகு தயங்கி வெளியே வர, ‘வாங்கம்மா, போயிடுச்சு..’ என்றார். ‘இங்கே ஒரு வண்டியில் போலீஸ் நிற்கும். பயமில்லாமல் தூங்குங்க. நான் காலையில் வந்து சேதங்களைப் பார்த்துவிட்டு ரிப்போர்ட் வாங்கிக்கிறேன்..’ என்று சொன்னபோது, கனகுவுக்கு கைக்கூப்பலுடன் கண்ணீரும் சேர்ந்துக்கொண்டது.

 


 VII

மறுநாள் மாலையில் ராமுக்கு யானை உடைத்ததை எல்லாம் காட்டியபோது, தன் மனதில் பயம் இல்லையென்பதை உணர்ந்தாள் கனகு. தானே ஒற்றையில் நின்று யானையைத் துரத்தியதாய் எண்ணினாள். ‘டிரான்ஸ்பருக்கு ஒகே சொல்லிட்டாங்க, இன்னும் பதினைந்து நாட்களில் வந்துவிடும் என்று ராம் சொல்லிக்கொண்டே போக, ‘பரவாயில்லே ராம்..’ என்று கனகு அதை வெகு சாதாரணமாய் எடுத்துக்கொண்டாள்.

 

ரேஞ்சர், ‘இன்னும் இரண்டு நாளைக்கு வேலி கட்டாதீங்க. அப்புறமாக முன்பக்கம் கட்டியிருப்பதுப் போல், சுற்றுச்சுவர் கட்டிருங்க. யானைகளும் இறங்கிகிட்டே இருக்கு. நாமளும் துரத்திக்கிட்டே இருக்கிறோம். இப்படி நாம் துரத்த துரத்த அவை தங்களுடைய வலசை பாதைகளை மாற்றிக்கொண்டு வாழ கற்றுக்கொள்கின்றன.’ என்றார்.

 

விடைபெறும்போது,‘உங்க மனைவி ரொம்ப தைரியம் சார். மனிதாபிமானமும் உள்ளவங்க. தெக்கு நோக்கி யானையை விரட்டவேண்டாம், அங்கு குடிசைகளில் மக்கள் இருக்காங்கன்னு சொன்னாங்க.  பயம் ஒழித்தால் மட்டுமே யோசிக்கிற சிந்தனை வரும்..’ என்று சொல்லிச்சென்றார். அனுபவங்கள் வலசை பாதைகளை யானைக்கு மட்டும் மாற்றிக்காட்டுவதில்லை, மனிதர்களுக்குத்தான் என்பதாய் உணர்ந்தான் ராம்.

 

~~~~

 

Comments

  1. விலங்குகளின் வாழிடத்தை ஆக்ரமித்துக்
    கொண்டு அவைகளையே குறை சொல்பவர்களை நறுக் கென கொட்டுகிறது.பயந்தாங்கொள்ளியாக கதையின் துவக்கத்தில் அறிமுகமான கனகு,முடிவில் சூழலைத் திறம்பட கையாண்டது சிறப்பு

    ReplyDelete
  2. இயற்கையுடன் மனிதனுக்கான புரிதலின்மை இன்னும் தொடர்வது வேதனை. நன்றி

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந