Skip to main content

Posts

Showing posts from November 24, 2013

மழைக்கணங்கள்...

உதிர்ந்து விழுந்த சில நாட்துளிகளுள் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டன மாலை நேரத்து தேநீருடன் மழைக்கணங்கள்... மூங்கில் திரை தாண்டிய சாரலின் மிச்சங்களை கோப்பையின் சுற்றுவட்டத்துள் சுமந்து அதன் முத்தம் தொட்ட ஊதாநிற காகிதப்பூக்களை கட்டமிட்ட தரையெங்கும் கொட்டி   முற்றத்து ஊஞ்சலாய் மனதை ஆட்டிவிட்டு வடிந்து சென்றுவிட்டன ஈரப்படுத்திய இதழ்களை  எடுத்துக்கொண்டு...

கலங்கரை...

ஆக்கிரமிக்க தொடங்கியது அலை   கரையின் காலடித் தடங்களை... மணல் விட்டு நகரத் தொடங்கிய அந்த தேகத்தைக் களவாடி உள்ளிழுத்துச் சென்று அசையா நீரில் பாய்மரமாக்கிவிட்டு காற்றின் வசீகரத்திற்கு ஆட்பட்டு காணாமல் போய்விட்டது அலை.. நீரின் சலனமாய் வந்த சுழலின் சுவாசம்   தேகத்தின் வாசனை நுகர்ந்து ஆழியின் உள்நோக்கி இழுத்துச் சென்றது...  மௌனம் மட்டுமே சுமந்து இறுகியிருந்த இதயமோ அடிநோக்கி பயணிக்க மறுத்து     நீரின் மேல் தொட்டும் விரையும் காற்றின் விரல் பிடித்து கடலினுயர்ந்த அடர்ந்த தீவுக்குள் நுழைந்தது... சருகுகளின் பரப்பின் மீதும் கிளைகளின் ஊடாகவும் இழுத்துச் சென்றக் காற்றை சற்றேனும் நிறுத்தாமல் இயைந்து துவண்டது... உரசலின் காயங்கள் இறுக்கம் சூழ்ந்த அந்த இதயத்தின்   மௌனத்தை உதறவைத்து    வலியின் வார்த்தைகளைக்    காற்றுவெளி எங்கும் பரப்ப மகிழ்வாய் ஒடுங்கியது அது மீண்டும் தேகத்தின் கணப்புக்குள்... அசையும் நீரின் மட்டம் தொட்டு அலையின் சுருளில் மறுபடியும் கரை கண்டது தேகம்...