Skip to main content

Posts

Showing posts from March 3, 2013

என் அன்னை...

இன்றைய நாளில்... உருண்டோடிவிட்டன வருடங்கள் உன்னை இழந்து பால்யமும் பள்ளியும் மட்டுமே நினைவில் நிறுத்திவிட்டு மீதி வாழ்க்கை உன் கையில்தான் என்று கொடுத்துவிட்டு இந்த மண்ணையும் என்னையும் விட்டு வெகு தொலைவு பயணித்துவிட்டாய்.... இன்றும் உன்னை நினைக்க ஆயிரம் காரணங்கள் மனதின் துயரங்கள் எல்லையை தாண்டினால் உன் முகம் காட்டும் என் கண்ணாடி அழுவதை நிறுத்தி என் அகம் பார்த்திருக்கிறேன் அதில்... தைரியம் என்னும் வார்த்தையை ஏட்டிலிருந்து எண்ணத்திற்கு மாற்றியவள் நீ சமாதானம் என்னும் சொல்லை சாசுவதமாய் மனதில் நிறுத்தியவள் நீ... நாணிகோணி நடக்க சொல்லித் தரவில்லை நிமிர்ந்து நடக்க சொல்லித் தந்தாய் சண்டையிட கற்றுத் தரவில்லை சமரசமாய் வாழ கற்றுத் தந்தாய் உடைந்து போய் நின்றால் அதை கடந்து போக சொல்லித் தந்தாய் உவகை அதிகமானாலோ அமைதியாய் உட்வாங்க சொல்லிச் சென்றாய் என் முதல் நூலின் நகலொன்றை எடுத்து வைத்தேன் உனக்காக   கையொப்பம் ஏதும் இடாமல் உன் நகல் நான்தான் என்பதால்...      எத்தனையோ எண்கள் என் கைப்பேசியில் உன்னை அழைக்க என்று ஏதுமில்லை இதில்....

பிரிதலின் நிமித்தம்....

உன் சிதறிய வார்த்தைகளினூடே    மீளாது மாண்டு போகும் என் இதயம்...  கைவிட்டு பிரியும் விரல்கள்  காற்றை தொட்டு திரும்பும்... இலை இழுத்தோடும் ஓடையில்  நனைந்த பின்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்  உன் விரல்களின் வாசம் அவை விட்டு செல்லும் சில நீர்த்துளிகளை  காயப்பட்ட கண்ணீரென கொள் அன்பே... அடையாளமற்ற என்னின் அன்பு  வெளிச்சமற்ற நட்சத்திரங்களை உதிர்க்க  அவற்றின் இருட்டில்  தொலையாதிருக்க  நிலவாய் உன்னை வேண்டி காத்திருக்கிறேன்...      

கம்பளியின் இழைகளினூடே...

வருடும் குளிரின் ஒத்தடம் முன்பனியின் முகம் காட்ட கம்பளியின் இழைகளினூடே கால் உள்ளிழுத்து சுருண்டிருக்கும் அழுக்கான சரீரக்காரனின் ஆண்மை இரவின் ஆட்டம் அருகாகும் பொழுதில் கண்களின் வெளிச்சம் மோகம் உணர்த்தும் எங்கோ பெண்ணின் வாசம் நடந்தே அளந்தான் பாதையை   மீதமிருக்கும் ஆடைகளின் வழியே வழிந்தோடும் அவனின் இளமை.... விளக்கறியா சந்தின் உள்ளில் முகமறியா அவளின் முனகல்... முன்பனியின் இறக்கத்தில் மீண்டும் சுருண்டு உறங்கிப்போனான் கம்பளியின் இழைகளினூடே கால் உள்ளிழுத்து.....