Skip to main content

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்..



கோவை இலக்கிய வட்டம் 



கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது. 

70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. 

பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இலக்கிய சந்திப்பிற்கானது.


80வது கோவை இலக்கிய சந்திப்பு 



கோவை இலக்கிய வட்டத்தின் 80வது சந்திப்பு ஜூன் மாதத்திற்கானது கடைசி ஞாயிற்றுக்கிழமை (25.6.17) அன்று நடைபெற்றது. எண்பதாவது சந்திப்பு என்பதால் வழக்கமான நூல் அறிமுகங்கள் இல்லாமல், ஒரு படைப்பாளியை அவரது படைப்புகளை எடுத்துக்கொண்டு அது குறித்த விவாதங்களில் ஈடுபடுவது என்பது முடிவாயிற்று. 

அதற்காய் நவீன இலக்கிய உலகில் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமியின் படைப்புலகம் குறித்து எழுத்தாளர்களும் கவிஞர்களும் உரையாற்றினார்கள். 

க வை பழனிசாமி, சு வேணுகோபால், முனைவர் அன்புசிவா, அகிலா, யாழி, அம்சபிரியா, இளஞ்சேரல், பொன் இளவேனில், யோகா செந்தில்குமார் போன்றோர் சு ரா வின் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், உரைகள் மற்றும் கட்டுரைகள் குறித்து வாசித்தனர். 

சுந்தர ராமசாமி, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். ‘காலச்சுவடு’ வின் கர்த்தாவே சு ரா தான். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தன் அசத்தும் மொழிநடையால் தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றவர்.

1951 இருந்து 
72 சிறுகதைகள்  எழுதியுள்ளார். மூன்று நாவல்கள் - ஒரு புளியமரத்தின் கதை (1966), ஜே ஜே : சில குறிப்புகள் (1981), குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1988).




பல கட்டுரைகள், விமர்சனங்கள், நினைவோடைகள் என்று தொடர்ந்து இறுதிவரை இலக்கியத்திற்குள் இயங்கிக்கொண்டிருந்தவர்.

இலக்கிய சந்திப்பில், சு ரா வின் கவிதைகள் குறித்த கவிஞர் அம்சப்ரியாவின் கருத்துரையும் யாழியின் வாசிப்பும் அருமை. 

சு ரா வின் “என் நினைவுச் சின்னம்”  என்னும் கவிதையில்,
நான் விடைபெற்றுக் கொண்டு விட்ட செய்தி
உன்னை வந்து எட்டியதும்
நண்பா
பதறாதே
ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் இல்லை…
என்று ஆரம்பிக்கும் அக்கவிதை, 
என்னை அறியாத உன் நண்பனிடம்ஓடோடிச் சென்றுகவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்மறைந்து விட்டான் என்று மட்டும் சொல்

இப்படி முடிகிறது. 'ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் இல்லை' என்பதை அம்சப்ரியா அவர்கள் அருமையாய் விளக்கினார்.

க வை பழனிசாமி அவர்களும் சு ரா வின் கவிதையுலகம் குறித்தும் அவரின் பல்வேறு கட்டுரைகள் உரைகள் குறித்தும் நயம்பட எடுத்துரைத்தார். 

முனைவர் அன்புசிவா அவர்கள், சு ரா குறித்து ஒரு கருத்தரங்கம் 2007 யில் தஞ்சையில் நடத்தியதாகவும் அந்த நினைவுகள் குறித்தும் பேசினார். அவரின் படைப்புலகம் குறித்து ஒரு கட்டுரையும் வாசித்தார்.

சு ரா அவர்களின் "ஜே ஜே : சில குறிப்புகள்" நாவல் குறித்து யோகா செந்தில்குமார் அதன் ஆழம் மற்றும் அந்த நாவல் சார்ந்த உரையாடல்கள், மதிப்பீடுகள் குறித்தும் பேசினார். 

'ஒரு புளியமரத்தின் கதை' என்னும் சு ரா வின் முதல் நாவல் குறித்தும் அவரின் சில சிறுகதைகள், 'பிரசாதம்', 'கிடாரி', 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்பன குறித்தும் நான் (அகிலா) உரையாற்றினேன். 

'பிள்ளை கெடுத்தாள் விளை' சிறுகதை உண்டாக்கிய சர்ச்சைகள் குறித்தும் நான் பேசும்பொழுது:

"'பிள்ளை கெடுத்தாள் விளை' சிறுகதையில் ‘அது பெண் ஜென்மம். வயதுக்கு வரும். ஆணை நேசிக்கும். அவனுடன் படுத்துறங்கும். குழந்தைகள் பெறும். அவர்களையே கடைசி வரை நேசித்து சாகும். ‘ அப்படியாக எழுதியிருப்பார். 

இடையிடையே, 'தாமரை பறிக்கும் பெண் அவளுக்கு எழுத்து படிக்க வேண்டுமாம்’, 'காலத்தின் கூத்து’ அப்படின்னு நையாண்டி தொனியில் கதையிலிருக்கும் கதைசொல்லியான தங்கக்கண் சொல்வதாகவும் எழுதியிருப்பார். 

'தாமரை பறிக்கும் பெண்' என்னும் சொற்கள் 'அடுப்பூதும் பெண்’ என்பதன் மாற்றே என்று கருத்துகள் வெளிவந்தன. 1955 களில் நடந்ததைதான் 2005 யில் எழுதியிருக்கிறார் என்றும் கொள்வோம். ஆதவன் தீட்சண்யா, அழகிய பெரியவன், பாமா விமர்சித்ததை போல தலித் இனத்தவரை குறிக்கவில்லை, நாடார் சமூகம் என்று வைத்துக்கொண்டாலும், தான் சொல்லவதெல்லாம் புனைவு, பொய் என்றெல்லாம் கதைசொல்லி தங்கக்கண் தையல்காரரிடம் சொன்ன போதிலும் சு ரா வின் எழுத்தில் உள்ள ஒரு பிராமண ஹாஸ்யத்தை உணர முடிகிறது. 

இதில் இன்னொரு கோணத்தையும் நாம் பார்க்கவேண்டும். சு ரா வின் எழுத்து முறை குறித்து நாம் அறிவோம். உரையாடல்களின் மூலமே ஒரு காட்சியை, ஒரு நிகழ்வை எல்லோரும் புரியும் வண்ணம் எழுதும் ஆற்றல் கொண்டவர். அந்த நோக்கில் பார்த்தால், சாதிகளின் வேர்கள் எவ்வாறெல்லாம் காலூன்றி இருந்தன என்பதை மிகவும் பட்டவர்த்தனமாக அவர் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். 

'எந்த சண்டையிலும் சண்டையிடுபவனின் தாய் தகப்பன் முதல், அவன் சாதி, மதம் மற்றும் சாதி புத்தி என்று ஓன்று இருக்கிறதே அதுவரைக்கும் இழுக்காமல் அன்றைய சண்டைகள் இருந்ததில்லை' என்பதை சு ரா காட்டுகிறார்.

இந்த 'பிள்ளை கெடுத்தாள் விளை' சிறுகதை குறித்து ஜே பி சாணக்யா, அம்பை, க பஞ்சாங்கம், சுகுமாரன், ரவிக்குமார், இமையம், பி ஏ கிருஷ்ணன், பெருமாள் முருகன், நாஞ்சில் நாடன் போன்று அனேகம் ஆளுமைகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சனம் வைத்திருக்கிறார்கள்.  

க. பஞ்சாங்கம் அவர்களின் கூற்றுக்குள் சில இடங்களில் பொருந்திப்போகமுடிகிறது. நாடார் இன மக்களையே குறிக்கும் என்பதை அவர்களின் தோள்சீலைப் போராட்ட குறிப்பும் இருக்கிறது

பெருமாள் முருகன் அவர்களின் கருத்தில், 'இந்த கதை அவரின் சிறந்த கதை ஒன்றுமில்லை, நிறைய நுட்ப தவறுகள் உள்ளன' என்றும் கூறியிருக்கிறார். 'அப்படி ஒரு ஒழுக்க பிறழ்வு நடந்ததாக வாசிப்பில் கணிக்கமுடிகிறது, ஆனால் நடக்கவில்லை என்று கூறுவதை மறுக்கிறேன். அப்படிதான் இருந்ததாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.' என்கிறார். மேலும் அவர், 'அதற்காக எழுத்தாளரை சாடுவது தவறு, அது எழுத்துரிமை' என்கிறார். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அம்பையின் தர்க்கம் பெண் சார்புடையது. பெண்ணுக்கும் ஆணுக்குமான உயர்வு தாழ்வு போராட்டத்தைச் சொல்வது. பெண் உயர்ந்தால் அவளை திருமணம் செய்விப்பது கடினம் என்னும் சமூக கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது. 'பெண்ணை வீழ்த்த அவளின் ஒழுக்கமுறைகளே விமர்சிக்கப்படுவது இன்று நேற்றல்ல தொன்றுதொட்டு இருப்பது. நாளை விடியலும் அதுவே. பதிலாய் பெண்களின் மனப்போக்கு மாறிவருகிறது இப்போது'

சுகுமாரனின் விமர்சனம் இலக்கிய நோக்கை அரசியல் வழியாக மட்டுமல்ல மானுட நோக்கோடும் பார்க்கவேண்டும் என்பதே சரி.
"

அடுத்து சு வேணுகோபால் அவர்கள் பேசும்போது, தனக்கும் அவருக்குமான நெடுநாளைய நட்பு குறித்தும், தமிழ் இலக்கியத்தை வேறொரு தளத்திற்கு இட்டுச்சென்ற பெருமை சு ரா வையேச் சாரும் என்றும் சொன்னார். 'பிள்ளை கெடுத்தாள் விளை' சர்ச்சைகள் குறித்தும் பேசினார்.  

கூட்டத்தை வழிநடத்திய இளஞ்சேரல் அவர்கள் சு ரா வின் வாழ்க்கை, படைப்புகள் குறித்தும் படைப்பாளிகளுக்கும் அவருக்குமான உறவு, அவரின் உபசாரம், அனைவருக்கும் கூடாரமாய் இடம் கொடுத்த 'சுந்தர விலாசம்' என்னும் அவரின் இல்லம் குறித்தும் பேசினார்.  

சுந்தர ராமசாமி அவர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய சாதனை கொண்டவர். சிறந்த ஒரு கதைசொல்லி. நிறைய கதைசொல்லிகளை கதைக்குள் கதையாய் இட்டுச் செல்லக்கூடிய வல்லமை அவரின் எழுத்துக்கு உண்டு. அதிகமான சிறுகதைகளின் சொந்தக்காரர். அவரின் எழுத்துகள் தீவிர வாசிப்புக்கு, மிகுந்த அடர்த்தியும் அனுபவ செறிவும் மொழி வளமும்,  வார்த்தை ஜாலமும், மொழி நுணுக்கமும், வட்டார வழக்கு மொழிநடையும் கொண்டவை. 

தன் வாழ்வு முழுமையும் இத்தனை படைப்புகளை இலக்கியத்திற்கு தந்தமைக்கு சு ரா அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். 

அருமையான ஒரு கலந்துரையாடலாகவும் சுந்தர ராமசாமி அவர்கள் குறித்த ஒரு சிறு கருத்தரங்கம் போலவும் அன்றைய சந்திப்பு அமைந்திருந்தது மனநிறைவே. 


Comments

  1. ***சு ரா வின் எழுத்தில் உள்ள ஒரு @@பிராமண ஹாஸ்யத்தை@@@ உணர முடிகிறது. ** பிராமண ஹாஷ்யம்? அப்படினா என்னங்க அர்த்தம்? திடீர்னு தமிழ்ல எழுதிக்கிட்டு இருக்கும்போது இதுபோல் சமஸ்கிரதத்தை புகுத்துறீங்க. என்னை மாதிரி பாமரனுக்கு சமஸ்கிரதம் எல்லாம் தெரியாதுங்க. அதை மனதில் கொண்டு எழுதுனீங்கனா "அம்மா" என்ன சொல்றீங்கனு எனக்கும் என்னைப்போல் பாமரர்களுக்கும் கொஞ்சம் புரியும்!

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவை, தாங்கள் உயர்வென்ற தோணியில் சொல்லப்படும் நகைச்சுவை.

      Delete
  2. ***சு ரா வின் “என் நினைவுச் சின்னம்” என்னும் கவிதையில்,
    நான் விடைபெற்றுக் கொண்டு விட்ட செய்தி
    உன்னை வந்து எட்டியதும்
    நண்பா
    பதறாதே
    ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் இல்லை…
    என்று ஆரம்பிக்கும் அக்கவிதை,
    என்னை அறியாத உன் நண்பனிடம்ஓடோடிச் சென்றுகவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்மறைந்து விட்டான் என்று மட்டும் சொல்*** இந்த "தன்னடக்கத்தில்" கூட "தான் அல்லது நான்" என்கிற அகந்தை தெளிவாகத் தெரியத்தான் செய்யுது. ஒருவேளை எனக்கு மட்டும்தான் தெரியுதா???

    ReplyDelete
    Replies
    1. தன்னிலை வைத்து எழுதுவது கவிதையில் வழக்கம்தானே. அதுவும் சு ரா சிறந்த எழுத்தாளர் மட்டுமே. அவரின் நிறைய கவிதைகளில் 'என்', 'நான்' போன்றவை இடம்பெற்றிருக்குமே.

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந