Friday, 6 February 2015

துடுப்பின்றி எங்கு நோக்கி போவதென..



மலையிறக்கம் பாயும் நீரின் வழி
துடுப்பின்றி இழுபடும் தோணி
அகண்ட படுகை கண்டு நிதானித்து
தொட்டுச்சென்ற காற்றுடன் காதல் கொண்டு
தன் விசை மறந்து பயணிக்கும்

காற்று விலகும் நொடியில்
சூழும் அந்தகாரத்தில்   
துடிப்பின்றி எங்கு நோக்கி போவதென
திசையறியாது சமைந்து போகும்..   
நனைந்த அடிபலகையின் பாரம்
நீரைவிட கனத்துப்போகும்..
புன்னகை பூக்களின் மந்தகாசம் காட்டி
சுற்றியிழுக்கும் நீண்ட காம்பு சுமந்த கொடிகளின்
ஆழம் தேடியலையும் நினைவுகளை அறுத்து,
வெளிச்ச சந்தங்களை தேடி, பயணிக்க உந்தும்..

துளிர்க்கும் சிறு சுவாசத்தில்
துடுப்பின்றியும் திசையின்றியும் மேலெழும்..
நெருங்கி விலகிய அந்தகாரத்தின் நிழல்
இரவின் வானமாய் தன் மேல் படர்ந்திருக்க
கரை தேடி கண்களை அலையவிடும்
காற்றுடனான காதலை ஒறுத்து..
  
  


2 comments:

  1. துடிப்பின்றி எங்கு நோக்கி போவதென
    திசையறியாது சமைந்து போகும்..
    நனைந்த அடிபலகையின் பாரம்
    நீரைவிட கனத்துப்போகும்..

    "கவர்திழுத்த படகில்
    கண்ணுக் கினிமையான
    வரிகள்"

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....