Sunday, 19 May 2013

வாயுள்ள பிள்ளை தான்...






பேசாமலே படுத்திருந்தது படிக்கட்டில் 
சாம்பலில் வரிகள் அணிந்த அந்த கறுப்புப் பூனை 
எஜமானியம்மா வருவதை உறுதி செய்தது அதன் காதுகள் 
மெல்லக் கண் திறந்துப் பார்த்துக் கொண்டிருந்தது...

பெரிய கிண்ணியில் பால் வைத்திருந்தாள் 
கொல்லைப்புறத் தட்டியை திறந்து 
குரைத்துக் கொண்டிருந்த அந்தக் கொழுத்த நாயின் தட்டில் ஊற்றினாள் 
மறுபடியும் உள்ளே சென்று வந்தாள்... 

கண்ணாடிக் குடுவை முழுவதும் தானியங்களை சுமந்து வந்து 
கொக் கொக் என்று குரலெழுப்பிக் கொண்டிருந்த
கோழிகளின் கூடாரத்தைத் திறந்துவிட்டாள்... 

இருட்டில் இருந்து வெளிச்சத்தை பார்த்து மிரண்டு 
ஆளுக்கொரு திசையாய் ஓடின அவை...  
விரிந்த டப்பா ஒன்றில் தட்டினாள் தானியங்களை 
அடித்துபிடித்து பறந்து வந்தன ஓடிப் போனவைகள் 
மறுபடியும் உள்ளே சென்று வந்தாள்...  

கையில் ஒரு காப்பிக் கோப்பையும் பிஸ்கட் தட்டுமாய்
திண்டில் அமர்ந்து உண்ணத் தொடங்கினாள்...

பூனை மெதுவாய் ஒன்றரைக் கண் வழியே பார்த்தது 
தன்னைக் கவனிக்காதக் கோபம் தலைத் தூக்கியது  
புர் என்று சத்தம் எழுப்பியது 
கவனிக்காமல் காப்பியை ஊறிஞ்சிக் கொண்டிருந்தாள்...
  
எழுந்து சென்று அவளின் காலில் உரசியது உடம்பை 
மியாவ் என்று குரல் கொடுத்தது  
குனிந்துப் பார்த்து அதை தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்...

எழுந்துட்டியா என்று ஆச்சரிய குரல் கொடுத்தாள் 
கொஞ்சம் காப்பியை சாசரில் ஊற்றினாள் 
பூனையும் குடித்துத் தொடங்கியது ஆவலுடன்...   



9 comments:

  1. அழுகிற பிள்ளைதானே பால் குடிக்கும் ??!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...சரிதான் தோழி...

      Delete
  2. காப்பியை விரும்பும் பூனையை ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. எங்க பக்கத்து வீட்டு பூனை காப்பிக் குடிக்கும்...அதுதான் இதுக்கு விதை...

      Delete
  3. கொடுத்து வச்ச பூனை .மடியில் உட்கார்ந்து காப்பி குடிக்கும் அதிஷ்டம்

    ReplyDelete
    Replies
    1. மற்றவற்றை விட அதற்கு உயர்வான இருக்கைதான்...நன்றி

      Delete
  4. அருமையாகச் சொன்னீர்கள்
    நாம் பிற ஜீவன்களை எப்படித்தான்
    வளர்த்தாலும் பூனை போல
    பிற உயிரினங்கள் உரிமை
    எடுத்துக் கொள்வதில்லை
    அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அதன் குழைவு வேறு எந்த விலங்குக்கும் வராது ...நன்றி உங்களுக்கு...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....