Sunday, 6 January 2013

பூச்சாண்டி.....



சோறு ஊட்டும் போதும், தூங்க செய்யும் போதும்
ஒரு தாய் தன் குழந்தைக்கு பூச்சாண்டியை வைத்து
படமும் பயமும் காட்டுவாள்...



சாப்பிடும் போது பூச்சாண்டியை நினைக்கும் ஒரு குழந்தை
தான் பலசாலியாகி அந்த பூச்சாண்டியை எதிர்த்து நிற்க வேண்டும் என்கிற  தைரியம் பெறும்...



தூங்கும் போது அவனை நினைக்கும் ஒரு குழந்தை
யாரையும் ஏற்றுக் கொள்ளவோ எதிர்க்கவோ தைரியமற்று
தன் அன்பில் இருப்பவர்களையே காயப்படுத்திப் பார்க்கும்...



இவை அனைத்தும் பூச்சாண்டியை அறிமுகப்படுத்தும்
அந்த தாயிடம் தான் இருக்கிறது...



அவளின் அந்த செயல் தவறில்லை - ஆனால்
அதை போராடி வெற்றி கொள்ளும் தன்மை அல்லது 
அதை பார்த்து பயந்து ஒளிந்து கொள்ளும் தன்மை
இரண்டில் எதை அவள் கற்று தருகிறாள் தன் குழந்தைக்கு  
என்பதில் தான் அக்குழந்தையின் வாழ்வின் சூட்சமமே அடங்குகிறது....



ஆறடி உயர்ந்த மனிதனாய் வளர்ந்து 
நாலு பேரை அடித்துவிட்டால் அவனை தான் 
தைரியமாய் வளர்த்திருக்கிறோம் என்று 
பெற்றோர் பெருமை கொள்ள முடியாது....
பிரச்சனைகளை மனதளவில் சந்திக்கும் தைரியம் இழந்தவன் தான் 
அதை உடலளவில் எதிர்க் கொள்கிறான்...... 



அந்த குழந்தையின் சிந்தனையில்
தெளிவாய் சிந்திக்கும் அறிவையும் 
தைரியமாயும் யோசனையாகவும் 
அடுத்தவர்களை காயப்படுத்தாமலும் 
நடந்துக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் 
கொடுத்தால்தான் அவர்கள் தன் குழந்தையை 
நல்ல முறையில் வளர்த்ததாக அர்த்தம்....



வளர்ப்பு முறையில் தவறு செய்யாதீர்கள் 
நாளை அக்குழந்தையால் சமூகமோ அல்லது 
யாராவது ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்டால் கூட 
அந்த தவறு பெற்றோரையே சேரும்....



அடுத்த முறை யாராவது பூச்சாண்டியை கைக் காட்டினால் 
தெளிவுபடுத்துங்கள் அவர்களுக்கு
பூச்சாண்டிதான் சமூகத்தின் காவல்காரன் என்று.... 



24 comments:

  1. ///வளர்ப்பு முறையில் தவறு செய்யாதீர்கள்
    நாளை அக்குழந்தையால் சமூகமோ அல்லது
    யாராவது ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்டால் கூட
    அந்த தவறு பெற்றோரையே சேரும்....////


    உண்மை மிக மிக உண்மை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா...

      Delete
  2. பூச்சாண்டி...இது புதுசா இருக்கே...

    ReplyDelete
    Replies
    1. பூச்சாண்டி பழைய அதே ஆள்தான்....கருத்து மட்டுமே புதுசு...நன்றி ஜீவா...

      Delete
  3. சூசகமாய்
    சூழ்நிலையை சமாளிக்கும்
    பொழுதுகளில்
    வாழ்வின்
    சூத்திரத்தையும்
    சூட்சுமமாய்
    உரையேற்ற வேண்டுமென
    மிக அழகாய்
    உரைக்கும் கவிதை...

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி வளர்க்கப்படுபவர்களால் நாம் சில கஷ்டங்களை அனுபவிக்கும் போதுதானே இந்த மாதிரி அனுபவ சொற்கள் தோன்றுகிறது...நன்றி மகேந்திரன்...

      Delete
  4. மிக அருமையான அறிவுரை, ஆலோசனை!

    ReplyDelete

  5. வணக்கம்!

    வேப்பமர உச்சியில் நின்னு
    பேயொன்னு ஆடுதுன்னு
    விளையாடப் போகும்போது
    சொல்லி வைப்பாங்க - உன்
    வீரத்தைக் கொழுந்திலேயே
    கிள்ளி வைப்பாங்க!

    வேலையற்ற வீணா்களின்
    மூளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கையாகக் கூட
    நம்பிவிடாதே! நீ
    வீட்டக்குள்ளே பயந்து கிடந்து
    வெம்பி விடாதே!

    பட்டுக் கோட்டை படைத்திட்ட
    பாட்டுக் குரையைப் பகன்றுள்ளீா்!
    கொட்டும் மழையில் நனைந்திட்ட
    குளிர்ச்சி நெஞ்சுள் கூடியது!
    கட்டுப் பாடும் கட்டளையும்
    கருத்தைச் சிதைக்கக் கூடாது!
    மொட்டு மனங்கள் முகிழ்த்தாட
    மொழிந்த வழியை வாழ்த்துகிறேன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. நிஜமான வரிகள் கவிஞரே...இன்று நான் இதை உணர்ந்தேன். அதுதான் இந்த கவிதையின் பிறப்பிடம்...

      Delete
  6. அருமையாகச் சொல்லி இருக்கிறிகள்.நல்ல வேளை என் தாய் எந்தப் பூச்சாண்டியையும் காட்டாமல் வளர்த்தார்கள்.
    இல்லாவிட்டால் பரம்பரையாக அந்த பயங்கரப் பூச்சாண்டி தொடர்ந்திருப்பார். உங்கள் பூச்சாண்டி இனி வலம் வரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. பூச்சாண்டியை வேரோடு அழிக்கவும் முடியாது....இன்றும் நைட்டி மாட்டி கொண்டு சோறு ஊட்டும் பெண்கள் கூட அவனை விடுவதில்லை....நன்றி வல்லிசிம்ஹன்...

      Delete
  7. பூச்சாண்டிகள் இந்த சமூகத்தின் பொய்யுருதானே?அதை ஏன் நம் மனதில் விதைக்க வேண்டும்,பூச்சாண்டிகள் யார் என்பதை மிகச்சரியாக புரிந்து கொள்வோமானால் நம்மிடம் பயமில்லை.

    ReplyDelete
    Replies
    1. பூச்சாண்டி என்பது பொய் என்பது விவரம் தெரிந்த மனிதர்களுக்குதானே விமலன்....எளிதில் சோறு ஊட்டும் வேலையை முடிக்க உதவும் பூச்சாண்டி நடுத்தர தட்டு பெண்களை விட்டுவைப்பதில்லை...

      Delete
  8. நல்ல பதிவு, சரியாச் சொன்னீங்க. பூச்சாண்டி பயத்தால், உடலால் பலசாலிதான் உலகில் வல்லவன் என்கீற கருத்தையும் குழந்தைகள் மனதில் கொண்டுவிடுகிறார்கள். நடிக-நடிகையர்களைக் கண்டு புற அழகே உண்மை அழகு என்று நினைப்பதுபோல..!!

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும் தாய் தான் இந்த தவறை செய்கிறாள். நன்றி தோழி...

      Delete
  9. அடுத்த முறை யாராவது பூச்சாண்டியை கைக் காட்டினால்
    தெளிவுபடுத்துங்கள் அவர்களுக்கு
    பூச்சாண்டிதான் சமூகத்தின் காவல்காரன் என்று....

    குழந்தைகள் மனதில் வீரத்தை விதைக்கவேண்டும் ..

    ReplyDelete
    Replies
    1. பெரியவர்கள் ஆனபிறகும் எத்தனை பேர் பயத்தோடு வாழ்கிறார்கள். மனைவியை இருட்டுக்கு துணைக்கு அழைத்து செல்லும் ஆண்களை பார்த்திருக்கிறேன் ராஜேஸ்வரி....

      Delete
  10. //பிரச்சனைகளை மனதளவில் சந்திக்கும் தைரியம் இழந்தவன் தான்
    அதை உடலளவில் எதிர்க் கொள்கிறான்...... //
    மிகவும் ரசித்த வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தானே மேம்....

      Delete
  11. தெளிவாகச் சிந்திக்கும் அறிவையும் மனத்தைரியத்தையும் ஊட்டி வளர்க்க வேண்டும். அருமையான கருத்து.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி

      Delete
  12. யதார்த்தமான உண்மை எழுத்துக்கள் !நன்றி சகோதரி !

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....