Sunday, 26 August 2012

எனக்கு எண்பத்தியிரண்டு


 உனக்கு எழுபத்தியாறு...




ஆட்டோக்காரரின் துணையோடு
உன் கைபிடித்து இறக்கி
ஆஸ்பத்திரியின் நாற்காலியில்
அமரவைக்கும் போது
காலையில் வீட்டில் கேட்ட குரல்கள் ஞாபகத்தில்
‘இதுங்கல்லாம் வாழலைன்னு யார் அழுதா’ 

சீட்டு எடுத்துவிட்டு திரும்பினால்
நாற்காலிகள் நிரம்பியிருந்தன....
ஒரு சுவற்றில் சாய்ந்து நின்று
உன்னையே பார்த்து கொண்டிருந்தேன்

இளவயதில் உன் சேலை
முந்தானை என் கையில்
ஆனாலும் பம்பரமாய் நீ.....

நடுவயதில் உன் சேலை
முந்தானை என் பிள்ளைகளின் கையில்
அப்போதும் பம்பரமாய் நீ.....

மத்திம வயதில் உன் சேலை
முந்தானை உன் இடுப்பில் சொருகப்பட்டு
அதில் உன் பேரப்பிள்ளை
அப்போதும் முடியாமல் பம்பரமாய் நீ......

வயது போன காலத்தில் உன் சேலை
முந்தானை மீண்டும் என் கைகளில்
உன் கை எலும்புகள் முறுகிய நிலையில்
உன் சேலையே நான்தானே
இப்போது பம்பரம் நீ இல்லை
நான்தான் உன்னை சுற்றி பம்பரமாய்....

எத்தனையோ இரவுகளை
பார்த்துவிட்டோம் கடந்தும்விட்டோம்
சேர்ந்து சிரித்திருக்கிறோம்
சண்டையிட்டிருக்கிறோம்
அழுதும்கூட இருக்கிறோம்
நோயின் அழுத்தம் தாங்காமல்
உன் சாவை நீ உரக்க அழைக்கும்
இப்போதைய இரவின் குரலை மட்டும்
தாங்கமுடியவில்லை அன்பே....

நான் மரித்து நீ உலகில்
நீ மரித்து நான் உலகில்
யோசித்து பார்க்கிறேன்
இரண்டில் எது சரியென்று
இரண்டுமே சரியில்லை....
இருவரும் மரித்து
நம் உலகில் நாம்
எப்போதும் போல்
ஒன்றாகவே.....


27 comments:

  1. மனதை நெகிழ வைத்த கவிதை

    ReplyDelete
    Replies
    1. எழுதி முடித்த பிறகு எனக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது......

      Delete
  2. பதிவர் ச்ந்திப்பிலேயே கேட்டேன். அருமை என்றுக் கூட சொல்ல வருத்தமாக இருக்கிறது.இன்றைய இளையத் தலைமுறைகளின் கவனிப்பின்மையை எண்ணி...

    நல்லப் பதிவு

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...அவர்களின் அவசர வாழ்க்கை அப்படி....

      Delete
  3. உணர்வுக்குவியல்!

    ReplyDelete
    Replies
    1. வாக்கையின் உண்மை....நன்றி...

      Delete
  4. உங்களிடம் விழாவிலேயே சொன்னேன். என் அம்மா அப்பாவின் இன்றைய நிலையை நினைவூட்டும் கவிதை. கேட்ட போது அழுகையை அடக்க சிரமப்பட்டேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறியபோதே உங்களின் வலி புரிந்தது மோகன்....

      Delete
  5. யோசித்து பார்க்கிறேன்
    இரண்டில் எது சரியென்று
    இரண்டுமே சரியில்லை....
    இருவரும் மரித்து
    நம் உலகில் நாம்
    எப்போதும் போல்
    ஒன்றாகவே..//.

    "'நம் உலகில் நாம் "
    வார்த்தைப் பிரயோகம் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி அவர்களே....

      Delete
  6. நேற்றே கேட்டேன்... இதயம் அழுகிறது...! நிச்சயம் சிலருள் மாற்றங்களை ஏற்படுத்தும்! நன்றி

    ReplyDelete
    Replies
    1. சில மாற்றங்களை எதிர்பார்த்துதானே கவிதை படிக்கிறோம்....நடந்தால் சந்தோஷம்தான் சாமுண்டேஸ்வரி......

      Delete
  7. பதிவர் சந்திப்பின் நேரலையில் கேட்டேன்.முதியோரின் உள்ளக் குமுறல் கவிதையாய். அருமை.ஒரு சிலராவது வயோதிகத்தைப் புரிந்து கொண்டால் சரி

    ReplyDelete
    Replies
    1. நன்றி எழில்...
      உங்களை பதிவர் சந்திப்பில் எதிர்பார்த்தேன்.....கோவையிலாவது சந்திப்போம்...

      Delete
  8. என் பெற்றோரையும் நினைவுபடுத்திக் கலங்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. வயதானவர்கள் நம் சொத்து. அது நமக்கு புரிவதற்குள் காலம் கடந்து அவர்களும் நம்மை கடந்துவிடுகிறார்கள் ...
      நன்றி ஹுசைனம்மா....

      Delete
  9. இதயத்தை நெகிழ வைத்த கவிதை வரிகள் அருமை சகோதரி!
    வாழ்த்துக்கள்

    உண்மை விரும்பி.
    மும்பை

    ReplyDelete
    Replies
    1. நிஜம் என்றுமே நம்மை நெகிழவைக்கும் ....
      நன்றி....

      Delete
  10. அருமை அருமை...கேட்கும்போதும் சரி படிக்கும்போதும் சரி..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோவி.....

      Delete
  11. wநீங்கள் வாசிக்கும்போது இன்னும் அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருந்தது.

    ReplyDelete
  12. Touches one's heart with its raw pain.

    ReplyDelete
  13. என்னை மிகவும் கண்கலங்க வைத்துள்ளது இந்தக்கவிதை.

    [எனக்கு 62 அவளுக்கு 58]

    மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.


    VGK

    ReplyDelete
    Replies
    1. உங்கள் இருவரின் ஆசிகளுக்கும் பாராட்டுக்கும் என் நன்றிகள்...

      Delete
  14. Nice kavithati...

    Please read my blog http://www.venkicorner.blogspot.in/2012/08/blog-post.html

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....