Monday, 6 February 2012

யதார்த்தம்.......

சுடுகிறது.....






நுழையும்போதே பார்த்தேன் படுக்க வைக்கபட்டிருந்த அந்த மனிதரை
பக்கத்தில் முதுமையிலும் அருமையான மனைவி 
சற்று கலங்கலான கண்களுடன்....

உறவுகளின் சின்ன சின்ன நலம் விசாரிப்புகள் 
மெலியதாக மலர்ந்த புன்னகைகள்
'இவங்கதான்' என்ற அறிமுகங்கள் 

ஹாலை தவிர்த்து உள் அறைகளில்   
பெண்களின் சிறுகுரல் பேச்சுகள் 
அதிரடி சிரிப்பு சிரித்த ஒருத்தியை அதட்டும் மற்றொருத்தி 
'செத்த வீடு....மெதுவாக' என்று....
மருமகள்களின் 'ஒரு பெருசு ஒழிந்தது' என்னும் மனப்பாங்கு 

'பட்டு எடுக்கணுமா அல்லது சாதா காட்டன் போதுமா' 
'நாத்தனார்களுக்கும் துணி எடுக்கணுமா'

'திருநெல்வேலி கட்டா?  மதுர கட்டா? இல்ல மேலூரா?
மேலூருன்னா உருமா எல்லாம் கட்டணும், மேளம் எல்லாம் சொல்லணும்...
கொஞ்சம் நேரமாகும்...'
'மதுர கட்டே போதும்...சிக்கிரம் வீட்டுக்கு போணும்'

'தூக்க சாயங்காலமாகும்...சாப்பாடு சொல்லிருங்க 
நிறைய பேருக்கு சுகர் இருக்கு'  


'அவர் மேல சாத்திரத்துக்கு பட்டு வேட்டி குடுங்க'
'சின்ன விளக்கா ஒன்னு தலைமாட்டில வைங்க'
'அந்தம்மா கிட்டே கேளுங்க...' என்று மருமகள்
ஒவ்வொரு தடவையும்  சாவிகொத்து
அந்த அம்மாவின் இடுப்பிலிருந்து போய்வந்தது.....



'தூக்கியாச்சின்னா அழாதீங்கம்மா...அவரை நினைக்காதீங்க'

அந்த அம்மா 'இனிமே நினைச்சு என்னாகபோகுது'



'நைட்டி மாத்திக்கவா' என்று 
நீர்மாலை போய் நனைந்து வந்த மகள்கள் 



இப்படி நிறைய கேள்விகள்.....நிறைய பதில்கள்.....


'இருக்கும் போதும் அவரவர் வேலையைத்தான் பார்த்தாங்க..
நாம போன பிறகும் அதே வேலையைத்தான் பாக்கிறாங்க'
இது ஹாலில் நடுநாயகமாக ஐஸ் பெட்டியில்
மாலை குவியல்களுக்கு நடுவில் படுத்திருந்த அவர்.....  


என்றோ சந்தித்திடும் உறவுகளுக்கு
சாவு வீட்டுக்கும் கல்யாண வீட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனது 
சாவும் சம்பிரதாயம் ஆகிப்போனது
இதுதான் கல்யாண சாவோ.....




  

















8 comments:

  1. ஒவ்வொரு வார்த்தையிலும் யதார்த்தம் பளிச்சிடுகிறது..
    உண்மை எப்போதும் சுடத்தான் செய்யும் சகோதரி...

    ReplyDelete
  2. மிகுந்த மனவருத்தத்தையும் தருகிறது, மகேந்திரன்.....

    ReplyDelete
  3. நான் இப்படி ஒரு நடையில் எழுதுவதை
    மிகவும் விரும்புவேன் அப்படித்தான் எழுதுகிறேன்
    ஒரு சட்டத்திற்குள் நம் சிந்தனைகளை ஒடுக்கிக் கொள்ளாது
    வடிவங்களையும் வார்த்தைகளையும் உணர்வு
    முடிவு செய்து கொள்ளட்டும் என விட்டுவிடுவேன்
    ஒரு சிறுகதைக்கு உரிய மிகச் சுருக்கமான அழுத்தமான சூழல் சித்தரிப்பு
    மிக்ச் சரியான உணர்வைச் வெளிப்படுத்த போதுமான உரையாடலகள்
    கவித்துவமான சொற்களும் முடிவும்
    வண்ண காவியங்களாக ஓவியங்களையும்
    அழகிய ஓவியங்களாக கவிதைக் காவியங்களையும்
    கொடுக்கும் உங்கள் முயற்சி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது மாதிரி இப்படி சாதாரணமாக மனதில் பட்டதை எழுதுவது எளிதாகத்தான் உள்ளது. நன்றி ரமணி அவர்களே......

      Delete
  4. எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ,விருதினை
    என் மனம் கவர்ந்த தங்கள் பதிவுகளுக்கு
    பகிர்ந்து அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்
    தங்கள் பதிவுலகப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி அவர்களே.....

      Delete
  5. வாழ்க்கையில் நடக்கும் நிஜங்களை வார்த்தைகளாக்கி மனதை தொடும் விதத்தில் நீங்கள் எளிதிய யதார்த்தம் மிக அருமை, வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. யதார்த்தங்கள் தானே நம்மை வெகுவாக பாதிக்கிறது.....நன்றி....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....