Skip to main content

பெண்களும் அவர்களின் கூச்சமும்...


மகளீர் தினம்...



நம்ம நாட்டில அடுப்படியே கதின்னு வாழ்ந்துக்கிட்டிருந்த பெண்ணினம் ராக்கெட் ஏறி இறங்கியாச்சு. காலையில் இருந்து வாழ்த்து சொல்லி வாழ்த்து கேட்டு சந்தோஷமா இருக்கு.

கணவர், பையன்னு வீட்டுல இருக்கிற ஜனத்தொகை கூட வாழ்த்து சொல்லியாச்சு. இது இன்னைக்கு மட்டும்தான். மத்த நாள்ல எப்படின்னு எங்களுக்குதான் தெரியும்.

ஏகப்பட்ட சுதந்திரம் எங்களுக்கு இருக்கிறதா சொல்லிக்கிறாங்க. உண்மைதான். கல்வியில், வேலையில், கலைத் துறைகளில், வீட்டில் என்று இருக்கிறதுதான். இது பெரும்பாலும் நகரத்து பெண்களுக்கு சற்று அதிகமாகவே கிடைக்கிறது. டவுன் பெண்கள் பட்டணத்துக்கு வந்து சிறுசேரியிலும் சோலிங்கநல்லூரிலும் இறங்கியவுடன் அவங்களுக்கும் கிடைத்துவிடுகிறது. முகம் மாறுது, டிரெஸ், செருப்பு, ஹேர் ஸ்டைல் எல்லாம் மாறிப்போகுது.

ஆனாலும் அடிப்படையான ஒரு விஷயத்தில் மட்டும் பெண்களுக்கு இன்னும் விடிவுகாலம் சரியாக வரவில்லை. அதைதான் நான் இங்கே சொல்ல நினைக்கிறேன்....   



ஒரு பயணத்தின் போது, என்னருகில் அமர்ந்திருந்த பெண்மணி சற்று நேரமாகவே நெளிந்துக் கொண்டிருந்தார். என்னை தாண்டிதான் அவர் ரெஸ்ட் ரூம் போக வேண்டும். மெதுவா எழுந்துகிற மாதிரி செய்து பழையபடி உட்கார்ந்துவிடுவார். நான் அவரிடம், நான் எழுந்துக்கட்டுமா, நீங்க டாய்லெட் போயிட்டு வாங்க என்றேன். அவசரமாக மறுத்தார். ஏன் என்று கேட்டதற்கு, இப்போ எல்லோரும் உட்கார்ந்துதிருக்காங்க, கம்பார்ட்மென்ட் அமைதியா இருக்கு. நான் எப்படி இப்போ எழுந்து போக முடியும்ன்னு கேட்டாங்க.

நான் திருப்பியும் ஏன்னு கேட்காமலேயே பதில் வந்தது. அவங்க மட்டும் தனியா அந்த நீண்ட கம்பார்ட்மென்ட்டின் பாதி தூரத்தை நடந்து கடந்து டாய்லெட் போனா, உட்கார்ந்திருக்கும் ஆண்கள் எல்லாம் இவங்க டாய்லெட் போறதை கவனிப்பாங்க, அதை பற்றி யோசிப்பாங்க என்பதுதான் அது. அந்த அம்மணியின் இந்த பேச்சுக்கு காரணம் கூச்சம்தான்...வேறு ஒன்றுமில்லை.

இப்படி அவர்கள் சொன்னதும், வருடங்களுக்கு முன்பு, எழுத்தாளர் ஷோபா டே (Shobha De) அவர்களின் ‘Loo...and Behold!’ என்கிற தலைப்பில் column ஒன்றை ‘The Week’ இதழில் படித்தது ஞாபகத்தில் வந்தது. அதை படித்த பிறகுதான் நானும் சரியானேன். அன்றிலிருந்து ஷோபா டே என் favourite writer ஆனது வேற விஷயம்.    


அதில் அவங்க ரொம்ப காமெடியா, ஆனா தெளிவா எழுதியிருப்பாங்க. எப்படி யோகா எல்லாம் செய்யாமலே பெண்கள் இதை அடக்கக் கற்றுக் கொள்கிறார்கள் என்று ஜாலியா சொல்லியிருப்பாங்க. அரசு மருத்துவமனைகளில், பொது இடங்களில், பெண்களின் இந்த பிரச்னை பற்றி ரொம்ப வருத்தப்பட்டும் சொல்லியிருப்பாங்க. இது ஒரு பெரிய விஷயமாக யாருக்கும் தோன்றியதில்லை என்பதே அவர்கள் கருத்து.   


ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில். கல்லூரிகளில் என்று எல்லா இடங்களிலும் பெண்களின் இந்த கூச்ச சுபாவம் அவர்களை மணிக்கணக்கில் இயற்கை உபாதையை அடக்க கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் சிறுநீரகத்தின் செயல்பாட்டை கூட அவர்களால் நிப்பாட்ட முடிகிறது, அதன் விளைவாய் சிறுநீரக கோளாறுகள் வரும் என்பதை அறிந்திருந்தும். 

அதிக நேரமாய் சிறுநீர் அடக்குவதால் சிறுநீரகம் நாளடைவில் பழுதடையவும் அதன் தசைகள் வலுவிழக்கவும் செய்துவிடும். தசைகள் வலுவிழப்பதால் பிற்காலத்தில் சிறுநீர் அனிச்சையாகவே கழிக்கும் நிலை உருவாகும்.

பெண்களின் வயிற்றின் அடிப்பாகம் வெறும் கொழுப்பினால் மட்டும் பெருத்துவிடுவதில்லை. இதுவும் கூட ஒரு காரணம் என்கிறார் டாக்டர் நவால்கர் அவர்கள். ‘பெண்கள் இப்படி அடக்குவதால், ஒரு பலூன் போன்ற சிறுநீரகம் (bladder) விரிவடைந்து வருவதும், வருடங்களாக இந்த பழக்கம் நடப்பதால் அது மறுபடியும் சுருங்காமல் பெரிய அடிவயிறு சுமந்து பெண்கள் அலையவும் காரணமாகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.    


போன வாரம் கூட ஒரு ஆசிரியையுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவங்க சொன்ன ஒரு விஷயம் இதுதான். ‘இப்போ தேர்தல் நேரம் வேறையா...எங்கோ சந்து பொந்து கிராமத்தில் எல்லாம் டூட்டி போட்டிருக்காங்க. அங்கு பெண்களுக்கு என்று எந்த கழிப்பறை வசதியும் கிடையாது. கொஞ்சம் தூரம் நடந்துப் போய் ஏதாவது முட்புதருக்குள்தான் ஒதுங்க வேண்டியுள்ளது.’ என்பதே.  

ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழிக்கலாம் என்பது நம் இந்திய ஜனநாயக நாட்டில் எழுதப்படாத சட்டம். அப்படி செய்வதை குறித்து எந்த ஆண்மகனும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதுவும் பொது இடங்களிலும், பேருந்து நிலையங்களிலும், சாலையோரங்களிலும்... அதையும் பார்த்து தொலைக்கும் அவலமும் எங்களுக்கே. அதை விடுங்க...திருத்த முடியாத விஷயங்களை பேசுவதில் அர்த்தமில்லை.    

இன்னுமொரு விஷயத்தையும் சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த சிறுநீர் அடக்கும் விஷயத்துடன் மாதவிடாயும் சேர்ந்துக் கொண்டால் பெண்களின் பாடு கேட்கவே வேண்டாம். நெடுந்தொலைவு பேருந்து பயணத்தின் போது இடையில் நிறுத்தும் இடங்களில் இருக்கும் கழிப்பறைகளில் நுழையவே முடியாது. அவ்வளவு சுத்தம்(!!!)... தொற்று நோய்கள் (Urinary Track Infection) வரும் சாத்தியக்கூறுகளையும் அது அதிகப்படுத்திவிடுகிறது.


கழிப்பறை என்பது ஓர் அடிப்படை வசதி. அதுவும் பெண்களின் கூச்ச சுபாவதிற்கு அந்த அடிப்படை வசதி முக்கியமானதாகிப் போகிறது. இந்த மகளீர் தினத்திலாவது இதையெல்லாம் யாராவது கண்டுக்கிட்டா பரவாயில்லைன்னு தோணுது.

மகளீர் தின வாழ்த்துகள்...





Comments

  1. சகோதரியுடன் அல்லது துணைவியுடன் வெகு தூர பயணத்தின் போது அறிவேன்... நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை...

    சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும் இருக்கட்டும்...!

    ReplyDelete
    Replies
    1. உணர்ந்து எழுதியமைக்கு நன்றி...

      Delete
  2. சிந்திக்கச் செய்யும் சிறப்புப் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்களுக்கு...

      Delete
  3. மிகவும் சிக்கலான விஷயத்தை அலசியிருக்கிறீர்கள். பெண் தலைமையிலான ஒரு அரசு கூட பொது இடங்களில் கழிப்பிடங்களைக் கட்டித்தருவதில் எந்த முனைப்பையும் காட்டவில்லை. நம் மாநிலத்தைவிட கர்நாடகம் எவ்வளவோ தேவலை!

    மகளிர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். இன்னும் எத்தனையோ நகரங்கள் நம் நாட்டில் அடிப்படை வசதியற்று போய்தான் இருக்கிறது...நன்றி...

      Delete
  4. உண்மையை உரைக்கும் பகிர்வு.
    இனிய மகளிர்தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மகளிர் தினத்தில் வாழ்த்துக்கள் மட்டும் பகிராமல் ஒரு நல்ல பதிவையும் பகிர்ந்த உங்களுக்கு மனம்மார்ந்த பாராட்டுக்கள்.
    கடந்த் ஆண்டு டிவியில் ஒரு நிகழ்ச்சியின் போது அறிந்தது சென்னையில் 3000 க்கும் அதிகம் படிக்கும் பெண்கள் கல்லூரியில் 3 டாய்லெட்டுக்கள்தான் இருக்கின்றன எனவும் அதுவும் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் என்று கேள்விபட்டேன் & வேதனைப்பட்டேன் காரணம் தமிழகத்தை ஆளுவது ஒரு பெண்மணி அவருக்கு ஒரு பெண்ணின் கஷ்டம் கூட தெரியவில்லையா அதற்கு ஏதும் உதவி பண்ணக் கூடாதா என்று நினைத்துதான்...

    கோவைப்பதிவர்கள் ஒற்றுமையுடன் பல நல்ல காரியங்களை செய்வதை அறிகிறேன். இதற்காக உங்கள் கோவை பதிவர் சங்கம் ஏன் சற்று உரக்க சத்தமிடக் கூடாது. அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் நீங்கள் குரல் கொடுத்தால் அது நிச்சயம் முதலைமைச்சர் வரை கேட்க கூடுமல்லாவா... அத்ற்கு நீங்கள் திட்டமிட்டு செயல்படுங்கள் நீங்கள் நினைத்தால் முடியும் அத்றகான கோரிக்கையை எழுதி ஒரு பேனர் ரெடிபண்ணி ப்ல தலங்களில் ஷேர் செய்யுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. மகளீர் தின வாழ்த்திற்கு நன்றி.
      பெண்களுக்கு டாய்லெட் வசதிகள் மிக குறைவாகவே உள்ளது. அதுவும் சின்ன டவுன்களில் கேட்கவே வேண்டாம். அடிப்படை வசதி அது. கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டியது.

      எங்க கோவைப்பதிவர்கள் சங்கம் நீங்க சொன்ன மாதிரி நிறைய நல்ல செயல்களை செய்து வருகிறோம். கண்டிப்பாக இதையும் ஒரு சமூக அக்கறையுடன் குரல் கொடுக்க கண்டிப்பாக முயலுவோம். உங்களைப் போன்றோரின் ஒத்துழைப்பும் ஊக்கமும் எங்களுக்கு கிடைத்த டானிக்...நன்றி...

      Delete
  6. வாழ்த்துக்கள். உண்மை நிலைதான்.

    ReplyDelete
  7. அன்புத் தோழி மற்றும் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...

    தெளிவான கண்ணோட்டத்தில் தெரிந்தறிந்த மற்றும் நேரிடை நிகழ்வுகளின் நெருடல்களை பகிர்ந்து கொண்டது பாராட்டுதலுக்குரியது... நீங்கள் குறிப்பிட்டது போன்ற வசதிகள் நிச்சயம் தேவையான அனைத்து இடங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது... ஆனால் அவ்வாறு இல்லாத இடங்களில் நாம் நம்மை எவ்வாறு காத்துக்கொள்வது என்பது குறித்த சிந்தனை தோன்றினால் அல்லது தோன்றியிருந்தால் அதற்கான வழிகளும் பிறக்கும் அல்லது பிறந்திருக்கும் என்று நம்புகிறோம்... மேலும் இறைவனின் படைப்பிலே உடற்கூறின் தன்மையை அதற்க்கேற்றவாறு மாற்றிக்கொள்ளும் அல்லது உடலுறுப்புகள் உடன்பட்டு செயல்படக் கூடிய தகவமைப்பை பெற்றுள்ளோம் என்பதை பெற்றுள்ளோம் என்பதை நாம் உணராதிருப்பதைத் தான் தெளிவாக்குகிறது... நிச்சயம் உங்களது சிந்தனை ஓட்டத்தை சற்று மாற்றிப் பாருங்கள்... சமூகம் அல்லது நமது வீடே கூட ஆகட்டும் நமக்கு கொடுத்திடாத, கிடைத்திராத சுதந்திர தன்மைகளை, உண்மைகளை நாம் எவ்வாறு பெற்றிட இயலும் என்று யோசித்தால் அதற்கான வழிகளும் பிறக்கும்.. அதற்காக சமூகமோ, வீடோ அல்லது சக மனிதனோ செய்வது சரியென்று சொல்லவில்லை.. நமது தேவைகளை, நமது சுதந்திரத்தை நாம் மற்றதில் தேடுவதை விடுத்து நம்மில் அறிய அல்லது தேட முற்பட்டால் பாதைகளும் புலரும் பயணங்களும் இனிதாகும்... "பெண்களின் வயிற்றின் அடிப்பாகம் வெறும் கொழுப்பினால் மட்டும் பெருத்துவிடுவதில்லை. இதுவும் கூட ஒரு காரணம் என்கிறார்" இதுவும் ஒரு காரணமேயன்றி இது தான் காரணம் என்றல்ல...மேற்சொன்னவற்றில் பெண்களின் செய்யல்களாலே அது போன்றதொரு நிலை ஏற்படுகிறது என்றும் நாம் ஏன் அறிவதில்லை என்பது தான் வேடிக்கையாய் உள்ளது. எதுவாகினும் எல்லாமும் பெற்று நல்லதொரு சமூகம், வீடு உருவாகும் பங்கானது பெண்களின் பெரும் பங்களிப்பில் உள்ளது என்பதை அனைவரும் உணரவும் வேண்டும்... உங்களைப் போன்ற நற்சிந்தனை கொண்டோர் இதுகுறித்த விழிப்புணர்வை அறிந்து ஏனையோரும் பயன்பெறும் வகையில் தெரியபடுத்தி இன்புற்று வாழ வேண்டுமென்றே நாமும் விரும்புகின்றோம்..

    தங்களது மேலான பதிர்விர்க்கு நன்றிகளுடன் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம் .

    ReplyDelete
    Replies
    1. உண்மையே...அதிதமான பேச்சு திறன் உள்ள பெண்களிடம் காணப்படும் இந்த குறை, அதாவது கழிப்பறை செல்ல யோசிக்கும் கூச்சம், வருந்தத்தக்கதே. அதை மாற்றும் திறனும் பெண்களிடமே பிறக்கவேண்டும். counselling கொடுக்கவேண்டும்.
      மிக்க நன்றி உங்களின் இந்த பகிர்வுக்கு...

      Delete
  8. மிகத்தேவையான ஒரு விசயம்! மனைவி அல்லது அம்மா, சகோதரிகளுடன் நீண்ட தொலைவு பிரயாணிக்கும் போது பலமுறை இந்த கஷ்டம் உணர்ந்திருக்கிறேன். இதற்கான தக்க நடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பதாக தெரியவில்லை! கழிப்பிடங்கள் அதிகம் இருப்பதுடன் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான்...நன்றி சுரேஷ்...

      Delete
  9. இந்த மகளிர் தினத்தன்று வெறும் வாழ்த்துக்கள் மட்டும் இல்லாது மகளிரின். ஒரு பிரதான பிரச்சனையை அழகாக சுவைபட கூறியது மிகவும் அருமையான விஷயம் உங்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மாறுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் எழுதுகிறோம்.
      நன்றி ராஜன்...

      Delete
  10. பெண்களும் அவர்களின் கூச்சமும்...
    நமது முகநூல் நண்பர் திருமதி Ahila D அவர்களின் அருமையான, பயனுள்ள பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி Ahila D

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா உங்களுக்கு...இந்த மாதிரி என் பதிவுகளுக்கு உங்களின் ஆதரவு இருப்பதைப் பார்த்து மகிழ்கிறேன். மிக்க நன்றி...

      Delete
  11. எது எதற்கோ செலவு செய்யும் தனியார் பள்ளிகள் கூட ரெஸ்ட்ரூம் விசயத்தில் அலட்சியம் காட்டுகிறது. பெண்குழந்தைகளை வகுப்பின் இடைப் பட்ட நேரத்தில் அனுமதிப்பது இல்லை. அவர்களுக்கு பொது இடங்களில் கூச்சம் இல்லாமல் நடந்து கொள்ளும் சமூக மாற்றம் அவசியம். அதை விடவும் அவர்களின் உடல் பாதிக்கப் படுவதை. கற்று தருவது அவசியம். எத்தனை பள்ளிகளில் மாணவர்களுக்காக புகார் பெட்டி இருக்கு. அப்படி ஒன்று அமைக்கப் பட்டாலும் அதன் செயல் பாடு எப்படி இருக்கும் என்பது கோள்விக்குறி. அரசு வருமானத்தில் சுகாதார கழிப்பிட வசதி பள்ளிகளில் செயல் படுத்த திட்டம் இருக்கா தெரியல.

    ReplyDelete
    Replies
    1. உண்மையே. மனதளவில் குழந்தை பருவத்தில் இருந்தே தயார் பண்ணுவது நல்லதே. பள்ளிகளில் பெண்பிள்ளைகளுக்கு தனியாக இதற்கு புரிதல் செய்தால் நல்லது...
      நன்றி கலாகுமரன்...

      Delete
  12. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_17.html?showComment=1410913974598#c5092225308690744254

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. மிக அருமையான கருத்துக்கள் மேடம் .
    நான் படித்த ஒரு மிக பிரபல பள்ளியின் கழிவறை அங்கு படித்த வருடங்களில் பயன்படுத்தியதே இல்லை :(
    வெளிநாடுகளில் எல்லா சூப்பர் மார்கேட்களிலும் ரெஸ்ட் ரூம் இருக்கும் .நம்ம நாட்டில் ..சில வருஷமுன் ஒரு பிரபல துணிக்கடையில் ஒரு 12 வயது பெண் இருக்கும் ..அவளுக்கு செல்ல வேண்டிய சூழல் ..அவள் தாய் அனைவர் முன்னும் திட்டுகிறார் "சனியன் சனியன் வீட்டிலேயே போயிருக்கலாமேன்னு ?..மனசுக்கு கஷ்டமாக இருந்தது ..
    :( வெட்கக்கேடான விஷயம்
    வயது வந்த பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் ?இதற்க்கு கண்டிப்பாக ஒரு தீர்வை கொணர வேண்டும் .

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி