Skip to main content

மகளிர் தினத்தில்...

பிள்ளைகள்..



வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் வீடுகளில், வெளிவேலைகளையும் பார்த்துக்கொண்டு இணையதளங்களிலும் உலவிக்கொண்டு அவர்களின் அம்மாவாகவும் பவனி வருதல் எங்களைப் போன்ற பெண்களுக்கு மிகக்கடினம்.

‘இன்னைக்குதானே இதை பார்க்குறே..’ (குர்தா போடுவதற்கு) 


‘என்ன இது...சின்ன பசங்க மாதிரி short form லே எல்லாம் பேசிக்கிட்டு..’ 

‘உங்க வீட்டுக்காரர் (அவங்க அப்பாதான் !!) சரியில்லே..அப்படியே தண்ணி தெளிச்சு விட்டுட்டார்..’ 

‘ஏதோ கவிதை கிறுக்குனோமா, சமையல் எழுதினோமான்னு இல்லாம எதுக்கும்மா இந்த அரசியல், ஜல்லிக்கட்டுன்னு கிறுக்கிட்டு...என் வீட்டுக்காரருக்கு பிடிக்கல...’ - மகளின் பொருமல் 

‘மைக்குல பேசுறதையெல்லாம் வீட்டுல பேசிகிட்டு..’ – மகனின் அலம்பல்
‘அதுக்கு ஒன்னும் தெரியாது, ஆனாலும் எப்போ பார்த்தாலும் வாட்ஸ்அப்பிலேயே இருக்கு...’ – பாட்டியைப் பார்த்து பேரன்

இந்த பேச்சுகள் புதிதல்ல நமக்கு..





பெண்களை அம்மாவாக மட்டுமே பார்க்கும் குழந்தைகளின் கண்ணோட்டம் மாறவேண்டும். அதுவும் முக்கியமாக பெண் குழந்தைகள் கூட, அம்மாவை அவளின் வயது, அனுபவம் சார்ந்து பார்க்காமல் அவர்களின் வீட்டுக்காரரின் முன் கேவலப்படுத்துவதை பார்த்திருக்கிறேன். மனதை காயப்படுத்திப் பேசுவதும் அதனால் அவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாவதும் கூட ஒரு வகையில் அவளுக்கு நடக்கும் குடும்ப வன்முறைதான்.

அந்த காலத்து அம்மாக்கள் SSLC அல்லது PU அல்லது ஒரு BA முடித்திருப்பார்கள். வீடே கதின்னும் கணவனே தெய்வம்ன்னு இருந்தாங்க, அது அப்போதைக்கு சரியாக இருந்தது. எண்பதுகளில் தொன்னூறுகளில் பட்டப்படிப்பும் புரொபஷனல் படிப்புகளும் படித்து வேலை பார்க்கும் அல்லது வீட்டிலிருக்கும் அல்லது சுயதொழிலில் ஈடுபட்டிருக்கும் தன்மானத்தில் உயர்ந்து நிற்கும் பெண்களுக்கு இந்த வளர்ந்த குழந்தைகள் பேசுவது எப்படி பொருந்தும்.

பெரிய பள்ளிகளில் படித்தும் நாகரீகமான, பெற்றவர்களையும் மற்றவர்களைக் காயப்படுத்தாத பேச்சை பேசுவதற்கு ஏன் கற்றுக்கொள்ளவில்லை என்றே யோசிக்கத் தோன்றுகிறது.

தொழில்நுட்பம் இளைஞர்களால் உருவாக்கப்படுகிறது என்பதில் மறுப்பேதுமில்லை. அந்நாள் அது, இளைஞர்களுக்கு என்று மட்டுமல்லாமல், எல்லோரிடமும் புழக்கத்தில் இருப்பது அவர்களால் பொறுத்துபோவது சற்று கடினமாக இருக்கிறது. அது காலத்தின் கட்டாயம்.

முன்பு தலைமுறை தலைமுறையாக ஒரே இடத்தில் இருந்தோம். பேச்சு பரிமாற்றம் எளிதாக இருந்தது. இப்போது அப்படியில்லை. தூரம் அதிகமாகும் போது, பெற்றோர் தன் பிள்ளைகளை பேரப்பிள்ளைகளை அருகாமையில் பார்த்துக்கொள்ள இந்த தொழிநுட்பம் தானே உதவியாக இருக்கின்றது.

மனித மனம் உறவாடிக் கொண்டிருக்கவே விரும்பும். பற்றற்ற வாழ்க்கை வாழ்வதாக சொல்லும் பாதிரியார்களின் சாமியார்களின் விரல் நுனிகளும் கூட சமூக வலைதளங்களில் உலவுவதை காணமுடிகிறது.

பரிவர்த்தனைகளுக்கு வயது குறிக்கவேண்டாமென வளர்ந்த பிள்ளைகளிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் தாயும் ஒர் உயிர்தான். நீங்கள் வளர்ந்து வரும்வரை வேறு உலகம் காணாமல் கூட இருந்திருப்பாள். இனியாவது, இந்த உலகில் இருக்கும் சின்னசின்ன விஷயங்களை ரசிக்கும் கருத்துரைக்கும் வாழ்க்கையை அவளுக்கு கொடுங்க என்னும் விஷயத்தை வைக்கிறேன். அவளை அம்மாவாக மட்டுமல்லாமல், பெண்ணாகப் பார்க்க கற்றுக்கொள்ளுங்க. 




~ அகிலா..

Comments

  1. ஒரு அம்மா சிந்தித்து பேசும் போது அல்லது எழுதும் போது அந்த சிந்தனைமேல் பொறாமை ஏற்படுவதால்தான் அம்மா, மனைவி,மாமியார் மருமகள் ஸ்தானத்தில் இருக்கும் பெண் மீது பலருக்கும் எரிச்சல் ஏற்படுகிறது அதனால்தான் இதெல்லாம் உங்களுக்கு எதற்கு என்று நம்மீது அக்கறை கொள்வது போல நம்மை அமுக்க முயற்சிக்கிறார்கள்

    ReplyDelete

  2. /////ஏதோ கவிதை கிறுக்குனோமா, சமையல் எழுதினோமான்னு இல்லாம எதுக்கும்மா இந்த அரசியல், ஜல்லிக்கட்டுன்னு கிறுக்கிட்டு...என் வீட்டுக்காரருக்கு பிடிக்கல...’ - மகளின் பொருமல் ///


    வீட்டுக்காரருக்கு பிடிக்கவில்லையென்றால் அவரை இது போன்ற எழுத்துகளை படிக்க சொல்லவேண்டாம் என்று அட்வைஸ் பண்ணுவதைவிட்டுவிட்டு எழுதுபவர்களுக்கு அட்வைஸ் சொல்லுவது நல்லது அல்ல அது சொந்த மகளாக இருந்தாலும் சரி

    ReplyDelete
  3. தாயின் உன்னதத்தை புரிந்து கொள்ளாமல் வாழ்வது வீண்...

    ReplyDelete
  4. ஒவ்வொரு பெண்ணும் சுயத்தை இழக்காமல் சுயமரியாதையை இழக்காமல் வாழ்ந்தா இப்படி வீண் பொறுமல்களை தவிர்க்கலாம் ..
    கணவன் பிள்ளைகள் முன்பு சிறு வயது முதல் மனைவியை ரெஸ்பெக்ட் கொடுத்து நடத்தினா அதை பார்த்து வளரும் பிள்ளைகள் எந்த வயதிலும் தாயை போற்றுவார்கள் ..நிறைய விஷயங்களில் பெண்கள் தான் தனது சொந்த பெண்ணினத்துக்கு எதிரி என்பது மறுக்க முடியாத உண்மை :( .

    ReplyDelete
  5. //பரிவர்த்தனைகளுக்கு வயது குறிக்கவேண்டாமென வளர்ந்த பிள்ளைகளிடம் கேட்டுக்கொள்கிறேன்//

    தாய் மகள் உறவு என்பது நட்பை போலிருக்கணும் ப்ரண்டா பழகினா இந்த சலசலப்புக்கு இடமில்லை

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி