Skip to main content

அன்னபட்சி - நூல் மதிப்புரை

அன்னபட்சி 


 நூல் : அன்னபட்சி
ஆசிரியர் : தேனம்மை லக்ஷ்மணன்
அகநாழிகை பதிப்பகம்
ஜனவரி 2014

(கோவை இலக்கிய சந்திப்பில் 
31 ஆகஸ்ட் 2014 
என்னால் மதிப்புரை வழங்கப்பட்டது..)

தேனம்மை அவர்கள் சிறந்த கவிஞர், எழுத்தாளர், திறமையான படைப்பாளி. பத்திரிகைகளில் கட்டுரை, சிறுகதை என எழுதியுள்ளார். இந்த நூலுக்கு எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான எம் ஏ சுசீலாம்மாதான் அணிந்துரை வழங்கி உள்ளார்கள்.  

தேனம்மை அவர்கள்  

இந்த கவிதை தொகுப்பின் தலைப்பு 'அன்னபட்சி' மிக அருமையானது. தலைப்பிற்குரிய கவிதையில் தேனம்மை அவர்கள், அன்னபட்சியின் தன்மையை அழகாய் இயம்புகிறார். அன்னபட்சி எப்படி நீர் தவிர்த்து பால் மட்டும் கொள்ளுமோ அதையே சற்று மாற்றி,

உன் அல்லதை எல்லாம் நல்லதாக்கி அருந்தும் அன்னபட்சி நான்’ ன்னு

எழுதியிருக்காங்க கவிதையில்.
இது மிகவும் வித்தியாசமான சிந்தனை. மற்றவர்களின் நல்லவை அல்லாதவற்றைக் கூட நல்லதாக்கிப் பார்க்கும் அவரின் இந்த குணம் நம்மை வியக்க வைக்கிறது.

கோவை இலக்கிய சந்திப்பில் என்னுரை 




இனி, கவிதைகளைப் பார்ப்போம்..

இந்த நூலின் முதல் கவிதையே தேடலின் துவக்கமாக இருக்கிறது.

ஓசையிலாத இசையும்
வர்ணகளில்லாத நிறமும்
மேகங்களை ஒத்த உருவமும்
நீரைப் போல உணர்வும்
கொண்டலைகிறேன்
இந்த அண்டத்திலே
ஒரு விண்மீனும்
ஒரு பால்வீதியும்
எனக்கான
ஒரு சூரியனும் சந்திரனும் தேடி.

எனக்கே எனக்காக ஒரு விண்மீனும் பால்வீதியும் அமையாதா என்கிற ஒரு தவிப்பு இந்த கவிதையில் தெரிகிறது. இக்கவிதையில் அவர் வசதிகளையோ வாய்ப்புகளையோ தேடவில்லை. நல்ல துணையோ நட்போ வேண்டும் என்ற உணர்வுப்பூர்வு தேடலும் இல்லை இது. ஆத்மார்த்த தேடல் இது. அதுவே இந்த நூலின் மற்ற கவிதைகளுக்கான முகவரியும் ஆகிறது.   

சமூக சிந்தனைக் கொண்ட கவிதைகள் ஆகட்டும், பொம்மை கவிதைகள் ஆகட்டும், மனதின் உணர்வுகளை சொல்லிச் செல்லும் கவிதைகள் ஆகட்டும் எல்லாவற்றிலும் அவரின் பெயரில் உள்ள இனிப்பை முத்திரையாய்ப் பதித்திருக்கிறார்.


பொம்மை கவிதைகள் : 
பொம்மைகளை வைத்து கவிதைகள் சிலது புனைந்திருக்கிறார். அவைகள் இந்த கவிஞருக்கு மிகவும் பிடித்த ஒன்று போலும். பொம்மைகளைப் பற்றி கவிதை சொல்லி அதில் நிஜ வாழ்க்கையைப் புகுத்திப் பார்க்கச் சொல்கிறார்.

விளையாட்டு பொம்மை என்கிற கவிதையில்,
பொம்மை வாங்க போகும் ஒருவன், சொல்பேச்சு கேட்பது போலிருக்கும்
பொம்மையை வாங்கி வருகிறான். ஆனால் அந்த பொம்மையோ அதிகமாய் பேசும் தன்மையது. அவனை விளையாடுகிறது அது. அவன் தூங்கிவிடுகிறான். அது முழித்திருக்கிறது அவன் உறக்கம் கலைய காத்திருக்கிறது.

இதில் அவர் சொல்ல நினைக்கும் விஷயம் பெண் பார்த்து திருமணம் முடித்து வரும் ஆண்மகனைப் பற்றியது. பெண் என்பவள் அதிகமாய் பேசவே படைக்கப்பட்டவள். ஆனாலும், அவள் அவளின் சத்தமும் இல்லாவிடில் குடும்பமும் உறவுகளும் முழிப்பில் இருக்க முடியாது என்பதை அழகாய் இந்த கவிதையில் விளக்கிவிட்டார் கவிஞர்.


பொம்மைக்காரிகள் என்னும் கவிதையிலும், தன் பொம்மையுடன் விளையாடும் ஒரு குழந்தை, அடுத்து ஒன்றைப் பார்த்ததும், இதை விடுத்து, அதனுடன் விளையாடுகிறது. ஒன்றை விடுத்து அடுத்தது அடுத்தது என்று போகும் குழந்தை கடைசியில் தனக்குரிய பொம்மையிடம் வந்து சேருகிறது.

நாமும் இப்படிதான். நம் கையில் இருப்பதை விடுத்து, அடுத்த ஒன்றைப் பார்த்ததும் அதன் மேல் நாட்டம் கொள்கிறோம். மறுபடியும் தொடக்கதிற்கே வருகிறோம். வாழ்க்கையில் அவ்வப்போது நம்முடன் வந்து சேரும் அனைத்துமே வாழ்வின் அந்தந்த பகுதியில் மட்டுமே நிலைக்கிறது. அதை தாண்டும் அனுபவங்கள் இலகுவாய் கொண்டு செல்லக்கூடியவை என்பதை இவரின் இந்த கவிதை சுட்டிச் செல்கிறது.   

பொம்மை வைத்து எழுதும் இந்த கவிதைகள் கவிஞர் தேனம்மையின் மனநிலையை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் பாப்போம்.

பொம்மை என்பது ஒரு Still Life. அசையா வாழ்க்கை.

அதற்குள் நாம் நம் கனவுகளைப் பொருத்திப் பார்க்கலாம். அதுவாய் நாம் மாறிப் பார்க்கலாம். அதற்கு வண்ணங்களில் உடைகள் உடுத்தி, அதில் நம் அழகை, அழகாய் உணரலாம். நம்மால் நடத்த இயலாததை நடத்துவதாக கற்பனைகள் செய்யலாம். நிறைய கேள்விகளுக்கு மௌனத்தைப் பதிலாய் கொடுக்கலாம். கவிஞரும் இதைதான் செய்திருக்கிறார்.

எப்போது நம்மை சுற்றியிருக்கும் சூழல் நம்மை அசைவற்றதாக்கி விடுகிறதோ அப்போதுதான் நாம் அசைவற்ற பொருளுக்குள் நம்மை புகுத்தி இயங்க ஆரம்பிக்கிறோம். கவிஞரும் அசைவில்லாத் தன்மைக்குள் தன்னை புகுத்தி பார்த்து, கவிதை தொடுத்து நம்மை குளிர்வித்திருக்கிறார்.


எளிமையான சொல்லாடல் :

கவிதைகளில் எளிமையான சொல்லாடல் வலம் வருகிறது. கவிதையை புரிய விடாமல் செய்யும் சிக்கலாக்கும் வார்த்தைகள் இல்லாமல் இயல்பான பேச்சு வழக்கிலேயே நிதர்சனங்களை சுட்டும் கவிதை இருப்பது அழகாய் இருக்கிறது. சமூகத்திற்கான செய்தியும் பொட்டில் அடித்தார்ப்போல் அதன் கடைசி வரிகளில் மின்னுகின்றன.

விவசாயம் என்னும் கவிதையில்,

சாணி சருகு
வேப்பம் பிண்ணாக்கு
மக்கிப் போன தோல்தழை
மழை பெஞ்சா மன்னுழப்பி

இத்தனையும் விட்டுபுட்டு
கைநிறைய அள்ள
கலப்புரம் போட்டு
மேலே அள்ள
மேலுரம் போட்டு

பருத்தி வரும்னு பதறிப் பார்த்தும்
கத்திரிக்க்காயக்கு மரபணு மாத்தியுங்
காத்திருந்தா

சாயாத்தண்ணியா கருத்து வந்தது
சாயத்தண்ணி
துவைச்ச நுரையாட்டம்
பார்த்தீனியம் கூட பட்டுப்போக

குடிச்சுக் குடல் அழிஞ்சு
புண்ணாகிக் கிடக்கு
சுரப்புத் தட்டிப் போய்
வெடிச்ச முலைக் காம்பாட்டம்
எனக்குப் பாலூட்டிய பூமி


இந்த கவிதையின் கடைசி வரிகளில் உள்ள வலி, பால் சுரப்புத் தட்டிப் போன, அதுவும் வெடித்துப் போய் இருக்கும் முலைக் காம்பின் வலியை வறண்டுப் போன இந்த பூமியின் வலியுடன் ஒப்பிட்டு அருமையான சமூக அக்கறை கொண்ட கவிதையைப் படைத்திருக்கிறார்.    

மெழுகின் முணுமுணுப்பு என்னும் கவிதையில், மின்சாரம் போய்விடும் ஒரு வேளையில், வீட்டில் பழங்கதைகளும் சிரிப்பும் சந்தோஷமாய் பொழுது கழிகிறது. மீண்டும் மின்சாரம் வந்தவுடன் அவரவர் வேலைகளில் முழ்கிவிடுகின்றனர். அதை அழகாய் கவிதையில் சமைத்திருக்கிறார் தேனம்மை.

அதன் கடைசி வரிகள் இவை,

மீண்டும் பிரிந்து தத்தமது வேலையில்
அனைவரும் புகுந்துக் கொள்ள
பகிர்ந்த சந்தோஷம் எல்லாம்
துரத்தப்பட்ட கணவாய்
அதன் புகையைப் போல மிதந்து வெளியேறுகிறது


இக்கவிதையை படிக்கும் போது நமக்கும் இம்மாதிரி அனுபவம் நேர்ந்தது நினைவில் வருகிறது.


செல்ல பிராணி என்கிற கவிதையில்,

நாய்களைக் காதலிப்பவர்கள்
பெருகிக் கொண்டிருக்கிறார்கள்

.. என்று தொடங்கி, நாய்கள் மனிதர்களைவிட மேல் என்பதை கவிதையில் சொல்லி சென்று இறுதியில்,

நாய்களோடு வாழ்பவர்கள்
பெருகிக் கொண்டிருக்கிறார்கள்

என்று முடித்திருக்கிறார்.
அருமை..


விளையாட்டு என்னும் கவிதையில்,  
ஆண் பெண் உறவையும் பெண் கருவுருதலையும் பூடகமாக சொல்லியிருக்கிறார்  



பெண்மை கவிதைகள் : 
தேனம்மை ஒரு பெண் கவிஞர் ஆயிற்றே, பெண்மை பற்றுய கவிதை இல்லாமல் இருக்குமா என்ன..

சூலும் சூலமும் என்கிற சமூகம் பெண்ணை எப்படி எதிர்க் கொள்கிறது என்பதை மனதில் வேதனையுடன் சொல்லியிருக்கிறார்.

யாருக்குமே கேட்காமல் அவள்
அழுது முடிக்கும் போதெல்லாம்
ஒரு சூலம் முளைக்கும் அவளது ஞானக்கண்ணாய்

எடுத்து வயிற்றிலே செருகிக் கொள்வாள்
ஏன் சூலுற்றீர்கள் எனப் பெற்றவரை நினைத்து
ஏன் சூலுரவைத்தாய் எனக் கொண்டவனை நினைத்து
என் சூலில் ஏன் பிறந்தீர்கள் என
சூல் கொண்டவர்களை நினைத்து

என்னும் வரிகள் பெண்மையை தட்டியெழுப்பும் கேள்விகள்.

கடவுளை நேசித்தல் என்னும் கவிதையும் ரசிக்கும்படி உள்ளது.


இவரின் கவிதைகள் காற்றைப் போல், தென்றலைப்போல் இயல்பானதாக இருக்கிறது. அனைத்துமே அருமை. இந்த இவரின் நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் இதை உணருவீர்கள். எல்லாக் கவிதையையும் என்னால் இங்கு சொல்ல நேரமில்லை.

தேனம்மை அவர்கள் என் மனதுக்குவந்த தோழி. அவருடனான என் உரையாடல்கள் எப்போதும் இனிமையானவை. அவரின் பேச்சை போலவே அவரின் கவிதைகளும் அத்துணை வெளிப்படை, எளிமை, அருமையும் கூட.

தேனம்மையின் இந்த ‘அன்னபட்சி’ என்னும் அருமையான கவிதை நூலை மதிப்புரைக்கு அளித்த கோவை இலக்கிய வட்டத்திற்கு என் நன்றியும் வணக்கங்களும்..





Comments

  1. அருமையான மதிப்புரை.
    மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா பாராட்டுக்கு. நூலின் மதிப்பையே நான் சொல்லியிருக்கிறேன்..அருமையான நூல்

      Delete
  2. மிகவும் அருமை .தேனம்மையின் கவிதைகள் மட்டும் அல்ல அவைகளை நீங்கள் பாராட்டிய விதமும் .அவரின் கவிதை நூலை முழுவதும் படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கி இருக்கிறீர்கள் .

    ReplyDelete
    Replies
    1. அன்னபட்சி நூல் அருமையான தொகுப்பு. அவரின் எழுத்துக்களில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்
      நன்றி

      Delete
  3. இப்போதான் உங்க விமர்சனம் படிச்சு முடிச்சேன்.அப்படியே நான் கவிதை வழி சொல்ல வந்ததை எல்லாம் மிகச் சரியாச் சொல்லி இருக்கீங்க. அருமையான புரிதல் அகிலா. மிக்க நன்றியும் அன்பும் . :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி தேனு. உங்களின் கவிதைகள் மிக இனிமையானவை. சீற்றங்கள் ஏதுமில்லாமல் மனதை குளிர்விப்பவை. எனக்கும் மகிழ்ச்சியேப்பா..

      Delete
  4. இவரின் கவிதைகள் காற்றைப் போல், தென்றலைப்போல் இயல்பானதாக இருக்கிறது. அனைத்துமே அருமை

    தேனாய் தித்தித்திக்கும் விமர்சனம்..பாராட்டுக்கள்..

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி