Skip to main content

யதார்த்தம்.......

சுடுகிறது.....






நுழையும்போதே பார்த்தேன் படுக்க வைக்கபட்டிருந்த அந்த மனிதரை
பக்கத்தில் முதுமையிலும் அருமையான மனைவி 
சற்று கலங்கலான கண்களுடன்....

உறவுகளின் சின்ன சின்ன நலம் விசாரிப்புகள் 
மெலியதாக மலர்ந்த புன்னகைகள்
'இவங்கதான்' என்ற அறிமுகங்கள் 

ஹாலை தவிர்த்து உள் அறைகளில்   
பெண்களின் சிறுகுரல் பேச்சுகள் 
அதிரடி சிரிப்பு சிரித்த ஒருத்தியை அதட்டும் மற்றொருத்தி 
'செத்த வீடு....மெதுவாக' என்று....
மருமகள்களின் 'ஒரு பெருசு ஒழிந்தது' என்னும் மனப்பாங்கு 

'பட்டு எடுக்கணுமா அல்லது சாதா காட்டன் போதுமா' 
'நாத்தனார்களுக்கும் துணி எடுக்கணுமா'

'திருநெல்வேலி கட்டா?  மதுர கட்டா? இல்ல மேலூரா?
மேலூருன்னா உருமா எல்லாம் கட்டணும், மேளம் எல்லாம் சொல்லணும்...
கொஞ்சம் நேரமாகும்...'
'மதுர கட்டே போதும்...சிக்கிரம் வீட்டுக்கு போணும்'

'தூக்க சாயங்காலமாகும்...சாப்பாடு சொல்லிருங்க 
நிறைய பேருக்கு சுகர் இருக்கு'  


'அவர் மேல சாத்திரத்துக்கு பட்டு வேட்டி குடுங்க'
'சின்ன விளக்கா ஒன்னு தலைமாட்டில வைங்க'
'அந்தம்மா கிட்டே கேளுங்க...' என்று மருமகள்
ஒவ்வொரு தடவையும்  சாவிகொத்து
அந்த அம்மாவின் இடுப்பிலிருந்து போய்வந்தது.....



'தூக்கியாச்சின்னா அழாதீங்கம்மா...அவரை நினைக்காதீங்க'

அந்த அம்மா 'இனிமே நினைச்சு என்னாகபோகுது'



'நைட்டி மாத்திக்கவா' என்று 
நீர்மாலை போய் நனைந்து வந்த மகள்கள் 



இப்படி நிறைய கேள்விகள்.....நிறைய பதில்கள்.....


'இருக்கும் போதும் அவரவர் வேலையைத்தான் பார்த்தாங்க..
நாம போன பிறகும் அதே வேலையைத்தான் பாக்கிறாங்க'
இது ஹாலில் நடுநாயகமாக ஐஸ் பெட்டியில்
மாலை குவியல்களுக்கு நடுவில் படுத்திருந்த அவர்.....  


என்றோ சந்தித்திடும் உறவுகளுக்கு
சாவு வீட்டுக்கும் கல்யாண வீட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனது 
சாவும் சம்பிரதாயம் ஆகிப்போனது
இதுதான் கல்யாண சாவோ.....




  

















Comments

  1. ஒவ்வொரு வார்த்தையிலும் யதார்த்தம் பளிச்சிடுகிறது..
    உண்மை எப்போதும் சுடத்தான் செய்யும் சகோதரி...

    ReplyDelete
  2. மிகுந்த மனவருத்தத்தையும் தருகிறது, மகேந்திரன்.....

    ReplyDelete
  3. நான் இப்படி ஒரு நடையில் எழுதுவதை
    மிகவும் விரும்புவேன் அப்படித்தான் எழுதுகிறேன்
    ஒரு சட்டத்திற்குள் நம் சிந்தனைகளை ஒடுக்கிக் கொள்ளாது
    வடிவங்களையும் வார்த்தைகளையும் உணர்வு
    முடிவு செய்து கொள்ளட்டும் என விட்டுவிடுவேன்
    ஒரு சிறுகதைக்கு உரிய மிகச் சுருக்கமான அழுத்தமான சூழல் சித்தரிப்பு
    மிக்ச் சரியான உணர்வைச் வெளிப்படுத்த போதுமான உரையாடலகள்
    கவித்துவமான சொற்களும் முடிவும்
    வண்ண காவியங்களாக ஓவியங்களையும்
    அழகிய ஓவியங்களாக கவிதைக் காவியங்களையும்
    கொடுக்கும் உங்கள் முயற்சி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது மாதிரி இப்படி சாதாரணமாக மனதில் பட்டதை எழுதுவது எளிதாகத்தான் உள்ளது. நன்றி ரமணி அவர்களே......

      Delete
  4. எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ,விருதினை
    என் மனம் கவர்ந்த தங்கள் பதிவுகளுக்கு
    பகிர்ந்து அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்
    தங்கள் பதிவுலகப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி அவர்களே.....

      Delete
  5. வாழ்க்கையில் நடக்கும் நிஜங்களை வார்த்தைகளாக்கி மனதை தொடும் விதத்தில் நீங்கள் எளிதிய யதார்த்தம் மிக அருமை, வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. யதார்த்தங்கள் தானே நம்மை வெகுவாக பாதிக்கிறது.....நன்றி....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி