காலை விடியலாய்...



கௌதம் என்கிறதான குரல் 
பின்புற வீட்டின் காலை விடியலாய்... 

ஆரம்பித்துவிடும் தாய்க்கும் மகனுக்குமான எசலிப்புகள்
வீம்பாய் சண்டையிட்டுக் கொள்வார்கள் இருவரும்
பள்ளிச் செல்லும் முன்னும் வந்த பின்னும்
அலுத்துக் கொண்டோ புலம்பிக் கொண்டோ 
சில சமயங்களில் அழுதுக் கொண்டும் கூட
கௌதம் பள்ளி வண்டிப் பிடிக்கச் செல்வான்...

எப்போது இருவரும் சமாதானம் கொள்வார்கள்
என்பது மட்டுமே புரியாத புதிர் எனக்கு...

அவன் ஐந்தாம் வகுப்போ அல்லது ஆறோ படிப்பான்...
இன்றைக்கும் அப்படிதான் ஆயிற்று...
என் வீட்டின் அடுக்களையின் பின் கதவு தாண்டி 
பெரிய மனிதனின் தோரணையுடன்
புலம்பியபடிச் சென்றான்...
இன்றும் விடிந்ததா இவனுக்கு என்றே தோன்றியது
சமாதானத்தைச் சாத்தியப்படுத்தாத
அவனின் தாயின் மேல் சற்று கோபம் கூட துளிர்த்தது...

முன் வாசல் போய்ப் பார்த்த போது
பள்ளி வண்டியின் முகம் இல்லை...
அங்கே அவன்,    
தோள் உரசி நின்று
சிறுவனாய்ச் சிரித்துக் கொண்டிருந்தான்
தன் நண்பனுடன்...
  

Comments

  1. இகவிதையை வடித்த கவிஞர் வேடிக்கை பார்க்கும் இந்த காட்சி அவருடைய சிறியவயதில் அரங்கேறிய நாடகங்களாய் இருந்திருக்கும் அதன் வெளிபாடு பழைய நினைவுகளை உந்தி தள்ளி கவிதையாக.... பாத்திரங்கள் மாறலாம் ஆனால் நிகழ்வுகள் ஒன்றே..

    ReplyDelete
  2. பால்யம் தாண்டி பதின்மம் தொட்டுவிட்ட என் மகனை நினைத்துக்கொள்கிறேன். இப்படித்தான் ஒவ்வொருநாளும் முறுக்கிக்கொள்ள ஏதோ ஒரு காரணம் இருக்கும். பள்ளிவிட்டுத் திரும்பிய போதில் முறுக்கமிருந்த முகத்தில் முளைவிடும் முறுவல், தாய்மனத்தின் இறுக்கம் தளர்த்தி இளக்கிவிடும். அழகான காட்சிக்கவிதை. பாராட்டுகள் அகிலா.

    ReplyDelete
    Replies
    1. உண்மையே...அம்மா மகனின் இந்த பாசப்பிணைப்பு அன்பானதுதான்...நன்றி கீதா...

      Delete
  3. முன் வாசல் போய்ப் பார்த்த போது
    பள்ளி வண்டியின் முகம் இல்லை...
    அங்கே அவன்,
    தோள் உரசி நின்று
    சிறுவனாய்ச் சிரித்துக் கொண்டிருந்தான்
    தன் நண்பனுடன்...

    ---
    அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றி குமார்...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular Posts